Enter your keyword

Tuesday, April 1, 2025

திகட்டல் - பிரமிளா பிரதீபன்

By On April 01, 2025

அடர்ந்த எனது புருவத்தை வலதுகையின் சுட்டுவிரலால் நீவி நீவி ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஒற்றை முடியை பற்றிக்கொள்வேன். பின் அதனை பட்டென்று பிய்த்தெடுத்து நாவால் சிறிதுரேம் வருடியுணர்ந்து,  சிறுசிறு துண்டுகளாக கடித்துத் துப்புவேன். அப்படியே, நாகலிங்கத்தைப்பற்றி யோசிக்கும் போதெல்லாம் இன்னும் எதையெல்லாமோ கூட இப்படி விசித்திரமாகச் செய்ய ஆரம்பித்திருந்தேன்.


பச்சை இலைகளுக்குள் அரிசி மணிகளை சுருட்டித் தின்பது, நடுசாமத்தில் எழும்பி மகளின் தலையில் பேனெடுத்து கொல்வது, கண்களைத் திறந்தபடி மணிக்கணக்கில் குளிப்பது என்று யாருக்கும் தெரியாமல் நான் செய்த அத்தனையும் ஏதோ ஒருவகையில் எனக்கு ஆறுதல் தருபவையாக இருந்த போதிலும் அதற்கிடையிலான நாகலிங்கத்தின் குறுக்கீட்டில் ஒருவிதமான ஒவ்வாமையும் வளர்ந்தது. 


குறிப்பாக அவனோடு சேர்ந்து மதுவருந்தும் போது நான் இனிப்பாக ஏதாவது கடித்துக்கொள்ளவே விரும்புகிறேன் என்பதும் பலாச்சுளைகளை சுவைத்துக்கொண்டே என்னால் மதுவருந்த முடிகிறதென்பதும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. பிறகு சூரியகுமாரை சூரி என்று நான் அழைத்ததுபோல நாகலிங்கத்தை நாகுவென கூப்பிடவில்லையென அவ்வளவு கோபம் அவனுக்கு. அந்தக் கோபத்தை காட்டுவதற்காகவே மதுவோடு நான் கேக் சாப்பிடுவதையும் பலாச்சுளைகளை கடித்துக்கொள்வதையும்  சொல்லிச் சொல்லி சிரிக்க ஆரம்பித்திருந்தான். 


எனது முதல் திருமணம் அல்லது சூரியின் துர்மரணம் பற்றிய எந்த ஞாபத்தையும் மீளெழுப்ப கூடாதென்ற சத்தியத்துடனேயே நான் நாகலிங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தேன். போலவே அவனது மனைவி மாதினி ஓடிப்போனதை பற்றியும் நானொன்றுமே கேட்பதில்லை. போதை மிகுந்து இருவருமாக உளறிக்கொட்டுகையில் கூட தவறியும்; முந்தைய வாழ்க்கையைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. 


சூரியுடனான அந்த நாட்களையும் தொடர்ந்து இந்த நாகலிங்கத்தினதும்…. என்று மீட்டுகையில்  எனக்குத்தான் வாழத் தெரியவில்லையோவெனும் சந்தேகமும் சமயங்களில் வலுக்கத்தான் செய்கிறது. ஏனோ அவனை நாகுவென அழைப்பதில் அவ்வளவாக எனக்கு நாட்டமில்லையென அவன் அறிந்திருக்கிறான். அதுமட்டுமல்லாத எல்லாவற்றிலுமாய் நான் அந்நியப்பட்டுதான் இருக்கிறேனென்பதையும் அவனால் உணரமுடிந்திருக்கும். நான் செய்வதைப் போலவே மாதினியோடு சேர்த்தென்னை ஒப்பீடு செய்யவும்தான். 


துளி பிடிப்புமில்லாது நான் போர்த்திக்கொண்ட இந்த கருமையான போர்வையோடு என் தூய்மையான காதலை பகிர்வதென்பதை நகைச்சுவையெனவே  எண்ணிக்கொள்ள முடிந்தாலும் காமத்தை அப்படி இலகுவாக எங்களால் கடக்க முடியவில்லை. அவன் பெரும் பிசாசென என்னை தின்பதில் குறியாயிருந்தான். நானும் வெறும் மாமிசமென உணர்ந்தே அவனை புசித்தேன். மாதினி மீதான பழியுணர்வை அவனும் சூரி மீதான தீரா ஏக்கத்தை நானும் பரஸ்பரம் உடல்கள் மீது காட்டிக் கொண்டோம். அதற்குகந்த பொழுதுகளாய் போதை நிரம்பிய சில இரவுகளையும் தெரிந்தெடுத்தோம். 


போதையென்பது சுதந்திரம். போதையென்பது அப்போதைக்கான விடுதலை. சொல்லப்போனால் உணர்வுகள் கடந்து நான் சுயமிழக்க உதவும் இரகசியமான மூலிகை அல்லது நாகலிங்கத்தைத் திட்டித்தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.


‘ஒரு பொண்டாட்டிக்கு இவ்ளோ குடிக்க வாங்கித் தாறியே! முட்டாளாடா நீ?’  


அவன் நக்கலாகச் சிரித்தான். என்னை தன்மீது சாய்த்துக்கொண்டு விரல்களால் அளைந்தான். ஆயிரம் அட்டைகளை ஆடைக்குள் விட்டதாய் அவ்வளவு அருவருப்பிருந்தது எனக்கு. 


‘சனியனே ஏதாச்சும் கதைக்க விடுறியா?’ அவனை தள்ளினேன். என் வார்த்தைகள் அத்துமீறி போய்க்கொண்டிருந்தன. 


‘என்னடி இருக்கு கதைக்கிறத்துக்கு?’


‘இருக்கு நெறயவே இருக்கு… கொஞ்சத்துக்கு என்னய விட்டுத்தொலயிறியா?  


‘இப்ப என்னா? ஒன்னய கட்டிப்போட்டா வச்சிருக்காங்க?’ 


‘கட்டிப்போட்டாதானா? எப்பவாச்சும் நிம்மதியா தூங்க விட்ருக்கியா? அப்படி என்னடா மயிரு ஒனக்கு எப்பபாத்தாலும் தேவப்படுது? 


‘ஏய்… பாத்து பேசு அப்றம் வேறமாதிரியாகிரும்’


‘என்னடா மயிரு வேறமாதிரி … சொல்லு என்ன வேறமாதிரி” 


நான் வேண்டுமென்றே சண்டைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அவனுக்கு கோபம் வந்திருக்கவில்லை. மாறாக என்னோடு பின்னிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்திருந்தான். அவனுக்கானதை பறித்துண்ணும் பாங்கில் கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறினான். 


காதலோடு குழைத்தெடுத்த காமம் பற்றிய பிரக்ஞை துளியேனும் அவனுக்கிருக்கவில்லை. எனக்குள் நிரம்பிய மெல்லுணர்வையும் அடங்கா காதலையும் கொட்டித்தீர்க்கும் பாத்திரத்தை அவன் ஏந்தியிருக்கவில்லை. பெண்ணுடலின் வசீகரத்தை மதுவோடு சேர்த்து வெறித்தனமாக பருக மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது. எவ்வளவு பருகினாலும் தணியாத அவன் தாகத்தை தீர்க்கும் திரவத்தின் அளவை கூட்டிக்கொள்வதை பற்றியே எப்போதுமாய் யோசித்துக் கொண்டிருந்தான். 


ஒருநாளுமில்லாமல் திடீரென நான் மாதினியை நினைத்து அழ ஆரம்பித்தேன். அவள் ஏன் ஓடிப்போனாள் என்று மேசையில் கையை தட்டிக்கொண்டே அழுதேன். 


‘ஏன்’ என்றான். பதிலை எதிர்பாராமல் என்னை மேலும் இறுக்கமாக தழுவ ஆரம்பித்தான். மறுக்கத் துணிவற்ற  மயக்க நிலையில் வேறொரு நபராக தள்ளியிருந்து அவனை அவதானித்தேன். 


ஆத்திரமும் அவசரமும் நடுக்கமும் மிஞ்சிய ஒரு பதட்டமான வேடடைக்காரனாய்… சிறு தடங்கல்களையும் ஏற்கமறுப்பவனாய் அவன் மாறியிருந்தான் அப்படியே என்னை தனதாக்கி இடைவெளியற்று மொத்தமாய் விழுங்கிவிடும் ஆவலுடன்… கர்ஜ்ஜிக்கும் பாவனையில் என்மீது படரத் தொடங்கியபோதுதான் எனக்குள் நுழைந்து நான் சுயம்பெற ஆரம்பித்தேன். 


முழுப்பலத்தையும் தந்து அவனை மறுபுறம் கிடத்த முயன்றேன். அவனோ ஒரு காட்டுயானையின் பலத்தோடு மூர்க்கமாக இயங்கினான். கழுத்தில் தோளில் காதுமடலிலென பற்கள் பதிய கடித்தான். வலிமிகுதியால் கத்திக்கொண்டே அவனது தோள்களை  நெம்பித்தள்ளினேன். என் கைகளிரண்டையும் அவனது ஒருகையால் அழுத்தியவாறே காதிற்குள் ஏதோ கெட்டவார்த்தையை கிசுகிசுத்தான். உடலை எச்சில்படுத்திக்கொண்டே சப்தமாக சிரித்தான். அவனது பலத்திற்கு முன்னே சிறு பூவென கசங்கிபோயிருந்தேன். சுவாசிக்கத் திணறினேன். அவனாக என்னில் அகன்று விடுவிக்கும்வரை அப்படியே மயங்கிக் கிடந்தேன். 


மூர்ச்சையாகி பின் விழிப்பது போல சற்றுநேரத்தில் அசைந்துப்பார்த்தேன். சீரான மூச்சு வெளிவர முதலையொன்றின் மெல்லசைவுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். அழுகையாக வந்தது. பிள்ளைகள் இருவரும் நல்ல நித்திரையிலிருந்தார்கள். மூத்தவள் சூரியின் சாயலுடன் அப்படியே கிடந்தாள். ‘சூரி…’ எனச் சத்தமின்றி உச்சரித்தபடி ஒரு மூச்சு அழுதோய்ந்தேன். சின்னவனின் முகத்தில் நாகலிங்கத்தின் சாயல் தென்படுகிறதாவெனத் தேடினேன். இருக்கககூடாதெனும் அவாவுடனேயே பிள்ளையை அணைத்து முத்தமிட்டேன்.  


ஓர் ஆணுடனான அனுபவத்தை பொதுமையாக்க முடியாமல் இருக்கலாம் இரண்டு ஆண்களை அந்தரங்கமாக்கிய பிறகுமா? ஆண்டவன் படைப்பில் ஆண்கள் ஒரு விசித்திரமான ஜந்துவென்பதை சந்தேகிக்கத் தேவையேயில்லை.  அவன் மல்லாந்து படுத்து குறட்டைவிடத் தொடங்கினான். அவனது அசைவுகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டுமாய் அவன் பொல்லாத காட்டுமிருகங்களையே நினைவுப்படுத்தினான். 


எப்போதும் போலவே அடர்மழைத்துளிகள் நீர்நிறைந்த குழிக்குள் விழுந்து தளும்புவதாய் ஆர்ப்பரித்த உள்ளத்தை அமைதிப்படுத்த போராடினேன். ஓர் ஆணின் உடல் பலத்துடன் போராடித் தோற்றத் அவமானத்தை மறைக்க உறக்கத்தை வலிந்திழுத்து போர்த்திக்கொண்டேன். 


……………….


தீராக்காதலின் அந்தத்தில் காமத்தை அவிழ்க்கும் பெண்ணுடலின் ஜ்வாலிப்பை… வசீகரத்தை அல்லது நீளும் அவளது கருணையை எதிர்கொள்ள தகுதியற்ற ஒருவனாலேயே அவள் யட்சியாகி மூர்க்கம் கொண்டவளாய் மாறுகிறாள். தான் கொடுப்பவளெனும் பெரும் உண்மையை மறைத்து பெறுபவள் எனும் நிலையைத்தானும் தக்கவைக்கத் தயங்குகிறாள். 


இரகசியமாகக் கசியும் அவளது உடல் நளினங்களைக் காண வாய்க்காத ஆண்கள் மிகுந்த அபாக்கியசாலிகள். காதல் முற்றிய அவளைச் சுற்றி எரியும் அனலில் தானும் கலந்தெரிந்து காமத்தின் கண்கொண்டு அவளது காதலை ஏற்கத் தெரியாத அவர்கள் தங்களை அறியாத மகா முட்டாள்கள். 


சூரியாவது பரவாயில்லை. நாகலிங்கம் ஓர் அடிமுட்டாள். என்னை ஆக்கிரமித்து தனக்குரியவளாக்கும் உக்திகளை தவறவிட்டவன். எனதன்பின் தேவையிழந்தவன். நாசூக்கற்ற முரட்டுத்தனத்தால் தன் ஆண்மையை நிரூபிக்கும் அவனது பிரயத்தனம் அர்த்தமற்றதென அறியாதவன். தினந்தோறும் ஒரு பெண்ணுடலை அள்ளிவிழுங்க முடிவதென்பதே பெரும் ஆண்மையெனும் மிதப்பில் திரியும் பைத்தியக்காரன்.  


வேறெப்படி கோபத்தை தணிப்பது? என் அலுவலக நண்பியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழமைபோலவே அவளும் ஆரம்பித்திருந்தாள். 


‘ரெண்டு வீட்ட வாடகைக்கு விட்டும், இன்சூரன்சும் என்று வெட்டியா உழைக்கிறவன் உன் புருசன். வேறென்னதான் செய்வான் சொல்லு?’


‘அதுக்காக ஒருநாளைக்கு ரெண்டு தடவைன்னா?


‘வேறென்ன செய்ய முடியும்? மாதினி மாதிரியே நீயும் ஓடிப்போறியா?


அவள் விளையாட்டாகத்தான் கேட்டாளென்றாலும். முடியாமல்தான் மாதினியும் ஓடியிருப்பாளென்று தோன்றியது.  


‘பீரியட்ஸ் டைம்ல கூட விடறானில்லடி’ 


‘இவனுக்கு ஏதும் நோயா இருக்குமோ!’ 


இதைப் பற்றி கதைப்பதே இருவருக்கும் களைப்பாய் இருந்தது. 


‘அதான் சொல்றேனே பேசாம போலிசில சொல்லிறலாம்’ என்றாள். 


‘முதல் புருசன கொன்னுட்டா இவனையும் தெருவுக்கு இழுத்துட்டான்னு ஊரே பேசுறத்துக்கா? என் குடும்பம் கூட நம்பப் போறதில்ல பாத்துக்க’ 


‘இதுக்கு பயந்து எவ்ளோதான் தாங்கிப்ப சொல்லு? 


‘புள்ளைங்க கொஞ்சம் பெருசாகட்டும் விடு. ஏதோ புலம்புறேன் நீ வேலையப்பாரு’ என்றேன். ‘இவனையும் விட்டுட்டு புள்ளைங்ளோட என்னத்ததாண்டி செய்ய முடியும்? நடுரோட்டுல நிக்கவா?’


அவள் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள். 


‘அவன என் கையிலயே கொன்னுப் போடத் தோணுது. இப்டிதான் சாம்பிராணியா இருப்பியன்னா எங்கிட்ட இதுபத்தி ஏன் பேசுற?’  கோபமாக கத்தினாள். 


நான் எனது புருவ முடியொன்றை பிடுங்கியெடுத்து நாவில் உருட்டிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு துண்டாக அதனைக் கடித்துத் துப்பத் தொடங்கினேன். 


அவன் புவியிலும் நான் புதனிலுமாய் நாங்கள் இருவேறு கிரகங்களில் அடைப்பட்டு கிடக்கிறோம்.  பொருந்திப்போகா இரு முரண்களை பிணைத்ததன் அசிங்கமான விளைவாகவே எங்களது பொழுதுகள் நீட்சி காண்கின்றன.


என்னை முழுதாய் விழுங்கிடத் தவிக்கும் மலைப்பாம்பாய் அன்றாடம் அவன் புரண்டெழுகிறான். அச்சத்தின் பிடிக்குள் மருண்ட ஊனென நான் அசையாது கிடக்கிறேன். இரவுகளில் என் தசையை அரித்துத் தின்னும் அவனை புறக்கணிப்பெனும் ஆயுதத்தால் நான் பகற்பொழுதுகளில் தண்டிக்க முயற்சிக்கிறேன். இருவரும் படுமோசமாக ஒருவரையொருவர் காயப்படுத்தி விடவே துடிக்கிறோம். இந்தத் துடிப்பு இரகசிய நாளத்தின் பிளவுகளாய் உடலெங்கிலும் ஓடி பரவிக் கிடப்பதை இருவராலும் தடுக்க முடியாதிருக்கிறது. 


இங்கே நினைக்கும் போதே அவனுக்கு மூக்கில் வியர்த்திருக்கிறது.! தொலைப்பேசி மின்னி மின்னி மறைகிறது.  அவனது குறுஞ்செய்தியும். தொடர்ச்சியாக சில அழைப்புகளும்.


ஒருமுறையாவது அவனைத் தோற்கடிக்க வேண்டுமே.! நிதானமாக அவனது அழைப்பைத் தவிர்க்கிறேன். இப்போது அவனுக்கு கோபம் கொப்பளிக்க வேண்டும். இருக்கட்டும் இன்னும் கொஞ்சம் கோபிக்கட்டும். 


மீண்டும் அழைக்கிறான். தவிர்க்கிறேன்.  மீண்டும் மீண்டுமாய். நானும் தொடர்ச்சியாகத் தவிர்க்கிறேன். சளைக்காமல் அழைக்கிறான். இப்போது துண்டித்துவிட்டு சிரித்துக்கொள்கிறேன். இன்னுமிரு அழைப்புகளையும் சேர்த்து தாமதிக்காமல் துண்டிக்கிறேன்.  சிறுநேர இடைவெளி.  படப்படப்பாகவிருக்கிறது. அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இதுவரையில் அவனது அழைப்பை நான் துண்டித்ததில்லை. இப்போது மாதினியை கட்டாயம் எண்ணியிருப்பான். கொஞ்சம் பயப்படுவான். சிலவேளை அதிகமாகவே பயந்திருப்பான். வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் குருதிவாசனை நாசிக்குள் கசிவது  போலிருந்தது. நான் குதூகலித்தேன். கைகள் நீட்டி சோம்பல் முறித்தேன். புருவங்களை நீவி ஒழுங்குப்படுத்திக் கொண்டேன். அகோர பசிகொண்ட சிங்கத்தை ஏமாற்றி கிணற்றுக்குள் தள்ளிய முயல்குட்டியின் சிறுநேர உவகையிது. 


என்னை நான் கொண்டாட வேண்டுமென்று தோன்றியது.  


‘ஒரு டீ?’ 


நண்பியை அழைத்தேன். பார்வையாலேயே மறுத்தாள். அதே பரபரப்புடன் கெண்டீனில் ஒரு டீ சொன்னேன். டீயோடு இனிப்பாக ஹெலப்பவை சுவைத்தேன். எண்ணிக்கையற்ற குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் நிறைந்துக் கொண்டிருந்தன. 


‘அண்ணா ஒரு ஐஸ்கறீம்’


சந்தேகமாகப் பார்த்தான். ‘டீயோட ஐஸ்கிறீமா?


‘கொண்டுவாங்க சாப்டலாம்’ உற்சாகமாக கத்தினேன். 


நேரம் நான்கைத் தாண்ட இன்னும் பத்தே நிமிடங்கள். அடுத்ததாய் சந்திக்கப்போகும் வார்த்தை யுத்தத்திற்கான கேள்விகளை ஓரளவாய் ஊகித்தேன். ஐஸ்கிறீமால் என்னை குளிர்வித்தபடி பொருத்தமான பதில்களைத் தெரிந்து ஒவ்வொன்றாய் சரிபார்த்துக் கொண்டேன். 


…………………………………


ஓட்டப்பந்தயத்தை ஆரம்பிக்க முன்னிருப்பதான பயம் போட்டியிடும் போது ஏற்படுவதில்லை. என் ஓட்டம் பாதியில் நிற்குமென்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும்  ஓடத் துணிந்தேனே!  முகத்தில் பரவியிருந்த ஏளனத்தின் எச்சம் அப்படியே ஒட்டியிருந்தது. எதற்கும் தயாரானவளாய் உள்நுழைந்தேன். 


மின்விளக்குகளைப் போடாமல் அமர்ந்திருந்தான். குழந்தைகளையும் அம்மா வீட்டிலிருந்து எடுத்திருக்கவில்லை. வேறேதோ ஆயத்தத்துடன் புதியதொரு போர்வாளை தயார்நிலையில் வைத்திருப்பவனாய் தோன்றினான். இத்தனை நேரம் உள்ளிருந்த திமிர் மெல்ல வடியத்தொடங்கியது. அவனை தனியே எதிர்கொள்வதற்கான சின்னஞ்சிறு திட்டங்களைக் கூட பிரமாண்டமான சூழ்ச்சியின் வடிவங்களாய் உணர ஆரம்பித்தேன். 


வழமைமைக்கு மாறான அவனது அமைதி என்னை உலுக்கியது. கடக்கப்போகும் இரவை அஞ்சினேன். எப்படி பேசுவது … எங்கிருந்து தொடங்குவது? இந்த மௌனம் மிகக்கனமாயிருந்தது. இங்குமங்குமாக நடந்து அவனது முகக்குறிப்புகளை அடையாளங்காணவிழைந்தேன். ஒருமுறை நிமிர்ந்தான். அவன் பாவனையில் தொனித்த உணர்வை சத்தியமாக கணிக்க முடியவில்லை. மீண்டும் பதட்டமானேன். எனது முடிவுகள் இவ்வளவு பலவீனமாக இருப்பதையெண்ணி மோசமான தாழ்வுணர்வுடன் அலைக்கழிந்தேன்.. உடைப்பட்ட கண்ணாடித்துண்டொன்று வளைத்து வளைத்து குத்திக்கழிப்பது போல அவனது பார்வை இரகசியமாய் என்னை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தது.  


‘அவ்வளவு திமிரா போச்சாடி…?’ 


குரலில் தீப்பற்றி தகித்தது. தயாரித்து வைத்திருந்த பதில்களெல்லாம் ஆவியாகி கண்முன்னே மறைய, இறுக்கிப் பிடித்திருந்த தைரியத்தை கண்களுக்குள் பாய்ச்சி கண்ணீரைத் தடுத்தேன். பீதியடைந்திருந்த உள்ளம் அவனை நழுவி விலகிச்செல்ல சொன்னது. பதிலின்றி கடந்தேன். பிறகு சில நிமிட இடைவெளிக்குப்பின் என்னைப் பார்த்தான். 


‘ஒனக்கு அவ்ளோ ஆகிறிச்சாடி வேச..? தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் பாத்துக்க… பொம்பளன்னு பாக்குறேன். இல்லாட்டி இதே எடத்துலயே கொன்னு பொதச்சுருவேன்.’   


சுட்டுவிரலை நீட்டி நீட்டி பேசினான். பற்களை கடித்துக் கொண்டான். குனிந்து கால்களிரண்டையும் நீவித் தடவியவாறே இன்னும்கூட ஏதோவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். ‘இடைக்கிடையே ‘வேச.. வேச…’ என்று உச்சரித்தான். எழுந்து சென்று தண்ணீர் குடித்தான். சிறிது நேரம் தாமதிக்கவிட்டு அமைதியாக ‘ஏன் போன் எடுக்கல?’ என்றுக் கேட்டான். அவனது குரலின் தொனி சற்றே தணிந்திருந்தது.


‘மீட்டிங்’ என்றேன். 


‘மெசேஜ் போட்டிருக்கலாமே?’  யோசித்து வைத்திருந்த பதில்களை மறந்திருந்தேன். வெகு இயல்பாக கதையை திசைத்திருப்ப முயன்றேன்.


‘புள்ளைங்கள எடுக்கலயா?’ 


‘அம்மாட்ட இருக்கட்டும். ஒன்னோட கொஞ்சம் தனியா இருக்கணும்’ 


என்ன செய்ய உத்தேசிக்கிறான்? எதுவென்றாலும் ஆகட்டும். தளராதே…தளராதே… சுயமாயிரு. அதிகம் போனால் ‘அவளைப்போல ஓடிப்போவேன்’ என்றாவது சொல். புதிதாய் தீட்டப்பட்ட கூர்வாளின் முனையென அது அவனை குத்திக்கிழிக்கட்டும்.


பின்னால் வந்தென்னை இறுக்கும்வரை தெரியவேயில்லை. திருப்பிப்பார்க்கும் அவகாசத்தையேனும் தராமல் சுவரோடுசாய்த்து உடலோடு ஒட்டியுரசி நுனிப்புல்மேயும் காளையின் அவசரத்தில் என்னை முகர்ந்தான். 


தள்ளிவிடுவதா? அடங்குவதா? மாதினியைப்போல ஓடிப்போவேனென்பதா? ‘வெட்கங்கெட்ட நாயே’ என கத்துவதா?


‘விடுங்க… குளிக்கனும்’ திமிறி பிடியிலிருந்து வெளியேறப்பார்த்தேன். 


‘இல்ல…இப்பவே…இப்டியே…’ 


பேசும் வாய்ப்பை தராது.  முகத்தை ஒரு கையால் அழுத்திப்பிடித்து அடிவயிற்றில் இன்னொரு கையால் குழைந்தபடி சேலையை இழுத்து பிய்த்தெறிந்தான். நிலத்தில் சரித்து அவனது மொத்த கனத்தாலும் என்னை ஆக்கிரமித்தான். புணர்ச்சி வேகத்திலான உடற் கீறல்களையும் கடி காயங்களையும் நான் இலகுவாக ஏற்பேனென நம்புவதாய் காட்டிக்கொண்டான். 


அவசரமான ஒரு கூடல். என் தவறுக்கான தண்டனையாகவும்… 


கைகளை மல்லாந்து விரித்து தரையிலேயே கிடந்தான். கண்களில் வெற்றியின் மிதப்பு ததும்பியது. வாகனத்தில் அடிப்பட்டுக் கிடக்கும்  தெருநாயைப்போல அசையாதிருந்த நான் சட்டென ஒருகணத்தில் ஆடைகளை திரட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து தாழிட்டேன். ஷவரைத்திருகி உச்சந்தலை குளிர கண்கள் திறந்தபடி நின்றேன். நீர்மோதும் உடற்காயங்களை மிருதுவாக தடவிக்கொண்டே நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கும் என் அறியாமையின் மீதும் காமத்தின் மீதும் காறித்துப்பினேன். அவன் மீதான ஆத்திரத்தை எந்த புள்ளிக்கூடாக திசைப்திருப்பலாமெனும் யோசனை அறவுமாய்  இல்லாமலிருந்தது.  ஆவென அலறியபடி என் நகங்களால் கழுத்துத் தசையை கீறியிழுத்தேன்.  


‘வேச.. வேச… என்று அடிக்கடி உச்சரிக்கும் அவனது வாயை கிழிக்க வேண்டும்போல் இருந்தது. அந்தச்   சொல்லுக்கான எதிர்பாற்சொல் என்னவாக இருக்குமென்று யோசித்தேன். வேசியோடு கூடுபவர்கள் காகமாகவும் செந்நாயாகவும் பன்றியாகவும் இல்லையேல் இலவம்பஞ்சு மரமாகவும் மறுபிறவியெடுப்பர்களாமே!   


நாகலிங்கம் காகமாக அல்லது செந்நாயாக பிறப்பதாய் கற்பனை செய்தேன். அக்கற்பனை நிஜமாக வேண்டுமெனில்   மூன்றாவதாக ஓர் உருவம் தேவையென்றுணர்ந்தேன். அவ்வுருவத்துடனான என் ஒருமித்த கூடலையும் நிர்ணயித்தேன். சட்டென அவ்வுருவமாகவும் நானேயாகி… எனதுடல் வனப்பை பார்த்து இரசித்தேன். அக்கணத்திலேயே நான் தொலைத்த என்னை கண்டடையும் அவா பீறிட்டது. 


அப்படியே எனக்கெதிர்ப் பக்கமாக அவ்வுருவத்தை நிறுத்தி வைத்து போதம் தெளியா என் கண்கள் மூடி ஆசையோடு அதனை… இல்லை அவனை… அணுகினேன். நீறுபூத்த நெருப்பைத் தூண்டிச் சுவாலையாக்கி அந்த பெருநெருப்பு தரும் வெம்மையால் நான் சிலிர்ப்படைவதாய் இருந்தது. கண்கள் திறக்கப் பயந்தேன். இந்நொடியின் நீட்சியும் இன்னும் கொஞ்சம் இருளும் தேவையென்பதாய் நம்பினேன்.. தொடர்ச்சியாக எனைத்தீண்டும் நீர்த்திவலைகள் மொத்தமும் ஆயிரம் விரல்களாய் நீண்டு ஸ்பரிசம் செய்யச்செய்ய, குவிந்த தொட்டாச்சிணுங்கி இலைகள் மெல்ல மெல்ல விரிவது பேலாய் என் காதலின் எல்லா பாகங்களும் ஒவ்வொன்றாய் உயிர்த்தெழ ஆரம்பித்தன. 

Wednesday, December 18, 2024

கொலைச்சொல் - பிரமிளா பிரதீபன்

By On December 18, 2024

சூரி சடலமாக கிடத்தப்பட்டிருந்த திசை பார்த்து முக்குச்சுவரில் தலையழுத்தி சாய்ந்திருந்தேன். முழங்காலுக்குள் முகத்தை புதைத்துக்கொள்ள விரும்பினாலும் கூட நான் அப்படிச் செய்யவில்லை. கட்டவிழ்ந்த எண்ணங்கள் உடலை நடுங்கப் பண்ணியது. அடிநெஞ்சில் எழும்பிய தேம்பல் தலைக்குள் மோதித் தாக்கி உஷ்ண அலைகளாக வெளிறேத் தொடங்கியிருந்தது.  

என்னை பலவந்தமாக யாரோ கொன்று விட்டதாக முடிந்த வரை நம்பினேன். அப்படி நம்புவது மட்டுமே அப்போதைக்கு அதிக ஆறுதல் தருவதாயிருந்தது. என் மகளை சிலர் பெயர் சொல்லி கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். முழுவதுமாக கண்திறக்காமல் அவள் யாரிடம் இருக்கிறாளெனப் பார்க்க விரும்பினேன்.    

சேது மாமா வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

 ‘ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல இனிதான் நீ சந்தோசமா இருக்கனும். எல்லா சனியனும் தொலஞ்சிருக்கு.. இங்கப்பாரு… மாமாவ பாரு எதுக்கும் பயப்புட கூடாது. மாமா இருக்கேன்ல…’ 

மாமாவின் கைகளை விடாமல் பற்றியிருந்தேன். என்னிடமிருந்த பெரும் வெறுமையுணர்வை பார்வையால் கடத்தி இறுக்கமாக கண்களை மூடித்திறக்கையில் ஓரிரு கண்ணீர் துளிகள் வெளியேறின. அவை சூரிக்கான கண்ணீர்த்துளிகள் அல்ல எனக்கு மட்டுமேயானவை.  

இனியென்னை எப்படி நம்பப் போகிறார்கள்?  

 ‘இப்பிடி செஞ்சிட்டு போயிட்டானே மாமா…? நான் என்ன செய்யனும் இப்ப?’ 

வெடிக்க ஆரம்பித்துவிட்ட தலையை சிதறவிடாமல் இறுக்கிப் பிடித்து, தலையை நிமிர்த்தி சூரியைப் பார்த்தேன். வழமையாக இரவுகளில் அவன் என்னிடம் சொல்லிக்காட்டுகின்ற மரண அறிவித்தல் செவிகளுக்குள் கேட்டுக்கொண்டேயிருந்தது.   

‘இரத்தினப்புரி கஹவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி சிவராசா தம்பதிகளின் தவப்புதல்வனும் காவ்யதர்ஷனியின் அன்புக் கணவரும் விஷாலினியின் அன்புத்தந்தையுமான திரு சூரியக்குமார் அவர்கள் 01.03.2024 அன்று அகால மரணமடைந்தார். அன்னாரின் பூதவுடல் இரத்தினபுரி பொது மயானத்தில் பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.’  

திகதியை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொள்வானே தவிர இதே அறிவித்தலை ஒவ்வொரு நாளும் அவனது வாயாலேயே சொல்லிச்சொல்லி என்னைக் கேட்க வைத்திருக்கிறான். தவறி தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பியமர்த்தி சொல்லிக்கொண்டிருப்பான்.  தொடர்ச்சியாகக் காரணமேயின்றி சிரிப்பான்.  மறுநிமிடமே ‘கோவிச்சுக்காத காவ்யாம்மா… நீன்னா எனக்கு உசுரு. ஓம்மேல தூசி பட்டாக்கூட தாங்க முடியாதுடி. வா..வா எங்கிட்ட… கட்டிப்பிடிச்சிட்டே தூங்கு. தனியா தூங்கிப்போனா இப்டிதான் செய்வேன்’ என்பான். 

தப்பிக்கவே முடியாத ஒரு கட்டத்தில் என்னை நிறுத்திவிட்டு இப்படி கிடக்கிறானே! கடுமையான குழப்பத்துடன் அவ்வளவு தத்தளித்தேன். அடுத்த நொடியை சந்திக்கும் திராணி அறவும் இல்லாதிருந்தது. இப்போதைக்கு என் மனநிலையறிந்த ஒரேயொருவர் சேது மாமா மட்டுமேதான். சூரியின் இறப்பு என் குடும்பத்தினருக்கே கூட சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கும். அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து தள்ளியே நின்றிருந்தார்கள். வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

மாமா என்னை கையோடு இழுத்து ஓர் அறைக்குள் தள்ளி அறையை மூடினார். ‘இதுக்குள்ளயே இரு. யாருக்கும் நீ பதில் சொல்ல வேணாம். நாம்பாத்துக்குறேன். இந்தா இத குடி’ உள்ளிருக்கும் திரவம் வெளித்தெரியாமல் துணியால் சுத்தப்பட்டிருந்த போத்தலை நீட்டினார். அதற்குள் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். வழமையாக மாமா விளையாட்டாகத் தரும் போதெல்லாம் மறுத்துப்பேசி ஓடிவிடும் நான் அப்போது பட்டென்று அதனைப் பறித்து வாயில் கவிழ்த்துக் கொண்டேன்.  

‘மெதுவாக் குடி’ என்றார்.  

ஓரிரு முறைகள் இடைவெளிவிட்டு அவ்வளவையும் குடித்து முடித்து போத்தலை நீட்டினேன்.  

‘படுத்து நல்லாத் தூங்கு’

 அவர் கதவை தாழிட்டுவிட்டு வெளியேறினார்.  

திடீரென வீடு கலவரமடைந்தது. மாரிக்கிழவி சத்தமாக ஒப்பாரி வைத்துக்கொண்டே உள் நுழைந்திருந்தாள்.  

ஒப்பாரிச் சத்தத்தில் பல குரல்கள் கலப்புற்றன. மாரிக்கிழவியின் சப்தம் மட்டும் தனித்து ஒலித்தது.   

‘களனி மல உச்சியில

கலசனத்த கையமத்தி

கைலாசம் போனியளோ…. 

பழனி மல வாசலில…..’

இடைக்கிடை சூரியப்பா சூரி என்று அலறிக்கொண்டாள். மூக்கை சத்தமாக சீறித்துடைத்தாள். 

‘பரதேசம் போனியோ என்ராசா - நீ

பரதேசம் போனியோ

என்னத்த பாத்தியோ 

என்னத்த நெனச்சியோ  

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

தூக்குப்போட தோணிச்சோ எஞ்சாமி…

யார நா வைவேன்

தொங்கும் போது துடிச்சியோ

இல்ல நெனைக்கும் போது துடிச்சியோடா சாமி…’

அழுகை சப்தம் பலமாக ஒலித்தது. 

‘செத்துப்போன்னு சொன்னா சாவியோ 

எஞ்சாமி- 

செத்துப்போன்னு யாரும் சொன்னா நீ சாவியோ…’ 

அடுத்த கணம் மிக நிசப்தமாகிப் போனது. யாரேனும் கிழவியின் வாiயைப்பொத்தி இழுத்துப் போயிருக்க வேண்டும்.

 கண்கள் சுழன்று ஏதோ தலைக்குள் பாரமாக அழுத்தியது. களைப்பு மறைந்து மெல்லியதொரு மயக்கநிலை விரவி நான் ஆசுவாசமாக உணர்ந்தேன். அடிவயிற்றில் பனித்துளிகள் அப்பிய சுகம். வெகுநேரமாக சிந்தனையற்று வெறுமனே கிடந்தேன். தூங்கிவிழித்தேனா இல்லை அதே மயக்க நிலையில் இப்படியே கிடக்கிறேனா?  முகத்தின் மீதும் வயிற்றின் மீதும் ஏதோ வேகமாக ஊர்ந்துசெல்லும் உணர்வு. என் கைகளைத் தேடினேன். இடதுகையை இழுத்து தூக்கிப் பார்த்தேன். கனமாக இருந்தது. நேராக நிமிர்த்த முயற்சித்தேன். அப்படியே ஒரு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சூரி கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருந்தான். ‘சூரி…’ பல்லைக்கடித்துக்கொண்டு கத்தினேன். 

‘பாசம் பாசம்னு சிதைச்சிட்டியேடா பாவி. மொத்தமா வேசி பட்டம் கட்டி முடிச்சிட்டியே. அபாண்டமா ஒரு பொய்ய பரப்பி…. இதுக்கு என்னய கொன்னு போட்டிருக்கலாமே!’  

பூனையொன்றின் மெல்லிய ஊளையொலியோடு அழுதேன். வலியோடு தெறித்த அவ்வழுகை எனது அயர்ச்சியை சற்றே இலகுபடுத்துமென்று தோன்றியது. மல்லாந்து கைகள் விரித்துக் கிடந்தேன். உடல் கனமற்று பறக்க தாயாராகிக்கொண்டிருந்தது. மின்விசிறி விசித்திரமான சப்தத்துடன் சுழன்றது. அவ்வப்போது விட்டத்தில் ஒன்றுமே இல்லாதது போலானது. கண்களைக் கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தேன். விசிறி கழன்று விழுந்து அப்படியே என் தலையை நசுக்கி விடுமோவென அஞ்சினேன். பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தேன். உடல் சற்று வியர்த்துக் குளிர்ந்திருந்தது. மீண்டும் படுக்க பயம் வேறு. வெளியே போய்வர இயலாத தடுமாற்றம். இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் அவசரத்தை அடக்கச் சிரமப்பட்டேன். இப்போது நேரம் என்ன? நடுசாமமோ… என்னவோ? ஏன் சத்தமேயில்லாமல் இப்படி வெறுமை பரவியிருக்கிறது? தொடைகளை இறுக்கி அடிவயிற்றை எக்கி சிறுநீர் உந்தலை அடக்கிக்கொண்டு எழுந்தேன். காதை உன்னிப்பாக வைத்து வெளியே பேசிக்கொள்ளும் சப்தத்தை கேட்டேன்.  

வீட்டுக்கு பொலிஸார் வந்திருந்தனர்.  

சூரியின் அம்மா தெய்வமாகத் தெரிந்தாள். அவள் தந்த வாக்குமூலம் மொத்த சந்தேகத்தையும் தீர்த்திருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு விம்மினேன்.

 ‘இனியாவது கொஞ்சம் நிம்மதியா இரும்மா.’  

மகனை இழந்த எந்தவொரு தாயும் சொல்லாத அந்த வார்த்தையை அவள் என்னிடத்தே இரகசியமாகக் கூறியபடி அழுதாள். வாஞ்சையோடு எனது இடதுதோளில் கை வைத்து பற்றியழுத்தினாள்.  மனப்படபடப்பு பல மடங்காகவுயர்ந்து அடங்கியது. அதனெச்சம் பேரிரைச்சலுடனான சுவாசமாக மாறுவது கண்டு, முகத்தசைகளை இறுக்கி எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.  

இறுதி விசாரணை என்னிடமாம்.  

ஒரு பெண் போலீஸ் என்னை அறையொன்றிற்குள் அழைத்துச் சென்றாள்.  கதிரையொன்றில் அமரச்செய்து சிங்களம் தெரியுமாவெனக் கேட்டாள்.  தெரியுமென்றேன். தொடர்ச்சியாக அழுதபடியிருந்தேன். நான் சூரியை நினைத்து அழுவதாக அவள் எண்ணியிருக்க வேண்டும். 

‘அப்போ ஏன் அவனை செத்துப்போ என்று ஏசினாய்?’ என்று கேட்டாள். மிருதுவாக என் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளுக்கு ஓரளவுக்கு விடயங்கள் தெரிந்திருந்தன.  

‘நீ அப்படி சொன்னதால்தான் அவன் தூக்குப்போட்டான் என்று நம்புகிறாயா? உனக்கு ஒன்று தெரியுமா? உன் மாமி என்ன சொன்னாள் தெரியுமா காவ்யதர்சனி? 

நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். 

 ‘அதுதானே உன் பெயர்?   

சூரியின் அம்மா என்ன சொல்லியிருக்கக்கூடுமென யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை சரியாக அறிந்தவள் போல் அவள் அதே கதையை மீண்டும் ஆரம்பித்தாள்.  

‘உன் மாமி அப்படியொரு  வாக்குமூலத்தை தராதிருந்தால் இந்நேரத்தில் உன்னை வேறுவிதமாகத்தான் விசாரித்திருப்போம். ஒரு தாய் தன் மகனை அவ்வளவு சொல்கிறாளென்றால்…. அவனைப் பற்றி தெரியாமலா நீ கல்யாணம் செய்தாய்?’  

‘என்ன சொன்னாங்க ?’  

‘அவன் சகோதரர்கள் கூட ஒரேவிதமாக தான் சொன்னார்கள். ஒரு நாளில் குறைந்தது மூன்று தடவைகளாவது தற்கொலை பண்ணப்போவதாக மிரட்டுவானாமே! கையில் கழுத்திலென்று கிழித்து கொள்வானாம். தண்ணியில் குதிப்பானாம். ஒரு தடவை நஞ்சும் குடித்திருக்கிறானாம்.’  

நான் என் வலதுகால் பெருவிரலை நிலத்தில் குத்தித் தேய்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.  

‘விடு… அவன் சாக வேண்டியவன். உன் நேரம் நீ ‘செத்துப்போ’ என்று ஒரு வார்த்தையை சொல்லியிருக்கிறாய்.’  

அவளுக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது. என்னை காத்திருக்கும்படி கையால் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தாள். வேறு சில பொலிஸாரும் அந்த அறைக்குள் வந்துபோனார்கள். 

உடைந்து தேம்பும் அநாதையாய்  நான் அவ்விடத்தில் அமர்த்தப்பட்டிருந்தேன்.  அனிச்சையாய் உடல் நடுக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. என் தொலைபேசிப் பதிவிலிருந்த அத்தனை இலக்கத்திற்கும் அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை மீண்டும் ஒருதடவை நினைத்துக்கொண்டேன். சிலர் அதற்கு பதில் அனுப்பியிருப்பார்கள். ஒருத்தர் விடாமல் அந்த செய்தியை நம்பியுமிருப்பார்களோ! 

  

சகிக்கவே முடியவில்லை. ஒருவன் தற்கொலை செய்யுமளவிற்கு நான் என்ன செய்தேன்? 

மெல்லிய கனைப்புடன் மீண்டும் அவள் என்னிடத்தே வந்தமர்ந்தாள்.  

‘சொல்லு உன் தொலைபேசியை ஏன் அவனுக்கு கொடுத்தாய்? அவன் ஏதோ செய்தி அனுப்பியதாக உன் மாமி சொன்னாள்.  என்ன அனுப்பினான்?’  

‘நான் சாகப்போகிறேன் என் பொண்டாட்டி காவ்யா கட்டையன் சிவக்குமாருடன் ஓடிபோய்விட்டாள். என்னையும் என் குழந்தையையும் அநாதையாக்கி விட்டாள்.’ என்று அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கூறும்போது தொண்டை அடைத்திருந்தது.  

அவள் தண்ணீர் போத்தலை என் பக்கமாக தள்ளி வைத்தாள்.  

‘யார் சிவக்குமார்? உன்னோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவனா.?’  

‘இல்லை. இதற்கு முதல் நான் வேலை செய்த அலுவலகம்.’   

‘யாருக்கெல்லாம் அனுப்பியிருக்கிறான்?’ 

‘என் பதிவிலுள்ள அத்தனை பேருக்கும்.’  

அவள் எனது தொலைபேசியை காட்டச் சொன்னாள். உடைந்து விட்டதென்றேன். நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தாள். தொடர்ந்தும் நானாகவே பேசத் தொடங்கினேன்.    

‘சூரியை முடித்த பிறகு நான் என் எல்லா நண்பர்களிடமிருந்தும் விலகினேன். பெண்களிடம் கூட நான் அதிகம் பேசுவதை சூரி விரும்பவில்லை. ஒரு தடவை ஒரு கோயில் திருவிழாவிற்கு போயிருந்தோம். கூட்டத்தில் ஒரு நண்பன் காவ்யா என்று கத்தியழைத்தான். எனக்கு கேட்டிருக்கவில்லை. அருகே வந்து என் தலையில் தட்டினான். அவ்வளவேதான். சூரிக்கு நெருப்புக் கோபம். அவனையும் என்னையும் பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு அங்கிருந்து போய்விட்டான். பின்னிரவுப் பொழுதில் வந்து சட்டென கதவைத் திறந்து வீட்டுக்குள் எதையோ தேடினான்.  

‘யார்டி அது? என்றபடி என் முடியை பிடித்து இழுத்து கத்தியெடுத்து அறுக்க முயற்சித்தான். நான் திமிறி அவனிடமிருந்து விடுபட்டு ‘யார்னு தெரியலப்பா… கூட படிச்சவனா இருக்கும். வௌயாட்டுக்குஅப்பிடி செஞ்சுட்டான் எதுக்கு இவ்ளோ கோவப்படுறீங்க? என்றேன்.  

‘அடியே வேச… நீ கண்டவன்ட படுப்ப நான் கேட்டா கோவப்படுறீங்களாவா?’  

சூரிக்கு எதையும் சொல்லி தெளிவுபடுத்தலில் நம்பிக்கையிழந்தவள் நான். பதிலேதும் சொல்லாமல் அவனைப் புறக்கணித்தேன். முகம் இறுகி ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினான்.  பதிலுக்கு நான் சண்டை போடவேண்டுமென விரும்பினான். மேலதிக விளக்கம் தந்து அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். சம்பந்தமே இல்லாமல் எத்தனை தடவைகள்தான் மன்னிப்பு கேட்பது? நான் பேசாதிருந்தேன்.  

அப்போதுதான்… கையிலிருந்த கத்தியை அவனது கழுத்திற்கு திருப்பிப் பிடித்து அழுத்திக்கொண்டே கேட்டான். ‘சொல்லுடி இல்லன்னா அறுத்துக்குவேன்… சொல்லிரு… சொல்லிரு...’ பெருங்குரலெழுப்பி என்னை எச்சரித்தான். கத்தி ஆழமாகப் பதிந்திருந்தது. கைகள் நடுக்கம் கொண்டிருந்தன.  கொஞ்சம் இழுத்தால் கூட அறுபட்டு விடலாம்.  ஸ்தம்பித்துப் போனேன்.. அந்த நள்ளிரவில் யாரையென்று அழைக்க முடியும். ‘வேணாம் சூரி… கத்திய எடு… ஒன்ன கும்புட்றேன் கத்திய எடு’ பதறினேன். குரல் நடுங்கி அலறலாக மாறியது.  அவன் பின்னால் தள்ளிப் போய்கொண்டே கத்தியை மேலும் அழுத்தினான். இரத்தம் இலேசாக கசிந்து பரவுவதை என்னால் காண முடிந்தது. நான் மயங்கவில்லை ஆனால் கடுமையான அயர்ச்சியுடன் மிரண்டு போயிருந்தேன்.  

‘சொல்லுடி வேச… அவன வச்சிருக்கியா? தொட்டுப் பேசுறானே?’ இரத்தம் மேலும் அதிகமாக கசிந்திருந்தது. நடுங்கும் கரங்களுடன் அவனருகே சென்றேன். பேச்சற்றவளானேன்.  

‘யார்னு சொல்லு… யார்னு சொல்லு…’

  

‘அவன்தான் என்ன விரும்புறான்… அவன்தான் என்ன விரும்புறான்.. அவன்தான் விரும்புறான்’ பித்தேறியவளாய் உளறிக்கொட்டினேன். தலையில் அடித்துக்கொண்டேன். 

சட்டென கத்தியை அகற்றி நிதானித்து சிரித்தான். தடாலென விழுவது போலமர்ந்து கதிரைக் கைப்பிடியை குத்திக்கொண்டே கேட்டான்.  

‘நீ விரும்புறியா குட்டி? சொல்லும்மா நீயும் அவன விரும்புறியா?’ 

மறுத்து பலமாக தலையாட்டினேன். அவன் பெயர்கூட எனக்கு தெரியவில்லையென்பதை நம்பவா போகிறான். சுவரோடு சரிந்து நிலத்தைப் பற்றிக்கொண்டு தளர்ந்திருந்தேன். 

அவனது இரத்தக்கசிவை துடைத்து மருந்திட்டேன். திடீரென என்னை அணைத்துக்கொண்டு கொஞ்சத் துவங்கினான். என்னை நம்புவதாக சத்தியம் செய்தான். ‘எனக்குத் தெரியும்டா செல்லம்.’ என் கால்களை நீவி விட்டான். தடவித் தடவி முத்தங்களாய் கொடுத்தான். அப்படியே என்னைப் புணர்ந்தான்.   

 

வெட்டியகற்றிய மரக்குற்றியாய் அசையாமல் கிடந்தேன். தெற்குச்சுவரின் மேல்மூலையில் தூசி படிந்து கிடந்ததை பார்த்து தேம்பினேன்.    

   

மேலதிகமாக ஏதும் கேட்க விரும்பவில்லையோ என்னவோ! அந்த போலீஸ்காரி சட்டென எழுந்து நின்றாள். தலைமுடியை சரிசெய்து கொண்டாள். 

 

நிஜத்தில் அபூர்வமான பெண்ணவள். நானாக ஏதோவெல்லாம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். தெரிந்த நண்பர்களைக் கண்டால் தலைகுனிந்து மறைவதையும் ஓடி ஒளிவதையும் சொன்னேன். முடிந்தவரை சூரிக்கு பிடித்தாற் போல வாழ முயற்சித்ததாய் சொன்னேன். இறுதியில் ‘சூரி பாவம் அவன் என்னை அதிகமா நேசிச்சான். ரொம்ப நேசிச்சிட்டான்’ என்றேன்.  

அவள் சிரித்தாள்.  

‘பைத்தியக்காரி ஒரு பைத்தியத்தோடு வாழ்ந்திருக்கிறாயே அறிவற்றவளா நீ? அழாதே. பெண்கள் அழக்கூடாது.’ என்றாள். 

தொடர்ச்சியாக ‘ஏன் அவனை செத்துப்போகச் சொன்னாய்?’ என்று கேட்டவாறே மேசையிலிருந்த புத்தகத்தை விரித்து  எழுத ஆரம்பித்தாள். 

  

விபரமாகச் சொல்லிவிட வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. நிதானமான குரலில் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தேன்.   

‘எனது அலுவலகத்திலுள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் சிவக்குமாரின் விபரத்தை கொடுத்து பேச சொன்னேன். பேசியிருப்பார்கள் போல. அந்த மடையன் எனக்கு அழைப்பெடுத்து நன்றி சொன்னான். நான் பெண் பார்த்து கொடுத்ததை சொல்லி நெகிழ்ந்தவனாய் பேசினான். திருமணம் நிச்சயமானதும் என்னையும் சூரியையும் வரச்சொல்லி  சூரியிடமும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.  

 அன்று ஆரம்பித்த சண்டையிது. தொடர்ச்சியாக விடிய விடிய  சண்டை போட்டு வீட்டை இரண்டாக்கினான். எவ்வளவோ விளக்கினேன். ஒரு கட்டத்தில் நான் கோபப்பட ஆரம்பித்தேன். ‘அப்படித்தான் செய்வேன் உன் வேலையைப் பார்’ என்றேன்’ அதை சூரியால் ஏற்கவே முடியவில்லை. என்னை அடித்தான். தன் பலம் முழுவதையும் திரட்டி சுவரில் குத்தினான். என் கைப்பேசியை பறித்தெடுத்து என்னவோ செய்துவிட்டு கர்வத்துடன் சிரித்தான்.  

எனக்கு பயமாக இருந்தது. அந்தப் பொழுதுகளை நான் முற்றாக வெறுத்திருந்தேன். சிறு நிமிடத்தையும் தாமதிக்க விரும்பாமல் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். அக்கா வீடு பாதுகாப்பானது எனத் தோன்றினாலும் மச்சானோடு என்னை இணைத்து அடிக்கடி பேசும் சூரியின் இயல்பு என்னைத் தடுத்தது. அண்ணா வீட்டிற்கு போனேன். குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்து தனித்திருந்தேன். சூரி தேடி வருவானென்று எனக்கு தெரிந்திருந்தது.  

சிறிது நேரத்திற்குள் ஏராளமானோர் அழைப்பெடுத்திருந்தனர். என் நண்பி குறுஞ்செய்தியை பார்க்கச் சொன்னாள். ‘சிவக்குமார் வீட்டிலும் பிரச்சனை’ என்றாள். நான் வைத்திருந்த எல்லா வட்ஸ்எப் குழுக்களிலும் கூட அது பகிரப்பட்டதாய் சொல்லி அவளே அழுதாள். எனக்கு தலை வெடித்தது. கைபேசியை ஓங்கித் தரையில் அடித்தேன். சரியாக அந்த நேரத்தில் சூரி வாசலில் நின்று அழைத்துக்கொண்டிருந்தான். பாதி மிருகமாயிருந்த நான் அதே வேகத்தில் உடைந்து கிடந்த கைப்பேசியை பொறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தேன். அவனது முகத்திற்கே அவற்றை வீசி வெறிபிடித்தாற் போல கத்தத் தொடங்கினேன்.  

‘காவ்யா வீட்டுக்கு வா... இல்லன்னா செத்துருவேன்’ என்றான்.  

‘நெஜமாவே செத்துருவேண்டி’  

கோபம் தலைக்கேறிக்கொண்டிருந்தது. அப்படியே அடங்கி மெதுவாக கேட்டேன்.  

‘என்ன சொன்ன?... செத்துருவியா? சொல்லு…. சாகப்போறியா? எத்தன தடவதான்டா செத்துபோவ?’ அவனுக்கு மிக அருகே சென்று அடித்தொண்டையில் அழுத்திச் சொன்னேன்.  ‘செத்து தொலடா பரதேசி... செத்துப்போ… செத்துப்போ….’ என் சத்தம் அக்கம் பக்கம் வரை நீண்டிருக்கும்.  

அண்ணா என்னை கட்டிப்பிடித்து வாயை பொத்தினான்.

 

பதில் பேசாது சூரி வெளியேறினான். நான் அமைதியற்றிருந்தேன். சூரியை எனக்குத் தெரியும். முதற்தடவையாக இப்படி நடந்திருக்கிறேன். சற்று நேரத்திற்குள்ளேயே என் இதயத்துடிப்பு பன்மடங்காகியது. படபடப்பில் மயக்கமே வருவது போல… 

‘அண்ணா வா வீட்டுக்கு போலாம்’ என்றேன்.  

‘லூசா நீ. கொஞ்சம் அடங்கட்டும் விடு.’ 

‘ஏதோ பண்ணுது. பயமா இருக்கு’ 

 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அதிபயங்கரமாக நகர்ந்தது. ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. எல்லோருக்குமான பயம் அது. சூரியை எல்லோருமே அறிந்துதானிருந்தோம்.  

அண்ணா பைக்கை எடுத்ததும் ஏறிக்கொண்டேன். நான் பறந்து சூரியிடம் செல்ல அலைந்தேன். ஏதும் நடந்துவிடக் கூடாதென தவித்தேன்.  

வண்டியை நிறுத்தும் முன்னமே பாய்ந்து ஓடினேன். வீடு திறந்தே கிடந்தது.  வாசலுக்குள் நுழையும் போதே சூரி தொங்கிக் கொண்டிருப்பதைத்தான் நாங்கள் கண்டோம்.’  

நான் உடல் குலுங்க விம்மினேன். அவள் எனது கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.  

‘சூரி பாவம்... நான் அவன கொன்னுட்டேன்’  சீவனேயற்ற குரலில் பிதற்றினேன்.  

‘வாய மூடு. இனியாவது உன் வாழ்க்கையை வாழப்பார். முட்டாள் போல யோசிக்காதே.’  

அவளது மனவோட்டத்தை என்னால் அனுமானிக்க இயலாமல் இருந்தது. அவசரமாக இயங்கினாள். சில பதிவுகளில் கையெழுத்திடச் சொன்னாள். பதட்டமாகப் பேசினாள். என்னை வெளியே அழைத்து வந்து ‘இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.    

வெளியே நின்ற சூரியின் தம்பி ‘வாங்கண்ணி’என்றான்.  

3

         

குழப்பங்களின் ஆக்கிரமிப்பு விட்டகல்வதாகத் தெரியவில்லை. ஒவ்வாரு பகலும் மிக நீண்டதாய் ஊர்ந்தது. யன்னல்வழி வெளிச்ச ரேகைகளின் மாறுதலன்றி வேறேதுமில்லை. இரவும் பகலுமென ஒரேயறைக்குள்ளேயே கிடந்தேன்.  என் மகள் பற்றிய சிந்தனையைத் தவிர்த்தேன். என் உயிரைப் பிடித்து நிறுத்துகிற துரோகியவள்.   

அனேகமாக மாமாதான் உதவினார். ஆனாலும் அவர் பயந்து போயிருந்தார். எனது குடிப்பழக்கம் அதிகமாகியிருந்தது. சிறுநேர அந்த விடுதலையை மிக விரும்பினேன். போதையில் கொஞ்சமாவது வாழ முடிந்தது. எதைக் கொண்டும் நிரப்ப முடியாத என் வெறுமையை நான் தேர்ந்தெடுக்கும் போதைப் பொழுதுகள் அலங்கரித்தன. என்றாலுமே இறுதியில் சகலமும் அனர்த்தமாகி திணறடித்தன.  

‘தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று…’ 

சிவபுராணம், வேதப்புத்தகம், சலவாத்து எதையும் விட்டுவைக்கவில்லை.  விடாமல் துரத்தி சிறுபுள்ளியளவு கிடைத்தாலும் பெறுவதற்கு ஏதேனும் கிட்டுமாவென தேடித் துரத்தினேன்.  

தலை முழுவதுமாய் சூரி தொங்கிய அதே காட்சி. தீப்பற்றிய கோபத்தில் அவனை நான் கத்திய இறுதித் தொனி. 

பசியில்லாமல் சாப்பிட்டேன். தண்ணீரை கடித்து மென்றேன். கிழிந்த வாழையிலைகளைப் கண்களால் தைத்தேன். அறையை சுற்றிச்சுற்றி நடந்தேன். பின்வாசல் திட்டில் அமர்ந்து எறும்புகளை விரட்டினேன். புதிதாய் நடப்பதுபோல் கிணற்றடிவரை நடந்து கண்கள் அகலத் திறந்தபடி குளித்தேன். கற்பூரத்தை உள்ளங்கைகளுக்குள் பொடித்து ஆழ்ந்து நுகர்ந்தேன். தொண்டைக்குள் இறங்கிய அதன் வாசனையை அனுபவித்துக் குடித்தேன்.  

எப்படிப் பார்த்தாலும் சூரி தொங்கிக்கொண்டிருப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. 

‘புருசன் செத்ததும் ஓடிப்போனவள் வந்துட்டாள்’ என்ற கதை ஒளிந்து கிடந்த என் காதிற்கும் வந்தது. சிவக்குமாரது திருமணமும் நின்றுபோனதாம். என்னவோவெல்லாம் நடந்துகொண்டிருக்க நான் அடர்ந்த இருளையும் அதை மீறிய சாம்பல் வண்ண சிறுபொழுதுகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருந்தேன். 

அப்போதைக்கப்பான குழந்தையின் அழுகையொலி மட்டுமே என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.  

எத்தனை நாட்களாய் இப்படிக் கிடக்கிறேன்?  அறையில் ஈரவாடை நிரம்பியிருக்கிறது. கை வைக்குமிடமெல்லாம் ஏதோ பிசுபிசுக்கிறது. அருகிருந்த கண்ணாடியைப் பார்க்கிறேன். ஒரே தூசியும் கரும்புள்ளிகளுமாய்… ச்சே! அவற்றை கைகளால் வழித்துத் துடைத்தெடுத்து சட்டையில் அப்பிக்கொண்டே நீண்ட நாட்களுக்குப்பின்  என் பிம்பத்தை உற்றுப் பார்க்கிறேன். 

வேறு யாரோ ஒருத்தியைப் போல, கண்கள் சோர்ந்து முகம் விகாரமாகித் தெரிகிறது. அப்படியே பின்னால் இருந்து கழுத்தை இறுக்கி என்னை விடாது பற்றியிருக்கும் சூரியின் கைகளையும் கூட என்னால் இப்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது.


Friday, January 5, 2024

புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' - பிரமிளா பிரதீபன்

By On January 05, 2024

இலக்கியத்தை வாசிப்பதும் அவற்றைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தனித்துவமான கலை. எல்லோராலும் வாசிக்க இயல்வதென்பதே சாத்தியமற்றதாக இருக்கும் இக்கால சூழ்நிலையில்  வாசித்தவற்றை குறித்ததான கருத்துக்களை முன்வைப்பதும் படைப்பாளர் பற்றிய சகல விடயங்களையும் தேடித் தொகுத்து ஒரே பார்வையில் அவர்தம் மொத்த படைப்புலகம் சார்ந்ததுமான குறிப்புகளை நம்பகத்தன்மையுடன் களஞ்சியப்படுத்துவதும் மிகப்பெறுமதியான இலக்கியப்பணியெனவே சொல்லலாம்.


'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூலினூடாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அப்பணியினை நேர்த்தியாக செய்திருக்கிறார். 


என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் போது அப்படைப்பாளி தொடர்பான சகல விடயங்களையும் தொகுத்துத் தருதலென்பது மிகநிதானமாக செய்யப்படவேண்டியதொன்று. தேடலும் பொறுமையும் நிரம்பப் பெற்ற ஒருவருக்கே இது சாத்தியமாகிறது. 


படைப்பாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஒரு சிறந்த புனைகதையாளர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து பத்தியெழுத்து தொகுப்புகள் மேலும் சில தேர்ந்தெடுத்த தொகுதி நூல்களுக்கு சொந்தக்காரர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்.


இவரின் புதிய படைப்பான 'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூல் மொத்தமாக இருபது சுய ஆய்வு கட்டுரைகளுடன்  2023ம் ஆண்டில் கார்த்திகை மாதம் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளமை படைப்பாளரது தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கு ஒரு சான்றாக அமைகிறது. 

இந்நூலின் கட்டுரைகளைப் பொருத்தவரை  ஏழு வகையான இலக்கிய வகைகளை தெரிந்து தனது உற்றுநோக்கல்களை விரிவாக்கம் செய்ய முனைந்திருக்கிறார். ஒரு நாவல், ஒரு நலவியல் இலக்கியம், மூன்று சிறுவர் இலக்கியங்கள், ஐந்து பத்தியெழுத்து அல்லது ஆய்வுரை தொகுப்புகள், ஒரு காலாண்டிதழ் எட்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாட்குறிப்பு என மொத்தமாக இருபது படைப்புகள் மீதான அல்லது இருபது படைப்பாளர்கள் மீதான பார்வையினை தொகுப்பாக தந்திருக்கிறார். 


தன்னுடைய கட்டுரைகளில் உள்ளடக்கம் பெற்ற பல்வேறு புனைவு அபுனைவு வடிவங்கள் தொடர்பான தனது ஆய்வு தொடர்பாக அவர் குறிப்பிடுவதாவது.... 


'படைப்பாளர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இங்கு பிரதானமாகிறது. இம்முயற்சியானது மறைமுகமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு மிக்கதொரு பணியினையும் செய்யத் தலைப்படுகிறது என அறிய வரும் போது உண்மையில் மனது குதூகலிக்கவே செய்கிறது'


இவ்வாறு இன்றைய சமகால படைப்பாளர்களின் அவசியமான தேவையை நிறைவு செய்யத்துணிந்த இந்த நூல் தொடர்பாக ஆராயும் போதில் பிரதானமாக 03 நிலைகளுக்கூடாக குறிப்பிட்ட கட்டுரைகளை அணுக முடியுமாயிருக்கிறது.


01) இந்நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகள்.

02) நூலின் சமகால முக்கியத்துவம் 

03) எழுத்தினூடாக வெளிப்படும் நூலாசிரியர்


எனவே முதலாவது விடயமான நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகளைப் பார்த்தால், நானறிந்த வகையில் திறனாய்வு முறைகள் பண்டையகாலந்தொட்டு  இன்றுவரையாக பல்வேறு மாற்றங்களையும் காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாற்றங்களை தேவைக்கேற்ப தன்னைத் தழுவிக்கொள்கிறது எனச்சொல்ல முடியும்.  


குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் நவீனத்துவம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கருத்தியலை அடிப்படையாக கொண்டே அநேகமாக திறனாய்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. 


ஆனால் நான் இந்த நூலை பார்த்த விதமானது இந்நூலாசிரியர் தனது மனப்பதிவுமுறை திறனாய்வினை மேற்கொள்ளுதலினூடாக தனது அனுபவத்தினதும் அறிவினதும் அகலப்படுத்தலை மையமாகக்கொண்டு பயன்படுத்தியிருக்கக்கூடிய அணுகுமுறைகள் தொடர்பான தெளிவினையே தருகிறது.   


மனப்பதிவுமுறை என்றால் அதற்குள் உள்ளடங்கக்கூடிய பொதுவான அணுகுமுறைகளாக வகைப்பாட்டு அணுகுமுறை, அழகியல் அணுகுமுறை, மதிப்பீட்டு  அணுகுமுறை, வரலாற்று  அணுகுமுறை, விளக்கநிலை  அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பாராட்டும்  அணுகுமுறை, விதிமுறை  அணுகுமுறை என்பவற்றை குறிப்பிட முடியும். இவற்றுள் குறிப்பிட்ட இந்த நூலினூடாக ஒருசில அணுகுமுறைகளை தெளிவாக இனங்காண முடிகிறது. 


வகைப்பாட்டு அணுகுமுறை:

பல்வேறு இலக்கிய வகைகளைப் பற்றிய ஆய்வுமுறை வகைப்பாட்டு அணுகுமுறையாக கருதப்படலாம். ஏலவே நான் குறிப்பிட்டது போல தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' எனும் நாவல், எம்.கே.முருகானந்தனின் 'டாக்குத்தரின் தொணதொணப்பு' எனும் நலவியல் இலக்கியம், கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், எஸ். பேராசிரியரின் 'மாசுறும் பூமி' எனும் பத்தியெழுத்து, 'எங்கட புத்தகங்கள்' எனும் காலாண்டிதழ், ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ், இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், வைத்தியர் தி.ஞானசேகரனின் ;யாவரும் கேளீர்' எனும் பத்தியெழுத்து, இரகுவரனின் 'தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் வம்சம்' எனம் ஆய்வு நூல், வண செபமாலை அன்புராசா அடிகளாரின் 'அண்ணன் ஆமையும் தம்பி முயலும்' சிறுவர் இலக்கியம், தாட்சாயணி, பிரமிளா பிரதீபன், ஆசி கந்தராஜா மண்டூர் அசோகா, சிறீறங்கன், பாலரஞ்சனி ஜெயபால், சிவசோதி ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள், பஞ்சகல்யாணியின் 'கதைமரம்' எனும் சிறுவர்கதைகள், அஜந்தகுமாரின் 'நாட்குறிப்புகள்' என பல வகையான இலக்கியங்கள்  உள்ளடக்கம் பெற்றிருக்கின்றமை இந்நூலின் விசேட அம்சமாகிறது. மேலும் ஒவ்வொரு இலக்கிய வகையும் குறிப்பிட்ட நூலின் படைப்பாளரது ஆளுமையை தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நோக்கிலான வகையில் ஆராயப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.   


அழகியல் அணுகுமுறை:

அதாவது இலக்கண விதிமுறைகளை கருத்திற்கொள்ளாது படைப்பின் அழகியலுக்கூடாக படைப்பினை பிரித்து மதிப்பீடு செய்வது தான் இவ்வணுகுமுறையின் அம்சம். இவ்வணுகுமுறைக்குள் நூலாசிரியர் தன்னுடைய ஆளுமையை அதிகமாகவே காட்டியிருக்கிறார். அவர் ஒரு புனைவெழுத்தாளன் எனும் வகையில் அழகியல் பற்றியதான தேடலையும் பார்வையையும் பயன்படுத்தி ஏராளமான நியாயப்படுத்தல்களை செய்திருக்கிறார். 


பிரதானமாக ஒவ்வொரு கட்டுரையையும் சில அழகியல்சார் அடையாள வார்த்தைக்குள் உள்ளடக்கிய வித் நூலாசிரியரின் அழகியல் உணர்விற்கு சான்றாகிறது எனலாம். உதாரணமாக கட்டுரைகளின் தலைப்பென்பதாய்... 'பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்'  தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், வடமராட்சியின் வனப்பான வாழ்வியலிற்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் உறவுகள் சேர்ந்து'  போன்றதாய்  கட்டுரைத் தலைப்புகளில் தனது கற்பனைத்திறனை புகுத்திப் பார்த்திருக்கிறார்.


மேலும் புனைவு நூல்கள் தொடர்பாக தனது பார்வையினை விரிவு படுத்தும் போது தன்னுடைய பிரமாதமான மொழிநடையைக் கொண்டு தான் பேசும் புனைவெழுத்தின் அழகியல் பற்றி  எடுத்துரைத்திருக்கும் முறைமையானது சிறப்பான அவதானத்தை பெறுகிறது. 


மா.சிவசோதியின் சிறுகதைத் தொகுதிப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்.  'போர்காலத்திலும் அல்லது அதன் பின்பும் நிர்க்கதியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் எதிர்காலம் இப்படியாகத்தான் அமையப் போகிறதோ என்ற ஒரு பதகளிப்பினை ஏற்படுத்தும் இச்சிறுகதை, இத்தொகுதிக் கதைகளுள் மிக்க கவனிப்பிற்குரியதொன்றாகிறது....'  


மேலும் 

'தோட்டத்தில் விளையும் கீரை, அதைக் கொண்டு வருவதற்காக தனது திருக்கல் வண்டியை எடுத்து வார்களுக்கிடையில் காலைவிட்டு கெந்திகெந்தி உழக்கிச் செல்லும் சிறுவன், தோட்டகாரர் கீரையை பிடுங்கி பைக்குள் திணிக்கும் இலாவகம், அந்த துலாப்பட்டையை எடுத்து கட்டையில் போடும் விதம் எல்லாமே.... அந்த வடமராட்சியின் தோட்டச் சூழலிற்கே வாசகனை அழைத்துச் சென்று விடுகிறது' 


இவ்வாறான தனது விபரிப்புகளின் துல்லியத்தால் பேசவந்த படைப்பின் அழகியலை சிறப்பித்துக் காட்டும் முறைமை  கவனம் பெறுகிறது.


மதிப்பீட்டு அணுகுமுறை அல்லது ஒப்பீட்டு அணுகுமுறை:

ஒரு குறிப்பிட்டப் படைப்பிலக்கியத்தின் தரத்தையும் தகுதிபாடுகளையும் பலவகை இலக்கியங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஒரு தீர்மானத்தினை படைப்பின் மீது செலுத்தும் வகையிலான அணுமுறையென இதனை கூறலாம். அந்த வகையில் நூலாசிரியர் இம்முறையினை  செய்யாமல் செய்திருக்கிறார் அல்லது தவிர்த்திருக்கிறார்.  


இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள் எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 


'அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சொல்லும் கதைகள் இன்னும் கனதி பெற வேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டு நிற்பதாக நூலின் முன்னுரையில் நூலாசிரியரின் மற்றுமோர் ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவருமான எழுத்தாளர் இராஜேஸ்கண்ணன் அழுத்தி உரைத்திருப்பதை அஜந்தகுமார் கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அவரின் இத்தகு எழுத்துகள் இலக்கிய உலகில் நிச்சயம் கனதியான சுவட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என மிகத் தாராளமாகவே கூறலாம்' 


'சமூகச் செய்திகளை சீரோடு சித்தரித்திருக்கும் சிறீறங்கனின் 'சிவப்புக்கோடு' எனும் கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது: 

'ஆனாலும் ஈழத்து நவீன புனைகதை பற்றிய பரிச்சயமும், துறைசார்ந்த வீச்சும் சிறீறங்கனிடம் மேலும் வேண்டப்படுவதையும் தொகுதி உணர்த்த தவறவில்லை. மிகச்சிறந்த சமூக அவதானிப்பினூடும் தேர்ந்தெடுத்த ஒரு மொழிநடையினூடும் சிறீறங்கன் எதிர்காலத்தில் சிறுகதையுலகத்தில் பயணிப்பாராயின் இவரது முன்னைய தலைமுறையில் கோலோச்சி நிற்கும் வதிரி இ.இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி போன்றோருடன் இவர் பொருந்தத்தக்க ஒருவராக வல்லர் என்பதனையே சிவப்புக்கோடு எனும் நூல் உணர்த்தி நிற்கிறது எனலாம்'  


அதாவது குறிப்பிட்ட படைப்பாளர் எந்த இடத்தில் தம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் எனும் மதிப்பீட்டை படைப்பாளரை புண்படுத்தா வண்ணம் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் எனத்தோன்றுகிறது. எனினும் நூலாசிரியர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்கள் அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி எனும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வலியுறுத்தி சில விமர்சனங்களை கூற முற்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட படைப்பாளர் அதனை ஏற்றிருப்பார் என தாராளமாக எண்ண முடிகிறது. காரணம் எதிர்மறையான விடயங்களை மிக இலாவகமாக சொல்லத்தெரிந்த மொழிப்பக்குவத்தை கொண்டிருக்கக்கூடியவர்களால் மேலும் பல அசாத்தியங்களை இலகுவாக நிகழ்த்த முடியும். அத்தகைய விமர்சனங்களின் தேவைபாடு அதிகரித்திருக்கிறது என்பதுடன் புதிய படைப்பாளர்களின் ஆளுமையுடனான அடுத்தக்கட்ட நகர்விற்கு மதீப்பீட்டு ரீதியான அணுகுமுறையே பேருதவியாக அமையுமென்பது என்னுடைய கணிப்பு.       


அடுத்ததாக இந்த நூலின் சமகால முக்கியத்துவம் பற்றியதான தேடலில் மிக முக்கியமாக விமர்சனத்துறையின் காலத்தேவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.  திறனாய்வுத்துறைக்கான பங்களிப்புகளை வழங்குவோர் குறித்து தேடுகையில் மிக சில பெயர்களே நினைவிற்கு வருகின்றன. குறிப்பாக விமர்சகர் S.ரமேஸ், இ.சு முரளிதரன், செல்வ மனோகரன், இ.இராஜேஸ்கண்ணன், புலோலியூர் வேல்நந்தன், குணேஸ்வரன், ஜிப்ரிஹாசன், சப்னாஸ் ஹாசிம் போன்றோரையும் பெண் விமர்சகர்கள் வரிசையில் திருமதி வசந்தி தயாபரன், எம்.தேவகௌரி, திருமதி ரஞ்சனி சுப்ரமணியம் போன்றோரையும் நினைவுபடுத்த முடிகிறது. எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் நூல் விமர்சனத்தைத்தாண்டி வாசிப்பனுபவம் எனும் வகையில்  அனேகமானோர் வெறும் அழகியல் திறனாய்வாக மாத்திரம் தமது ஆய்வை வளர்த்து செல்கின்ற போக்கும் இன்றைய காலகட்டத்தில்  அதிகரித்துள்ளபடியால் இந்நூலின் காலத்தேவைப்பற்றி  வெகுவாக உணரக்கூடிய சூழ்நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.  


பல்வேறு வகை இலக்கியங்களின் தொகுப்பை ஒரே பார்வைக்குட்படுத்தி குறிப்பிட்ட படைப்பாளரது சகல படைப்பனுபவங்களையும் களஞ்சியப்படுத்தல் முதற்கொண்டு படைப்பாளர்களை ஊக்குவித்தல், புதிய படைப்பாளர்களுக்கு சரியான வழியினை அமைத்து கொடுத்தல், மேலும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் தனது கட்டுரைகளை பிரசுரிப்பதனூடாக புதிய படைப்பாளர்களுக்கு பெறுமதியான களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் காலத்தேவை மிகவும் இன்றியமையாததாகும். 


மேலும் எழுத்தினூடான படைப்பாளரின் வெளிப்பாடு என்ற வகையில், எழுத்தாளர் தனது படைப்பூடாக ஏற்படுத்த துணியும் சமூக விளைவையும் படைப்பின் சமூக பெறுமானத்தையுமே ஆராய விரும்புகிறேன். அதாவது கல்வி புலத்தில் கற்றலில் அதீத மேம்பாட்டை செய்யும்  மறைகலைத்திட்டத்தைப் போல வெளித்தெரியாத எத்தனையோ சமூக பெறுமானங்களை கொண்டதாய்  இவரது சுய ஆய்வுக்கட்டுரைகள் தொக்கியிருக்கின்றன. 

குறிப்பாக அக ஊக்கல் தேவையான படைப்பாளரை இனங்கண்டு அவர்களின் தேவையை தீர்ப்பதாய் சரியான சமயத்தில் வெளிவரும் கட்டுரைப்பிரசுரம்,  புதிய எழுத்தாளர்களின் சூழ்நிலையறியாமல் ஒரே கட்டுரையில் அவர்களின் தன்னம்பிக்கையை இல்லாதொழிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் முகப்புத்தக எழுத்து கலாசாரத்திற்கு மத்தியில் மிகுந்த பக்குவத்துடன் எதிர்மறைவிடயங்களை கையாளத்தெரிந்த மொழிப்பக்குவம், படைப்பாளர்களின் ஏனைய விபரங்களை தேடித்தொகுத்த நிதானம், நெறிப்படுத்துகை, படைப்பாளர்களை எழுத்தினூடாக தன்னம்பிக்கையூட்டும் திடம் இப்படி ஏராளாமான பண்புகளை சிதறவிட்ட பாங்கிகை உற்று அவதானிக்க முடிகிறது. 


ஆகவே தன் கட்டுரைகளில் நூலாசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் அதே வார்த்தைகளில் கூறினால்... இலக்கிய உலகின் கனதியான சுவடாகக்கூடிய ஒரு படைப்பினையே  நூலாசிரியர் ஆ.இரத்தினவேலோன் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

Monday, March 6, 2023

"விரும்பித்தொலையுமொரு காடு" (விமர்சனம்) - கருணாகரமூர்த்தி

By On March 06, 2023

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக  முகநூல் நண்பரொருவர் தான் வாங்கிய நூல்கள் என்று ஒரு 10 நூல்களைப்  அருகருகே வைத்துப் படமெடுத்துப்போட்டிருந்தார். அதில்த்தான் முதன்முதலாக ‘விரும்பித்தொலையுமொரு காடு’ நூலினைப்பார்த்தேன். தலைப்பின் கவித்துவத்தையும், அட்டை ஓவியத்தின் காந்தியையும் பார்த்து அந் நூலையும் ஒரு கவிதை நூலென்றே நினைத்தேன். அப்போது ‘நடு’ ஆசிரியர் கோமகன் இலங்கையில் இருந்ததால் அவரை ‘விரும்பித்தொலையுமொரு காடு’ பிரதியொன்றை வாங்கிவரும்படி கேட்டிருந்தேன். அவருக்கும் அங்கு  அதன் பிரதி கிடைக்கவுமில்லை, அவர் திரும்ப பாரிஸ் வந்து சேராததும் தனிக்கதை. பிறகும் ஒரு மாதங்கழித்து  ‘விரும்பித்தொலையுமொரு காட்டை” கிழக்குப்பதிப்பகம் மூலமாக எடுப்பித்தேன்.

என் வழக்கப்படி தலைப்புக்குரிய கதையைத்தான் முதலில் வாசித்தேன். அக்கதையே இவர் ஒரு வித்தியாசமான கதைசொல்லியென எனக்குப் பிரமீளா பிரதீபனை அடையாளங்காட்டியது.

நடு, ஜீவநதிகளில் வாசிக்கக்கிடைத்த பிரமீளாவின் இரண்டொரு கதைகளைத்தவிர நினைவில் இருத்திக்கொள்ளும்படியாக எனக்கு வேறொரு படைப்பையும் படிக்க நேர்ந்ததில்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றைப்படைப்பவர்களின் பௌதீக அடையாளங்களைவைத்து ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று வகைபிரிப்பதில் எனக்கும்  உடன்பாடில்லை. ஆனால் தமிலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பைவைத்து அதை எழுதியவர் ஆணோ பெண்ணோவென வாசகன் ஊகித்துக் கண்டுபிடிக்கும்படியாகவே இன்னமும் அவை இருக்கின்றன. காரணம் பெண்கள் சித்தரிக்க எடுத்துக்கொள்ளும் கருக்கள், அவர்களது மொழி, சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு. இதை மறுப்பவர்களுடன் கம்புசுற்றும் எண்ணம் எனக்கில்லை, பிரமிளா இந்த வகைமையிலிருந்து விலகியிருப்பது ஒரு இனியஆச்சரியம். 

அவர் நிறையவே உள்மனயாத்திரை செய்பவராக இருக்கிறார். அவர் சித்தரிக்கும் உலகங்கள் நடப்பிலிருந்து வித்தியாசமானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் செவ்வீதமும் அகவுலகச் சித்தரிப்புகளாக உள்ளன. இன்னும் மயாயதார்த்தம், மிகுயதார்த்த வகைகளிலும் அவர் தன் படைப்புகளைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

என் பதின்மவயதுகளில் ஒரு நண்பர்மூலம் தியானம்பற்றி அறியவிழைந்தேன். எனக்கு அப்போது பத்மாசனத்தில் அமர்ந்திப்ருப்பதே வல்லையாக இருந்தது. பின் மூச்சுப்பயிற்சி. ஆழமான உள்மூச்சு அதை நெஞ்சுக்குள் உள்ளடக்கி நிதானமான வெளியேற்றுதல் என்று பலவிதமான பயிற்சிகள் தந்தார். ” உனக்கு ஓரளவுக்கு தியானம் கைகூடிச் சிந்தையை ஒடுக்கிக் குவிக்கமுடிந்தால் LED மாதிரி நெற்றிப்பொட்டில் சின்னதாக ஒரு ஒளிப்பொட்டுத்தெரியும். அந்த ஒளிப்பொட்டை உன்னால் நினைத்தவிடத்துக்கெல்லாம் நகர்த்திச்செல்லமுடியும், அதை அப்படியே முள்ளந்தண்டினூடாக இடுப்பின் கீழாக இறக்கி ’குண்டலினி’ எழுப்பலாம்” என்றெல்லாம் சொன்னார். மாதக்கணக்கில் முயன்றும் எனக்கொரு ஒளிப்பொட்டும் தோன்றவே இல்லை, தியானம் எனக்கான விஷயமல்ல என்று புரிந்ததும்  அதை அத்துடன் விட்டுவிட்டேன். 

இத்தொகுதியிலுள்ள ’அது புத்தனின் சிசுவல்ல’கதையிலிருந்து பிரமிளா நிறைய வாசித்திருக்கிறார் என்பதுவும் , தியானம், யோகம்,  குண்டலினி. என்றும் பயிற்சிகள்செய்யவோ குறைந்தது அவைபற்றி அறிந்துகொள்ள நிறையவே வினைக்கெட்டிருப்பாரென்றும் தெரிகிறது.

ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ என்றொரு கதையை எழுதியிருப்பார். அதில் வரும் இளம் சித்தாளு ஒருத்திக்கு வாத்தியாரென்றால் உயிர். அவளூர் டாக்கீஸுக்கு வாத்தியார் படம் வந்தால் பையன்களைப்போலப் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தது பத்துத்தடவைகளாவது பார்த்துத் தீர்த்துவிடுவாள். விளைவு நாளாகவாக அவளுக்குத் தன் கணவனுடனான உறவுவின்போதும் வாத்தியாரே வந்து தன்கூட முயங்குவதைப்போலக் கற்பிதஞ்செய்துகொண்டு மகிழ்கிறாள். இவ்வேளையில் எதிர்வீட்டுக்கு சென்னையில் ரிக்ஷா வலிக்கும் இளைஞனொருவன்  வாத்தியார் படம்போட்ட டி- ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகிறான். சித்தாளுக்கு அவனது சுருள்சுருளான கிராப்புத்தலையும் தூக்கிக்கட்டிய லுங்கியினூடாக பாதி டிராயர்  தெரிவதும், அவன் ஸ்டைலாக பீடி வலிப்பது எல்லாமே அவனையுமொரு நவீனதோரணையுடனான வாத்தியாராக தோற்றங்காட்டவும் மனசை அடக்கமுடியாமல் அவன்மீதும் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறாள். சித்தாளின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அவ்விளைஞனும்  ‘ நீ என்னோடு சென்னைக்கு வந்திடு, உன்னை நான் வாத்தியார்கிட்டயே கூட்டிப்போறேன்’ என்று பசப்பி அவளை மெல்ல சென்னைக்கு நகர்த்திப்போய் சீரழிக்க முயல்வதாக அக்கதை நகரும்.

’அது புத்தனின் சிசுவல்ல’ கதையில் வரும் மாயாவுக்கும்  கிட்டமுட்ட இப்படியான சிக்கலொன்று வருகிறது. மாயாவுக்கு அகிலன்மீது ஆசை. 

மாயா தனக்கு வழிகாட்டும் சன்மார்க்ககுருவென நம்பிக்கொண்டிருக்கும் குருஜிஜே  நீலமேகத்தை அவள் மணக்கவேண்டுமென்று நிர்பந்திக்கிறார்.          (அப்படி நிர்ப்பந்திபதற்கான காரணம் கதைக்குள் காணோம், இதைப் புதுமைப்பித்தன் வகையிலான பாய்ச்சலெனக்கொள்ளலாம்.) அவரது விருப்பத்தின்பேரில் மறுவார்த்தையின்றி மாயா நீலமேகத்தைத் திருமணஞ்செய்துகொண்டுவிடுகிறாள்.

சித்தாள் பட்டிக்காட்டுப்பெண் படிப்பில்லாதவள் சமூகம் கற்பிக்கும் வாழ்வியல் நியதிகளென்ற கற்பு, ஒழுக்கக்கோட்பாடுகள், பண்பாட்டுத் தடைகள்., நிஜமங்கள், எதுவும் அவளுக்கில்லை / அல்லது அறியாதவள். 

மாயாவுக்கு அப்படியல்ல. தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் நீலமேகம் இருக்கும்போதே அகிலன்வந்து மாயாவுடன் குலவச்செய்கிறான். அதுவே மாயாவின் வார்த்தைகளில் // ஒவ்வொரு புணர்ச்சியின்போதும் என அனுமதி இல்லாமலே அகிலன் எனக்குள்  வந்துபோகின்றான்.// அதுவே அவளுக்கொரு அகச்சிக்கலாகிறது. அவளுக்கான அச்சிக்கலை  கிரியாயோகத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் அலச விசாரஞ்செய்ய முயல்கிறார் பிரமிளா.

தியானத்தின் வழியில் இரண்டு ஆன்மாக்கள் சந்தோஷிப்பதுவும் குலவுவதும் சாத்தியந்தானாவெனக் குழம்புகிறாள் மாயா. இதை யாரிடம் கேட்பது?

ஒரு ஆண் ஒரு பெண்ணை மோகிக்கிறான் என்றால் அவனது ஒரு, பார்வை, ஒரு உடலசைவில் பெண்ணானவள் புரிந்துகொண்டுவிடுவாள். ஆதலின் குருஜியின் உள்நோக்கத்தை மாயா புரிந்துகொண்டிவிட்டிருப்பாள், ஆனால் அதை வாசகனும் புரியும் விதமான காட்சிப்படுத்தல் கதைக்குள் எதுவும் வரவில்லை.

புத்தனின் சிசுவல்ல மாயாவுக்கு ஒவ்வொரு . தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் / பேரின்பநிலைகளிலும்  அவளது முன்நாட்காதலன் அகிலன் வந்துவந்து குலவுவதை மாயா அவளது கணவன் நீலமேகத்துக்குச்செய்யும் துரோகமாக உணர்கிறாள். 

அகிலன்வந்து குலவுவது நிஜமேயெனில் குருஜியும் அதை அறிந்திருப்பாரே? அவ்வாறு அறிந்தால் அவர் அகிலனையும் தண்டித்து…….. என்னையுமொரு  புனிதங்கெட்டவள் எனச்  சபித்துவிடுவாரேயென்று  மாயா கலங்குகிறாள். 

அவளது அகச்சிக்கலைக்  குருவுக்கு விளக்கி அந்த இம்சையிலிருந்து விடுபடலாமென்று  அவ் யோகக்குருவிடம் ஆலோசனை கேட்கவந்தால் 

”இந்த மாசம் பௌர்ணமிதினம் பிரம்மமூர்த்தப்பொழுதின் தருணம் கருவுக்கான நேரமாயிருக்கலாம் மாயா” என்று  மாயாவைக்கூட விழைகிறார். 

குருவின் சந்நிதியில் புத்தனின் துறவு,  யசோதாவின் தனிமை புனிதவாழ்வெனும் சம்வாதம் நிகழ்ந்த ஒரு பொழுதில்  குருவிடமே அகிலன் விவகாரத்தை மாயா தெரிவித்துவிடவும் கடுஞ்சினமடையும் சன்மார்க்க  குருஜி அவளை

”இழிகுலத்து நாயே….. கண்டநாயோடெல்லாம் புணர்கிறேனென்று என்னிடமே சொல்லுகிறாயா” என்று பழித்துரைப்பதுவும், உன்கர்மாவென்று கர்மாவை அழுத்துவதும் முரண்நகைக்குரிய இடங்கள்.

மேற்படி கதையானது ஒரு குறுநாவலுக்கான வெளியைக்கொண்டிருந்தும் அதையொரு சிறுகதையாகவே திடுப்பென பிரமிளா முடித்துவிட்டார்.

‘நீலி’ கதையும் பாத்திரங்களும் உரையாடல்களும் கற்பனையினூடான படிமங்களாகவே நகர்த்தப்பட்டிருப்பதுவும் ஆண்பெண் ஆணவம்/ தன்முனைப்பு (Ego) விளைவாகவரும் உரசல்கள் அவற்றின் விளைவுகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

ஒருமுறை மிகவும் படித்த ஒரு எழுத்தாளருடன் (பெண்) பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. “ எனக்குத் தலையை ’குறொப்’பண்ணிக்கொண்டு அல்லது விரித்துபோட்டுக்கொண்டு எப்போதும் கருப்பாக உடுத்திக்கொண்டுள்ள பெண்ணியவாதிகள் பேசும் எல்லாக் கருத்துக்களுடன் உடன்பாடில்லை. என்னைச்சரியாகப் புரிந்துகொண்ட என் கணவன் ’ஏன்டி என் ஷேர்ட்டின் பட்டனைத்தைத்துவைக்கல்லை” என்று அதிகாரம் பண்ணுவதைத்தான் நான் விரும்புகின்றேன்.” 

ஒருமுறை கிருபானந்தவாரியார் சொன்னதும்கூடவே ஞாபகம் வருகிறது,  “ நான்  பிம்பிளாஸை ஆலாபனை பண்ணப்போ அதை வயலின்காரர் ஆபேரின்னு புரிஞ்சிட்டு இழுத்திண்டுபோனால் நானும் ஆபேரிக்கே வந்துமேலே பாடறதில்லையா அதே மாதிரி பொம்பளை சொல்றதைக்கேட்கமாட்டேன்னு பிடிவாதமாயிராத,,,,,,,,, அவள் சொல்றது நியாயமாயிருந்தாக்க கேட்டிட்டுப்போ, வாழ்க்கையில உரசல்கள் இராது. மத்தவன் பொண்டாட்டித்தாசன்னு சொல்வானோங்கற சிந்தனை உனக்கு வேண்டாம், வாழ்க்கை நிம்மதியாய்ப்போகணும். அதுதான் முக்கியம்”

நீலி கதையில் பிரமீளா பிரதீபன் காட்டுற கோணம் வேறு மாதிரி.

//தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?// 

இன்னும்  அகோரிணி யட்சி நீலியென்று அசுரபலம் வாய்ந்த பெண்களையெல்லாம் படிமங்களாகக் காட்சிப்படுத்துகிறார் பிரமிளா.

இக்கதையில் ஒரு இலட்சிய ஆணாக உருவகப்படுத்தப்படும் தேவனின் கூற்றாக // நீலி இது ஒருவகையில் அவரவர்க்கான கர்மாவின் பயன் என்பதுதானே உண்மை// என்றியம்புதல் பிரமீளாவுக்கும் கர்மாமீதான பிரமிப்பென்று கொள்ள இடந்தருகிறது. ஆனால் பின் நவீனத்துவம் நம்பிக்கைகளைப் படைப்புக்குள் அனுமதிப்பதில்லை.

தலைப்புக்குரிய கதை விரும்பித்தொலையுமொரு காடு ஒரு பெண்ணின் பார்வையில் அவர்கள் புகுந்துகொள்ளும் திருமணவாழ்வு எனும் அவத்தை (Phase) எப்படி அவர்கள் விரும்புவதுமாதிரி / எதிர்பார்த்தமாதிரி இல்லாமல்ப்போகிறது என்பதைப் படிமங்களூடாகச் சொல்லிச்செல்கிறது. 

திருமணபந்தத்தில் நுழைவதைத் தவிர்க்கமுடியாது, விருப்பத்தையும் மீறி அதற்குட் செலுத்த ஆயத்தங்கள் நடைபெறும்போது மௌனமாயிருப்பதைத்தவிர வேறென்னசெய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  நடுவில் அந்த மரமும் அப்படித்தான் இந்தப்பூச்சியும் அப்படித்தான், என்றான பலவகை காட்சி விஸ்தரிப்புகளுக்குப் பின்னாலும் கதையின் இறுதிப்பகுதியில் மீளவும் யாருக்கேனும் இதுவொரு சம்பவமாகவோ அல்லது அடுத்துவரப்போகும் நிகழ்வின் (வாழ்வின்) பகுதியாகவோ இருப்பின் அதற்காக என்னால் என்ன்செய்யமுடியும், மௌனமாக இருப்பது மாத்திரந்தானே? என முடிக்கும்போது சித்திரத்தைப்படிக்கும் அலர் அகவையருக்கு திருமணம்மீதான ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது.

அம்பையின் கதைகளில் வருவதைப்போன்று பெண்களை அடக்குவதால் இன்பந்துய்க்கின்ற  ஆணாதிக்கத்தைச் அனுபவிப்பதாக எண்ணும் ஆண்கள் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் விதியேயென்று தம்மையே நொந்து பிலாக்கணம் வைத்துப்புலம்புவதுடன் நின்றுவிடுவதில்லை. அக்கிரமங்களுக்கெதிராகப் போராடவுஞ்செய்கிறார்கள். ஆனாலும் பிரமீளா இப்படியே தொடர்வாராகில் இவர் இந்தப்பிரச்சனைபற்றி இப்படித்தான் எழுதுவாரென்று வாசகர்களால்  முத்திரை குத்திவிடப்படும் அபாயமுமிருக்கிறது. எனக்கென்னவோ பிரமிளா புலம்பெயர்ந்து வந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது, அப்படி வந்திருப்பாரானால் அவரது பார்வைகள் இன்னும் விசாலித்திருக்க கதைகளின் பகைப்புலமும் கருக்களும் பாத்திரங்களும் மாறியிருந்திருக்க இன்னும் அசத்தலான படைப்புகள் பலவற்றைத்தந்திருப்பார்.

ஜில் ப்ராட்லி, கமிலே டொன்சியுக்ஸின் தோடுகள் போன்ற கதைகளைப் படிக்கையில் பிரமிளாவுக்கு பன்னாட்டு இலக்கியங்களுடனும் பரிச்சயமிருப்பதை உணரமுடிகிறது. உள்நாடாயிருந்தாலென்ன வெளிநாடாயிருந்தாலென்ன, வசதியானவளாயிருந்தாலென்ன, விளிம்புநிலைவாசியாயிருந்தாலென்ன பெண்களுக்கு  காதுத்தோட்டையும் அடகுவைக்கவேண்டிய நிலமைகள் வந்துவிடுகின்றன. அப்படி அடகாகும் தோடே பேசுவதும் அழகான கற்பனை..

உரப்புழுக்கள் கதையின் நாயகி சுரேகாவும்,  அது புத்தனின் சிசுவல்ல மாயாவுமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இவ்விரண்டு கதைகளிலும் ஒன்றாக இருப்பதைக்காணலாம். முதலாவதில் சுரேகா அவனது கண்காணிப்பாளர் இவளுக்கு உரம் அள்ளும் கிடங்கிலிருந்து பணியை வேற்றிடத்தில் மாற்றிப்போடுவதற்கு இவளிடம் பாலியல் லஞ்சம் கேட்கிறார். அவரைப்பற்றி முறைப்பாடு செய்யப் மேலிடத்துக்குப் பெரியதுரையிடம் போனால் அவரும் கதைவைச்சங்கிலி போட்டுப்பூட்டிவிட்டு அவளைக் ‘கட்டிலுக்கு……. வா’  என்றழைக்கிறார்.

வார்த்தைத் தேர்வுகளில் அங்கங்கே சிறு கவனயீனப்பிழைகள் உண்டு. உரப்புழுக்கள் கதையில் அந்த உரமென்கிற வார்த்தை பொருத்தமாக அமையவில்லை. பொதுவாக விவசாயத்தில்  உரம் என்பது  அசேதன உரங்களைத்தான். (inorganic fertilizers such as anhydrous ammonia, urea, urea-ammonium nitrate solutions,  ammonium phosphates, and muriate of potash). அவற்றுக்குள் எந்தப்பழுக்களும் உயிர்வாழமுடியாது, அவிந்தே இறந்துவிடும். செம்பனைகளின் பகுதிகளோடு அசேதன உரங்களைக்கலந்து பெறப்படுவதைக் கூட்டுப்பசளை (compost : decayed organic material used as a fertilizer for growing plants.) என்றுதான் சொல்லப்படும். அதற்குள் புழுக்கள் வாழச்சாத்தியம்.

இன்னும் சிங்கள உரையாடல்களைத் தமிழில் எழுதும்போது வாக்கியங்கள் சில. எ+காட்டாக: ‘அத்த கியப்பாங்’ என்பது  ’எத்த கியப்பாங்’ என்றும்,  ‘ ஊவ  மரலா நெவே’ என்பது ’ ஊவ  மரலா  நெமே’ என்றும்  தட்டப்பட்டுள்ளன.

அதேபோல் சிராம்புகள் > சிலாம்புகள் என்றும்,  விளாறு > மிலாறு என்றும் தட்டப்பட்டுள்ளன.  இச்சிறு தவறுகளால் படைப்புக்களின் தரத்துக்கோ கனதிக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை தவிர்ந்த தட்டுப்பிழைகள் அதிகமில்லாமல் இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.

கதையைக் காட்சிப்படுத்துவதில் புதுமைப்பித்தனையொத்தவொரு வேகமும், புதிய உத்திகளைத்தேர்ந்து சொல்லும் முறையில் புதுமையும், எந்தப் பிரச்சனையானாலும் நேரடியாக எடுத்துப்பரப்பிவைத்து அலசுவதில் துணிச்சலையும் கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் எனக்குத் தமிழிலக்கியவானில் புதிதாகத்தோன்றியுள்ள விடிவெள்ளியாகத் தெரிகின்றார். இவரால் ஈழத்து இலக்கியம் கடுகிப் புதிய உயரங்களை எட்டும்!

(விமர்சனம்:  அம்ருதா 183 - பெப்ரவரி 2023)

யாவரும் வெளியீடு, பக்கங்கள்: 124 விலை: 150.00 ₹

Sunday, October 23, 2022

கதைகளுக்குள் விரும்பித் தொலைதல் - சப்னாஸ் ஹாசிம்

By On October 23, 2022


ஈழத்தின் மலையக இலக்கியப் பரப்பு விசேடத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு மலையக வாழ்வியல் கூறுகளும் பண்பாட்டுவெளியும் மரபும் மரபார்ந்த தொடர்ச்சியும் காரணங்களெனச் சொல்லமுடியும். பூர்விக நிலத்தின் கலாசார ஊடறுப்பும் மறுக்கப்பட்ட நிலத்திலிருந்து மீண்டெழுந்த அல்லது மீண்டெழ எத்தனிக்கிற சமூகத்தினரிடமிருந்து ‘புதிய வகை ரத்தம்’ போல இலக்கிய வெளிப்பாடு இருந்திருப்பதிலும் தொடர்வதிலும் ஆச்சரியம் மேவ எதுவுமில்லை. புனைவு வெளிப்பாடுகளின் ஊக்கநிலை மாறாமலிருப்பது மலையக இலக்கியப்பரப்பைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நிலவரையியலையும் சமூக ஒழுங்கையும் தொழிலாளர் வர்க்க உணர்வையும் ஒட்டுமொத்த பிரதியின் வழியே பரவவிடுவதனாற் தானென்று தோன்றுகிறது. சி.வி வேலுப் பிள்ளை, நடேசய்யர், கே. கணேஷென்று ஒரு தலைமுறை உருவாகி தமிழக கதை சொல்லலையும் ஈழத்து மரபையும் இணைத்ததான புதிய போக்கோடு மலையகச் சிறுகதை வெளி தனக்கென மரபை உருவாக்கிக் கொண்டது என்று கருதலாம். அதற்குப் பிறகு வந்த தலைமுறை என்றுபார்த்தால் செந்தூரன், என் எஸ் எம் ராமைய்யா, மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மலரன்பன், சாரல்நாடன், நயீமா சித்திக், தெளிவத்தை ஜோசப்பென்று ஒரு வரிசை நினைவுக்கு வரலாம்.


இந்த இரண்டாம் தலைமுறையின் காலமே மலையகச் சிறுகதைவெளி வீறு கொண்டு எழுந்த காலப்பகுதியெனச் சொல்ல முடியும். தொடர்ச்சியாக எண்பதுகளின் பின்னர் தனித்தொகுதிகள் தலையெடுத்ததும் மலையக கதை உலகுதனித்த தன்மையோடு புறக்கணிப்புகளை மீறி குடியுரிமை பறிப்பு பற்றிய கோபவெளிப்பாடுடனும், பிரஜாவுரிமை கோசங்களுடனும் வெளிவந்தன. அதற்குப் பிறகு வந்த தீர்த்தக்கரை போன்ற இதழ் வெளிவந்த காலகட்டம் முக்கிய பாசனத்தை சிறுகதை நிலத்தில் பாயவிட்டது. அதற்கு பிறகு இன்றைய தலைமுறையில் சடகோபன், சிவானுமனோகரன், பிரமிளா பிரதீபன் போன்றவர்கள் புதிய கோணத்தில் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிரமிளா பிரதீபனுடைய விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்தேன்.


மலையக சிறுகதைக்கென்று இருக்கிற ஒரு செல்நெறியோ, மரபோ இவரது கதைகளில் மீறப்பட்டிருக்கிறது. இவரது புதிய கதை சொல்லல் மானுட அழகியல் அபத்தமென்கிற இருநிலைகளைத் தாங்கிய புதிய மனிதர்களோடும் வலுவான கதையோடும் கூறல் உத்திகளோடும் ஒரு கட்டுடைப்பை வியாபிப்பைச் செய்திருக்கின்றன. இன்றளவில் தமிழக புலம்பெயர் பரப்பில் அதிகம் வாசிக்கப்படக்கூடிய மலையகக் கதைகள், ஏன் ஈழக்கதைகளும் பிரமிளாவினுடையனவே. பிரமிளாவினுடைய கதையுலகம் தடித்த கதாபாத்திரச் சித்தரிப்போடு அகநிலை சார்ந்த ஊடாட்டங்களைப் பேசுபவன. பொதுவான மலையகக் கதைப் பின்னணியிலிருந்து வேறுபட்டு கழிவிறக்கம், ஆற்றாமை போன்ற சாயலை விடுத்து புதிய பார்வையோடு திமிறி எழுவன. பெண் நிலை சார்ந்த நுண் இழையோடு சமாந்தரத் தளத்தில் அகவிசாரணையோடு எழுதப்பட்ட கதைகளை இத்தொகுதி அதிகம் கொண்டிருக்கிறதெனலாம். அக்கதைகளில் வரும் பெண்கள், அவர்களது அன்றாடம் என்பனவெல்லாம் இயல்பிலிருந்து விலகாது இதுவரை சொல்லத்தயங்கிய புழங்குவெளியை ஞாபகப் படுத்துவன. பெண்ணியச் சிந்தனைகளோடு ஒன்றித்த கதைப்போக்கு தமிழ்க்கதைகளில் மிகைத்துவிட்ட இந்நாட்களில் ஈழத்து மலையக சிறுகதைகளில் அதை வேறுபட்ட தளங்களிலும் வடிவ நியதியிலும் முயன்று பார்த்தவரென்று பிரமிளாவைச் சொல்ல முடியும். ஆணாதிக்கம், சுரண்டல், பாலியல் லஞ்சம், இன முரண்பாடு, காமம், காதல், வன்புணர்வு என பெண்ணுலகம் சார்ந்து பிரமிளா முன்வைக்கிற கதையாடல்களும் கேள்விகளும் முடிபுகளும் வித்தியாசமானவை. பெண்ணியம் பற்றி பேசுகிற போது எதிர் நியதி பேசுவது, அதன் சாத்தியங்களை படைப்புகளின் மீது விரவ விடுவது திணிப்பது பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. பிரமிளாவின் பெண்கள் ஆதர்சமான நாயகத் தன்மை கொண்டவர்களல்ல. எங்கேயோ முயன்று வெளிவர முடியாத தடுப்புகளைத் தாண்ட எத்தனித்து மீண்டும் அதே பாழ்குழியினுள் விழுகிற சராசரியான பெண்களையே பிரமிளா தேர்ந்தெடுத்திருப்பார். சுரண்டலை எதிர்த்துத் திமிறுகிற சீற்றத்தோடு அச்சுரண்டலுக்குப்பழகிப் போகிற பெண்களையோ சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூக வேலியிலிருந்து அதன் மதிப்பீடுகளிலிருந்து தப்ப முடியாத பெண்களையோ அவருடைய கதைகள் முன்நிறுத்துகின்றன. பொதுவான மலையகக் கதை சொல்லலிருந்து பிரமிளா வேறு வேறு நிறங்களை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்திய படி தனித்தொத்த கூறுமுறையோடு முயற்சித்திருப்பார். அது மிகச் சவாலான உருவக/குறியீட்டு விபரிப்புகளோடு வளர்ந்து வந்து ஒரு கட்டத்தில் கதையை நிறுத்துவது எனச் சொல்ல முடியும். கதையில் மேலோட்டமாக சொல்லப் படும் கதைக்கு சமாந்தரமாக மெய்க்கதை பயணித்தபடி இருக்கும். இப்படி இத்தொகுப்பின் தலைப்புக்கதையான விரும்பித் தொலையுமொரு காடு கதை எழுதப்பட்டிருக்கும். பெண்ணொருத்தி காடொன்றை விரும்பி நுழைவது போல குடும்ப வாழ்வை மண வாழ்வைக் குறித்துக் கதை நீளும்.


இவ்வகை உத்திகளின் வாயிலாக வழக்கமான மலையகச் சிறுகதைகளிலிருந்து பிரமிளாவினால் புதிய கூறுமுறையை குறியீட்டு மொழிக்குள்ளேயான பூடகச் சொல்லாடலை செய்ய முடிந்திருக்கிறது. இவ்வகை பூடகக் கதையாடல் மற்றைய நேரடிக்கதைகளை விட  பிரமிளாவுக்கு கைகொடுத்திருப்பதாகவே இத்தொகுப்பிலிருந்து உய்த்தறிய முடிகிறது. நேரடிக்கதைகளில் உள்ள இடைவெளிகளை அயர்ச்சியை குறியீட்டுக்கதையாடல் நிரப்புகிறதென்ற அளவில் அவ்வுத்தியைப் பாராட்ட முடியும். கடுமையற்ற ( not rigorous) இலகு தன்மையான மொழியை இவ்வகைக் கதைகளுக்கு தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது எப்பொதும் நல்ல கதையொன்றை அளிக்கும் முயற்சிக்கு கை கொடுக்காதென்பதுவும் புலனாகிறது. அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சவாலெனப் புரிந்து கொள்ள முடியும். நாம் குறிப்புணர்த்தும் கதைக்காக எடுத்துக்கொண்ட குறியீட்டைச் சரிவரக் கையாள்வதில் தான் இக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கும். குறியீடாக நாம் சொல்ல வருவது அழுத்தமானதொன்றாக இருக்க வேண்டுமே ஒழிய வெறுமனே ஒத்திசைவான ஏதாவதொன்றை தொடர்பு படுத்துவதோடு நின்று விடக் கூடாது என்பது எனது கருத்து. விரும்பித் தொலையுமொரு காடு கதையும் ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கதையும் இவ் வுத்தியின் வழியே உருப் பெற்றாலும் அவை சில இடங்களில் சலிப்பைக் கொடுப்பன. ஒரு அரசமரமும் சில வௌவால்களும் என்ற கதையில் அரசமரத்தையும் வௌவால்களையும் புத்த மதத்தையும் அதன் தீவிரப் பற்றாளர்களையும் குறித்த பூடக விபரிப்பாகச் சொல்லியிருப்பார் பிரமிளா. நீண்ட விவரணையில் ஒரு தேர்ந்த வாசகருக்குப்புரிந்த விசயத்தை மீண்டும் அவர் திரும்ப எழுதியிருப்பார்.


“தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து இந்த வௌவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து விலகுவர். தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயெனக் கொண்டாடும் வௌவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போய் வைராக்கியம் கொண்டு மரத்தை வெட்டிவீழ்த்த முனைவர். “ என எழுதியிருப்பார்.


இதனை தூர இருந்து அரச மரத்தினழகினால் கவரப்பட்டு வருபவர் பின்னர் தன் கையாலே வெட்டிவிடுவாரென முடித்திருக்க முடியும். அந்தக் குறிப்பும் காரணமும் ஏற்கனவே முன்கதையின் நிகழ்வுகளினாலும்  விபரிப்புகளினாலும் வாசகனுக்கு உணர்த்த போதுமானவை.   


கதைகளுக்காக பிரமிளா பயன்படுத்துகிற மொழியும் நடையும் தற்காலச் சிறுகதைகளைவிட சில படிகள் செறிவற்று வருகின்றன. சம கால கதை சொல்லல் அடைந்திருக்கிற இடமும் செழுமையும் மொழி விசயத்தில் அபாரமானதென்பதால் அந்த இடத்திற்குரிய மெனக்கெடல் ஒட்டுமொத்த தொகுதியிலும் போதவில்லை என்றே தோன்றுகிறது. ஏற்கனவே குறித்துச் சொல்லியது போல மலையகக் கதைகள் தனித்துத் தெரிவதற்கும் தனிப்பெரும் இலக்கியப் போக்காக விரிவதற்கும் அவை சுமந்து வந்த நிலவரையியலேகாரணம். மலையகக்கதைகளென்றாலே மலைகளும் தோட்டங்களும் பீலிகளும் லயமும் அதைச் சுற்றிய காடும் வழுக்கும் தெருக்களும் வெற்றிலைக் கறை படிந்த மனிதர்களும் வட்டார மொழியுமென மனக் காட்சி விரியும். நிலத்தையும் இயற்கையையும் அதைச் சுற்றிவர நிகழும் எல்லாச் சங்கதிகளையும் பிரதியினுள் கொண்டு வந்த எத்தனையோ கதைகள் நமக்கு ஞாபகம் வரும். அப்படி இத்தொகுதியில் முழுத் திருப்தி தரக்கூடிய கதை என்றால் உரப்புழுக்கள் மட்டும் தான் என்று சொல்வேன்.


அது தாங்கி வருகிற நிலக்காட்சிகளும் உரமேடையும் காடும் கட்டுபொல் உறிஞ்சி வற்றிய கிணறும் பங்களாவும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதுவே மலையகக்கதை வழக்கின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட நல்ல கதையென்று படுகிறது. இந்தக் கதையில் சொல்லப்படுகிற உணர்வும் ஆணாதிக்க மேலீடும் அறச்சீற்றமும் இயல்பைக் குறித்து யதார்த்தத்தைக் குறித்து அச்சத்தை கடத்துவன. திருமண வாழ்வைக் குறித்தும் கற்பைக்குறித்தும் எழும் ஐயமான( ambiguous) கருத்துநிலையை அப்படியே சொல்லி விடுவதும் தொழிலாளர்களின் மீதான பாலியல் சுரண்டலை படம் போட்டுக் காட்டுவதுமாக இக்கதை, முக்கியமாக மலையகப் பண்பாட்டுத்தளத்தில் உள்ள துயர் நிகழ்வுகளின் சாட்சியமாக இருக்கிறது.


புனைக்கதை எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் எனக்கு பிரமிளாவிடம் சொல்ல ஒரு விசயமிருக்கிறது. அது கதைகளின் செம்மை பற்றிய விசயம் தான். எப்போதும் ஒரு கதையை எழுதியவுடன் அது முழுமுற்றானது, கடைசியானதென நாம் நம்புவதில்லை.  அந்தக் கதை பல படிகளிலெழுந்து முழுமையாகத் திரளுவதில் நமக்கு அடுத்தபடியாகவும் இறுதியாகவும் சஞ்சிகைகளின் பங்களிப்பிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு பிறகு வந்த கதைகளுக்கும் இதிலிருக்கிற கதைகளுக்குமிடையில் அந்தத் திரட்சியில் மொழி விசயத்திலும் கதையின் உள்ளடக்கத்திற்குத் தகுந்த உத்திகளின் தேர்வு விசயத்திலும் ஒரு போதாமை இருக்கிறது. ஆரம்பக்கதைகளில் அது எழுதிக் கண்டடையக் கூடிய ஒன்றுதான். என்றாலும் அவற்றின் மீதான இதழ்களின் பரிந்துரைகள், செம்மைப் படுத்தல்கள் அவற்றை இன்னொரு தளத்திற்கு கொண்டு போகுமென்பதை மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் அக்குறைபாட்டை வெகுவாகவே உணர முடிகிறது. இக்கதைகள் ஆரம்பத்தில் வெளிவந்த இதழ்கள் அப்பணியை பெருமளவு செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. தானாகவே பயின்று அரங்கேற்றம் வருகிற மாணவரிடம் இருக்கும் அதே வகை தடுமாற்றங்களைத் தான் சுட்டுகிறேன். விவரணைகளிலிருக்கிற பொத்தாம்பொதுவான சொல்லாடலும் தேய்வழக்கான சொற்றொடர்களையும் தவிர்த்திருக்க முடியும். அது புத்தனின் சிசுவல்ல கதையில் பிற்பாதி, முற்பாதி போன்ற மொழிச்செறிவிலன்றி ஐதாக வருவது, மாட்டியா கதையின் கூறுமொழி இன்னும் மேம்பட்டிருக்கலாமெனத் தோன்றுவதென சில சுட்டுகளைச் சொல்ல முடியும்.


கதைகளுக்குத் தேவையான தருக்கத்தை தேர்ந்தெடுப்பதில் பிரமிளா படுசாமர்த்தியமானவரென்பதை ஓரிரவு போன்ற கதைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிரமிளாவுக்கு, நானும் தான் அதே மலைகளில் ஏறி இறங்குகிறேன், நானும் தான் அதே பாதைகளில் வழிகளில் நடக்கிறேனென ‘ஓரிரவு’ போல கதையினுடைய ஒட்டுமொத்தத் தருக்கத்தைச் சொல்லத் தெரிந்திருக்கிறது. அத்தருக்கங்களின் வழியே கட்டுமானமாகிற கதையின் மனிதர்களையும் காட்சியனுபவத்தையும் உரிய இடங்களில் வைக்கத் தெரிந்திருக்கிறது. கமிலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள் போன்ற கதைகளில் தேக்கமாகும் மனநிலையை, கதை முடிவடையும் புள்ளியோடு இணைக்கவும் தகவமைக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக பிரமிளா, குறியீட்டுக்கதை மொழிதலாலும் வேறுபட்ட களத்தேர்வுகளாலும், கிளைமொழியின் பாண்டித்தியத்தினாலும், பெண் உலகின் இன்னுமொரு கரிய படித்தளத்தில் நின்று யதார்த்தத்தை நுண் வாசிப்புக்குரிய ஆழ்படிமங்களோடு ஆங்காங்கே ஊன்றி நிறுத்துவதாலும் கவனிக்க வேண்டிய தொகுப்பொன்றைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குத் தந்திருக்கிறார் எனச்சொல்லாம். 

நன்றி வனம் - ஒக்ரோபர்

Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.