Enter your keyword

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, January 5, 2024

புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' - பிரமிளா பிரதீபன்

By On January 05, 2024

இலக்கியத்தை வாசிப்பதும் அவற்றைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தனித்துவமான கலை. எல்லோராலும் வாசிக்க இயல்வதென்பதே சாத்தியமற்றதாக இருக்கும் இக்கால சூழ்நிலையில்  வாசித்தவற்றை குறித்ததான கருத்துக்களை முன்வைப்பதும் படைப்பாளர் பற்றிய சகல விடயங்களையும் தேடித் தொகுத்து ஒரே பார்வையில் அவர்தம் மொத்த படைப்புலகம் சார்ந்ததுமான குறிப்புகளை நம்பகத்தன்மையுடன் களஞ்சியப்படுத்துவதும் மிகப்பெறுமதியான இலக்கியப்பணியெனவே சொல்லலாம்.


'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூலினூடாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அப்பணியினை நேர்த்தியாக செய்திருக்கிறார். 


என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் போது அப்படைப்பாளி தொடர்பான சகல விடயங்களையும் தொகுத்துத் தருதலென்பது மிகநிதானமாக செய்யப்படவேண்டியதொன்று. தேடலும் பொறுமையும் நிரம்பப் பெற்ற ஒருவருக்கே இது சாத்தியமாகிறது. 


படைப்பாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஒரு சிறந்த புனைகதையாளர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து பத்தியெழுத்து தொகுப்புகள் மேலும் சில தேர்ந்தெடுத்த தொகுதி நூல்களுக்கு சொந்தக்காரர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்.


இவரின் புதிய படைப்பான 'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூல் மொத்தமாக இருபது சுய ஆய்வு கட்டுரைகளுடன்  2023ம் ஆண்டில் கார்த்திகை மாதம் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளமை படைப்பாளரது தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கு ஒரு சான்றாக அமைகிறது. 

இந்நூலின் கட்டுரைகளைப் பொருத்தவரை  ஏழு வகையான இலக்கிய வகைகளை தெரிந்து தனது உற்றுநோக்கல்களை விரிவாக்கம் செய்ய முனைந்திருக்கிறார். ஒரு நாவல், ஒரு நலவியல் இலக்கியம், மூன்று சிறுவர் இலக்கியங்கள், ஐந்து பத்தியெழுத்து அல்லது ஆய்வுரை தொகுப்புகள், ஒரு காலாண்டிதழ் எட்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாட்குறிப்பு என மொத்தமாக இருபது படைப்புகள் மீதான அல்லது இருபது படைப்பாளர்கள் மீதான பார்வையினை தொகுப்பாக தந்திருக்கிறார். 


தன்னுடைய கட்டுரைகளில் உள்ளடக்கம் பெற்ற பல்வேறு புனைவு அபுனைவு வடிவங்கள் தொடர்பான தனது ஆய்வு தொடர்பாக அவர் குறிப்பிடுவதாவது.... 


'படைப்பாளர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இங்கு பிரதானமாகிறது. இம்முயற்சியானது மறைமுகமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு மிக்கதொரு பணியினையும் செய்யத் தலைப்படுகிறது என அறிய வரும் போது உண்மையில் மனது குதூகலிக்கவே செய்கிறது'


இவ்வாறு இன்றைய சமகால படைப்பாளர்களின் அவசியமான தேவையை நிறைவு செய்யத்துணிந்த இந்த நூல் தொடர்பாக ஆராயும் போதில் பிரதானமாக 03 நிலைகளுக்கூடாக குறிப்பிட்ட கட்டுரைகளை அணுக முடியுமாயிருக்கிறது.


01) இந்நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகள்.

02) நூலின் சமகால முக்கியத்துவம் 

03) எழுத்தினூடாக வெளிப்படும் நூலாசிரியர்


எனவே முதலாவது விடயமான நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகளைப் பார்த்தால், நானறிந்த வகையில் திறனாய்வு முறைகள் பண்டையகாலந்தொட்டு  இன்றுவரையாக பல்வேறு மாற்றங்களையும் காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாற்றங்களை தேவைக்கேற்ப தன்னைத் தழுவிக்கொள்கிறது எனச்சொல்ல முடியும்.  


குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் நவீனத்துவம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கருத்தியலை அடிப்படையாக கொண்டே அநேகமாக திறனாய்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. 


ஆனால் நான் இந்த நூலை பார்த்த விதமானது இந்நூலாசிரியர் தனது மனப்பதிவுமுறை திறனாய்வினை மேற்கொள்ளுதலினூடாக தனது அனுபவத்தினதும் அறிவினதும் அகலப்படுத்தலை மையமாகக்கொண்டு பயன்படுத்தியிருக்கக்கூடிய அணுகுமுறைகள் தொடர்பான தெளிவினையே தருகிறது.   


மனப்பதிவுமுறை என்றால் அதற்குள் உள்ளடங்கக்கூடிய பொதுவான அணுகுமுறைகளாக வகைப்பாட்டு அணுகுமுறை, அழகியல் அணுகுமுறை, மதிப்பீட்டு  அணுகுமுறை, வரலாற்று  அணுகுமுறை, விளக்கநிலை  அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பாராட்டும்  அணுகுமுறை, விதிமுறை  அணுகுமுறை என்பவற்றை குறிப்பிட முடியும். இவற்றுள் குறிப்பிட்ட இந்த நூலினூடாக ஒருசில அணுகுமுறைகளை தெளிவாக இனங்காண முடிகிறது. 


வகைப்பாட்டு அணுகுமுறை:

பல்வேறு இலக்கிய வகைகளைப் பற்றிய ஆய்வுமுறை வகைப்பாட்டு அணுகுமுறையாக கருதப்படலாம். ஏலவே நான் குறிப்பிட்டது போல தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' எனும் நாவல், எம்.கே.முருகானந்தனின் 'டாக்குத்தரின் தொணதொணப்பு' எனும் நலவியல் இலக்கியம், கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், எஸ். பேராசிரியரின் 'மாசுறும் பூமி' எனும் பத்தியெழுத்து, 'எங்கட புத்தகங்கள்' எனும் காலாண்டிதழ், ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ், இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், வைத்தியர் தி.ஞானசேகரனின் ;யாவரும் கேளீர்' எனும் பத்தியெழுத்து, இரகுவரனின் 'தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் வம்சம்' எனம் ஆய்வு நூல், வண செபமாலை அன்புராசா அடிகளாரின் 'அண்ணன் ஆமையும் தம்பி முயலும்' சிறுவர் இலக்கியம், தாட்சாயணி, பிரமிளா பிரதீபன், ஆசி கந்தராஜா மண்டூர் அசோகா, சிறீறங்கன், பாலரஞ்சனி ஜெயபால், சிவசோதி ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள், பஞ்சகல்யாணியின் 'கதைமரம்' எனும் சிறுவர்கதைகள், அஜந்தகுமாரின் 'நாட்குறிப்புகள்' என பல வகையான இலக்கியங்கள்  உள்ளடக்கம் பெற்றிருக்கின்றமை இந்நூலின் விசேட அம்சமாகிறது. மேலும் ஒவ்வொரு இலக்கிய வகையும் குறிப்பிட்ட நூலின் படைப்பாளரது ஆளுமையை தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நோக்கிலான வகையில் ஆராயப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.   


அழகியல் அணுகுமுறை:

அதாவது இலக்கண விதிமுறைகளை கருத்திற்கொள்ளாது படைப்பின் அழகியலுக்கூடாக படைப்பினை பிரித்து மதிப்பீடு செய்வது தான் இவ்வணுகுமுறையின் அம்சம். இவ்வணுகுமுறைக்குள் நூலாசிரியர் தன்னுடைய ஆளுமையை அதிகமாகவே காட்டியிருக்கிறார். அவர் ஒரு புனைவெழுத்தாளன் எனும் வகையில் அழகியல் பற்றியதான தேடலையும் பார்வையையும் பயன்படுத்தி ஏராளமான நியாயப்படுத்தல்களை செய்திருக்கிறார். 


பிரதானமாக ஒவ்வொரு கட்டுரையையும் சில அழகியல்சார் அடையாள வார்த்தைக்குள் உள்ளடக்கிய வித் நூலாசிரியரின் அழகியல் உணர்விற்கு சான்றாகிறது எனலாம். உதாரணமாக கட்டுரைகளின் தலைப்பென்பதாய்... 'பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்'  தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், வடமராட்சியின் வனப்பான வாழ்வியலிற்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் உறவுகள் சேர்ந்து'  போன்றதாய்  கட்டுரைத் தலைப்புகளில் தனது கற்பனைத்திறனை புகுத்திப் பார்த்திருக்கிறார்.


மேலும் புனைவு நூல்கள் தொடர்பாக தனது பார்வையினை விரிவு படுத்தும் போது தன்னுடைய பிரமாதமான மொழிநடையைக் கொண்டு தான் பேசும் புனைவெழுத்தின் அழகியல் பற்றி  எடுத்துரைத்திருக்கும் முறைமையானது சிறப்பான அவதானத்தை பெறுகிறது. 


மா.சிவசோதியின் சிறுகதைத் தொகுதிப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்.  'போர்காலத்திலும் அல்லது அதன் பின்பும் நிர்க்கதியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் எதிர்காலம் இப்படியாகத்தான் அமையப் போகிறதோ என்ற ஒரு பதகளிப்பினை ஏற்படுத்தும் இச்சிறுகதை, இத்தொகுதிக் கதைகளுள் மிக்க கவனிப்பிற்குரியதொன்றாகிறது....'  


மேலும் 

'தோட்டத்தில் விளையும் கீரை, அதைக் கொண்டு வருவதற்காக தனது திருக்கல் வண்டியை எடுத்து வார்களுக்கிடையில் காலைவிட்டு கெந்திகெந்தி உழக்கிச் செல்லும் சிறுவன், தோட்டகாரர் கீரையை பிடுங்கி பைக்குள் திணிக்கும் இலாவகம், அந்த துலாப்பட்டையை எடுத்து கட்டையில் போடும் விதம் எல்லாமே.... அந்த வடமராட்சியின் தோட்டச் சூழலிற்கே வாசகனை அழைத்துச் சென்று விடுகிறது' 


இவ்வாறான தனது விபரிப்புகளின் துல்லியத்தால் பேசவந்த படைப்பின் அழகியலை சிறப்பித்துக் காட்டும் முறைமை  கவனம் பெறுகிறது.


மதிப்பீட்டு அணுகுமுறை அல்லது ஒப்பீட்டு அணுகுமுறை:

ஒரு குறிப்பிட்டப் படைப்பிலக்கியத்தின் தரத்தையும் தகுதிபாடுகளையும் பலவகை இலக்கியங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஒரு தீர்மானத்தினை படைப்பின் மீது செலுத்தும் வகையிலான அணுமுறையென இதனை கூறலாம். அந்த வகையில் நூலாசிரியர் இம்முறையினை  செய்யாமல் செய்திருக்கிறார் அல்லது தவிர்த்திருக்கிறார்.  


இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள் எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 


'அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சொல்லும் கதைகள் இன்னும் கனதி பெற வேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டு நிற்பதாக நூலின் முன்னுரையில் நூலாசிரியரின் மற்றுமோர் ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவருமான எழுத்தாளர் இராஜேஸ்கண்ணன் அழுத்தி உரைத்திருப்பதை அஜந்தகுமார் கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அவரின் இத்தகு எழுத்துகள் இலக்கிய உலகில் நிச்சயம் கனதியான சுவட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என மிகத் தாராளமாகவே கூறலாம்' 


'சமூகச் செய்திகளை சீரோடு சித்தரித்திருக்கும் சிறீறங்கனின் 'சிவப்புக்கோடு' எனும் கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது: 

'ஆனாலும் ஈழத்து நவீன புனைகதை பற்றிய பரிச்சயமும், துறைசார்ந்த வீச்சும் சிறீறங்கனிடம் மேலும் வேண்டப்படுவதையும் தொகுதி உணர்த்த தவறவில்லை. மிகச்சிறந்த சமூக அவதானிப்பினூடும் தேர்ந்தெடுத்த ஒரு மொழிநடையினூடும் சிறீறங்கன் எதிர்காலத்தில் சிறுகதையுலகத்தில் பயணிப்பாராயின் இவரது முன்னைய தலைமுறையில் கோலோச்சி நிற்கும் வதிரி இ.இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி போன்றோருடன் இவர் பொருந்தத்தக்க ஒருவராக வல்லர் என்பதனையே சிவப்புக்கோடு எனும் நூல் உணர்த்தி நிற்கிறது எனலாம்'  


அதாவது குறிப்பிட்ட படைப்பாளர் எந்த இடத்தில் தம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் எனும் மதிப்பீட்டை படைப்பாளரை புண்படுத்தா வண்ணம் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் எனத்தோன்றுகிறது. எனினும் நூலாசிரியர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்கள் அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி எனும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வலியுறுத்தி சில விமர்சனங்களை கூற முற்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட படைப்பாளர் அதனை ஏற்றிருப்பார் என தாராளமாக எண்ண முடிகிறது. காரணம் எதிர்மறையான விடயங்களை மிக இலாவகமாக சொல்லத்தெரிந்த மொழிப்பக்குவத்தை கொண்டிருக்கக்கூடியவர்களால் மேலும் பல அசாத்தியங்களை இலகுவாக நிகழ்த்த முடியும். அத்தகைய விமர்சனங்களின் தேவைபாடு அதிகரித்திருக்கிறது என்பதுடன் புதிய படைப்பாளர்களின் ஆளுமையுடனான அடுத்தக்கட்ட நகர்விற்கு மதீப்பீட்டு ரீதியான அணுகுமுறையே பேருதவியாக அமையுமென்பது என்னுடைய கணிப்பு.       


அடுத்ததாக இந்த நூலின் சமகால முக்கியத்துவம் பற்றியதான தேடலில் மிக முக்கியமாக விமர்சனத்துறையின் காலத்தேவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.  திறனாய்வுத்துறைக்கான பங்களிப்புகளை வழங்குவோர் குறித்து தேடுகையில் மிக சில பெயர்களே நினைவிற்கு வருகின்றன. குறிப்பாக விமர்சகர் S.ரமேஸ், இ.சு முரளிதரன், செல்வ மனோகரன், இ.இராஜேஸ்கண்ணன், புலோலியூர் வேல்நந்தன், குணேஸ்வரன், ஜிப்ரிஹாசன், சப்னாஸ் ஹாசிம் போன்றோரையும் பெண் விமர்சகர்கள் வரிசையில் திருமதி வசந்தி தயாபரன், எம்.தேவகௌரி, திருமதி ரஞ்சனி சுப்ரமணியம் போன்றோரையும் நினைவுபடுத்த முடிகிறது. எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் நூல் விமர்சனத்தைத்தாண்டி வாசிப்பனுபவம் எனும் வகையில்  அனேகமானோர் வெறும் அழகியல் திறனாய்வாக மாத்திரம் தமது ஆய்வை வளர்த்து செல்கின்ற போக்கும் இன்றைய காலகட்டத்தில்  அதிகரித்துள்ளபடியால் இந்நூலின் காலத்தேவைப்பற்றி  வெகுவாக உணரக்கூடிய சூழ்நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.  


பல்வேறு வகை இலக்கியங்களின் தொகுப்பை ஒரே பார்வைக்குட்படுத்தி குறிப்பிட்ட படைப்பாளரது சகல படைப்பனுபவங்களையும் களஞ்சியப்படுத்தல் முதற்கொண்டு படைப்பாளர்களை ஊக்குவித்தல், புதிய படைப்பாளர்களுக்கு சரியான வழியினை அமைத்து கொடுத்தல், மேலும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் தனது கட்டுரைகளை பிரசுரிப்பதனூடாக புதிய படைப்பாளர்களுக்கு பெறுமதியான களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் காலத்தேவை மிகவும் இன்றியமையாததாகும். 


மேலும் எழுத்தினூடான படைப்பாளரின் வெளிப்பாடு என்ற வகையில், எழுத்தாளர் தனது படைப்பூடாக ஏற்படுத்த துணியும் சமூக விளைவையும் படைப்பின் சமூக பெறுமானத்தையுமே ஆராய விரும்புகிறேன். அதாவது கல்வி புலத்தில் கற்றலில் அதீத மேம்பாட்டை செய்யும்  மறைகலைத்திட்டத்தைப் போல வெளித்தெரியாத எத்தனையோ சமூக பெறுமானங்களை கொண்டதாய்  இவரது சுய ஆய்வுக்கட்டுரைகள் தொக்கியிருக்கின்றன. 

குறிப்பாக அக ஊக்கல் தேவையான படைப்பாளரை இனங்கண்டு அவர்களின் தேவையை தீர்ப்பதாய் சரியான சமயத்தில் வெளிவரும் கட்டுரைப்பிரசுரம்,  புதிய எழுத்தாளர்களின் சூழ்நிலையறியாமல் ஒரே கட்டுரையில் அவர்களின் தன்னம்பிக்கையை இல்லாதொழிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் முகப்புத்தக எழுத்து கலாசாரத்திற்கு மத்தியில் மிகுந்த பக்குவத்துடன் எதிர்மறைவிடயங்களை கையாளத்தெரிந்த மொழிப்பக்குவம், படைப்பாளர்களின் ஏனைய விபரங்களை தேடித்தொகுத்த நிதானம், நெறிப்படுத்துகை, படைப்பாளர்களை எழுத்தினூடாக தன்னம்பிக்கையூட்டும் திடம் இப்படி ஏராளாமான பண்புகளை சிதறவிட்ட பாங்கிகை உற்று அவதானிக்க முடிகிறது. 


ஆகவே தன் கட்டுரைகளில் நூலாசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் அதே வார்த்தைகளில் கூறினால்... இலக்கிய உலகின் கனதியான சுவடாகக்கூடிய ஒரு படைப்பினையே  நூலாசிரியர் ஆ.இரத்தினவேலோன் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

Monday, March 6, 2023

"விரும்பித்தொலையுமொரு காடு" (விமர்சனம்) - கருணாகரமூர்த்தி

By On March 06, 2023

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக  முகநூல் நண்பரொருவர் தான் வாங்கிய நூல்கள் என்று ஒரு 10 நூல்களைப்  அருகருகே வைத்துப் படமெடுத்துப்போட்டிருந்தார். அதில்த்தான் முதன்முதலாக ‘விரும்பித்தொலையுமொரு காடு’ நூலினைப்பார்த்தேன். தலைப்பின் கவித்துவத்தையும், அட்டை ஓவியத்தின் காந்தியையும் பார்த்து அந் நூலையும் ஒரு கவிதை நூலென்றே நினைத்தேன். அப்போது ‘நடு’ ஆசிரியர் கோமகன் இலங்கையில் இருந்ததால் அவரை ‘விரும்பித்தொலையுமொரு காடு’ பிரதியொன்றை வாங்கிவரும்படி கேட்டிருந்தேன். அவருக்கும் அங்கு  அதன் பிரதி கிடைக்கவுமில்லை, அவர் திரும்ப பாரிஸ் வந்து சேராததும் தனிக்கதை. பிறகும் ஒரு மாதங்கழித்து  ‘விரும்பித்தொலையுமொரு காட்டை” கிழக்குப்பதிப்பகம் மூலமாக எடுப்பித்தேன்.

என் வழக்கப்படி தலைப்புக்குரிய கதையைத்தான் முதலில் வாசித்தேன். அக்கதையே இவர் ஒரு வித்தியாசமான கதைசொல்லியென எனக்குப் பிரமீளா பிரதீபனை அடையாளங்காட்டியது.

நடு, ஜீவநதிகளில் வாசிக்கக்கிடைத்த பிரமீளாவின் இரண்டொரு கதைகளைத்தவிர நினைவில் இருத்திக்கொள்ளும்படியாக எனக்கு வேறொரு படைப்பையும் படிக்க நேர்ந்ததில்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றைப்படைப்பவர்களின் பௌதீக அடையாளங்களைவைத்து ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று வகைபிரிப்பதில் எனக்கும்  உடன்பாடில்லை. ஆனால் தமிலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பைவைத்து அதை எழுதியவர் ஆணோ பெண்ணோவென வாசகன் ஊகித்துக் கண்டுபிடிக்கும்படியாகவே இன்னமும் அவை இருக்கின்றன. காரணம் பெண்கள் சித்தரிக்க எடுத்துக்கொள்ளும் கருக்கள், அவர்களது மொழி, சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு. இதை மறுப்பவர்களுடன் கம்புசுற்றும் எண்ணம் எனக்கில்லை, பிரமிளா இந்த வகைமையிலிருந்து விலகியிருப்பது ஒரு இனியஆச்சரியம். 

அவர் நிறையவே உள்மனயாத்திரை செய்பவராக இருக்கிறார். அவர் சித்தரிக்கும் உலகங்கள் நடப்பிலிருந்து வித்தியாசமானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் செவ்வீதமும் அகவுலகச் சித்தரிப்புகளாக உள்ளன. இன்னும் மயாயதார்த்தம், மிகுயதார்த்த வகைகளிலும் அவர் தன் படைப்புகளைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

என் பதின்மவயதுகளில் ஒரு நண்பர்மூலம் தியானம்பற்றி அறியவிழைந்தேன். எனக்கு அப்போது பத்மாசனத்தில் அமர்ந்திப்ருப்பதே வல்லையாக இருந்தது. பின் மூச்சுப்பயிற்சி. ஆழமான உள்மூச்சு அதை நெஞ்சுக்குள் உள்ளடக்கி நிதானமான வெளியேற்றுதல் என்று பலவிதமான பயிற்சிகள் தந்தார். ” உனக்கு ஓரளவுக்கு தியானம் கைகூடிச் சிந்தையை ஒடுக்கிக் குவிக்கமுடிந்தால் LED மாதிரி நெற்றிப்பொட்டில் சின்னதாக ஒரு ஒளிப்பொட்டுத்தெரியும். அந்த ஒளிப்பொட்டை உன்னால் நினைத்தவிடத்துக்கெல்லாம் நகர்த்திச்செல்லமுடியும், அதை அப்படியே முள்ளந்தண்டினூடாக இடுப்பின் கீழாக இறக்கி ’குண்டலினி’ எழுப்பலாம்” என்றெல்லாம் சொன்னார். மாதக்கணக்கில் முயன்றும் எனக்கொரு ஒளிப்பொட்டும் தோன்றவே இல்லை, தியானம் எனக்கான விஷயமல்ல என்று புரிந்ததும்  அதை அத்துடன் விட்டுவிட்டேன். 

இத்தொகுதியிலுள்ள ’அது புத்தனின் சிசுவல்ல’கதையிலிருந்து பிரமிளா நிறைய வாசித்திருக்கிறார் என்பதுவும் , தியானம், யோகம்,  குண்டலினி. என்றும் பயிற்சிகள்செய்யவோ குறைந்தது அவைபற்றி அறிந்துகொள்ள நிறையவே வினைக்கெட்டிருப்பாரென்றும் தெரிகிறது.

ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ என்றொரு கதையை எழுதியிருப்பார். அதில் வரும் இளம் சித்தாளு ஒருத்திக்கு வாத்தியாரென்றால் உயிர். அவளூர் டாக்கீஸுக்கு வாத்தியார் படம் வந்தால் பையன்களைப்போலப் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தது பத்துத்தடவைகளாவது பார்த்துத் தீர்த்துவிடுவாள். விளைவு நாளாகவாக அவளுக்குத் தன் கணவனுடனான உறவுவின்போதும் வாத்தியாரே வந்து தன்கூட முயங்குவதைப்போலக் கற்பிதஞ்செய்துகொண்டு மகிழ்கிறாள். இவ்வேளையில் எதிர்வீட்டுக்கு சென்னையில் ரிக்ஷா வலிக்கும் இளைஞனொருவன்  வாத்தியார் படம்போட்ட டி- ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகிறான். சித்தாளுக்கு அவனது சுருள்சுருளான கிராப்புத்தலையும் தூக்கிக்கட்டிய லுங்கியினூடாக பாதி டிராயர்  தெரிவதும், அவன் ஸ்டைலாக பீடி வலிப்பது எல்லாமே அவனையுமொரு நவீனதோரணையுடனான வாத்தியாராக தோற்றங்காட்டவும் மனசை அடக்கமுடியாமல் அவன்மீதும் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறாள். சித்தாளின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அவ்விளைஞனும்  ‘ நீ என்னோடு சென்னைக்கு வந்திடு, உன்னை நான் வாத்தியார்கிட்டயே கூட்டிப்போறேன்’ என்று பசப்பி அவளை மெல்ல சென்னைக்கு நகர்த்திப்போய் சீரழிக்க முயல்வதாக அக்கதை நகரும்.

’அது புத்தனின் சிசுவல்ல’ கதையில் வரும் மாயாவுக்கும்  கிட்டமுட்ட இப்படியான சிக்கலொன்று வருகிறது. மாயாவுக்கு அகிலன்மீது ஆசை. 

மாயா தனக்கு வழிகாட்டும் சன்மார்க்ககுருவென நம்பிக்கொண்டிருக்கும் குருஜிஜே  நீலமேகத்தை அவள் மணக்கவேண்டுமென்று நிர்பந்திக்கிறார்.          (அப்படி நிர்ப்பந்திபதற்கான காரணம் கதைக்குள் காணோம், இதைப் புதுமைப்பித்தன் வகையிலான பாய்ச்சலெனக்கொள்ளலாம்.) அவரது விருப்பத்தின்பேரில் மறுவார்த்தையின்றி மாயா நீலமேகத்தைத் திருமணஞ்செய்துகொண்டுவிடுகிறாள்.

சித்தாள் பட்டிக்காட்டுப்பெண் படிப்பில்லாதவள் சமூகம் கற்பிக்கும் வாழ்வியல் நியதிகளென்ற கற்பு, ஒழுக்கக்கோட்பாடுகள், பண்பாட்டுத் தடைகள்., நிஜமங்கள், எதுவும் அவளுக்கில்லை / அல்லது அறியாதவள். 

மாயாவுக்கு அப்படியல்ல. தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் நீலமேகம் இருக்கும்போதே அகிலன்வந்து மாயாவுடன் குலவச்செய்கிறான். அதுவே மாயாவின் வார்த்தைகளில் // ஒவ்வொரு புணர்ச்சியின்போதும் என அனுமதி இல்லாமலே அகிலன் எனக்குள்  வந்துபோகின்றான்.// அதுவே அவளுக்கொரு அகச்சிக்கலாகிறது. அவளுக்கான அச்சிக்கலை  கிரியாயோகத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் அலச விசாரஞ்செய்ய முயல்கிறார் பிரமிளா.

தியானத்தின் வழியில் இரண்டு ஆன்மாக்கள் சந்தோஷிப்பதுவும் குலவுவதும் சாத்தியந்தானாவெனக் குழம்புகிறாள் மாயா. இதை யாரிடம் கேட்பது?

ஒரு ஆண் ஒரு பெண்ணை மோகிக்கிறான் என்றால் அவனது ஒரு, பார்வை, ஒரு உடலசைவில் பெண்ணானவள் புரிந்துகொண்டுவிடுவாள். ஆதலின் குருஜியின் உள்நோக்கத்தை மாயா புரிந்துகொண்டிவிட்டிருப்பாள், ஆனால் அதை வாசகனும் புரியும் விதமான காட்சிப்படுத்தல் கதைக்குள் எதுவும் வரவில்லை.

புத்தனின் சிசுவல்ல மாயாவுக்கு ஒவ்வொரு . தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் / பேரின்பநிலைகளிலும்  அவளது முன்நாட்காதலன் அகிலன் வந்துவந்து குலவுவதை மாயா அவளது கணவன் நீலமேகத்துக்குச்செய்யும் துரோகமாக உணர்கிறாள். 

அகிலன்வந்து குலவுவது நிஜமேயெனில் குருஜியும் அதை அறிந்திருப்பாரே? அவ்வாறு அறிந்தால் அவர் அகிலனையும் தண்டித்து…….. என்னையுமொரு  புனிதங்கெட்டவள் எனச்  சபித்துவிடுவாரேயென்று  மாயா கலங்குகிறாள். 

அவளது அகச்சிக்கலைக்  குருவுக்கு விளக்கி அந்த இம்சையிலிருந்து விடுபடலாமென்று  அவ் யோகக்குருவிடம் ஆலோசனை கேட்கவந்தால் 

”இந்த மாசம் பௌர்ணமிதினம் பிரம்மமூர்த்தப்பொழுதின் தருணம் கருவுக்கான நேரமாயிருக்கலாம் மாயா” என்று  மாயாவைக்கூட விழைகிறார். 

குருவின் சந்நிதியில் புத்தனின் துறவு,  யசோதாவின் தனிமை புனிதவாழ்வெனும் சம்வாதம் நிகழ்ந்த ஒரு பொழுதில்  குருவிடமே அகிலன் விவகாரத்தை மாயா தெரிவித்துவிடவும் கடுஞ்சினமடையும் சன்மார்க்க  குருஜி அவளை

”இழிகுலத்து நாயே….. கண்டநாயோடெல்லாம் புணர்கிறேனென்று என்னிடமே சொல்லுகிறாயா” என்று பழித்துரைப்பதுவும், உன்கர்மாவென்று கர்மாவை அழுத்துவதும் முரண்நகைக்குரிய இடங்கள்.

மேற்படி கதையானது ஒரு குறுநாவலுக்கான வெளியைக்கொண்டிருந்தும் அதையொரு சிறுகதையாகவே திடுப்பென பிரமிளா முடித்துவிட்டார்.

‘நீலி’ கதையும் பாத்திரங்களும் உரையாடல்களும் கற்பனையினூடான படிமங்களாகவே நகர்த்தப்பட்டிருப்பதுவும் ஆண்பெண் ஆணவம்/ தன்முனைப்பு (Ego) விளைவாகவரும் உரசல்கள் அவற்றின் விளைவுகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

ஒருமுறை மிகவும் படித்த ஒரு எழுத்தாளருடன் (பெண்) பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. “ எனக்குத் தலையை ’குறொப்’பண்ணிக்கொண்டு அல்லது விரித்துபோட்டுக்கொண்டு எப்போதும் கருப்பாக உடுத்திக்கொண்டுள்ள பெண்ணியவாதிகள் பேசும் எல்லாக் கருத்துக்களுடன் உடன்பாடில்லை. என்னைச்சரியாகப் புரிந்துகொண்ட என் கணவன் ’ஏன்டி என் ஷேர்ட்டின் பட்டனைத்தைத்துவைக்கல்லை” என்று அதிகாரம் பண்ணுவதைத்தான் நான் விரும்புகின்றேன்.” 

ஒருமுறை கிருபானந்தவாரியார் சொன்னதும்கூடவே ஞாபகம் வருகிறது,  “ நான்  பிம்பிளாஸை ஆலாபனை பண்ணப்போ அதை வயலின்காரர் ஆபேரின்னு புரிஞ்சிட்டு இழுத்திண்டுபோனால் நானும் ஆபேரிக்கே வந்துமேலே பாடறதில்லையா அதே மாதிரி பொம்பளை சொல்றதைக்கேட்கமாட்டேன்னு பிடிவாதமாயிராத,,,,,,,,, அவள் சொல்றது நியாயமாயிருந்தாக்க கேட்டிட்டுப்போ, வாழ்க்கையில உரசல்கள் இராது. மத்தவன் பொண்டாட்டித்தாசன்னு சொல்வானோங்கற சிந்தனை உனக்கு வேண்டாம், வாழ்க்கை நிம்மதியாய்ப்போகணும். அதுதான் முக்கியம்”

நீலி கதையில் பிரமீளா பிரதீபன் காட்டுற கோணம் வேறு மாதிரி.

//தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?// 

இன்னும்  அகோரிணி யட்சி நீலியென்று அசுரபலம் வாய்ந்த பெண்களையெல்லாம் படிமங்களாகக் காட்சிப்படுத்துகிறார் பிரமிளா.

இக்கதையில் ஒரு இலட்சிய ஆணாக உருவகப்படுத்தப்படும் தேவனின் கூற்றாக // நீலி இது ஒருவகையில் அவரவர்க்கான கர்மாவின் பயன் என்பதுதானே உண்மை// என்றியம்புதல் பிரமீளாவுக்கும் கர்மாமீதான பிரமிப்பென்று கொள்ள இடந்தருகிறது. ஆனால் பின் நவீனத்துவம் நம்பிக்கைகளைப் படைப்புக்குள் அனுமதிப்பதில்லை.

தலைப்புக்குரிய கதை விரும்பித்தொலையுமொரு காடு ஒரு பெண்ணின் பார்வையில் அவர்கள் புகுந்துகொள்ளும் திருமணவாழ்வு எனும் அவத்தை (Phase) எப்படி அவர்கள் விரும்புவதுமாதிரி / எதிர்பார்த்தமாதிரி இல்லாமல்ப்போகிறது என்பதைப் படிமங்களூடாகச் சொல்லிச்செல்கிறது. 

திருமணபந்தத்தில் நுழைவதைத் தவிர்க்கமுடியாது, விருப்பத்தையும் மீறி அதற்குட் செலுத்த ஆயத்தங்கள் நடைபெறும்போது மௌனமாயிருப்பதைத்தவிர வேறென்னசெய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  நடுவில் அந்த மரமும் அப்படித்தான் இந்தப்பூச்சியும் அப்படித்தான், என்றான பலவகை காட்சி விஸ்தரிப்புகளுக்குப் பின்னாலும் கதையின் இறுதிப்பகுதியில் மீளவும் யாருக்கேனும் இதுவொரு சம்பவமாகவோ அல்லது அடுத்துவரப்போகும் நிகழ்வின் (வாழ்வின்) பகுதியாகவோ இருப்பின் அதற்காக என்னால் என்ன்செய்யமுடியும், மௌனமாக இருப்பது மாத்திரந்தானே? என முடிக்கும்போது சித்திரத்தைப்படிக்கும் அலர் அகவையருக்கு திருமணம்மீதான ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது.

அம்பையின் கதைகளில் வருவதைப்போன்று பெண்களை அடக்குவதால் இன்பந்துய்க்கின்ற  ஆணாதிக்கத்தைச் அனுபவிப்பதாக எண்ணும் ஆண்கள் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் விதியேயென்று தம்மையே நொந்து பிலாக்கணம் வைத்துப்புலம்புவதுடன் நின்றுவிடுவதில்லை. அக்கிரமங்களுக்கெதிராகப் போராடவுஞ்செய்கிறார்கள். ஆனாலும் பிரமீளா இப்படியே தொடர்வாராகில் இவர் இந்தப்பிரச்சனைபற்றி இப்படித்தான் எழுதுவாரென்று வாசகர்களால்  முத்திரை குத்திவிடப்படும் அபாயமுமிருக்கிறது. எனக்கென்னவோ பிரமிளா புலம்பெயர்ந்து வந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது, அப்படி வந்திருப்பாரானால் அவரது பார்வைகள் இன்னும் விசாலித்திருக்க கதைகளின் பகைப்புலமும் கருக்களும் பாத்திரங்களும் மாறியிருந்திருக்க இன்னும் அசத்தலான படைப்புகள் பலவற்றைத்தந்திருப்பார்.

ஜில் ப்ராட்லி, கமிலே டொன்சியுக்ஸின் தோடுகள் போன்ற கதைகளைப் படிக்கையில் பிரமிளாவுக்கு பன்னாட்டு இலக்கியங்களுடனும் பரிச்சயமிருப்பதை உணரமுடிகிறது. உள்நாடாயிருந்தாலென்ன வெளிநாடாயிருந்தாலென்ன, வசதியானவளாயிருந்தாலென்ன, விளிம்புநிலைவாசியாயிருந்தாலென்ன பெண்களுக்கு  காதுத்தோட்டையும் அடகுவைக்கவேண்டிய நிலமைகள் வந்துவிடுகின்றன. அப்படி அடகாகும் தோடே பேசுவதும் அழகான கற்பனை..

உரப்புழுக்கள் கதையின் நாயகி சுரேகாவும்,  அது புத்தனின் சிசுவல்ல மாயாவுமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இவ்விரண்டு கதைகளிலும் ஒன்றாக இருப்பதைக்காணலாம். முதலாவதில் சுரேகா அவனது கண்காணிப்பாளர் இவளுக்கு உரம் அள்ளும் கிடங்கிலிருந்து பணியை வேற்றிடத்தில் மாற்றிப்போடுவதற்கு இவளிடம் பாலியல் லஞ்சம் கேட்கிறார். அவரைப்பற்றி முறைப்பாடு செய்யப் மேலிடத்துக்குப் பெரியதுரையிடம் போனால் அவரும் கதைவைச்சங்கிலி போட்டுப்பூட்டிவிட்டு அவளைக் ‘கட்டிலுக்கு……. வா’  என்றழைக்கிறார்.

வார்த்தைத் தேர்வுகளில் அங்கங்கே சிறு கவனயீனப்பிழைகள் உண்டு. உரப்புழுக்கள் கதையில் அந்த உரமென்கிற வார்த்தை பொருத்தமாக அமையவில்லை. பொதுவாக விவசாயத்தில்  உரம் என்பது  அசேதன உரங்களைத்தான். (inorganic fertilizers such as anhydrous ammonia, urea, urea-ammonium nitrate solutions,  ammonium phosphates, and muriate of potash). அவற்றுக்குள் எந்தப்பழுக்களும் உயிர்வாழமுடியாது, அவிந்தே இறந்துவிடும். செம்பனைகளின் பகுதிகளோடு அசேதன உரங்களைக்கலந்து பெறப்படுவதைக் கூட்டுப்பசளை (compost : decayed organic material used as a fertilizer for growing plants.) என்றுதான் சொல்லப்படும். அதற்குள் புழுக்கள் வாழச்சாத்தியம்.

இன்னும் சிங்கள உரையாடல்களைத் தமிழில் எழுதும்போது வாக்கியங்கள் சில. எ+காட்டாக: ‘அத்த கியப்பாங்’ என்பது  ’எத்த கியப்பாங்’ என்றும்,  ‘ ஊவ  மரலா நெவே’ என்பது ’ ஊவ  மரலா  நெமே’ என்றும்  தட்டப்பட்டுள்ளன.

அதேபோல் சிராம்புகள் > சிலாம்புகள் என்றும்,  விளாறு > மிலாறு என்றும் தட்டப்பட்டுள்ளன.  இச்சிறு தவறுகளால் படைப்புக்களின் தரத்துக்கோ கனதிக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை தவிர்ந்த தட்டுப்பிழைகள் அதிகமில்லாமல் இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.

கதையைக் காட்சிப்படுத்துவதில் புதுமைப்பித்தனையொத்தவொரு வேகமும், புதிய உத்திகளைத்தேர்ந்து சொல்லும் முறையில் புதுமையும், எந்தப் பிரச்சனையானாலும் நேரடியாக எடுத்துப்பரப்பிவைத்து அலசுவதில் துணிச்சலையும் கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் எனக்குத் தமிழிலக்கியவானில் புதிதாகத்தோன்றியுள்ள விடிவெள்ளியாகத் தெரிகின்றார். இவரால் ஈழத்து இலக்கியம் கடுகிப் புதிய உயரங்களை எட்டும்!

(விமர்சனம்:  அம்ருதா 183 - பெப்ரவரி 2023)

யாவரும் வெளியீடு, பக்கங்கள்: 124 விலை: 150.00 ₹

Sunday, October 23, 2022

கதைகளுக்குள் விரும்பித் தொலைதல் - சப்னாஸ் ஹாசிம்

By On October 23, 2022


ஈழத்தின் மலையக இலக்கியப் பரப்பு விசேடத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு மலையக வாழ்வியல் கூறுகளும் பண்பாட்டுவெளியும் மரபும் மரபார்ந்த தொடர்ச்சியும் காரணங்களெனச் சொல்லமுடியும். பூர்விக நிலத்தின் கலாசார ஊடறுப்பும் மறுக்கப்பட்ட நிலத்திலிருந்து மீண்டெழுந்த அல்லது மீண்டெழ எத்தனிக்கிற சமூகத்தினரிடமிருந்து ‘புதிய வகை ரத்தம்’ போல இலக்கிய வெளிப்பாடு இருந்திருப்பதிலும் தொடர்வதிலும் ஆச்சரியம் மேவ எதுவுமில்லை. புனைவு வெளிப்பாடுகளின் ஊக்கநிலை மாறாமலிருப்பது மலையக இலக்கியப்பரப்பைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நிலவரையியலையும் சமூக ஒழுங்கையும் தொழிலாளர் வர்க்க உணர்வையும் ஒட்டுமொத்த பிரதியின் வழியே பரவவிடுவதனாற் தானென்று தோன்றுகிறது. சி.வி வேலுப் பிள்ளை, நடேசய்யர், கே. கணேஷென்று ஒரு தலைமுறை உருவாகி தமிழக கதை சொல்லலையும் ஈழத்து மரபையும் இணைத்ததான புதிய போக்கோடு மலையகச் சிறுகதை வெளி தனக்கென மரபை உருவாக்கிக் கொண்டது என்று கருதலாம். அதற்குப் பிறகு வந்த தலைமுறை என்றுபார்த்தால் செந்தூரன், என் எஸ் எம் ராமைய்யா, மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மலரன்பன், சாரல்நாடன், நயீமா சித்திக், தெளிவத்தை ஜோசப்பென்று ஒரு வரிசை நினைவுக்கு வரலாம்.


இந்த இரண்டாம் தலைமுறையின் காலமே மலையகச் சிறுகதைவெளி வீறு கொண்டு எழுந்த காலப்பகுதியெனச் சொல்ல முடியும். தொடர்ச்சியாக எண்பதுகளின் பின்னர் தனித்தொகுதிகள் தலையெடுத்ததும் மலையக கதை உலகுதனித்த தன்மையோடு புறக்கணிப்புகளை மீறி குடியுரிமை பறிப்பு பற்றிய கோபவெளிப்பாடுடனும், பிரஜாவுரிமை கோசங்களுடனும் வெளிவந்தன. அதற்குப் பிறகு வந்த தீர்த்தக்கரை போன்ற இதழ் வெளிவந்த காலகட்டம் முக்கிய பாசனத்தை சிறுகதை நிலத்தில் பாயவிட்டது. அதற்கு பிறகு இன்றைய தலைமுறையில் சடகோபன், சிவானுமனோகரன், பிரமிளா பிரதீபன் போன்றவர்கள் புதிய கோணத்தில் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிரமிளா பிரதீபனுடைய விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்தேன்.


மலையக சிறுகதைக்கென்று இருக்கிற ஒரு செல்நெறியோ, மரபோ இவரது கதைகளில் மீறப்பட்டிருக்கிறது. இவரது புதிய கதை சொல்லல் மானுட அழகியல் அபத்தமென்கிற இருநிலைகளைத் தாங்கிய புதிய மனிதர்களோடும் வலுவான கதையோடும் கூறல் உத்திகளோடும் ஒரு கட்டுடைப்பை வியாபிப்பைச் செய்திருக்கின்றன. இன்றளவில் தமிழக புலம்பெயர் பரப்பில் அதிகம் வாசிக்கப்படக்கூடிய மலையகக் கதைகள், ஏன் ஈழக்கதைகளும் பிரமிளாவினுடையனவே. பிரமிளாவினுடைய கதையுலகம் தடித்த கதாபாத்திரச் சித்தரிப்போடு அகநிலை சார்ந்த ஊடாட்டங்களைப் பேசுபவன. பொதுவான மலையகக் கதைப் பின்னணியிலிருந்து வேறுபட்டு கழிவிறக்கம், ஆற்றாமை போன்ற சாயலை விடுத்து புதிய பார்வையோடு திமிறி எழுவன. பெண் நிலை சார்ந்த நுண் இழையோடு சமாந்தரத் தளத்தில் அகவிசாரணையோடு எழுதப்பட்ட கதைகளை இத்தொகுதி அதிகம் கொண்டிருக்கிறதெனலாம். அக்கதைகளில் வரும் பெண்கள், அவர்களது அன்றாடம் என்பனவெல்லாம் இயல்பிலிருந்து விலகாது இதுவரை சொல்லத்தயங்கிய புழங்குவெளியை ஞாபகப் படுத்துவன. பெண்ணியச் சிந்தனைகளோடு ஒன்றித்த கதைப்போக்கு தமிழ்க்கதைகளில் மிகைத்துவிட்ட இந்நாட்களில் ஈழத்து மலையக சிறுகதைகளில் அதை வேறுபட்ட தளங்களிலும் வடிவ நியதியிலும் முயன்று பார்த்தவரென்று பிரமிளாவைச் சொல்ல முடியும். ஆணாதிக்கம், சுரண்டல், பாலியல் லஞ்சம், இன முரண்பாடு, காமம், காதல், வன்புணர்வு என பெண்ணுலகம் சார்ந்து பிரமிளா முன்வைக்கிற கதையாடல்களும் கேள்விகளும் முடிபுகளும் வித்தியாசமானவை. பெண்ணியம் பற்றி பேசுகிற போது எதிர் நியதி பேசுவது, அதன் சாத்தியங்களை படைப்புகளின் மீது விரவ விடுவது திணிப்பது பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. பிரமிளாவின் பெண்கள் ஆதர்சமான நாயகத் தன்மை கொண்டவர்களல்ல. எங்கேயோ முயன்று வெளிவர முடியாத தடுப்புகளைத் தாண்ட எத்தனித்து மீண்டும் அதே பாழ்குழியினுள் விழுகிற சராசரியான பெண்களையே பிரமிளா தேர்ந்தெடுத்திருப்பார். சுரண்டலை எதிர்த்துத் திமிறுகிற சீற்றத்தோடு அச்சுரண்டலுக்குப்பழகிப் போகிற பெண்களையோ சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூக வேலியிலிருந்து அதன் மதிப்பீடுகளிலிருந்து தப்ப முடியாத பெண்களையோ அவருடைய கதைகள் முன்நிறுத்துகின்றன. பொதுவான மலையகக் கதை சொல்லலிருந்து பிரமிளா வேறு வேறு நிறங்களை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்திய படி தனித்தொத்த கூறுமுறையோடு முயற்சித்திருப்பார். அது மிகச் சவாலான உருவக/குறியீட்டு விபரிப்புகளோடு வளர்ந்து வந்து ஒரு கட்டத்தில் கதையை நிறுத்துவது எனச் சொல்ல முடியும். கதையில் மேலோட்டமாக சொல்லப் படும் கதைக்கு சமாந்தரமாக மெய்க்கதை பயணித்தபடி இருக்கும். இப்படி இத்தொகுப்பின் தலைப்புக்கதையான விரும்பித் தொலையுமொரு காடு கதை எழுதப்பட்டிருக்கும். பெண்ணொருத்தி காடொன்றை விரும்பி நுழைவது போல குடும்ப வாழ்வை மண வாழ்வைக் குறித்துக் கதை நீளும்.


இவ்வகை உத்திகளின் வாயிலாக வழக்கமான மலையகச் சிறுகதைகளிலிருந்து பிரமிளாவினால் புதிய கூறுமுறையை குறியீட்டு மொழிக்குள்ளேயான பூடகச் சொல்லாடலை செய்ய முடிந்திருக்கிறது. இவ்வகை பூடகக் கதையாடல் மற்றைய நேரடிக்கதைகளை விட  பிரமிளாவுக்கு கைகொடுத்திருப்பதாகவே இத்தொகுப்பிலிருந்து உய்த்தறிய முடிகிறது. நேரடிக்கதைகளில் உள்ள இடைவெளிகளை அயர்ச்சியை குறியீட்டுக்கதையாடல் நிரப்புகிறதென்ற அளவில் அவ்வுத்தியைப் பாராட்ட முடியும். கடுமையற்ற ( not rigorous) இலகு தன்மையான மொழியை இவ்வகைக் கதைகளுக்கு தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது எப்பொதும் நல்ல கதையொன்றை அளிக்கும் முயற்சிக்கு கை கொடுக்காதென்பதுவும் புலனாகிறது. அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சவாலெனப் புரிந்து கொள்ள முடியும். நாம் குறிப்புணர்த்தும் கதைக்காக எடுத்துக்கொண்ட குறியீட்டைச் சரிவரக் கையாள்வதில் தான் இக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கும். குறியீடாக நாம் சொல்ல வருவது அழுத்தமானதொன்றாக இருக்க வேண்டுமே ஒழிய வெறுமனே ஒத்திசைவான ஏதாவதொன்றை தொடர்பு படுத்துவதோடு நின்று விடக் கூடாது என்பது எனது கருத்து. விரும்பித் தொலையுமொரு காடு கதையும் ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கதையும் இவ் வுத்தியின் வழியே உருப் பெற்றாலும் அவை சில இடங்களில் சலிப்பைக் கொடுப்பன. ஒரு அரசமரமும் சில வௌவால்களும் என்ற கதையில் அரசமரத்தையும் வௌவால்களையும் புத்த மதத்தையும் அதன் தீவிரப் பற்றாளர்களையும் குறித்த பூடக விபரிப்பாகச் சொல்லியிருப்பார் பிரமிளா. நீண்ட விவரணையில் ஒரு தேர்ந்த வாசகருக்குப்புரிந்த விசயத்தை மீண்டும் அவர் திரும்ப எழுதியிருப்பார்.


“தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து இந்த வௌவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து விலகுவர். தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயெனக் கொண்டாடும் வௌவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போய் வைராக்கியம் கொண்டு மரத்தை வெட்டிவீழ்த்த முனைவர். “ என எழுதியிருப்பார்.


இதனை தூர இருந்து அரச மரத்தினழகினால் கவரப்பட்டு வருபவர் பின்னர் தன் கையாலே வெட்டிவிடுவாரென முடித்திருக்க முடியும். அந்தக் குறிப்பும் காரணமும் ஏற்கனவே முன்கதையின் நிகழ்வுகளினாலும்  விபரிப்புகளினாலும் வாசகனுக்கு உணர்த்த போதுமானவை.   


கதைகளுக்காக பிரமிளா பயன்படுத்துகிற மொழியும் நடையும் தற்காலச் சிறுகதைகளைவிட சில படிகள் செறிவற்று வருகின்றன. சம கால கதை சொல்லல் அடைந்திருக்கிற இடமும் செழுமையும் மொழி விசயத்தில் அபாரமானதென்பதால் அந்த இடத்திற்குரிய மெனக்கெடல் ஒட்டுமொத்த தொகுதியிலும் போதவில்லை என்றே தோன்றுகிறது. ஏற்கனவே குறித்துச் சொல்லியது போல மலையகக் கதைகள் தனித்துத் தெரிவதற்கும் தனிப்பெரும் இலக்கியப் போக்காக விரிவதற்கும் அவை சுமந்து வந்த நிலவரையியலேகாரணம். மலையகக்கதைகளென்றாலே மலைகளும் தோட்டங்களும் பீலிகளும் லயமும் அதைச் சுற்றிய காடும் வழுக்கும் தெருக்களும் வெற்றிலைக் கறை படிந்த மனிதர்களும் வட்டார மொழியுமென மனக் காட்சி விரியும். நிலத்தையும் இயற்கையையும் அதைச் சுற்றிவர நிகழும் எல்லாச் சங்கதிகளையும் பிரதியினுள் கொண்டு வந்த எத்தனையோ கதைகள் நமக்கு ஞாபகம் வரும். அப்படி இத்தொகுதியில் முழுத் திருப்தி தரக்கூடிய கதை என்றால் உரப்புழுக்கள் மட்டும் தான் என்று சொல்வேன்.


அது தாங்கி வருகிற நிலக்காட்சிகளும் உரமேடையும் காடும் கட்டுபொல் உறிஞ்சி வற்றிய கிணறும் பங்களாவும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதுவே மலையகக்கதை வழக்கின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட நல்ல கதையென்று படுகிறது. இந்தக் கதையில் சொல்லப்படுகிற உணர்வும் ஆணாதிக்க மேலீடும் அறச்சீற்றமும் இயல்பைக் குறித்து யதார்த்தத்தைக் குறித்து அச்சத்தை கடத்துவன. திருமண வாழ்வைக் குறித்தும் கற்பைக்குறித்தும் எழும் ஐயமான( ambiguous) கருத்துநிலையை அப்படியே சொல்லி விடுவதும் தொழிலாளர்களின் மீதான பாலியல் சுரண்டலை படம் போட்டுக் காட்டுவதுமாக இக்கதை, முக்கியமாக மலையகப் பண்பாட்டுத்தளத்தில் உள்ள துயர் நிகழ்வுகளின் சாட்சியமாக இருக்கிறது.


புனைக்கதை எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் எனக்கு பிரமிளாவிடம் சொல்ல ஒரு விசயமிருக்கிறது. அது கதைகளின் செம்மை பற்றிய விசயம் தான். எப்போதும் ஒரு கதையை எழுதியவுடன் அது முழுமுற்றானது, கடைசியானதென நாம் நம்புவதில்லை.  அந்தக் கதை பல படிகளிலெழுந்து முழுமையாகத் திரளுவதில் நமக்கு அடுத்தபடியாகவும் இறுதியாகவும் சஞ்சிகைகளின் பங்களிப்பிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு பிறகு வந்த கதைகளுக்கும் இதிலிருக்கிற கதைகளுக்குமிடையில் அந்தத் திரட்சியில் மொழி விசயத்திலும் கதையின் உள்ளடக்கத்திற்குத் தகுந்த உத்திகளின் தேர்வு விசயத்திலும் ஒரு போதாமை இருக்கிறது. ஆரம்பக்கதைகளில் அது எழுதிக் கண்டடையக் கூடிய ஒன்றுதான். என்றாலும் அவற்றின் மீதான இதழ்களின் பரிந்துரைகள், செம்மைப் படுத்தல்கள் அவற்றை இன்னொரு தளத்திற்கு கொண்டு போகுமென்பதை மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் அக்குறைபாட்டை வெகுவாகவே உணர முடிகிறது. இக்கதைகள் ஆரம்பத்தில் வெளிவந்த இதழ்கள் அப்பணியை பெருமளவு செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. தானாகவே பயின்று அரங்கேற்றம் வருகிற மாணவரிடம் இருக்கும் அதே வகை தடுமாற்றங்களைத் தான் சுட்டுகிறேன். விவரணைகளிலிருக்கிற பொத்தாம்பொதுவான சொல்லாடலும் தேய்வழக்கான சொற்றொடர்களையும் தவிர்த்திருக்க முடியும். அது புத்தனின் சிசுவல்ல கதையில் பிற்பாதி, முற்பாதி போன்ற மொழிச்செறிவிலன்றி ஐதாக வருவது, மாட்டியா கதையின் கூறுமொழி இன்னும் மேம்பட்டிருக்கலாமெனத் தோன்றுவதென சில சுட்டுகளைச் சொல்ல முடியும்.


கதைகளுக்குத் தேவையான தருக்கத்தை தேர்ந்தெடுப்பதில் பிரமிளா படுசாமர்த்தியமானவரென்பதை ஓரிரவு போன்ற கதைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிரமிளாவுக்கு, நானும் தான் அதே மலைகளில் ஏறி இறங்குகிறேன், நானும் தான் அதே பாதைகளில் வழிகளில் நடக்கிறேனென ‘ஓரிரவு’ போல கதையினுடைய ஒட்டுமொத்தத் தருக்கத்தைச் சொல்லத் தெரிந்திருக்கிறது. அத்தருக்கங்களின் வழியே கட்டுமானமாகிற கதையின் மனிதர்களையும் காட்சியனுபவத்தையும் உரிய இடங்களில் வைக்கத் தெரிந்திருக்கிறது. கமிலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள் போன்ற கதைகளில் தேக்கமாகும் மனநிலையை, கதை முடிவடையும் புள்ளியோடு இணைக்கவும் தகவமைக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக பிரமிளா, குறியீட்டுக்கதை மொழிதலாலும் வேறுபட்ட களத்தேர்வுகளாலும், கிளைமொழியின் பாண்டித்தியத்தினாலும், பெண் உலகின் இன்னுமொரு கரிய படித்தளத்தில் நின்று யதார்த்தத்தை நுண் வாசிப்புக்குரிய ஆழ்படிமங்களோடு ஆங்காங்கே ஊன்றி நிறுத்துவதாலும் கவனிக்க வேண்டிய தொகுப்பொன்றைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குத் தந்திருக்கிறார் எனச்சொல்லாம். 

நன்றி வனம் - ஒக்ரோபர்

Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

Monday, August 29, 2022

நடத்தை மாற்றம் - பிரமிளா பிரதீபன்

By On August 29, 2022

ஒரு உயிரியின் நடத்தையில் ஏற்படும் சார்பு நிலையிலான நிரந்தர நடத்தை மாற்றத்தைத்தான் கல்வியின் சிறந்த பெறுபேறென எதிர்பார்க்கிறோமா?

கல்வி பற்றியதான நடைமுறை புரிதலும் அறிவுறுத்தல்களும் கூட அதையேதான் வலியுறுத்துகிறதா?

பொதுவாக அறிவைப் பெறுதலையும் புதிய நடத்தைகளை ஆற்றுவதற்கான ஆற்றலை விருத்தி செய்தலையும் கல்வி என்பதாக கூறுகின்றனர். நடத்தை மாற்றப்படும் ஒழுங்குப்படுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் செயன்முறையை கல்வி என்பதாக சிலர் வரையறை செய்கின்றனர்.  ஆற்றலை அல்லது நிபுணத்துவத்தை தேடும் செயன்முறையே கல்வி என்பதாக  (Knows 1998) கூறுகிறார். அவதானிக்கக்கூடிய வெளிவாரியான நடத்தை மாற்றமே கல்வியென்பதாய் ( Keith Rutledge  2003) கூறுகிறார்.

ஆனால் சமகால கல்வி நடைமுறையில், எதிர்பார்க்கப்படும் இவ்வடைவுமட்டங்கள் எய்தப்பெறுகின்றனவா? அல்லது அதற்குரியதான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சாத்தியப்படுகின்றனவா என சிந்தித்தால் அனேகமாக அறிவைப்பெறுதலை நோக்கியதான வேகமான முன்னெடுப்புகளே வரவேற்கப்படுகின்றன எனலாம். அதிகமாக  போட்டி மனப்பான்மையை விஸ்தரிக்கும் எதிர்மறையான நடத்தை விளைவுகளையே மாணவர்கள் தம்மத்தியில் வளர்த்துக் கொள்வதை வெகுவாக அவதானிக்க முடிகிறது.

கோட்பாட்டுப் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் இயங்குவடிவமாக செயற்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டமானது நடத்தை மாற்றத்தினை கருத்திற்கொண்டே தயாரிக்கப் பட்டிருக்கிறது. மேலும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல் அனுபவங்களை ஒழுங்கமைத்தல் முதலியவையும்கூட கலைத்திட்டத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்களின் உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் கருத்திலே கொண்டுதான் கலைத்திட்டமானது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஓரளவில் உளவியல் தழுவிய நிலையிலேயே கல்விக்கலைத்திட்டமானது வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூட எண்ணிக்கொள்ள  முடிகிறது. 

இதன்படி கலைத்திட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எமது சமகால கல்வி முறைமையுள் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சி மட்டங்கள் அடையப்பெற வேண்டும் என்பதே கற்றல் கற்பித்தல் நகர்வுகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கலைத்திட்ட மாற்றங்களும் இவ்வடைவுமட்ட வீழ்ச்சியின் அவதானிப்பின் பேரிலேயே நடைபெற்றவண்ணம் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மிகத்தேர்ச்சிபெற்ற கல்வியியலாளர்களால் கலைத்திட்ட மாற்றங்கள் திட்டமிடப்பட்டும், நடைமுறைப் படுத்தப்பட்டும் அறிவுறுத்தல்களும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றும்கூட எதிர்பார்த்த பிரதிபலன்களை ஏன் பெறமுடியவில்லையென்பது  சிந்திக்க வேண்டிய விடயமாயிருக்கிறது. எதிர்பார்த்த விடயமென இங்கே நான் சுட்டியது சமூகத்திற்கு பொருத்தமான நடத்தை மாற்றத்தை மாணவர்களிடத்தே ஏற்படுத்த முடியாமையையே.

பொதுவாக பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் மாணாக்கரின் மனப்பாங்கானது பின்வருமாறு அமைந்திருப்பதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

  • தெரிவு செய்யப்பட்ட தொழில் வகைகளை மாத்திரம் விரும்புதல் (white color jobs)
  • பிரச்சினை தீர்க்கும் ஆற்றலில் தளம்பல் நிலையிருத்தல்
  • மென்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் பற்றிய ஆர்வமின்மை காணப்படல்
  • போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்
  • நிலையான, உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனின்மை
  • உடனடி வளர்ச்சியையும் மாற்றங்களையும் எதிர்பார்த்து மனச்சோர்வடைதல்
  • தற்கொலை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளல்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோகம் கொண்டிருத்தல்

மேற்கூறியது போன்ற மனப்பாங்குகளுடன் சமூகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களால் தொடர்ச்சியான சமூகச்சவால்களை எதிர்கொள்ள முடியாதென்பதும் ஒரு கட்டத்திற்குமேல் சோர்விற்குள்ளாகி மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவர் என்பதுவும் தெளிவு. எனினும் இதனையொத்த மனப்பாங்குகளையுடைய மாணவர்களையே எமது கல்வி முறைமை அதிகமாக உருவாக்குகிறது எனும் பட்சத்திலேயே இதற்கான சரியான மாற்றுவழி அல்லது செய்தேயாகவேண்டிய திட்டமிடல் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாயிருக்கிறோம்.

பொதுவாக கலைத்திட்டத்தினூடான அடைவுமட்டங்கள் தொடர்பான அறிவு ஒரு படிமுறையினூடாகவே இறுதியில் ஆசிரியர்களை வந்தடைகிற போதிலும் மாணவர்களின் அடைவு மட்டத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் மாத்திரமே. எனவே கற்பித்தலினூடாக மாணவனது நடத்தை மாற்றம் வலியுறுத்தப்பட வேண்டுமெனின் ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடவேளையின் போது மனப்பாங்கு விருத்தி தொடர்பான பங்களிப்பையும் வழங்குகிறோமா என்பதுபற்றி உறுதி செய்துகொள்ளுதல் அவசியமாகும்.

மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் பரீட்சைமைய கல்விமுறையை இறுகப்பற்றியர்களாய் அதற்கான அத்தியாவசியத்தை நிரப்பிவிட வேண்டுனெவே அனேகமாக முனைகின்றனர். அறிவு, திறன் மனப்பாங்கு ஆகிய மூன்று கூறுகளது விருத்தியினூடாக முயற்சித்தாலேயன்றி ஒரு மாணவனது நடத்தை மாற்றத்தை உறுதியாக மாற்றிவிடல் சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் கருத்திற் கொள்ள மறுக்கிறார்கள். (வெறுமனே அறிவை மட்டும் குறிக்கோளாக கொள்ளுமொரு பிள்ளை பாடசாலை கல்வியை நாடவேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் சமவயது குழுவினருடன் இயங்க வேண்டிய தேவையும் இராது.) நடத்தை மாற்றமே கல்வியின் எல்லையென கருதும் போது மாத்திரமே அறிவுடன் திறன்களும் மனப்பாங்கும் விருத்தியடைய வேண்டியதன் அவசியம் பற்றி ஆசிரியர்கள் சிந்தித்து செயலாற்ற தலைப்படுவார்கள்.

கல்வியின் நான்கு தூண்கள்

21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி ஆராய்ந்த சர்வதேச ஆணைகுழுவின் அறிக்கையில் (Delors Report--1996) மனித குலம், தனியாட்கள், நாடுகள் என்பவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான கல்வியின் பங்கு பற்றி விரிவாக கூறப்பட்டது. இவ்வறிக்கையானது மனித வளர்ச்சிக்குத் தேவையானவை அனைத்தும் கல்வியில் பொதிந்து கிடப்பதாக கூறியது. அத்துடன் நான்கு தூண்கள் அடிப்படையில் கல்வி பற்றிய தொலைநோக்கொன்றையும் இவ்வறிக்கை முன்மொழிந்தது. அவையாவன.

1. அறிவை பெறும் வகையில் கற்றல்  (Learning to know)

பரந்த பொது அறிவு, சில பாடங்களில் ஆழமான அறிவு, பிற்கால வாழவில் சுயமாக கற்க உதவும் திறன்கள் பற்றிய அறிவு என்பவற்றை இது உள்ளடக்கும்.

2. செய்வதற்கு கற்றல் (Learning to do)

தொழில்த்திறன்கள், வெவ்வேறு நிலைமைகளில் பணி புரியவும் குழுக்களில் சேர்ந்து வேலை செய்யவும் தேவையான பரந்த தகைமைகள் என்பவற்றை இது கருதும். முறையான பாடநெறியினூடாகவும் சமூக வேலை அனுபவங்களினூடாகவும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

3.வாழக்கற்றல் (Learning to be)

ஒருவர் சில அடிப்படை விழுமியங்களைக்கொண்டு தனது ஆளுமையை விருத்தி செய்யும் ஆற்றல் கூடிய சுயாதீனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுதல் பற்றியது. அதாவது கல்வியானது ஒருவரின் நினைவாற்றல், காரணங்காணுதல், உடல் ஆற்றல் தொடர்பான திறன்கள் என்பவற்றை கருத்திற் கொள்ளல் வேண்டும்.

4. இணைந்துவாழக் கற்றல் (Learning to live together)

மற்றவர்களுடன் சேர்ந்து வாழக்கற்றல் எனும் நான்காவது நோக்கு அமைதியையும் மற்றவர்களையும் மதித்தல், பிறரை புரிந்துக்கொள்ளுதல், தனியாட்களும் சமூகங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு வரவேற்கும் மனப்பாங்கை குறிக்கின்றது.

சர்வதேச ரீதியாக பயன்படுததக்கூடிய ‘கல்வியின் நான்கு தூண்கள்’ பற்றிய இப்பரிந்துரையை அடியொற்றியே இலங்கையில் கல்வியின் இலக்குகள் வகுக்கப்பட்டன. தொடர்பாடல் சமூக உயிரியல், பௌதீக சுற்றாடல், அறவொழுக்கம், சமயம், ஓய்வு நேரத்தை பயன்படுத்தல், கற்பதற்கான திறன்களை கற்றல் என்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பான தேர்ச்சிகளை மேம்படுத்தல் இவ்விலக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பாடசாலை கல்விக்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்ட புதிய கல்வியியல் இலக்குகளில் படைப்பாற்றலுக்கான திறன்கள், துருவி ஆராயும் திறன்கள், அணியாக சேர்ந்து பணியாற்றும் திறன்கள், அறிவை புதுப்பித்துக் கொள்ளவும் அதனை பரிசீலனை செய்யவும் தேவையான திறன்கள் என்பனவும் அடங்குகின்றன. 

இத்தகைய நவீன இலக்குகள் அடையப்படவேண்டி எடுக்கப்படும் முயற்சிகள் ஒருவனது நடத்தைமாற்றத்தை உறுதியாக கணிக்கும் அளவுகளாக இருப்பதுடன் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றினதும் விருத்தி தொடர்பாகவும் தெளிவினை எற்படுத்தும். எனினும் இலங்கையில் உள்ள பாடசாலை நிருவாகங்களும் ஆசிரியர்களின் மனநிலையும் அத்தகைய இலக்குகளை அடைய போதுமானதாக இருக்கிறதா என்றால்… சந்தேகமே.

குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழ்நிலையானது, மாணவர்கள் மத்தியில் மாத்திரமின்றி ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய மனஅழுத்தத்தினையும் எதிர்மறையான நடத்தை மாற்றங்களையும் தோற்றுவித்திருக்கிறது. அத்துடன் சூழ்நிலையால் தடைப்பட்ட கலைத்திட்ட சுமைகளும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைக்கோலங்களும் கூட கற்றல்கற்பித்தல் செயற்பாட்டின் போக்கினை செயற்கைத்தன்மையுடையதாக்கி பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் விதத்தில் மாற்றமடைய வைத்திருக்கிறது. இத்தகைய திடீர் மாற்றங்களானது கல்வியின் குறிக்கோள்களை திசைத்திருப்பி மீண்டும் பரீட்சைமையக் கல்வியின் நடைமுறையினை தோற்றுவிக்கும் ஆபத்தினை நோக்கி நகர்கின்றமையை அவதானிக்க முடிகிறது. 

எவ்வாறெனினும் பிள்ளையின் நடத்தையை சமூகத்திற்கு ஏற்றாற் போல மாற்றவியலாத கற்றல் நடைமுறைகளின் மீது  ஆசிரியர்களோ மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை உருவாக வேண்டும்.

எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு

(குறள் 426)

கல்வியினூடாக மனிதன் சமூக இயல்பினனாக வேண்டும் என்பதையே இக்குறள் வலியுறுத்துகிறது. எனில் அவனது நடத்தை மாற்றமே இங்கு பிரதானமாக கவனிக்கப்படுகிறது.

Thursday, July 1, 2021

ஒரு சினேகிதனாய் ஜீவா ஐயா… (அனுபவப்பகிர்வு) - பிரமிளா பிரதீபன்

By On July 01, 2021

மிகப்பெரும் ஆளுமைகள் என வியக்கப்படும் ஒருசிலரால் மாத்திரமே தம்முள் மறைந்திருக்கும் சினேக உணர்வையும் குழந்தைத்தனத்தையும் வெகு இயல்பாக வெளிப்படுத்திடல் சாத்தியப்படுகிறது. சொல்லப்போனால் பிரமாண்டமான சக்தி கொண்ட ஒருவரின் முற்றிலும் வேறுபட்ட பக்கமொன்றாகவே இதனை எண்ணிக்கொள்ளவும் முடியும். 

எனது ஆரம்ப அனுபவம் கூட அத்தகையதொரு முரண்பாடான குழப்பத்துடனேயேதான் எனக்குள் பதிவாகியிருந்தது.  நான் ஜீவா ஐயாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாளை அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. நான் இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலமது. மிகச்சரியாக கணித்துச்சொன்னால் 25.06.2006. 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள். 

ஒரே கதையை பிரதியெடுத்து இருவேறு பத்திரிகைகளுக்கும் கூடவே மல்லிகை இதழுக்கும் தபாலிட்ட நம்பிக்கையில் ஜீவா ஐயாவை சந்திக்கவென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது அலுவலகத்தைத் தேடிக்  கண்டுப்பிடித்திருந்தேன். 

புத்தகங்கள் குவிந்த அறையொன்றிற்குள் கொஞ்சமாய் தெரிந்த இடைவெளியில் ஒரு சாய்கதிரையை போட்டு உறங்கினாற் போல சாய்ந்திருந்தார். என் வருகையை காலடி சப்தம் உணர்த்தியிருக்க வேண்டும். மெல்ல அசைந்தெழுந்து கூர்ந்து பார்த்தார். ‘யார் நீ..?’ என்பது போன்றதான அந்தப் பார்வையில் இன்னும் பல வினாக்களையும் வினவியதாய் தோன்றியது. உடனே நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.  

எனது பெயரைக்கேட்ட மறுநொடி அவரது முகம் மிகக்கடுமையாக மாற்றமடைந்தது. முதலில் என்னை அமரச்சொல்லி ஒரு கதிரையை காட்டினார். ‘இலக்கியத் துரோகி’ எனும் முதல் வார்த்தையை என்மீது வீசினார்.

நான் பதறி நிலைகுலைந்து தடுமாற்றத்துடன் அவரை எதிர்கொண்டேன். மொத்த வெறுப்பையும் தன் பார்வைக்குள் வைத்தபடி புத்தகமாக்கப்படாத ஒரு தொகை தாள்கட்டுகளை எடுத்து இருபத்துமூன்றாம் பக்கம் திருப்பினார். அங்கே ‘கண்ணாடிப்பிம்பம்’ எனும் எனது சிறுகதை பிரதியெடுக்கப்பட்டிருந்தது. 

எனது சிறுகதையை அச்சுத்தாளில் கண்ட பிறகான அப்போதைய என் மனநிலையை துல்லியமாக என்னால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவரது கோபத்திற்கான காரணம் கம்பீரமான தொனியுடன் என்னை சுழற்ற ஆரம்பித்தது.    

ஒரே கதையை இருவேறு இடங்களுக்கு அனுப்பியதை தன்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாதென்றும் தான் அதனை தெரிவு செய்து அம்மாதத்திற்கான புத்தக வடிவமைப்பையெல்லாம் செய்தான பின் அதே கதை அதே தலைப்புடன் அன்றைய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதாகவும் சொன்னார். தினக்குரல் பத்திரிகையை எடுத்துக் காட்டினார். இது தனது நம்பிக்கைக்கு செய்த துரோகமென்பதையும் தனது சிரமத்தையும் திரும்பத் திரும்ப கூறி ஆத்திரம் தீர திட்டினார். 

நான் ஸ்தம்பித்து நின்றிருந்தேன். ஏறக்குறைய அழுகையை அடக்கிக் கொண்டிருந்தேன். நம்பிக்கையிழந்து அவரை பார்த்தவளாய் அடிக்கடி எச்சில் விழுங்கிக் கொண்டேன். ஏதோ கதைக்கவும் முயற்சித்தேன். பின் ‘அப்படி அனுப்பக் கூடாதென்பது எனக்குத்தெரியாது’ என தயக்கத்துடன் கூறியபடி அடுத்த வார்த்தை பேச வராமல் தடுமாறினேன். 


சிறிது நேரம் இருவரும் பேசாமல் மௌனித்துக்கொண்டிருந்தோம். வெளிறிய என் முகம் அப்பட்டமாக எனது மனவுணர்வுகளை காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். 

சிறிது நேரத்திற்குப்பின்  ‘சரி போகட்டும் விடு. இனி அப்படி செய்யக்கூடாது’ என்றார். அவரது குரலில் கோபம் தணிந்திருந்தது. மீண்டும் அமரச்சொன்னார். தண்ணீர் போத்தலை எடுத்துத்தந்தார்.  

எனைப்பற்றிய எல்லாம் விசாரித்தறிந்தார். இடைக்கிடை ஒரு குழந்தைச்சிரிப்பை விசிறியபடி நிறைய பேசினார். சிறிது நேரத்திற்குள் இறுக்கம் தளர்ந்த வித்தியாசமான ஒரு சூழலை நாங்கள் உருவாக்கிக் கொண்டதாய் தோன்றியது.  எங்களது ஸ்னேகம் மெல்லமாய் அங்கே அத்திவாரமிட்டுக்கொள்ளவும் ஆரம்பித்திருந்தது. 

தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்தித்தேன். இலக்கியம், உலகம், அரசியல், நட்பு அனுபவம் இன்னபிறவென மனம்விட்டு பரஸ்பரம் தயக்கமேயின்றி பேசிக்கொண்டோம். இனிப்பு வாங்கி சாப்பிட்டோம். பகலுணவை பகிர்ந்து உண்டோம். மொத்தத்தில் ஜீவா ஐயா நம்பிக்கையானதொரு இலக்கிய நண்பனாக மாத்திரமே எனக்குள் பதிவாக தொடங்கியிருந்தார். 

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் இன்றுவரை நான் நினைத்து வியக்கும் ஒரு  அழகான காதல் கதையை என்னிடமவர் பகிர்ந்துக் கொள்ள தொடங்கினார். அதனை எனையொத்த இன்னும் பல நண்பர்களிடமும் அவர் பகிர்ந்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டுதான். ஆனால் என்னை மிகவும் பாதித்த சம்பவமாகவே அது அமைந்துவிட்டிருந்தது. 

அக்கதையை அவர் இரசித்து சொன்ன விதமும் தன் காதலை நிகழ்காலத்திற்குள் புகுத்திய முறையும் அத்தனை அற்புதமாக இருந்தது. 

‘நான் ஒருத்திய காதலிச்சனான்;’ என்றவாறு மிகச்சாதாரணமாகத்தான் அக்கதையை ஆரம்பித்தார். எனினும் கதைக்கூறலினூடே அவர் காட்டிய அந்த உணர்வுக்கொந்தளிப்புகளை அப்போது நான் உணர்ந்து கொண்டதாலேயே இன்றும் என்னால் அதனை நினைவுப்படுத்திட முடிவதாய் தோன்றுகிறது. அவர் காதல் எனும் சொல்லை உச்சரித்த போதில் ‘கா’ எனும் எழுத்திற்கு பின் மெல்லிய அதிர்வொலி காற்றுடன் ஊடுருவி… ஓரிரு மாத்திரைகள் தாமதித்தே ‘தல்’ எனும் எழுத்துக்கள் ஒட்டிக்கொண்டன. 

அத்தனை தீவிரமாய் அனுபவித்து அவர் கதை சொல்லிய அவ்விதமானது அதன் ஆழத்தையும் தீவிரத்தையும் எனக்கு உணர்த்தியிருந்தன. 

அவள் பெயர் லில்லி. தன் பக்கத்து வீட்டுப்பெண். தங்கள் வீடுளுக்கிடையில் ஒரு மதில். அம்மதிலைச் சூழவும் படர்ந்த அழகான மல்லிகைப்பந்தல். 

தாங்கள் அறிமுகமாகியது… பேசிக்கொண்டது… புரிந்துக்கொண்டது எல்லாமே அந்த மல்லிகை பந்தலுக்கு அடியிலான மதிலுக்கு இரு புறங்களிலேயே. 

ஒரு நாள் வழமைபோல அவர் லில்லி என அழைக்க பதிலாய் ‘தம்பி’ என ஒரு குரல் கேட்கிறது. அவளது தாய் அங்கே நிற்கிறாள். தனது நிலையினை புரிய வைத்து தன் மகளை விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். இதனை லில்லியிடம் சொல்ல கூடாதெனவும் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

ஒரு பெண்ணைப்பெற்ற தாயின் பரிதவிப்பு இது.  ஒரு எழுத்தாளன். இலக்கியவாதி சக உயிர்களை மதிக்கத்தெரிந்த ஒரு மானிடன் வேறென்ன செய்துவிட முடியும்? அதையேதான் அவரும் செய்திருக்கிறார். அக்கதையை அதற்கு மேல் அவர் தொடர விரும்பவில்லை. ஆனால் என்னால் அவ்விடத்திலேயே அக்கதையை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. 

 ‘அப்போ இந்த மல்லிகைப்பந்தல் என்ற பெயர் அந்த ஞாபகமாகத்தானா?’ என்ற என் வினாவிற்கான பதிலாக பலமாக அவர் தந்த சிரிப்பில் என்னால் ஊகிப்புகள் எதனையும் செய்ய முடியவில்லை. எனினும் அம்மல்லலிகைப் பந்தலை ஜீவிக்க வைக்கவே தொடர்ச்சியாக உரமும் வாசனையும் தந்து மாதமொரு இதழை மலர்விப்பதாக எனக்கு நானே நம்பிக்கொண்டேன். மிகுந்த ஆச்சரியப்பட்டேன். 

பல்லாண்டுகாலமாய் நிறைவேறா ஒரு ஆசையை சுமந்தபடியே வாழ்தல் என்பதுவும் அதன் நினைவாக அந்த மல்லிகை பந்தலையே தனது அடையாளமாக்கிக்கொள்ளல் என்பதுவும் பேசிக்கடந்துப்போகும் ஒரு சாதாரண விடயமா என்ன? ஆனால் அவர் அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. தனது அனுபவங்களுள் ஒன்றென அதனை கருதியதை  போலவே காட்டிக்கொண்டார்.

ஜீவா ஐயா மலையக எழுத்தாளர்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அடுத்த மலையக தலைமுறையினரின் தேவை பற்றியும் அர்களிடத்தே காணப்படக்கூடியதான குறைபாடுகள் பற்றியும் இடையறாமல் பேசிக்கொண்டே இருப்பார். என் மீதான நம்பிக்கையை அதிகமாக கொண்டிருந்ததுடன் எனக்கான அடித்தளத்தை உறுதிபடுத்திட வேண்டுமென வழிநடத்தவும் தொடங்கினார். என் எழுத்துக்கள் மீதான நம்பிக்கையை எனக்குள் விதைக்க வேண்டுமென நிறையவே முயற்சித்தார். எனது சிறுகதை தொகுப்பொன்றை மல்லிகைப்பந்தலினூடாக வெளியிடுவதில் பெரும் பங்களிப்பை செய்திருந்தார். மலையகத்திற்கான ஒரு பெண் எழுத்தாளரின் தேவைப்பற்றி நான் உணர வேண்டுமென விரும்பினார். 

ஏராளமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி அவற்றிறையெல்லாம் வாசிக்கும்படி அள்ளித்தந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். அவருடன் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட அனுபவத்தை சுவைத்துச் சுவைத்து நினைவுப்படுத்துவார். அதனையொத்ததாய் ஐயா தெரிவு செய்து வைத்திருந்த இலக்கிய நண்பர்கள் சிலருடன்  KFC யில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட வேண்டுமென திட்டமிட்டார். அந்த திட்டமிடலில் எனது பங்களிப்பும் வெகுவாக இருந்தது. ஆனால் கடைசிவரை அந்த ஆசையை எங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமலேயே போனது.   

இப்படியே எங்களது நட்பு இலக்கியம் தொடர்பாகவும் சமயங்களில் இலக்கியம் தாண்டிய உள்ளன்புடனுமாய் விரிவடைந்தபடியே இருந்தது. தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  என் மூத்த இலக்கிய நண்பனை பார்க்கச்செல்வதில் எனக்கும் அலாதி விருப்பமிருந்தது. 

ஐயா ஓய்வுபெற எண்ணி மல்லிகை அலுவலகத்தை விட்டு வெளியேற ஆயத்தமாகிய கடைசி சில நாட்கள் துயர்மிகு நாட்களாக மாறின. அவரது மனநிலையை எனதாக்கி நான் துயருற்றேன். அதன் பிறகாய் எங்கள் சந்திப்பும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. கால ஓட்டத்துடன் ஓடத்தொடங்கிய நான் ஐயாவின் பிறந்ததினத்தன்று மாத்திரமே அவரை சந்திக்கச் செல்வதென்பதாய் சூழ்நிலை மாறத்தொடங்கியது. 

அப்படியான ஒரு பிறந்ததினத்திற்கு அவரை சந்திக்க மகனுடன் சென்றிருந்தேன். இன்னும் சில எழுத்தாளர்களும் அவரது வீட்டில் அமர்ந்திருந்தனர். ஐயாவின் தோற்றத்தில் பெரிய மாற்றம் தெரிந்தது. உள்ளம் குழைய அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன். 

‘நீ யார்’ என கேட்டபடி யோசிக்கத் தடுமாறினார். அவருக்கு என்னை கொஞ்சமும் நினைவில்லையென்பது அதிர்ச்சியாகவிருந்தது. பக்கத்திலிருந்த எழுத்தாளர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த நொடிகளை என்னால் ஏற்கவே முடியவில்லை. அழுகை பீறிட்டு வெடித்துவிடுமாப் போல் இருந்தது. என்னால் அதற்கு மேல் ஒரு நிமிடந்தானும் அங்கே நிற்க இயலவில்லை. ஞாபகத்திற்காக ஐயாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். 

அதுவே எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக அமைந்தது. 

டொமினிக் ஜீவா எனும் பெரும் ஆளுமைக்குள் ஒரு மெல்லிய பூவையொத்த சினேகிதன் மறைந்திருந்தமை பற்றி பெரிதாய் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதனை பகிர்ந்துக்கொள்ள விரும்பினேன்.  அந்த மிடுக்கு, கம்பீரம். திமிர், தூய்மையான நேசம் எல்லாம் கலந்த என் மூத்த நண்பனை நினைவுகளில் எப்போதுமாய் வைத்திருக்க எனையொத்தவர்களால் நிச்சயமாய் முடியுமெனவும் நம்புகிறேன். 

நன்றி. 

நெடுவாழ்வின் எழுதித்தீரா நினைவு: டொமினிக் ஜீவா

Wednesday, July 15, 2020

அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமீளா பிரதீபனின் இரண்டு கதைகள் | அ.ராமசாமி

By On July 15, 2020
இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்- மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமீளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக்கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள். இந்தக் கூற்றுகளை இப்போது   அடுத்தடுத்து வந்துள்ள இரண்டு கதைகளும் உறுதி செய்கின்றன. இரண்டு கதைகளில் முதல் கதை,   நடு இணைய இதழில் (இதழ் 21, ஆனி-2020)   விரும்பித்தொலையுமொரு காடு என்ற தலைப்பில் பதிவேற்றம் பெற்றுள்ளது. இரண்டாவது கதை,  யாவரும். காம்  இணைய இதழில் ( 16-06-2020) ஜில் பிராட்லி என்ற தலைப்பில் பதிவேற்றம் கண்டுள்ளது.

இரண்டு கதைகளுமே பெண்மையக் கதைகளே என்றாலும் பெண்களை நிறுத்திக்காட்டும் அல்லது உலவவிடும் குடும்பம் அல்லது பணியிட வெளிகளில் நிறுத்தாமல் அவர்களின் அகவெளி நினைவுகளை எழுதிக்காட்டும் கதைகளாகத் தந்துள்ளதின் மூலம் கதைகளை வாசிக்கத் தூண்டுகிறார்.  நடுவில் வந்துள்ள விரும்பித்தொலையுமொரு காடு என்ற கதைத் தலைப்பே, ‘ விரும்பி ஏற்குமொரு குடும்பத்தலைவி’ என்ற பாத்திரத்தை ஒதுக்கிவிட்டு, அதன் கட்டுகளையும், நெருக்கடிகளையும், சுமைகளையும் தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் தராத காட்டுக்குள் அலைய நினைக்கும் மனதின் நினைவுகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது. அந்தக் கதை,  
யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்து விட்டுப்  போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரமேதான். முடிந்தால் நேரமொதுக்கி என்னிடம் கேளுங்கள் தயக்கமின்றிச் சொல்கிறேன். இதுவொரு வரலாற்றுத் திருப்பம் என்று… ஒட்டுமொத்த கற்பனைகளதும் நம்பமுடியா சாத்தியபாடென்று… அன்றேல் வேறொரு விதத்தில் கூறமுனையின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெறும் அமையச்செலவென்று… ஆம். அப்படிச் சொல்வதில் நிச்சயமாய் தவறேதும் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். மிகச்சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்வதற்காய் சிறந்த ஒன்றை இழக்க நேரிடின் அது அமையச்செலவு தானே! 
எனத்தொடங்கி,
வேறென்ன செய்துவிட முடியும்? யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரம் தானே!

என முடிகிறது. கதைத்தொடக்கத்தையும் முடிவையும் கேள்விகளாகவும் விசாரணைகளாகவும் வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கதை, ஒரு பெண் தன்னைச்  சுற்றிச் நடக்கும் ஒவ்வொன்றையும் அசைபோட்டுக்கொண்டிருப்பதையும் அதற்கிணையாக அவளது மனத்திற்குள் தொலைய விரும்பும் காட்டின் பரப்பைப் பற்றிய கனவுகளையும் அடுத்தடுத்து வைத்தபடியே நகர்கிறது. நனவும் கனவுமான எண்ண ஓட்டங்களுக்கேற்ப மொழியை – சொல்லுருக்களைக் கோர்த்து அமைக்கும் முறையின் வழியாக முழுமையும் நினைவோட்டத்தை வாசிக்கும் உணர்வை உருவாக்கியுள்ளது.  
வழமை போலான என் மௌனத்தையும் சொற்களற்ற சம்மதத்தையும்  சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தக்கட்ட வேலைகளை அம்மா ஆரம்பித்தாள். தன் மிகப்பெரிய கடமை முடிந்ததாய் என் திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தாள்.
என்று நடப்பை – குடும்பத்தினர் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளைப் பற்றிய குறிப்புகளைத் தரும் அதே வேளையில், அப்பொறுப்புகளின் மீதான விமரிசனப்பார்வையாகவும் அவளது எண்ணங்கள் , 
‘உன் சிறகுகளை துண்டிக்கும் சடங்குகளேதும் உன் வம்சத்தில் இல்லையா என்ன..? ஓ…! நீ பெண்தானென்று எங்ஙனம் நானறிவேன்? திக்குத்தெரியாமல் பறந்து திரியும் நீ பெண்ணாய் இருந்திட வாய்ப்பில்லைதான். போ போ எங்காவது போய்த்தொலை’
எனத் தூண்டுகின்றன.மனிதர்களின் அதிலும் குறிப்பாகப் பெண்களின் விருப்பத்தைத் தாண்டி அமையும் குடும்ப வாழ்க்கையும் உறவுகளும் உருவாக்கும் தளைகளும் சுமைகளும் உதற முடியாதவையாகத் தொடரும் பண்பாடு கீழ்த்திசைப் பண்பாடு. அதற்குள் குடும்ப வெளியைத் தள்ளிவைத்துவிட்டுக் காட்டுக்குள் அலையும் துறவு நிலையோ, அல்லது விடுதலைக் கனவோ நடப்பில் சாத்தியங்கள் இல்லாதவை.
இந்த நினைவுகளெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனங்களாய் இருந்துவிடுவதற்கான  வாய்ப்புகளும்  இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கனவிற்கும் நனவிற்கும் இடைபட்டதான ஒரு திண்மத்தை ஸ்பரிசித்தலோ அல்லது அவதானித்துணர்தலோ சாத்தியமில்லையாக இருக்கும் போது அவ்வுலகம் வெறுமனே கற்பனையினாலானது என்று விலகுதலும் சுலபமாயிருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதன்; உறுதி நம்பும்படியாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவுமே இருக்கின்றது. மனித குரலோசைகள் பரிகாசங்களும், ஏவல்களும் நிரம்பியதாய் அவ்வப்போது ஒலித்து மறைகின்றன. ஏலவே காட்டுக்குள் தொலைந்து போனவர்களது பிரகாசமான பிம்பங்கள் தூரத்தில் காட்சிகளாக தெரிகின்றன. அவர்கள் மிக பூரிப்புடன் உலா வருவதை போலான வெளிப்படுத்தல்களையும் காணகிடைக்கின்றன.
கதையின் முழுப்போக்குமே சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும் உறவுகளையும் துறந்து விடுபடுதலை நினைத்து அலையும் மனதின் ஏக்கங்களையே பேசுகின்றது. அதற்கான சொல்முறையாக மனவோட்டச் சொல்முறையைத் தேர்வுசெய்து அதன் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதனாலே பிரமீளா பிரதீபனின் இந்தக் கதை கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கதையாக மாறுகிறது. சமகாலப் பெண் புனைவுகளில் இவ்வகைக் கதை  அரிதான அரிதான ஒன்று
******* 
இக்கதைக்கு மாறாக நேர்நிலைத் தன்மைகொண்ட உரையாடலைச் சொல்முறையாகக் கொண்ட கதை ஜில் பிராட்லி. யாவரும்.காம் இணைய இதழில் வந்துள்ள இந்தக் கதை சிங்களப்பெண் x தமிழ் ஆண் என்ற எதிர்நிலைக்குள் நுழைவதன் மூலம் இலங்கையின் இனமுரண்பாட்டை விவாதப்பொருளாக்கிக் கொள்கிறது.  அதிகாரத்தைத் தக்கவைக்க நினைக்கும் சிங்கள அரசதிகாரமும், புதிய அதிகாரத்தை உருவாக்க நினைக்கும் தமிழ் விடுதலைப்போராட்ட அணிகளுக்கும் இடையே இவ்விடைவெளியைக் குறைக்கும் வகையறியாது தவிக்கும் சாதாரண மனிதர்களும் இலங்கையின் மக்கள் தொகைக்குள் இருக்கிறார்கள் எனச் சொல்லும் - கருத்தோட்டம் கொண்ட கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்தக்கதை  அவை போலுமல்லாமல்  நுட்பமான கலைசார்ந்த மனிதர்களின் நட்பையும் ஈர்ப்பையும் செய்வதறியாது தவிக்கும் தவிப்பையும் புனைவாக்கியிருக்கிறது.

நவீனத் தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கும் சமூக ஊடகமான முகநூல் வழியாக நண்பர்களாகி, தங்களின் அந்தரங்க எண்ணங்களையும் ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஜில் பிராட்லியும் அவளது புதிய நண்பன் சிவநேசனும் மட்டுமே பாத்திரங்கள். அவர்களும்கூட ஆறாம் திணையான அரூபவெளிப்பாத்திரங்களே. இணையவெளியில் வாழும் இவ்விரு பாத்திரங்களும் நடத்தும் உரையாடல்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் விவாதங்களும் தனிமனிதர்களின் விருப்பங்களைக் கவனத்திலேயே எடுத்துக் கொள்ளாத குரூரமான இனவாத மனநிலையைக் கடுமையான விமரிசனப் பொருளாக்கியிருக்கின்றன. சர்ரியலிச ஓவியங்களையும் ஓவியர்களையும் ஆராதிக்கும் – ஆதர்சமாகக் கொண்டிருக்கும் - அனோமா முணவீர என்ற சொந்தப்பெயர்கொண்ட ஜில் பிராட்லி சிவநேசனோடு அந்தரங்கமாகவும் அரசியல் ரீதியாகவும் கலை இலக்கியம் தொடர்பாகவும் நடத்தும் உரையாடல்கள் கணதியானவை. இக்கணதியான உரையாடல்கள் ஒருவிதத்தில் அவளது தற்கொலை முடிவைத் தள்ளிப்போட நினைத்து மேற்கொள்ளும் உரையாடல்களாகவே நகர்கின்றன.

எதையும் விவாதிக்கும் வாய்ப்புகளை வழங்காத சூழலில்  கலைஞன் – கலை- காதல் போன்ற சொற்கள் உருவாக்கும் அபத்தநிலைகளை முன்வைக்கும் ஜில் பிராட்லியின் சொற்களும், அவள் எடுக்கப்போகும் முடிவும் வாழ்க்கையின் குரூரக் கணங்கள். ஜில் பிராட்லி தன்னைத் தனது முன்னாள் காதலன் விபாகரனின்   பிரதிபிம்பமாக நினைக்கிறாள் என்பதை உணர்ந்துகொண்ட சிவனேசன்,   
‘விபாகரன் வந்தால் ஏன் அவனோடு வாழ முடியாது?’ என்று கேட்டான்.
‘மிக நீண்ட நாட்களாக என் ஓவியங்களுடனும் விபாகரனின் மாய பிம்பத்துடனும் வாழ்ந்து பழகி விட்டேன். அடுத்து வரபோகிறதென தோன்றும் ஒரு திடீர் மாற்றத்தை… அல்லது ஒரு நிஜத்தை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிவநேசன். அது உனக்கு புரியாது விடு’ என்றாள்.
என்று முடிக்கிறாள். அப்படி முடித்த ஜில் பிராட்லி என்ன முடிவெடுப்பாள் என்ற பதற்றத்தோடு கதை நிறைவடைகிறது. கதையின் முடிவுப்பகுதியை இப்படி எழுதுகிறார் பிரமிளா.
‘யாருமில்லாத ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளுதல் என்பதும் தன்னை தனக்கே தெரியாமல் ஒருவன் சுட்டுக் கொள்ளுதல் என்பதுவும் ஆச்சரியம் தானே தவிர அவ்வாறானதொரு அனுபவத்தை பெற்றிட என்னிடமும் துப்பாக்கி இல்லையே’ என்றாள். மேலும் ‘துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தை தர முடியுமா என்ன’ எனச்சொல்லி சத்தமாய் சிரித்தாள்.
சிவநேசனுக்கு மனது படபடத்தது. இதயம் பலமடங்கு வேகமாய் துடிப்பது போலிருந்தது. பதறியெழும்பி தொலைபேசியை தேடியெடுத்தான். அவளது இலக்கத்தை வேகமாய் அழுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவனது கைகள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தன.
இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவுதான் சரியாக இருக்கும் என்ற தேர்வே பிரமிளா பிரதீபனின் எழுத்தைக் கவனமான எழுத்தாகக் கணிக்கச் சொல்கிறது. இந்த முடிவை நோக்கி நகர்த்தும் உரையாடலில் அதிர்ச்சியான கேள்விகளையெல்லாம் கேட்டுச் சிவநேசனைத் திகைக்கச்செய்யும் ஜில் பிராட்லி பாத்திரம் இலங்கைச் சமூகத்தில் வாழும் சமகாலப்பொருத்தமில்லாத பெண்ணாக அவளை முன்வைக்கிறது. அது ஒருவித த்தில் நவீனத்துவ -சிதறுண்ட ஆளுமையின் பிரதிபிம்பம் என்றுகூடச் சொல்லலாம். அவர்களிடையே நடக்கும் இந்த உரையாடலை மட்டும் வாசித்துப் பார்க்கலாம்:
தான் ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநலவிடுதியில் தீவிர நோயாளியாக சேர்க்கப்பபட்டிருப்பேன் என்று பிரைடா காலோ தன்னுடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறாளாம். சொல்லப்போனால் நானும் அவளையொத்தவள்தான் என்று ஜில் ப்ராட்லி பெருமை வழிய பலதடவைகள் அந்த ஓவியருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வாள்.
‘என்னுடைய படங்களை நீ இரசித்ததே இல்லையா?’
அவன் சிறிது தயங்கி பின் மெதுவாக கூறினான். ‘உன் கண்களையும் உதடுகளையும் இரசித்திருக்கிறேன்’
அப்படி அவன் கூறும்போது அவளை பார்க்கத் துணிவற்று தலையை திருப்பிக் கொண்டான்.
அவள் இப்போது, தான் கனவிலும் நினைக்காத ஒரு அடியை எடுத்து வைப்பதில் தனக்கு திறமை உள்ளதென நம்பியவளாய் அதீத பீடிகையற்று சடாரென்று கேட்டாள்.
‘என்னை முழு நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’
நாட்டில் நிலவும் அரசியல் சூழலில் – அறிவும் சிந்தனையும் வேலைசெய்ய வாய்ப்பளிக்காத இனமோதலை வளர்க்கும் உறவினர்கள்  நிரம்பிய சூழலில் சிதைவுண்ட மனுசியை – குறிப்பாகக் கலையின் சாத்தியங்களை நம்பிய மனுசியின் தோல்வியை எழுதிக்காட்டிய வகையில் பிரமிளாவின் ஜில் ப்ராட்லி மிகமிக முக்கியமான கதை என்று சொல்லத் தோன்றுகிறது.  இவ்விரு கதைகளுமே இணையவெளியில் இருக்கின்றன. வாசித்துப்பார்க்கலாம்.

நன்றி : "நடு" சஞ்சிகை யூலை - 2020

Tuesday, April 14, 2020

தொலைக்காட்சித் தொடர்களும் பெண்களும் - பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020

அனேக ஆண்களால் விமர்சிக்கப்படும் அல்லது வெறுத்து ஒதுக்கப்படும் தொலைக்காட்சி தொடர்களை பெண்கள் மட்டும் ஏன் விரும்பி பார்க்க வேண்டும்?  குறிப்பாக இல்லத்தரசிகள் என்ற வரையறையறைக்குட்பட்டவர்கள் மட்டும் ஏன் அதற்கு அடிமைகளாக மாறவேண்டும்…? இது சிந்திக்க வேண்டியதொரு கட்டாயமான கேள்வியொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

தொலைக்காட்சித் தொடர்களை இரசிக்கும் இவ்வுணர்வானது ஆகவும் அடிமட்ட இரசணையென்பதை போலான நகைச்சுவைகளையும் எள்ளல்களையும் உலாவ விடும் ஆண்களாலோ அல்லது அத்தகைய இரசணை உணர்வை வியாபாரமாக கொண்டிருப்பவர்களாலோ புரிந்துக்கொள்ள முடியாத பல்வேறு காரணங்கள் அந்த தொடர் நாடக அடிமைத்தனத்திற்குப் பின் தொக்கு நிற்கின்றதென்பதையே என்னால் ஊகிக்க முடிகிறது. 

பெண்களின் பகல்நேர தனிமையும் வெறுமையும் எத்தகைய கொடூரமிக்கதென்பதை வெறுமனே தூரநின்று பார்ப்பவர்களால் ஒருபோதும் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அந்த அவஸ்த்தையை அனுபவித்தவர்களால் கூட அதனை நினைத்துப் பார்த்துக்கொள்ள முடியுமேயன்றி வார்த்தைகளால் வெளிப்படுத்தி விடுதலென்பது சாத்தியமற்றதே. 

காலங்காலமாக பகல்நேர தனிமையை சாபமாகப் பெற்று வாழும் இல்லத்தரசிகள் தங்களது வெறுமை நிரம்பிய பொழுதுகளை கழிக்கும் உத்தியாக பழக்கப்படுத்திக்கொண்ட திண்ணை விளையாட்டுகள், கும்மி பாடல்கள், தையல் அலங்காரங்கள், வீட்டை மீண்டும் மீண்டுமாய் ஒழுங்குப்படுத்தும் வேலைகள், பழைய பொருட்களை சுத்தம் செய்தல் என்ற இவற்றையெல்லாம் தாண்டி அயல் பெண்களுடன் புறம்பேசும் பழக்கத்தையும் பழகியிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் புறம்பேசுதல் பெண்களுக்குரிய குணமென்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கும் காரணமாய் அமைந்திருக்கக்கூடும். 

எவ்வாறெனினும் இதன் தொடர்ச்சியாகவே தொலைக்காட்சி தொடர்கள் எனும் கலைவடிவத்துடனான ஒரு பொழுதுபோக்கு அம்சம் தங்கள் வீட்டுக்கதவை தட்டும் போது முதலில் தயங்கி… பிறகு அவ்வப்போது என்றாகி… பின் அதுவே வாழ்வென்றாகும் அளவிற்கு பெண்கள் அடிமையாகிப் போயுள்ளார்கள் எனலாம். 

சொல்லப்போனால் வெளித்தெரியா பூதமாய் உருவெடுத்து நின்ற பெண்களின் வெறுமை உணர்வை இந்த வியாபார உலகம் அவர்களுக்குத் தெரியாமலேயே மிகத்தந்திரமாய் தமக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. என்னதான் கற்றிருந்தாலும், தங்களது நேரம் பயனற்று கழிகிறது என்று தெரிந்திருந்தாலும் நாடகங்கள் மீதான ஈர்ப்பை பெண்களால் கைவிட முடியாததற்கு பின்வருவரும் காரணங்களும் ஏதுவாகியிருக்குமென்றே எண்ணிக்கொள்ள முடிகிறது. 

1. வாழ்வின் அடுத்த நொடியை சுவாரசியமாக்;கும் குறைந்தபட்ச எல்லையாக தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை திருமணம், குழந்தை, வீடு, சமையல், கணவனுக்கான கடமைகள்;, குழந்தைகளின் கல்வி என்ற சுழற்சியில் ஏதோ ஒரு நொடியில் தாங்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதாய் ஒவ்வொரு பெண்ணுமே உணரும் ஒரு தருணம் நிச்சயமாய் வந்திருக்க வேண்டும். அப்போதைய மனவெழுச்சிகளை அதாவது கோபத்தை… வெறுப்பை… அவநம்பிக்கையை… அல்லது வெற்றியென கருதிக்கொண்டிருக்கும் அப்பட்டமான சுய தோல்;வியினை மறக்கவோ அத்தகைய சிந்தனையை இல்லாதொழிக்கவோ பெண்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆயுதமாகவே இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன.  

தன்னிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும், வாழ்வின் செயற்பாடுகளுக்கான சுமுகமான மனநிலையை தக்கவைத்துக்கொள்ளவும், சுயத்தை மழுங்கடித்து மறைத்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான போதையை இந்த தொலைக்காட்சித்தொடர்கள் நிரம்பவே பெற்றக்கொடுக்க வசதி செய்கின்றன என்றே கூறலாம்.  

2. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சகித்துக்கொள்ளும் மனநிலையை தக்;கவைக்;க தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை அதிகளவான பெண்களது வாழ்க்கையானது தங்கள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறானதாகவே அமைந்து விடுகிறது. எனினும் தமது எதிர்பார்ப்பு இதுவல்ல என்பதனை மிகத்தாமதமாகியே உணரும் அவர்களது அடுத்தக்கட்ட நகர்வு கட்டாயமாய் புரட்சிகரமானதாக மட்டுமே இருக்கமுடியுமென்பதை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக அத்தகைய சகிப்புத்தன்மைகளுக்கான பக்குவத்துடனனேயே எமது கலாசாரமும் சம்பிரதாய பழக்கவழக்கங்களும் எம்மை கட்டியெழுப்பியுள்ளன. எனவே அத்தகையதான வாழ்வின் எதிர்பாரா வேதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்;ளவும் அத்தகைய எண்ணங்களை நிராகரித்து வாழ்வின் தொடர்ச்சியை கொண்டு செல்லவும் தமக்கிருக்கும் ஒரே ஆதாரமாக இந்த தொலைக்காட்சி நாடகங்கள் மீதான மோகத்தையே பெண்கள் இறுகப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் எனலாம். 

3. வியாபபார நோக்குடனான கதைக்கருவும் கதாபாத்திரங்களும் நிஜத்தில் நடைபெறாமல் போனதான, என்றாலும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானதாய் தோன்றும் பெண்களின் நனவிலி மன ஆசைகளைத் தூண்டும் வகையிலான பாத்திரப்படைப்புகளும், பழிவாங்கல்களும், கணவன் மனைவியின் காதலும்… கூடல் ஊடல்களுக்கிடையேயான தவிப்பையும் வெளிக்காட்டும் விதமான நாடகத் தொடர்களே அதிகளவில் விரும்பப்படுகின்றன. அதாவது கற்பனையிலான வாhழ்வொன்;றினை அனுபவிக்க வைக்கும் முயற்சியொன்றே வெகு சாதூரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கொப்ப நாடக ஈடுபாடுடைய ஒவ்வொரு பெண்ணுமே அதன் நாயகியாக தன்னை உருவகித்துக்கொண்டே தொடர்ச்சியாக அதனை பார்க்க விரும்புகிறாள் என்பதுவும் அவதானங்களினூடாக தெளிவாகின்றது.    

மொத்தத்தில் பெண்கள் தங்களிடமிருந்து தாமே தப்பித்துக் கொள்வதற்காக தெரிந்தே இத்தகையதொரு பழக்கத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள் எனும் வகையில் தப்பித்தல் எனும் எண்ணக்கருவில் இருந்து வெளியேறி அதனை எவ்வாறு நேர்மறையாக்குவது என்பதை சிந்தித்து இவ்வடிமைத்தனத்தின் விளைவாக ஏற்படக்கூடிய எதிர்கால பாதகமான விளைவுகளை தெளிவாக புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் தன்னம்பிக்கையை சிறந்த துணையாகக்கொண்டு வீண்விரயமாக்கப்படும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிட தங்களுக்கேயுரியதான சாதகமான விடயங்களை செய்யத் தொடங்குவதுடன், தொலைக்காட்சித் தொடர்களை வெறுமனே பொழுது போக்காக மட்டுமே பழக்கப்படுத்திக் கொள்ளல் அவரவரின் சுயவெற்றிக்கு வழிவகுக்கும் என்றே கூறலாம்.

இன்றிலிருந்தே ஆரம்பிக்கவும் செய்யலாம். 

நன்றி - தினகரன் - 12.04.2020