Enter your keyword

Friday, January 5, 2024

புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் 'அன்றலர்ந்த மலர்கள்' - பிரமிளா பிரதீபன்

By On January 05, 2024

இலக்கியத்தை வாசிப்பதும் அவற்றைப்பற்றி பேசுவதும் எழுதுவதும் தனித்துவமான கலை. எல்லோராலும் வாசிக்க இயல்வதென்பதே சாத்தியமற்றதாக இருக்கும் இக்கால சூழ்நிலையில்  வாசித்தவற்றை குறித்ததான கருத்துக்களை முன்வைப்பதும் படைப்பாளர் பற்றிய சகல விடயங்களையும் தேடித் தொகுத்து ஒரே பார்வையில் அவர்தம் மொத்த படைப்புலகம் சார்ந்ததுமான குறிப்புகளை நம்பகத்தன்மையுடன் களஞ்சியப்படுத்துவதும் மிகப்பெறுமதியான இலக்கியப்பணியெனவே சொல்லலாம்.


'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூலினூடாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அப்பணியினை நேர்த்தியாக செய்திருக்கிறார். 


என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் போது அப்படைப்பாளி தொடர்பான சகல விடயங்களையும் தொகுத்துத் தருதலென்பது மிகநிதானமாக செய்யப்படவேண்டியதொன்று. தேடலும் பொறுமையும் நிரம்பப் பெற்ற ஒருவருக்கே இது சாத்தியமாகிறது. 


படைப்பாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஒரு சிறந்த புனைகதையாளர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து பத்தியெழுத்து தொகுப்புகள் மேலும் சில தேர்ந்தெடுத்த தொகுதி நூல்களுக்கு சொந்தக்காரர். இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்.


இவரின் புதிய படைப்பான 'அன்றலர்ந்த மலர்கள்' எனும் நூல் மொத்தமாக இருபது சுய ஆய்வு கட்டுரைகளுடன்  2023ம் ஆண்டில் கார்த்திகை மாதம் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளமை படைப்பாளரது தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கு ஒரு சான்றாக அமைகிறது. 

இந்நூலின் கட்டுரைகளைப் பொருத்தவரை  ஏழு வகையான இலக்கிய வகைகளை தெரிந்து தனது உற்றுநோக்கல்களை விரிவாக்கம் செய்ய முனைந்திருக்கிறார். ஒரு நாவல், ஒரு நலவியல் இலக்கியம், மூன்று சிறுவர் இலக்கியங்கள், ஐந்து பத்தியெழுத்து அல்லது ஆய்வுரை தொகுப்புகள், ஒரு காலாண்டிதழ் எட்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு நாட்குறிப்பு என மொத்தமாக இருபது படைப்புகள் மீதான அல்லது இருபது படைப்பாளர்கள் மீதான பார்வையினை தொகுப்பாக தந்திருக்கிறார். 


தன்னுடைய கட்டுரைகளில் உள்ளடக்கம் பெற்ற பல்வேறு புனைவு அபுனைவு வடிவங்கள் தொடர்பான தனது ஆய்வு தொடர்பாக அவர் குறிப்பிடுவதாவது.... 


'படைப்பாளர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இங்கு பிரதானமாகிறது. இம்முயற்சியானது மறைமுகமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பு மிக்கதொரு பணியினையும் செய்யத் தலைப்படுகிறது என அறிய வரும் போது உண்மையில் மனது குதூகலிக்கவே செய்கிறது'


இவ்வாறு இன்றைய சமகால படைப்பாளர்களின் அவசியமான தேவையை நிறைவு செய்யத்துணிந்த இந்த நூல் தொடர்பாக ஆராயும் போதில் பிரதானமாக 03 நிலைகளுக்கூடாக குறிப்பிட்ட கட்டுரைகளை அணுக முடியுமாயிருக்கிறது.


01) இந்நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகள்.

02) நூலின் சமகால முக்கியத்துவம் 

03) எழுத்தினூடாக வெளிப்படும் நூலாசிரியர்


எனவே முதலாவது விடயமான நூலின் கட்டுரைகளானது பின்பற்றியிருக்கக்கூடிய ஆய்வுமுறைகள்  அல்லது அணுகுமுறைகளைப் பார்த்தால், நானறிந்த வகையில் திறனாய்வு முறைகள் பண்டையகாலந்தொட்டு  இன்றுவரையாக பல்வேறு மாற்றங்களையும் காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாற்றங்களை தேவைக்கேற்ப தன்னைத் தழுவிக்கொள்கிறது எனச்சொல்ல முடியும்.  


குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் நவீனத்துவம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கருத்தியலை அடிப்படையாக கொண்டே அநேகமாக திறனாய்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. 


ஆனால் நான் இந்த நூலை பார்த்த விதமானது இந்நூலாசிரியர் தனது மனப்பதிவுமுறை திறனாய்வினை மேற்கொள்ளுதலினூடாக தனது அனுபவத்தினதும் அறிவினதும் அகலப்படுத்தலை மையமாகக்கொண்டு பயன்படுத்தியிருக்கக்கூடிய அணுகுமுறைகள் தொடர்பான தெளிவினையே தருகிறது.   


மனப்பதிவுமுறை என்றால் அதற்குள் உள்ளடங்கக்கூடிய பொதுவான அணுகுமுறைகளாக வகைப்பாட்டு அணுகுமுறை, அழகியல் அணுகுமுறை, மதிப்பீட்டு  அணுகுமுறை, வரலாற்று  அணுகுமுறை, விளக்கநிலை  அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பாராட்டும்  அணுகுமுறை, விதிமுறை  அணுகுமுறை என்பவற்றை குறிப்பிட முடியும். இவற்றுள் குறிப்பிட்ட இந்த நூலினூடாக ஒருசில அணுகுமுறைகளை தெளிவாக இனங்காண முடிகிறது. 


வகைப்பாட்டு அணுகுமுறை:

பல்வேறு இலக்கிய வகைகளைப் பற்றிய ஆய்வுமுறை வகைப்பாட்டு அணுகுமுறையாக கருதப்படலாம். ஏலவே நான் குறிப்பிட்டது போல தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' எனும் நாவல், எம்.கே.முருகானந்தனின் 'டாக்குத்தரின் தொணதொணப்பு' எனும் நலவியல் இலக்கியம், கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள், எஸ். பேராசிரியரின் 'மாசுறும் பூமி' எனும் பத்தியெழுத்து, 'எங்கட புத்தகங்கள்' எனும் காலாண்டிதழ், ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ், இ.இராஜேஸ்கண்ணனின் இரு பனுவல்கள், வைத்தியர் தி.ஞானசேகரனின் ;யாவரும் கேளீர்' எனும் பத்தியெழுத்து, இரகுவரனின் 'தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் வம்சம்' எனம் ஆய்வு நூல், வண செபமாலை அன்புராசா அடிகளாரின் 'அண்ணன் ஆமையும் தம்பி முயலும்' சிறுவர் இலக்கியம், தாட்சாயணி, பிரமிளா பிரதீபன், ஆசி கந்தராஜா மண்டூர் அசோகா, சிறீறங்கன், பாலரஞ்சனி ஜெயபால், சிவசோதி ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகள், பஞ்சகல்யாணியின் 'கதைமரம்' எனும் சிறுவர்கதைகள், அஜந்தகுமாரின் 'நாட்குறிப்புகள்' என பல வகையான இலக்கியங்கள்  உள்ளடக்கம் பெற்றிருக்கின்றமை இந்நூலின் விசேட அம்சமாகிறது. மேலும் ஒவ்வொரு இலக்கிய வகையும் குறிப்பிட்ட நூலின் படைப்பாளரது ஆளுமையை தனித்தனியாக மதிப்பீடு செய்யும் நோக்கிலான வகையில் ஆராயப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.   


அழகியல் அணுகுமுறை:

அதாவது இலக்கண விதிமுறைகளை கருத்திற்கொள்ளாது படைப்பின் அழகியலுக்கூடாக படைப்பினை பிரித்து மதிப்பீடு செய்வது தான் இவ்வணுகுமுறையின் அம்சம். இவ்வணுகுமுறைக்குள் நூலாசிரியர் தன்னுடைய ஆளுமையை அதிகமாகவே காட்டியிருக்கிறார். அவர் ஒரு புனைவெழுத்தாளன் எனும் வகையில் அழகியல் பற்றியதான தேடலையும் பார்வையையும் பயன்படுத்தி ஏராளமான நியாயப்படுத்தல்களை செய்திருக்கிறார். 


பிரதானமாக ஒவ்வொரு கட்டுரையையும் சில அழகியல்சார் அடையாள வார்த்தைக்குள் உள்ளடக்கிய வித் நூலாசிரியரின் அழகியல் உணர்விற்கு சான்றாகிறது எனலாம். உதாரணமாக கட்டுரைகளின் தலைப்பென்பதாய்... 'பத்தி எழுத்தில் ஒரு புதிய பாய்ச்சல் பாரீர்'  தீட்சணமாக ஒலித்திருக்கும் தாட்சாயணியின் ஒன்பதாவது குரல், இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள், வடமராட்சியின் வனப்பான வாழ்வியலிற்கு திடசாட்சியாய் திகழுமொரு கதைத்தொகுதி சிவசோதியின் உறவுகள் சேர்ந்து'  போன்றதாய்  கட்டுரைத் தலைப்புகளில் தனது கற்பனைத்திறனை புகுத்திப் பார்த்திருக்கிறார்.


மேலும் புனைவு நூல்கள் தொடர்பாக தனது பார்வையினை விரிவு படுத்தும் போது தன்னுடைய பிரமாதமான மொழிநடையைக் கொண்டு தான் பேசும் புனைவெழுத்தின் அழகியல் பற்றி  எடுத்துரைத்திருக்கும் முறைமையானது சிறப்பான அவதானத்தை பெறுகிறது. 


மா.சிவசோதியின் சிறுகதைத் தொகுதிப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்.  'போர்காலத்திலும் அல்லது அதன் பின்பும் நிர்க்கதியாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் எதிர்காலம் இப்படியாகத்தான் அமையப் போகிறதோ என்ற ஒரு பதகளிப்பினை ஏற்படுத்தும் இச்சிறுகதை, இத்தொகுதிக் கதைகளுள் மிக்க கவனிப்பிற்குரியதொன்றாகிறது....'  


மேலும் 

'தோட்டத்தில் விளையும் கீரை, அதைக் கொண்டு வருவதற்காக தனது திருக்கல் வண்டியை எடுத்து வார்களுக்கிடையில் காலைவிட்டு கெந்திகெந்தி உழக்கிச் செல்லும் சிறுவன், தோட்டகாரர் கீரையை பிடுங்கி பைக்குள் திணிக்கும் இலாவகம், அந்த துலாப்பட்டையை எடுத்து கட்டையில் போடும் விதம் எல்லாமே.... அந்த வடமராட்சியின் தோட்டச் சூழலிற்கே வாசகனை அழைத்துச் சென்று விடுகிறது' 


இவ்வாறான தனது விபரிப்புகளின் துல்லியத்தால் பேசவந்த படைப்பின் அழகியலை சிறப்பித்துக் காட்டும் முறைமை  கவனம் பெறுகிறது.


மதிப்பீட்டு அணுகுமுறை அல்லது ஒப்பீட்டு அணுகுமுறை:

ஒரு குறிப்பிட்டப் படைப்பிலக்கியத்தின் தரத்தையும் தகுதிபாடுகளையும் பலவகை இலக்கியங்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஒரு தீர்மானத்தினை படைப்பின் மீது செலுத்தும் வகையிலான அணுமுறையென இதனை கூறலாம். அந்த வகையில் நூலாசிரியர் இம்முறையினை  செய்யாமல் செய்திருக்கிறார் அல்லது தவிர்த்திருக்கிறார்.  


இனிப்பாய் நயப்புறும் அஜந்தகுமாரின் நாட்குறிப்புகள் எனும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 


'அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சொல்லும் கதைகள் இன்னும் கனதி பெற வேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டு நிற்பதாக நூலின் முன்னுரையில் நூலாசிரியரின் மற்றுமோர் ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவருமான எழுத்தாளர் இராஜேஸ்கண்ணன் அழுத்தி உரைத்திருப்பதை அஜந்தகுமார் கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அவரின் இத்தகு எழுத்துகள் இலக்கிய உலகில் நிச்சயம் கனதியான சுவட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என மிகத் தாராளமாகவே கூறலாம்' 


'சமூகச் செய்திகளை சீரோடு சித்தரித்திருக்கும் சிறீறங்கனின் 'சிவப்புக்கோடு' எனும் கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது: 

'ஆனாலும் ஈழத்து நவீன புனைகதை பற்றிய பரிச்சயமும், துறைசார்ந்த வீச்சும் சிறீறங்கனிடம் மேலும் வேண்டப்படுவதையும் தொகுதி உணர்த்த தவறவில்லை. மிகச்சிறந்த சமூக அவதானிப்பினூடும் தேர்ந்தெடுத்த ஒரு மொழிநடையினூடும் சிறீறங்கன் எதிர்காலத்தில் சிறுகதையுலகத்தில் பயணிப்பாராயின் இவரது முன்னைய தலைமுறையில் கோலோச்சி நிற்கும் வதிரி இ.இராஜேஸ்கண்ணன், தாட்சாயணி போன்றோருடன் இவர் பொருந்தத்தக்க ஒருவராக வல்லர் என்பதனையே சிவப்புக்கோடு எனும் நூல் உணர்த்தி நிற்கிறது எனலாம்'  


அதாவது குறிப்பிட்ட படைப்பாளர் எந்த இடத்தில் தம்மை சரிசெய்து கொள்ள வேண்டும் எனும் மதிப்பீட்டை படைப்பாளரை புண்படுத்தா வண்ணம் வெளிப்படுத்த எண்ணியிருக்கிறார் எனத்தோன்றுகிறது. எனினும் நூலாசிரியர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்கள் அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி எனும் வகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வலியுறுத்தி சில விமர்சனங்களை கூற முற்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட படைப்பாளர் அதனை ஏற்றிருப்பார் என தாராளமாக எண்ண முடிகிறது. காரணம் எதிர்மறையான விடயங்களை மிக இலாவகமாக சொல்லத்தெரிந்த மொழிப்பக்குவத்தை கொண்டிருக்கக்கூடியவர்களால் மேலும் பல அசாத்தியங்களை இலகுவாக நிகழ்த்த முடியும். அத்தகைய விமர்சனங்களின் தேவைபாடு அதிகரித்திருக்கிறது என்பதுடன் புதிய படைப்பாளர்களின் ஆளுமையுடனான அடுத்தக்கட்ட நகர்விற்கு மதீப்பீட்டு ரீதியான அணுகுமுறையே பேருதவியாக அமையுமென்பது என்னுடைய கணிப்பு.       


அடுத்ததாக இந்த நூலின் சமகால முக்கியத்துவம் பற்றியதான தேடலில் மிக முக்கியமாக விமர்சனத்துறையின் காலத்தேவை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.  திறனாய்வுத்துறைக்கான பங்களிப்புகளை வழங்குவோர் குறித்து தேடுகையில் மிக சில பெயர்களே நினைவிற்கு வருகின்றன. குறிப்பாக விமர்சகர் S.ரமேஸ், இ.சு முரளிதரன், செல்வ மனோகரன், இ.இராஜேஸ்கண்ணன், புலோலியூர் வேல்நந்தன், குணேஸ்வரன், ஜிப்ரிஹாசன், சப்னாஸ் ஹாசிம் போன்றோரையும் பெண் விமர்சகர்கள் வரிசையில் திருமதி வசந்தி தயாபரன், எம்.தேவகௌரி, திருமதி ரஞ்சனி சுப்ரமணியம் போன்றோரையும் நினைவுபடுத்த முடிகிறது. எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் நூல் விமர்சனத்தைத்தாண்டி வாசிப்பனுபவம் எனும் வகையில்  அனேகமானோர் வெறும் அழகியல் திறனாய்வாக மாத்திரம் தமது ஆய்வை வளர்த்து செல்கின்ற போக்கும் இன்றைய காலகட்டத்தில்  அதிகரித்துள்ளபடியால் இந்நூலின் காலத்தேவைப்பற்றி  வெகுவாக உணரக்கூடிய சூழ்நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம்.  


பல்வேறு வகை இலக்கியங்களின் தொகுப்பை ஒரே பார்வைக்குட்படுத்தி குறிப்பிட்ட படைப்பாளரது சகல படைப்பனுபவங்களையும் களஞ்சியப்படுத்தல் முதற்கொண்டு படைப்பாளர்களை ஊக்குவித்தல், புதிய படைப்பாளர்களுக்கு சரியான வழியினை அமைத்து கொடுத்தல், மேலும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் தனது கட்டுரைகளை பிரசுரிப்பதனூடாக புதிய படைப்பாளர்களுக்கு பெறுமதியான களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் காலத்தேவை மிகவும் இன்றியமையாததாகும். 


மேலும் எழுத்தினூடான படைப்பாளரின் வெளிப்பாடு என்ற வகையில், எழுத்தாளர் தனது படைப்பூடாக ஏற்படுத்த துணியும் சமூக விளைவையும் படைப்பின் சமூக பெறுமானத்தையுமே ஆராய விரும்புகிறேன். அதாவது கல்வி புலத்தில் கற்றலில் அதீத மேம்பாட்டை செய்யும்  மறைகலைத்திட்டத்தைப் போல வெளித்தெரியாத எத்தனையோ சமூக பெறுமானங்களை கொண்டதாய்  இவரது சுய ஆய்வுக்கட்டுரைகள் தொக்கியிருக்கின்றன. 

குறிப்பாக அக ஊக்கல் தேவையான படைப்பாளரை இனங்கண்டு அவர்களின் தேவையை தீர்ப்பதாய் சரியான சமயத்தில் வெளிவரும் கட்டுரைப்பிரசுரம்,  புதிய எழுத்தாளர்களின் சூழ்நிலையறியாமல் ஒரே கட்டுரையில் அவர்களின் தன்னம்பிக்கையை இல்லாதொழிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் முகப்புத்தக எழுத்து கலாசாரத்திற்கு மத்தியில் மிகுந்த பக்குவத்துடன் எதிர்மறைவிடயங்களை கையாளத்தெரிந்த மொழிப்பக்குவம், படைப்பாளர்களின் ஏனைய விபரங்களை தேடித்தொகுத்த நிதானம், நெறிப்படுத்துகை, படைப்பாளர்களை எழுத்தினூடாக தன்னம்பிக்கையூட்டும் திடம் இப்படி ஏராளாமான பண்புகளை சிதறவிட்ட பாங்கிகை உற்று அவதானிக்க முடிகிறது. 


ஆகவே தன் கட்டுரைகளில் நூலாசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் அதே வார்த்தைகளில் கூறினால்... இலக்கிய உலகின் கனதியான சுவடாகக்கூடிய ஒரு படைப்பினையே  நூலாசிரியர் ஆ.இரத்தினவேலோன் எங்களுக்கு தந்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

Monday, March 6, 2023

"விரும்பித்தொலையுமொரு காடு" (விமர்சனம்) - கருணாகரமூர்த்தி

By On March 06, 2023

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பதாக  முகநூல் நண்பரொருவர் தான் வாங்கிய நூல்கள் என்று ஒரு 10 நூல்களைப்  அருகருகே வைத்துப் படமெடுத்துப்போட்டிருந்தார். அதில்த்தான் முதன்முதலாக ‘விரும்பித்தொலையுமொரு காடு’ நூலினைப்பார்த்தேன். தலைப்பின் கவித்துவத்தையும், அட்டை ஓவியத்தின் காந்தியையும் பார்த்து அந் நூலையும் ஒரு கவிதை நூலென்றே நினைத்தேன். அப்போது ‘நடு’ ஆசிரியர் கோமகன் இலங்கையில் இருந்ததால் அவரை ‘விரும்பித்தொலையுமொரு காடு’ பிரதியொன்றை வாங்கிவரும்படி கேட்டிருந்தேன். அவருக்கும் அங்கு  அதன் பிரதி கிடைக்கவுமில்லை, அவர் திரும்ப பாரிஸ் வந்து சேராததும் தனிக்கதை. பிறகும் ஒரு மாதங்கழித்து  ‘விரும்பித்தொலையுமொரு காட்டை” கிழக்குப்பதிப்பகம் மூலமாக எடுப்பித்தேன்.

என் வழக்கப்படி தலைப்புக்குரிய கதையைத்தான் முதலில் வாசித்தேன். அக்கதையே இவர் ஒரு வித்தியாசமான கதைசொல்லியென எனக்குப் பிரமீளா பிரதீபனை அடையாளங்காட்டியது.

நடு, ஜீவநதிகளில் வாசிக்கக்கிடைத்த பிரமீளாவின் இரண்டொரு கதைகளைத்தவிர நினைவில் இருத்திக்கொள்ளும்படியாக எனக்கு வேறொரு படைப்பையும் படிக்க நேர்ந்ததில்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றைப்படைப்பவர்களின் பௌதீக அடையாளங்களைவைத்து ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று வகைபிரிப்பதில் எனக்கும்  உடன்பாடில்லை. ஆனால் தமிலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பைவைத்து அதை எழுதியவர் ஆணோ பெண்ணோவென வாசகன் ஊகித்துக் கண்டுபிடிக்கும்படியாகவே இன்னமும் அவை இருக்கின்றன. காரணம் பெண்கள் சித்தரிக்க எடுத்துக்கொள்ளும் கருக்கள், அவர்களது மொழி, சித்தரிக்கும் விதம் ஆகியவற்றில் ஒரு பொதுத்தன்மை உண்டு. இதை மறுப்பவர்களுடன் கம்புசுற்றும் எண்ணம் எனக்கில்லை, பிரமிளா இந்த வகைமையிலிருந்து விலகியிருப்பது ஒரு இனியஆச்சரியம். 

அவர் நிறையவே உள்மனயாத்திரை செய்பவராக இருக்கிறார். அவர் சித்தரிக்கும் உலகங்கள் நடப்பிலிருந்து வித்தியாசமானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் செவ்வீதமும் அகவுலகச் சித்தரிப்புகளாக உள்ளன. இன்னும் மயாயதார்த்தம், மிகுயதார்த்த வகைகளிலும் அவர் தன் படைப்புகளைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

என் பதின்மவயதுகளில் ஒரு நண்பர்மூலம் தியானம்பற்றி அறியவிழைந்தேன். எனக்கு அப்போது பத்மாசனத்தில் அமர்ந்திப்ருப்பதே வல்லையாக இருந்தது. பின் மூச்சுப்பயிற்சி. ஆழமான உள்மூச்சு அதை நெஞ்சுக்குள் உள்ளடக்கி நிதானமான வெளியேற்றுதல் என்று பலவிதமான பயிற்சிகள் தந்தார். ” உனக்கு ஓரளவுக்கு தியானம் கைகூடிச் சிந்தையை ஒடுக்கிக் குவிக்கமுடிந்தால் LED மாதிரி நெற்றிப்பொட்டில் சின்னதாக ஒரு ஒளிப்பொட்டுத்தெரியும். அந்த ஒளிப்பொட்டை உன்னால் நினைத்தவிடத்துக்கெல்லாம் நகர்த்திச்செல்லமுடியும், அதை அப்படியே முள்ளந்தண்டினூடாக இடுப்பின் கீழாக இறக்கி ’குண்டலினி’ எழுப்பலாம்” என்றெல்லாம் சொன்னார். மாதக்கணக்கில் முயன்றும் எனக்கொரு ஒளிப்பொட்டும் தோன்றவே இல்லை, தியானம் எனக்கான விஷயமல்ல என்று புரிந்ததும்  அதை அத்துடன் விட்டுவிட்டேன். 

இத்தொகுதியிலுள்ள ’அது புத்தனின் சிசுவல்ல’கதையிலிருந்து பிரமிளா நிறைய வாசித்திருக்கிறார் என்பதுவும் , தியானம், யோகம்,  குண்டலினி. என்றும் பயிற்சிகள்செய்யவோ குறைந்தது அவைபற்றி அறிந்துகொள்ள நிறையவே வினைக்கெட்டிருப்பாரென்றும் தெரிகிறது.

ஜெயகாந்தன் ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ என்றொரு கதையை எழுதியிருப்பார். அதில் வரும் இளம் சித்தாளு ஒருத்திக்கு வாத்தியாரென்றால் உயிர். அவளூர் டாக்கீஸுக்கு வாத்தியார் படம் வந்தால் பையன்களைப்போலப் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தது பத்துத்தடவைகளாவது பார்த்துத் தீர்த்துவிடுவாள். விளைவு நாளாகவாக அவளுக்குத் தன் கணவனுடனான உறவுவின்போதும் வாத்தியாரே வந்து தன்கூட முயங்குவதைப்போலக் கற்பிதஞ்செய்துகொண்டு மகிழ்கிறாள். இவ்வேளையில் எதிர்வீட்டுக்கு சென்னையில் ரிக்ஷா வலிக்கும் இளைஞனொருவன்  வாத்தியார் படம்போட்ட டி- ஷேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகிறான். சித்தாளுக்கு அவனது சுருள்சுருளான கிராப்புத்தலையும் தூக்கிக்கட்டிய லுங்கியினூடாக பாதி டிராயர்  தெரிவதும், அவன் ஸ்டைலாக பீடி வலிப்பது எல்லாமே அவனையுமொரு நவீனதோரணையுடனான வாத்தியாராக தோற்றங்காட்டவும் மனசை அடக்கமுடியாமல் அவன்மீதும் ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறாள். சித்தாளின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அவ்விளைஞனும்  ‘ நீ என்னோடு சென்னைக்கு வந்திடு, உன்னை நான் வாத்தியார்கிட்டயே கூட்டிப்போறேன்’ என்று பசப்பி அவளை மெல்ல சென்னைக்கு நகர்த்திப்போய் சீரழிக்க முயல்வதாக அக்கதை நகரும்.

’அது புத்தனின் சிசுவல்ல’ கதையில் வரும் மாயாவுக்கும்  கிட்டமுட்ட இப்படியான சிக்கலொன்று வருகிறது. மாயாவுக்கு அகிலன்மீது ஆசை. 

மாயா தனக்கு வழிகாட்டும் சன்மார்க்ககுருவென நம்பிக்கொண்டிருக்கும் குருஜிஜே  நீலமேகத்தை அவள் மணக்கவேண்டுமென்று நிர்பந்திக்கிறார்.          (அப்படி நிர்ப்பந்திபதற்கான காரணம் கதைக்குள் காணோம், இதைப் புதுமைப்பித்தன் வகையிலான பாய்ச்சலெனக்கொள்ளலாம்.) அவரது விருப்பத்தின்பேரில் மறுவார்த்தையின்றி மாயா நீலமேகத்தைத் திருமணஞ்செய்துகொண்டுவிடுகிறாள்.

சித்தாள் பட்டிக்காட்டுப்பெண் படிப்பில்லாதவள் சமூகம் கற்பிக்கும் வாழ்வியல் நியதிகளென்ற கற்பு, ஒழுக்கக்கோட்பாடுகள், பண்பாட்டுத் தடைகள்., நிஜமங்கள், எதுவும் அவளுக்கில்லை / அல்லது அறியாதவள். 

மாயாவுக்கு அப்படியல்ல. தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் நீலமேகம் இருக்கும்போதே அகிலன்வந்து மாயாவுடன் குலவச்செய்கிறான். அதுவே மாயாவின் வார்த்தைகளில் // ஒவ்வொரு புணர்ச்சியின்போதும் என அனுமதி இல்லாமலே அகிலன் எனக்குள்  வந்துபோகின்றான்.// அதுவே அவளுக்கொரு அகச்சிக்கலாகிறது. அவளுக்கான அச்சிக்கலை  கிரியாயோகத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் அலச விசாரஞ்செய்ய முயல்கிறார் பிரமிளா.

தியானத்தின் வழியில் இரண்டு ஆன்மாக்கள் சந்தோஷிப்பதுவும் குலவுவதும் சாத்தியந்தானாவெனக் குழம்புகிறாள் மாயா. இதை யாரிடம் கேட்பது?

ஒரு ஆண் ஒரு பெண்ணை மோகிக்கிறான் என்றால் அவனது ஒரு, பார்வை, ஒரு உடலசைவில் பெண்ணானவள் புரிந்துகொண்டுவிடுவாள். ஆதலின் குருஜியின் உள்நோக்கத்தை மாயா புரிந்துகொண்டிவிட்டிருப்பாள், ஆனால் அதை வாசகனும் புரியும் விதமான காட்சிப்படுத்தல் கதைக்குள் எதுவும் வரவில்லை.

புத்தனின் சிசுவல்ல மாயாவுக்கு ஒவ்வொரு . தியானத்தின் பிரம்மமூர்த்தப்பொழுதுகளில் / பேரின்பநிலைகளிலும்  அவளது முன்நாட்காதலன் அகிலன் வந்துவந்து குலவுவதை மாயா அவளது கணவன் நீலமேகத்துக்குச்செய்யும் துரோகமாக உணர்கிறாள். 

அகிலன்வந்து குலவுவது நிஜமேயெனில் குருஜியும் அதை அறிந்திருப்பாரே? அவ்வாறு அறிந்தால் அவர் அகிலனையும் தண்டித்து…….. என்னையுமொரு  புனிதங்கெட்டவள் எனச்  சபித்துவிடுவாரேயென்று  மாயா கலங்குகிறாள். 

அவளது அகச்சிக்கலைக்  குருவுக்கு விளக்கி அந்த இம்சையிலிருந்து விடுபடலாமென்று  அவ் யோகக்குருவிடம் ஆலோசனை கேட்கவந்தால் 

”இந்த மாசம் பௌர்ணமிதினம் பிரம்மமூர்த்தப்பொழுதின் தருணம் கருவுக்கான நேரமாயிருக்கலாம் மாயா” என்று  மாயாவைக்கூட விழைகிறார். 

குருவின் சந்நிதியில் புத்தனின் துறவு,  யசோதாவின் தனிமை புனிதவாழ்வெனும் சம்வாதம் நிகழ்ந்த ஒரு பொழுதில்  குருவிடமே அகிலன் விவகாரத்தை மாயா தெரிவித்துவிடவும் கடுஞ்சினமடையும் சன்மார்க்க  குருஜி அவளை

”இழிகுலத்து நாயே….. கண்டநாயோடெல்லாம் புணர்கிறேனென்று என்னிடமே சொல்லுகிறாயா” என்று பழித்துரைப்பதுவும், உன்கர்மாவென்று கர்மாவை அழுத்துவதும் முரண்நகைக்குரிய இடங்கள்.

மேற்படி கதையானது ஒரு குறுநாவலுக்கான வெளியைக்கொண்டிருந்தும் அதையொரு சிறுகதையாகவே திடுப்பென பிரமிளா முடித்துவிட்டார்.

‘நீலி’ கதையும் பாத்திரங்களும் உரையாடல்களும் கற்பனையினூடான படிமங்களாகவே நகர்த்தப்பட்டிருப்பதுவும் ஆண்பெண் ஆணவம்/ தன்முனைப்பு (Ego) விளைவாகவரும் உரசல்கள் அவற்றின் விளைவுகள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

ஒருமுறை மிகவும் படித்த ஒரு எழுத்தாளருடன் (பெண்) பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. “ எனக்குத் தலையை ’குறொப்’பண்ணிக்கொண்டு அல்லது விரித்துபோட்டுக்கொண்டு எப்போதும் கருப்பாக உடுத்திக்கொண்டுள்ள பெண்ணியவாதிகள் பேசும் எல்லாக் கருத்துக்களுடன் உடன்பாடில்லை. என்னைச்சரியாகப் புரிந்துகொண்ட என் கணவன் ’ஏன்டி என் ஷேர்ட்டின் பட்டனைத்தைத்துவைக்கல்லை” என்று அதிகாரம் பண்ணுவதைத்தான் நான் விரும்புகின்றேன்.” 

ஒருமுறை கிருபானந்தவாரியார் சொன்னதும்கூடவே ஞாபகம் வருகிறது,  “ நான்  பிம்பிளாஸை ஆலாபனை பண்ணப்போ அதை வயலின்காரர் ஆபேரின்னு புரிஞ்சிட்டு இழுத்திண்டுபோனால் நானும் ஆபேரிக்கே வந்துமேலே பாடறதில்லையா அதே மாதிரி பொம்பளை சொல்றதைக்கேட்கமாட்டேன்னு பிடிவாதமாயிராத,,,,,,,,, அவள் சொல்றது நியாயமாயிருந்தாக்க கேட்டிட்டுப்போ, வாழ்க்கையில உரசல்கள் இராது. மத்தவன் பொண்டாட்டித்தாசன்னு சொல்வானோங்கற சிந்தனை உனக்கு வேண்டாம், வாழ்க்கை நிம்மதியாய்ப்போகணும். அதுதான் முக்கியம்”

நீலி கதையில் பிரமீளா பிரதீபன் காட்டுற கோணம் வேறு மாதிரி.

//தன்னை ஒரு ஆடவன் அடக்கியாள்வதை வேண்டுமானால் ஒரு பெண் விரும்பாமலிருக்கலாம். ஆனால் தன்னை அவன் வியக்கும் ஆளுமையுடன் எதிர்கொள்ள வேண்டுமென விரும்புதல் அவளது மிக இயல்பான விருப்பமாகத்தான் இருக்கமுடியுமல்லவா?// 

இன்னும்  அகோரிணி யட்சி நீலியென்று அசுரபலம் வாய்ந்த பெண்களையெல்லாம் படிமங்களாகக் காட்சிப்படுத்துகிறார் பிரமிளா.

இக்கதையில் ஒரு இலட்சிய ஆணாக உருவகப்படுத்தப்படும் தேவனின் கூற்றாக // நீலி இது ஒருவகையில் அவரவர்க்கான கர்மாவின் பயன் என்பதுதானே உண்மை// என்றியம்புதல் பிரமீளாவுக்கும் கர்மாமீதான பிரமிப்பென்று கொள்ள இடந்தருகிறது. ஆனால் பின் நவீனத்துவம் நம்பிக்கைகளைப் படைப்புக்குள் அனுமதிப்பதில்லை.

தலைப்புக்குரிய கதை விரும்பித்தொலையுமொரு காடு ஒரு பெண்ணின் பார்வையில் அவர்கள் புகுந்துகொள்ளும் திருமணவாழ்வு எனும் அவத்தை (Phase) எப்படி அவர்கள் விரும்புவதுமாதிரி / எதிர்பார்த்தமாதிரி இல்லாமல்ப்போகிறது என்பதைப் படிமங்களூடாகச் சொல்லிச்செல்கிறது. 

திருமணபந்தத்தில் நுழைவதைத் தவிர்க்கமுடியாது, விருப்பத்தையும் மீறி அதற்குட் செலுத்த ஆயத்தங்கள் நடைபெறும்போது மௌனமாயிருப்பதைத்தவிர வேறென்னசெய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  நடுவில் அந்த மரமும் அப்படித்தான் இந்தப்பூச்சியும் அப்படித்தான், என்றான பலவகை காட்சி விஸ்தரிப்புகளுக்குப் பின்னாலும் கதையின் இறுதிப்பகுதியில் மீளவும் யாருக்கேனும் இதுவொரு சம்பவமாகவோ அல்லது அடுத்துவரப்போகும் நிகழ்வின் (வாழ்வின்) பகுதியாகவோ இருப்பின் அதற்காக என்னால் என்ன்செய்யமுடியும், மௌனமாக இருப்பது மாத்திரந்தானே? என முடிக்கும்போது சித்திரத்தைப்படிக்கும் அலர் அகவையருக்கு திருமணம்மீதான ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது.

அம்பையின் கதைகளில் வருவதைப்போன்று பெண்களை அடக்குவதால் இன்பந்துய்க்கின்ற  ஆணாதிக்கத்தைச் அனுபவிப்பதாக எண்ணும் ஆண்கள் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எவரும் விதியேயென்று தம்மையே நொந்து பிலாக்கணம் வைத்துப்புலம்புவதுடன் நின்றுவிடுவதில்லை. அக்கிரமங்களுக்கெதிராகப் போராடவுஞ்செய்கிறார்கள். ஆனாலும் பிரமீளா இப்படியே தொடர்வாராகில் இவர் இந்தப்பிரச்சனைபற்றி இப்படித்தான் எழுதுவாரென்று வாசகர்களால்  முத்திரை குத்திவிடப்படும் அபாயமுமிருக்கிறது. எனக்கென்னவோ பிரமிளா புலம்பெயர்ந்து வந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது, அப்படி வந்திருப்பாரானால் அவரது பார்வைகள் இன்னும் விசாலித்திருக்க கதைகளின் பகைப்புலமும் கருக்களும் பாத்திரங்களும் மாறியிருந்திருக்க இன்னும் அசத்தலான படைப்புகள் பலவற்றைத்தந்திருப்பார்.

ஜில் ப்ராட்லி, கமிலே டொன்சியுக்ஸின் தோடுகள் போன்ற கதைகளைப் படிக்கையில் பிரமிளாவுக்கு பன்னாட்டு இலக்கியங்களுடனும் பரிச்சயமிருப்பதை உணரமுடிகிறது. உள்நாடாயிருந்தாலென்ன வெளிநாடாயிருந்தாலென்ன, வசதியானவளாயிருந்தாலென்ன, விளிம்புநிலைவாசியாயிருந்தாலென்ன பெண்களுக்கு  காதுத்தோட்டையும் அடகுவைக்கவேண்டிய நிலமைகள் வந்துவிடுகின்றன. அப்படி அடகாகும் தோடே பேசுவதும் அழகான கற்பனை..

உரப்புழுக்கள் கதையின் நாயகி சுரேகாவும்,  அது புத்தனின் சிசுவல்ல மாயாவுமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இவ்விரண்டு கதைகளிலும் ஒன்றாக இருப்பதைக்காணலாம். முதலாவதில் சுரேகா அவனது கண்காணிப்பாளர் இவளுக்கு உரம் அள்ளும் கிடங்கிலிருந்து பணியை வேற்றிடத்தில் மாற்றிப்போடுவதற்கு இவளிடம் பாலியல் லஞ்சம் கேட்கிறார். அவரைப்பற்றி முறைப்பாடு செய்யப் மேலிடத்துக்குப் பெரியதுரையிடம் போனால் அவரும் கதைவைச்சங்கிலி போட்டுப்பூட்டிவிட்டு அவளைக் ‘கட்டிலுக்கு……. வா’  என்றழைக்கிறார்.

வார்த்தைத் தேர்வுகளில் அங்கங்கே சிறு கவனயீனப்பிழைகள் உண்டு. உரப்புழுக்கள் கதையில் அந்த உரமென்கிற வார்த்தை பொருத்தமாக அமையவில்லை. பொதுவாக விவசாயத்தில்  உரம் என்பது  அசேதன உரங்களைத்தான். (inorganic fertilizers such as anhydrous ammonia, urea, urea-ammonium nitrate solutions,  ammonium phosphates, and muriate of potash). அவற்றுக்குள் எந்தப்பழுக்களும் உயிர்வாழமுடியாது, அவிந்தே இறந்துவிடும். செம்பனைகளின் பகுதிகளோடு அசேதன உரங்களைக்கலந்து பெறப்படுவதைக் கூட்டுப்பசளை (compost : decayed organic material used as a fertilizer for growing plants.) என்றுதான் சொல்லப்படும். அதற்குள் புழுக்கள் வாழச்சாத்தியம்.

இன்னும் சிங்கள உரையாடல்களைத் தமிழில் எழுதும்போது வாக்கியங்கள் சில. எ+காட்டாக: ‘அத்த கியப்பாங்’ என்பது  ’எத்த கியப்பாங்’ என்றும்,  ‘ ஊவ  மரலா நெவே’ என்பது ’ ஊவ  மரலா  நெமே’ என்றும்  தட்டப்பட்டுள்ளன.

அதேபோல் சிராம்புகள் > சிலாம்புகள் என்றும்,  விளாறு > மிலாறு என்றும் தட்டப்பட்டுள்ளன.  இச்சிறு தவறுகளால் படைப்புக்களின் தரத்துக்கோ கனதிக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. இவை தவிர்ந்த தட்டுப்பிழைகள் அதிகமில்லாமல் இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.

கதையைக் காட்சிப்படுத்துவதில் புதுமைப்பித்தனையொத்தவொரு வேகமும், புதிய உத்திகளைத்தேர்ந்து சொல்லும் முறையில் புதுமையும், எந்தப் பிரச்சனையானாலும் நேரடியாக எடுத்துப்பரப்பிவைத்து அலசுவதில் துணிச்சலையும் கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் எனக்குத் தமிழிலக்கியவானில் புதிதாகத்தோன்றியுள்ள விடிவெள்ளியாகத் தெரிகின்றார். இவரால் ஈழத்து இலக்கியம் கடுகிப் புதிய உயரங்களை எட்டும்!

(விமர்சனம்:  அம்ருதா 183 - பெப்ரவரி 2023)

யாவரும் வெளியீடு, பக்கங்கள்: 124 விலை: 150.00 ₹

Sunday, October 23, 2022

கதைகளுக்குள் விரும்பித் தொலைதல் - சப்னாஸ் ஹாசிம்

By On October 23, 2022


ஈழத்தின் மலையக இலக்கியப் பரப்பு விசேடத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு மலையக வாழ்வியல் கூறுகளும் பண்பாட்டுவெளியும் மரபும் மரபார்ந்த தொடர்ச்சியும் காரணங்களெனச் சொல்லமுடியும். பூர்விக நிலத்தின் கலாசார ஊடறுப்பும் மறுக்கப்பட்ட நிலத்திலிருந்து மீண்டெழுந்த அல்லது மீண்டெழ எத்தனிக்கிற சமூகத்தினரிடமிருந்து ‘புதிய வகை ரத்தம்’ போல இலக்கிய வெளிப்பாடு இருந்திருப்பதிலும் தொடர்வதிலும் ஆச்சரியம் மேவ எதுவுமில்லை. புனைவு வெளிப்பாடுகளின் ஊக்கநிலை மாறாமலிருப்பது மலையக இலக்கியப்பரப்பைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நிலவரையியலையும் சமூக ஒழுங்கையும் தொழிலாளர் வர்க்க உணர்வையும் ஒட்டுமொத்த பிரதியின் வழியே பரவவிடுவதனாற் தானென்று தோன்றுகிறது. சி.வி வேலுப் பிள்ளை, நடேசய்யர், கே. கணேஷென்று ஒரு தலைமுறை உருவாகி தமிழக கதை சொல்லலையும் ஈழத்து மரபையும் இணைத்ததான புதிய போக்கோடு மலையகச் சிறுகதை வெளி தனக்கென மரபை உருவாக்கிக் கொண்டது என்று கருதலாம். அதற்குப் பிறகு வந்த தலைமுறை என்றுபார்த்தால் செந்தூரன், என் எஸ் எம் ராமைய்யா, மு. சிவலிங்கம், மாத்தளை சோமு, மலரன்பன், சாரல்நாடன், நயீமா சித்திக், தெளிவத்தை ஜோசப்பென்று ஒரு வரிசை நினைவுக்கு வரலாம்.


இந்த இரண்டாம் தலைமுறையின் காலமே மலையகச் சிறுகதைவெளி வீறு கொண்டு எழுந்த காலப்பகுதியெனச் சொல்ல முடியும். தொடர்ச்சியாக எண்பதுகளின் பின்னர் தனித்தொகுதிகள் தலையெடுத்ததும் மலையக கதை உலகுதனித்த தன்மையோடு புறக்கணிப்புகளை மீறி குடியுரிமை பறிப்பு பற்றிய கோபவெளிப்பாடுடனும், பிரஜாவுரிமை கோசங்களுடனும் வெளிவந்தன. அதற்குப் பிறகு வந்த தீர்த்தக்கரை போன்ற இதழ் வெளிவந்த காலகட்டம் முக்கிய பாசனத்தை சிறுகதை நிலத்தில் பாயவிட்டது. அதற்கு பிறகு இன்றைய தலைமுறையில் சடகோபன், சிவானுமனோகரன், பிரமிளா பிரதீபன் போன்றவர்கள் புதிய கோணத்தில் எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிரமிளா பிரதீபனுடைய விரும்பித் தொலையுமொரு காடு சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்தேன்.


மலையக சிறுகதைக்கென்று இருக்கிற ஒரு செல்நெறியோ, மரபோ இவரது கதைகளில் மீறப்பட்டிருக்கிறது. இவரது புதிய கதை சொல்லல் மானுட அழகியல் அபத்தமென்கிற இருநிலைகளைத் தாங்கிய புதிய மனிதர்களோடும் வலுவான கதையோடும் கூறல் உத்திகளோடும் ஒரு கட்டுடைப்பை வியாபிப்பைச் செய்திருக்கின்றன. இன்றளவில் தமிழக புலம்பெயர் பரப்பில் அதிகம் வாசிக்கப்படக்கூடிய மலையகக் கதைகள், ஏன் ஈழக்கதைகளும் பிரமிளாவினுடையனவே. பிரமிளாவினுடைய கதையுலகம் தடித்த கதாபாத்திரச் சித்தரிப்போடு அகநிலை சார்ந்த ஊடாட்டங்களைப் பேசுபவன. பொதுவான மலையகக் கதைப் பின்னணியிலிருந்து வேறுபட்டு கழிவிறக்கம், ஆற்றாமை போன்ற சாயலை விடுத்து புதிய பார்வையோடு திமிறி எழுவன. பெண் நிலை சார்ந்த நுண் இழையோடு சமாந்தரத் தளத்தில் அகவிசாரணையோடு எழுதப்பட்ட கதைகளை இத்தொகுதி அதிகம் கொண்டிருக்கிறதெனலாம். அக்கதைகளில் வரும் பெண்கள், அவர்களது அன்றாடம் என்பனவெல்லாம் இயல்பிலிருந்து விலகாது இதுவரை சொல்லத்தயங்கிய புழங்குவெளியை ஞாபகப் படுத்துவன. பெண்ணியச் சிந்தனைகளோடு ஒன்றித்த கதைப்போக்கு தமிழ்க்கதைகளில் மிகைத்துவிட்ட இந்நாட்களில் ஈழத்து மலையக சிறுகதைகளில் அதை வேறுபட்ட தளங்களிலும் வடிவ நியதியிலும் முயன்று பார்த்தவரென்று பிரமிளாவைச் சொல்ல முடியும். ஆணாதிக்கம், சுரண்டல், பாலியல் லஞ்சம், இன முரண்பாடு, காமம், காதல், வன்புணர்வு என பெண்ணுலகம் சார்ந்து பிரமிளா முன்வைக்கிற கதையாடல்களும் கேள்விகளும் முடிபுகளும் வித்தியாசமானவை. பெண்ணியம் பற்றி பேசுகிற போது எதிர் நியதி பேசுவது, அதன் சாத்தியங்களை படைப்புகளின் மீது விரவ விடுவது திணிப்பது பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. பிரமிளாவின் பெண்கள் ஆதர்சமான நாயகத் தன்மை கொண்டவர்களல்ல. எங்கேயோ முயன்று வெளிவர முடியாத தடுப்புகளைத் தாண்ட எத்தனித்து மீண்டும் அதே பாழ்குழியினுள் விழுகிற சராசரியான பெண்களையே பிரமிளா தேர்ந்தெடுத்திருப்பார். சுரண்டலை எதிர்த்துத் திமிறுகிற சீற்றத்தோடு அச்சுரண்டலுக்குப்பழகிப் போகிற பெண்களையோ சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூக வேலியிலிருந்து அதன் மதிப்பீடுகளிலிருந்து தப்ப முடியாத பெண்களையோ அவருடைய கதைகள் முன்நிறுத்துகின்றன. பொதுவான மலையகக் கதை சொல்லலிருந்து பிரமிளா வேறு வேறு நிறங்களை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்திய படி தனித்தொத்த கூறுமுறையோடு முயற்சித்திருப்பார். அது மிகச் சவாலான உருவக/குறியீட்டு விபரிப்புகளோடு வளர்ந்து வந்து ஒரு கட்டத்தில் கதையை நிறுத்துவது எனச் சொல்ல முடியும். கதையில் மேலோட்டமாக சொல்லப் படும் கதைக்கு சமாந்தரமாக மெய்க்கதை பயணித்தபடி இருக்கும். இப்படி இத்தொகுப்பின் தலைப்புக்கதையான விரும்பித் தொலையுமொரு காடு கதை எழுதப்பட்டிருக்கும். பெண்ணொருத்தி காடொன்றை விரும்பி நுழைவது போல குடும்ப வாழ்வை மண வாழ்வைக் குறித்துக் கதை நீளும்.


இவ்வகை உத்திகளின் வாயிலாக வழக்கமான மலையகச் சிறுகதைகளிலிருந்து பிரமிளாவினால் புதிய கூறுமுறையை குறியீட்டு மொழிக்குள்ளேயான பூடகச் சொல்லாடலை செய்ய முடிந்திருக்கிறது. இவ்வகை பூடகக் கதையாடல் மற்றைய நேரடிக்கதைகளை விட  பிரமிளாவுக்கு கைகொடுத்திருப்பதாகவே இத்தொகுப்பிலிருந்து உய்த்தறிய முடிகிறது. நேரடிக்கதைகளில் உள்ள இடைவெளிகளை அயர்ச்சியை குறியீட்டுக்கதையாடல் நிரப்புகிறதென்ற அளவில் அவ்வுத்தியைப் பாராட்ட முடியும். கடுமையற்ற ( not rigorous) இலகு தன்மையான மொழியை இவ்வகைக் கதைகளுக்கு தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது எப்பொதும் நல்ல கதையொன்றை அளிக்கும் முயற்சிக்கு கை கொடுக்காதென்பதுவும் புலனாகிறது. அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட சவாலெனப் புரிந்து கொள்ள முடியும். நாம் குறிப்புணர்த்தும் கதைக்காக எடுத்துக்கொண்ட குறியீட்டைச் சரிவரக் கையாள்வதில் தான் இக்கதைகளின் வெற்றி தங்கியிருக்கும். குறியீடாக நாம் சொல்ல வருவது அழுத்தமானதொன்றாக இருக்க வேண்டுமே ஒழிய வெறுமனே ஒத்திசைவான ஏதாவதொன்றை தொடர்பு படுத்துவதோடு நின்று விடக் கூடாது என்பது எனது கருத்து. விரும்பித் தொலையுமொரு காடு கதையும் ஒரு அரசமரமும் சில வௌவால்களும் கதையும் இவ் வுத்தியின் வழியே உருப் பெற்றாலும் அவை சில இடங்களில் சலிப்பைக் கொடுப்பன. ஒரு அரசமரமும் சில வௌவால்களும் என்ற கதையில் அரசமரத்தையும் வௌவால்களையும் புத்த மதத்தையும் அதன் தீவிரப் பற்றாளர்களையும் குறித்த பூடக விபரிப்பாகச் சொல்லியிருப்பார் பிரமிளா. நீண்ட விவரணையில் ஒரு தேர்ந்த வாசகருக்குப்புரிந்த விசயத்தை மீண்டும் அவர் திரும்ப எழுதியிருப்பார்.


“தூரத்தேயிருந்து அரசமரத்தின் அழகினை வியந்து பேசும் எவரொருவராயினும் அருகில் வந்து இந்த வௌவால்களின் துர்நடத்தையை அனுபவிப்பாராயின் அரசமரத்தையே வெறுத்து விலகுவர். தவறு அரசமரத்தினது அல்ல… அதனை தனக்கு மட்டுமேயெனக் கொண்டாடும் வௌவால்களது என்ற புரிந்துணர்வு இல்லாமல் போய் வைராக்கியம் கொண்டு மரத்தை வெட்டிவீழ்த்த முனைவர். “ என எழுதியிருப்பார்.


இதனை தூர இருந்து அரச மரத்தினழகினால் கவரப்பட்டு வருபவர் பின்னர் தன் கையாலே வெட்டிவிடுவாரென முடித்திருக்க முடியும். அந்தக் குறிப்பும் காரணமும் ஏற்கனவே முன்கதையின் நிகழ்வுகளினாலும்  விபரிப்புகளினாலும் வாசகனுக்கு உணர்த்த போதுமானவை.   


கதைகளுக்காக பிரமிளா பயன்படுத்துகிற மொழியும் நடையும் தற்காலச் சிறுகதைகளைவிட சில படிகள் செறிவற்று வருகின்றன. சம கால கதை சொல்லல் அடைந்திருக்கிற இடமும் செழுமையும் மொழி விசயத்தில் அபாரமானதென்பதால் அந்த இடத்திற்குரிய மெனக்கெடல் ஒட்டுமொத்த தொகுதியிலும் போதவில்லை என்றே தோன்றுகிறது. ஏற்கனவே குறித்துச் சொல்லியது போல மலையகக் கதைகள் தனித்துத் தெரிவதற்கும் தனிப்பெரும் இலக்கியப் போக்காக விரிவதற்கும் அவை சுமந்து வந்த நிலவரையியலேகாரணம். மலையகக்கதைகளென்றாலே மலைகளும் தோட்டங்களும் பீலிகளும் லயமும் அதைச் சுற்றிய காடும் வழுக்கும் தெருக்களும் வெற்றிலைக் கறை படிந்த மனிதர்களும் வட்டார மொழியுமென மனக் காட்சி விரியும். நிலத்தையும் இயற்கையையும் அதைச் சுற்றிவர நிகழும் எல்லாச் சங்கதிகளையும் பிரதியினுள் கொண்டு வந்த எத்தனையோ கதைகள் நமக்கு ஞாபகம் வரும். அப்படி இத்தொகுதியில் முழுத் திருப்தி தரக்கூடிய கதை என்றால் உரப்புழுக்கள் மட்டும் தான் என்று சொல்வேன்.


அது தாங்கி வருகிற நிலக்காட்சிகளும் உரமேடையும் காடும் கட்டுபொல் உறிஞ்சி வற்றிய கிணறும் பங்களாவும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதுவே மலையகக்கதை வழக்கின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட நல்ல கதையென்று படுகிறது. இந்தக் கதையில் சொல்லப்படுகிற உணர்வும் ஆணாதிக்க மேலீடும் அறச்சீற்றமும் இயல்பைக் குறித்து யதார்த்தத்தைக் குறித்து அச்சத்தை கடத்துவன. திருமண வாழ்வைக் குறித்தும் கற்பைக்குறித்தும் எழும் ஐயமான( ambiguous) கருத்துநிலையை அப்படியே சொல்லி விடுவதும் தொழிலாளர்களின் மீதான பாலியல் சுரண்டலை படம் போட்டுக் காட்டுவதுமாக இக்கதை, முக்கியமாக மலையகப் பண்பாட்டுத்தளத்தில் உள்ள துயர் நிகழ்வுகளின் சாட்சியமாக இருக்கிறது.


புனைக்கதை எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் எனக்கு பிரமிளாவிடம் சொல்ல ஒரு விசயமிருக்கிறது. அது கதைகளின் செம்மை பற்றிய விசயம் தான். எப்போதும் ஒரு கதையை எழுதியவுடன் அது முழுமுற்றானது, கடைசியானதென நாம் நம்புவதில்லை.  அந்தக் கதை பல படிகளிலெழுந்து முழுமையாகத் திரளுவதில் நமக்கு அடுத்தபடியாகவும் இறுதியாகவும் சஞ்சிகைகளின் பங்களிப்பிருக்கிறது. இந்தத் தொகுப்புக்கு பிறகு வந்த கதைகளுக்கும் இதிலிருக்கிற கதைகளுக்குமிடையில் அந்தத் திரட்சியில் மொழி விசயத்திலும் கதையின் உள்ளடக்கத்திற்குத் தகுந்த உத்திகளின் தேர்வு விசயத்திலும் ஒரு போதாமை இருக்கிறது. ஆரம்பக்கதைகளில் அது எழுதிக் கண்டடையக் கூடிய ஒன்றுதான். என்றாலும் அவற்றின் மீதான இதழ்களின் பரிந்துரைகள், செம்மைப் படுத்தல்கள் அவற்றை இன்னொரு தளத்திற்கு கொண்டு போகுமென்பதை மறுப்பதற்கில்லை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் அக்குறைபாட்டை வெகுவாகவே உணர முடிகிறது. இக்கதைகள் ஆரம்பத்தில் வெளிவந்த இதழ்கள் அப்பணியை பெருமளவு செய்யவில்லையோ எனத் தோன்றுகிறது. தானாகவே பயின்று அரங்கேற்றம் வருகிற மாணவரிடம் இருக்கும் அதே வகை தடுமாற்றங்களைத் தான் சுட்டுகிறேன். விவரணைகளிலிருக்கிற பொத்தாம்பொதுவான சொல்லாடலும் தேய்வழக்கான சொற்றொடர்களையும் தவிர்த்திருக்க முடியும். அது புத்தனின் சிசுவல்ல கதையில் பிற்பாதி, முற்பாதி போன்ற மொழிச்செறிவிலன்றி ஐதாக வருவது, மாட்டியா கதையின் கூறுமொழி இன்னும் மேம்பட்டிருக்கலாமெனத் தோன்றுவதென சில சுட்டுகளைச் சொல்ல முடியும்.


கதைகளுக்குத் தேவையான தருக்கத்தை தேர்ந்தெடுப்பதில் பிரமிளா படுசாமர்த்தியமானவரென்பதை ஓரிரவு போன்ற கதைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிரமிளாவுக்கு, நானும் தான் அதே மலைகளில் ஏறி இறங்குகிறேன், நானும் தான் அதே பாதைகளில் வழிகளில் நடக்கிறேனென ‘ஓரிரவு’ போல கதையினுடைய ஒட்டுமொத்தத் தருக்கத்தைச் சொல்லத் தெரிந்திருக்கிறது. அத்தருக்கங்களின் வழியே கட்டுமானமாகிற கதையின் மனிதர்களையும் காட்சியனுபவத்தையும் உரிய இடங்களில் வைக்கத் தெரிந்திருக்கிறது. கமிலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள் போன்ற கதைகளில் தேக்கமாகும் மனநிலையை, கதை முடிவடையும் புள்ளியோடு இணைக்கவும் தகவமைக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக, ஒட்டுமொத்தமாக பிரமிளா, குறியீட்டுக்கதை மொழிதலாலும் வேறுபட்ட களத்தேர்வுகளாலும், கிளைமொழியின் பாண்டித்தியத்தினாலும், பெண் உலகின் இன்னுமொரு கரிய படித்தளத்தில் நின்று யதார்த்தத்தை நுண் வாசிப்புக்குரிய ஆழ்படிமங்களோடு ஆங்காங்கே ஊன்றி நிறுத்துவதாலும் கவனிக்க வேண்டிய தொகுப்பொன்றைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குத் தந்திருக்கிறார் எனச்சொல்லாம். 

நன்றி வனம் - ஒக்ரோபர்

Sunday, September 25, 2022

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு" - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

By On September 25, 2022

சிறுகதை இலக்கியமானது பாய்ச்சலுக்குட்பட்டு அடுத்தகட்டத்தினை எய்துவதற்கு கதை சொல்லப்படும் முறைமை, கதைகளை உணர்ந்து கொள்வதில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டுமே முக்கிய உந்துவிசைகளாகின்றன. புதிய விடயமொன்றினை புதிய மொழியில் கூறும் போது, அக்கதாசிரியர் புதிய உலகத்தினையே வாசகர் முன்வைப்பவர் ஆகிறார். தனித்துவமானதொரு மொழி நடையும் அவ்வெழுத்தாளருக்கு கைவரப் பெற்றிருப்பின், அவர் வீரியமிக்க தனது எழுத்தின் வழியாக வாசகர் மனதிற்குள் நிரந்தரமாகவே சிம்மாசனம் அமைத்துவிடுவார். நிறைந்த வாசிப்பும் அதன் விளைவாலான உலக இலக்கியங்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களின் பரீட்சயமும் பிரக்ஞையும் மிகுந்த எழுத்தாளர்களே எக்காலத்தும் தமது எழுத்தின் வசீகரத்தாலும் வீரியத்தாலும் வாசகனைத் தம்பால் இழுத்து அணைத் துக்கொள்ளும் வல்லமை பெற்றவராய் விளங்குவர். பத்து அல்லது பதினைந்து ஆண்டுக ளுக்கு முன்னர் 'பத்தி', 'இன்னாம்பி', 'பீலிக்கரை', 'கோடிப் பக்கத்தில் ஒரு பலா' போன்ற சுமாரான கதைகளையே எழுதிவந்த பிரமிளா பிரதீபன், இன்று 'ஜில் ப்ராட்டி', 'மாட்டியா', 'அது புத்தனின் சிசுவல்ல'. 'அல்லிராணி' போன்ற உலகத்தரம்மிக்க உன்னத கதைகளை எழுதுமளவிற்கு பரிணமித் துள்ளாரெனில் அவரில் ஏற்பட்டுள்ள புதிய உணர்வு முறையும் சிந்தனை எழுச்சியுமே காரணங்களாகின்றன. மலையகம் எனும் ஒரு வட்டத்தினை தாண்டி சர்வதேசிய மெங்கும் பிரமிளா இன்று பரவலாகப் பேசப்படுகின்றார் என்றால் அதற்கு அவரது நுட்பமான எழுத்துகளே பிண்ணனியாய் அமைந்ததெனலாம்.


தமிழ் சிறுகதைப் பரப்பில் மிகவும் அரிதா கவே பயிலப்படும் உத்தியில் எழுதப்பட்ட பிரமிளா பிரதீபனின் பதினொரு கதைகள் அடங்கிய 'விரும்பித் தொலையுமொரு காடு' எனும் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கதைகளில் பெரும்பாலானவை வாசகரை தம் முன் ஆழ்த்தி வைத்திருக்கும் வல்லமை கொண்டவை. இவை யாவும் உதிரிகளாக அவ்வப்போது ஞானம், ஜீவநதி, சிறுகதை, மஞ்சரி, யாவரும், வனம். கனலி, நடு போன்ற சஞ்சிகைகளில் வாசிக்கப்பட்டவைகள்தான். ஆனாலும் நூலில் அவற்றினை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தியபோது பிரமிளாவின் பரந்த வாசிப்பும் ஆழ்ந்த தேடலும் ஆங்கில அறிவும் உலக இலக்கியங்கள் பால் கொண்ட ஆர்வமும் அதிகபட்சமாகவே அவரது கதைகளில் பிரதிபலித்திருந்தமையை நன்கு அவதா னிக்க முடிந்தது.


பீலிக்கரை (2007). பாக்குப்பட்டை (2010) போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுப்பொல் (2017) எனும் நாவலி னையும் ஏலவே வெளிக்கொணர்ந்திருக்கும் பிரமிளாவுக்கு விரும்பித் தொலையுமொரு காடு (டிசம்பர் 2021) நான்காவது பனுவலாகும். மலையகத்திற்கு அப்பாலும் அவரது பார்வை அகண்டு விரிகிறது என்பதனை மலையகத்தின் அடையாளங்களேது மற்ற நூலின் மகுடத்திலேயே அவர் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இந்நூலில் மாய வெளிகளினூடே தான் மீட்டெடுத்தவற்றையும் தன்னை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில காட்சிகளையுமே பிரமிளா சிறுகதையாக்க முனைந்திருப்பார். தனித்துவமிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள், விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர் களுக்கும் அற்புதமான அவ்வனுபவத்தினை தொற்றவைத்திருப்பதில் இந்நூலின் வழியாக பிரமிளா பிரதீபன் அடைந்திருக்கும் வெற்றியே, தமிழின் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருப்பதோடு, அவருக்கானதொரு தனி அடையாளத்தையும் தேடித்தந்திருக்கிறதெனலாம்.


ஈழத்து எழுத்தாளர்களுள் இத்தகு தனித்து வமான மொழிநடை மூலமும் கதை கூறும் முறை வாயிலாகவும் வாசகர்களை கட்டிப் போட்டவர்கள் ஏலவே சிலருளர். இவர்களுள் அ.முத்துலிங்கம் பிரதானமானவர். பிதாமகராகக் கொள்ளத்தக்கவர். இவ்வரிசையில் அணிவகுத்து நிற்கும் அடுத்த சிலருள் ஆசி கந்தராஜா, ரஞ்சகுமார் போன்றவர்கள் எடுத்துச் சொல்லத் தக்கவர்கள். தற்போது இந்தப் பட்டியலில் பிரமிளாவும் இடம்பிடித்துள்ளார்.


இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ள பதினொரு கதைகளும் வெவ்வேறு துய்ப்பினைத் தருவன. முன்னொருபோதும் தரிசித்திராத புதிய கதை மாந்தர் களத்திற்கு அழைத்துச் செல்வன. 'ஜில் ப்ராட்லி', 'மாட் டியா', 'நீலி', 'அது புத்தரின் சிசுவல்ல'. 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடு கள்' போன்ற கதைகளின் பின்புலங்கள் முற்றிலும் புதிதானவை. புலத்தினை மட்டு மன்றி கதை மாந்தர்களை தொடர்பான பொருட்களை, விடயங்களை பிரமிளா விபரித்துச் செல்லும் முறைமையும் புதிய உலகம் ஒன்றினை உணர்த்தி நிற்பது. இவ் வகையில் இக்கதைகளின் முடிவுகள் தரும் தரிசனம் அலாதியானது. கதைகளின் பரிமா ணத்தையும் வசீகரத்தையும் அகலப்படுத்த வல்லது.


பெண்ணின் குரலாகவே பெரும்பாலான பிரமிளாவின் கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அக்குரல்கள் எழுப்பும் ஒலியா னது அவருக்கு முந்திய தலைமுறையில் எழுதிய பெண் பிரமாக்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அவலமாகவோ அல்லது அபலைகளின் குரல்களாகவோ அன்றி புத்திலக்கியமாக அல்லது புத்தொ லியாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல்கள் பிரமிளாவினது எனக் கூறலாம். பெண்களை முழுமையாகவே அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தி நிற்கும் அதே வேளை முடிவுகளை எட்டும் விழிப்புணர்வு மிக்க வர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் அவர்களை அடையாளப்படுத்துவார். அப் பெண்கள் எழுப்பும் வினாக்கள் நியாயம் மிக்கவை. தக்க பதில் வேண்டி நிற்பவை. இலகுவில் புறந்தள்ள முடியாதவை. அல் லிராணி, மாயா (அது புத்தனின் சிசுவல்ல) போன்ற பிரமிளாவின் பாத்திரங்களில் இப் பண்பு தெரியவரும் கதையின் முடிவினை சற்றே விலக்கி வைத்து விட்டு நோக்கின் 'ஜில் ப்ராட்லி'யையும் இவ்வகைமைக்குள் கொள்ளலாம்.


ஆண் - பெண் உறவில் உள்ளிருக்கும் உளச் சிக்கல்களை பிரமிளா வித்தியாசமாக சித்திரித்திருப்பார். பெண்கள் மீதான பலாத்காரங்களை இந்தளவு எல்லை வரை தரிசிக்க வைக்க முடியுமா என வியக்கும் வண்ணம் தன் கதைகளில் அவற்றினை வெளிப்படுத்தியிருப்பார். இது தொடர்பில் பிரமிளாவின் நகர்வானது இதுவரை தமிழில் அரிதானதொன்றெனலாம். 'ஓரிரவு' கதையில் அவ்விரவு முழுதுமாய் ராசாத்தி படும் அவஸ்தையும் 'அல்லிராணி' எனும் கதையில் அக்கதையின் நாயகி பட்டதாகக் கூறும் அவலமும் ஈழத் தமிழ் இலக்கியத்தில் எப்பெண் எழுத்தாளர்களும் சொல்லாத சேதி, செல்லாத பயணம்.


பாலியல் விவகாரங்களை, விரசப்ப டுத்தாது. விகாரப்படுத்தாது தன் மொழி வழி வெளிக்கொணரும் அல்லது சொற்களில் தேக்கும் பிரமிளா பிரதீபனின் திறமை உண்மையில் அசாதாரணமானது. 'ஓரிரவு', 'மாட்டியா போன்ற கதைகளிலும் முற்றுமுழுதாக 'அல்லிராணி' கதையிலும் பிரமிளா இவ் அற்புதத்தினை நிகழ்த்திக் காட்டியிருப்பார். பாலியல் பிரச்சினைகளை, பிறழ்வுகளை இலக்கியமாக்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கொத்தது. முன்னைய மரபில் எஸ்.பொ, க.சட்டநாதன் போன்றோர் வெற்றிகரமாகவே இதனை முன்னெடுத்திருந்தனர். இந்த வரிசையில் பொருத்தப்படத்தக்க ஒருவராக தற்போது பிரமிளாவும் பரிணமித்துள்ளார்.


இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் பிரமிளாவின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுவதற்கு அல்லது அக்கதைகள் மீதான அதி கபட்ச ஆவலைத் தூண்டுவதற்கு அவரது எழுத்துகள் எய்தியிருக்கும் அழகியல் உச்சங்களும் ஒரு காரணமாகிறது. 'பகற்கனவு', 'ஒரு அரசு மரமும் சில வௌவால்களும்', 'உரப்புழுக்கள்' போன்ற தன் மண் பார்ந்த சுமாரான கதைகளைக்கூட அழகியல் மிகுந்த தன் எழுத்து நடையால் தூக்கி நிறுத் தியிருப்பாள் பிரமிளா. 2007இல் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளிக் கொணரப்பட்ட பிரமிளாவின் 'பீலிக்கரை' சிறுகதைத் தொகுதியில், அவரை திரும்பிப் பார்க்க வைத்த கதை 'பீலிக்கரை'. அதையொத்த ஒரு பீலிக்கரையில் தான் 'பகற்கனவு' எனும் கதையில் பரிமளமும் குளிக்கப் போகிறாள். அன்று அப் பீலிக்கரையினை வாசகர் கண்முன் கொணர்ந்த பிரமிளாவே பதினைந்து ஆண்டுகளின் பின்னராக இன்று இப் பீலிக்கரையினையும் காட்சிப்படுத்துகி றார். இக்கால இடைவெளியில் துறைசார்ந்த வீச்சும் வாழ்க்கையின் பன்முக அலகுகள் பால் கொண்ட கவனங்களும் பிரமிளாவிடம் பன்மடங்காய் பெருகியிருப்பதனையும் அழகியல் அம்சங்கள் பற்றி அதிகமாகவே அவர் அறிந்திருப்பதையும் அறிந்துகொள்ள முடி கிறது. இதன் விளைவிளையே 'பகற்கனவு' கதையிலும் ஏனையவற்றிலும் அவர் தரிசிக்க வைக்கின்றார்.


'உரப்புழுக்கள்' கதையில் அனுரவின் அசைவினை, உடல் மொழியினை அவனது ஒவ்வொரு இயக்கத்தினையும் உணர்ச்சிமிகுந்த சித்திரிப்புகளாகவன்றி, தன் மொழிநடைக்குள் சகலவற்றினையும் அடக்கி பிரமிளா விபரிக்கும் பாங்கு உண் மையில் சிலிர்க்க வைக்கின்றது. பிரமிளா பிரதீபனின் ஆளுமைக்குள்ளேயே அவரது மொழிநடை பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டறக் கலந்து விட்டிருப்பதையே இது உணர்த்துவதாயுள்ளது. விரும்பித் தொலையுமொரு காடெனும் மகுடக் கதையிலும் இப்பண்பே முனைப்பாகவுள்ளது. பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் புனைகதை படைப்பதற்கு நிறைந்த வாசிப்பும் துறைச பார் பிரக்ஞையும் மிக முக்கியம். அதற்கு மேலாக அதீத திறமையும் அவசியமாகிறது.. இவை யாவுமே பொருந்தப் பெற்றவராக.. பிரமிளா பிரதீபன் திகழ்ந்து வருவது மிக மகிழ்வைத் தருகிறது. உலகளாவிய தமிழ் புனைகதையின் உன்னத எழுத்தாளர்கள் வரிசையில் பிரமிளாவும் இடம் பெறும் நாள் மிக அணித்தாகவே உள்ளது என்பதையே மொத்தத்தில் 'விரும்பித் தொலையு மொரு காடு' எனும் அவரது இச்சிறுகதைத் தொகுதி உணர்த்தி நிற்கிறது எனலாம்.

நன்றி - தினக்குரல் - 25.09.2022


Monday, September 12, 2022

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”- பிரமிளா பிரதீபன்

By On September 12, 2022

கிராமியப் பெண்ணொருத்தியின் அப்பட்டமான வெளிப்படுத்தல் அஞ்சலை.


வாசகனைக் கவரும் வசீகர பெண்ணாகவோ அல்லது பரிதாபம் தேடிக்கொள்ளும் விளிம்புநிலை பெண்ணாகவோ அஞ்சலை சித்தரிப்பட்டிருப்பதாக தோன்றவில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவள் அவளாக மட்டுமே இருக்கிறாள். தன்னியல்பிலிருந்து துளியளவிலும் மிகைப்படுத்தப்படாமல் கதையெங்கிலுமாய் வியாபித்துக்கிடக்கிறாள். தனது நேர், மறை எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் ஆசுவாசம் கொள்பவளாகவே வெளிப்படுத்தப்படுகிறாள்.


அஞ்சலையின் மனத்திடம் கொண்ட அனேக பெண்களை நாம் அன்றாடம்  கடந்துகொண்டுதான் இருக்கிறோம். வாசலில் ,தெருவில், வயற்காடுகளில்,  குழாயடிகளில் என்று தம் மன ஆதங்கங்களை வார்த்தைகளாக்கி இல்லையேல் வசவுகளாக்கி சத்தமாக வெளித்துப்பும் அவர்களை சமயங்களில் அருவருப்புணர்வுடன் கூட நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய குணத்தையொத்த ஒரு அஞ்சலையுடன் நெடும்பயணமாக இங்கே பயணிக்கும் பொழுதில் மட்டுமே அவள்பக்க உணர்வின் வெளிப்பாடு நியாயப்படுகிறது. அவளது ஆளுமையின் பலம் வெளித்தெரிகிறது.

கிட்டத்தட்ட ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பதான நடைமுறையில் மொத்தமாய் அடங்கிபோகுமொரு பெண்ணாகவுமில்லாமல் நடைமுறைகளை அப்படியே கட்டுடைப்பவளாகவுமில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட மனநிலையுடைய அஞ்சலையின் திடமான முடிவுகள் வாசகனை வியக்கவைக்குமென்பதில் சந்தேகமில்லை.


தொடர்ச்சியாக அஞ்சலையுடன் பயணப்படும் வாசகனொருவனால் அவளை காலம் எங்கனம் மாற்றம் கொள்ள வைக்கிறதென்பதை தெளிவாக உணர முடிகிறது. அத்தனை திமிருடன் ஆண்களை எதிர்கொள்ளும் பெண்ணாக வலம் வரும் அவள்…. தலைகீழாகத் தன்னை புரட்டிபோட்ட சம்பவங்களை கண்டும் திணறாத அவள்… தன் மகளின் வாழ்விற்காக அடிமட்டத்திற்கு தன்னை கீழிறக்கி, மானமிழந்து, தம்பிகாரனிடம் கெஞ்சும் ஒரு சம்பவம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


‘ஏஞ்சாமி… காலம் பூரா ஓங்கட்டுத் தெருவுல சாணியள்ளிக்கிட்டுக் கெடக்கிறன், ஏம் புள்ளய விட்டுடாதப்பா….


‘ஒன்ன கட்டிக்கிலன்னா ஏம்புள்ள உசுரா இருக்காது சாமீ. நானும் உசுரா இருக்கமாட்டஞ்சாமீ. ஏங்கிட்ட கட்டியிருக்குற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்குறத வாங்கிக் குடுப்பஞ் சாமீ. காசு பணத்த பாக்காதப்பா. ஏம் புள்ள நின்னு தெவச்சிடும் சாமீ. கொஞ்சம் மனசு எறங்கிப் பாருப்பா. ஓம் பொறப்பு, எனக்கு ஒண்ணுண்ணா ஒனக்கு இல்லையா சாமீ….


‘காலம்பூரா சாமியா ஒன்ன வச்சி கும்புட்டுக்கிட்டு கெடக்கிறஞ் சாமீ ஏம்புள்ளய கட்டிக்கப்பா….’ 


பிடிக்காததை எதிர்க்கத்துணியும் எத்தகைய திமிர்பிடித்தவளையும் தாய்மையெனும் உணர்வு மொத்தமாய் புரட்டிப்போடுமென்ற இயற்கையின் நடைமுறை, அதிர்ச்சிதருமிடமாய் நாவலில் பதிவாகியிருக்கிறது. தன் குணவியல்பிலிருந்து மாறிய அவளது தடுமாற்றம் தற்கொலை எண்ணத்திற்கே அவளை இட்டுச்செல்லும் வாழ்வின் இடைவிடாத துரத்துதலை அப்படியே காட்டிச்செல்கிறது.    


பெண்கதாபாத்திரங்களாக உலவும் அஞ்சலையின் தாய் பாக்கியம், அக்கா கல்யாணி, தங்கமணி சிறிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கும் வள்ளி என அத்தனை கதாபாத்திரங்களுமே வலுவுடைய ஆளுமைமிக்க பெண்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உணர்ச்சிகளின் சரி பிழைகளை  உணரும் புரிதலையும் வாகசன் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவே கதை நகர்வும் அமையப்பெற்றிருக்கிறது. 


ஆண்களின் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாட்டை பொறுத்தவரை ஆங்காங்கே தலைதூக்கி பின் பதுங்குவதாய் தெரிகிறது. அஞ்சலையின் விருப்பத்துடனான உறவிற்காய் பலகாலம் காத்திருக்கும் அவளது கணவனே  (மண்ணாங்கட்டி)   சரியான சமயத்தில் அவளை புறந்தள்ளுகிறான்.  உதாசீனப்படுத்துகிறான். வார்த்தைகளால் கொல்லத்துணிகிறான். மொத்தத்தில் நாவலில் உள்ளடக்கப்படும் எல்லா ஆண்களுமே வெவ்வேறு விதமான ஆதிக்க மனநிலையுடனும் குற்றவுணர்ச்சிகளேயற்ற வெற்று வீராப்புடன் திரிபவர்களாகவுமே காண்பிக்கப் படுவதாக எண்ணிக்கொள்ள முடிகிறது. 


தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலுமே விரவியிருக்கும் வட்டார வழக்கு,  கிராமத்து சுழலொன்றை அப்படியே நிலைநிறுத்துவதாயிருப்பதுடன் மணக்கொல்லை, கார்குடல், தொளார் போன்ற கிராமங்களின் மனித நடமாட்டங்களை உயிரோட்டத்துடன் நகரவிட்டிருக்கிறன.


இறுதியில் நிலாவின் (மகள்) கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைக்கும் அஞ்சலை எப்போதுமாய்... வாழ்வின் எல்லா கணங்களிலுமாய் யாரோ ஒருவரை சார்ந்தே வாழப் பழக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்து பெண்ணினதும் பிம்பமாகவே காட்டப்பட்டிருக்கிறாள்.

Monday, August 29, 2022

நடத்தை மாற்றம் - பிரமிளா பிரதீபன்

By On August 29, 2022

ஒரு உயிரியின் நடத்தையில் ஏற்படும் சார்பு நிலையிலான நிரந்தர நடத்தை மாற்றத்தைத்தான் கல்வியின் சிறந்த பெறுபேறென எதிர்பார்க்கிறோமா?

கல்வி பற்றியதான நடைமுறை புரிதலும் அறிவுறுத்தல்களும் கூட அதையேதான் வலியுறுத்துகிறதா?

பொதுவாக அறிவைப் பெறுதலையும் புதிய நடத்தைகளை ஆற்றுவதற்கான ஆற்றலை விருத்தி செய்தலையும் கல்வி என்பதாக கூறுகின்றனர். நடத்தை மாற்றப்படும் ஒழுங்குப்படுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் செயன்முறையை கல்வி என்பதாக சிலர் வரையறை செய்கின்றனர்.  ஆற்றலை அல்லது நிபுணத்துவத்தை தேடும் செயன்முறையே கல்வி என்பதாக  (Knows 1998) கூறுகிறார். அவதானிக்கக்கூடிய வெளிவாரியான நடத்தை மாற்றமே கல்வியென்பதாய் ( Keith Rutledge  2003) கூறுகிறார்.

ஆனால் சமகால கல்வி நடைமுறையில், எதிர்பார்க்கப்படும் இவ்வடைவுமட்டங்கள் எய்தப்பெறுகின்றனவா? அல்லது அதற்குரியதான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சாத்தியப்படுகின்றனவா என சிந்தித்தால் அனேகமாக அறிவைப்பெறுதலை நோக்கியதான வேகமான முன்னெடுப்புகளே வரவேற்கப்படுகின்றன எனலாம். அதிகமாக  போட்டி மனப்பான்மையை விஸ்தரிக்கும் எதிர்மறையான நடத்தை விளைவுகளையே மாணவர்கள் தம்மத்தியில் வளர்த்துக் கொள்வதை வெகுவாக அவதானிக்க முடிகிறது.

கோட்பாட்டுப் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் இயங்குவடிவமாக செயற்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டமானது நடத்தை மாற்றத்தினை கருத்திற்கொண்டே தயாரிக்கப் பட்டிருக்கிறது. மேலும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல் அனுபவங்களை ஒழுங்கமைத்தல் முதலியவையும்கூட கலைத்திட்டத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்களின் உடல் வளர்ச்சி, உளவளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி போன்ற அனைத்தையும் கருத்திலே கொண்டுதான் கலைத்திட்டமானது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஓரளவில் உளவியல் தழுவிய நிலையிலேயே கல்விக்கலைத்திட்டமானது வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூட எண்ணிக்கொள்ள  முடிகிறது. 

இதன்படி கலைத்திட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எமது சமகால கல்வி முறைமையுள் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சி மட்டங்கள் அடையப்பெற வேண்டும் என்பதே கற்றல் கற்பித்தல் நகர்வுகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கலைத்திட்ட மாற்றங்களும் இவ்வடைவுமட்ட வீழ்ச்சியின் அவதானிப்பின் பேரிலேயே நடைபெற்றவண்ணம் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மிகத்தேர்ச்சிபெற்ற கல்வியியலாளர்களால் கலைத்திட்ட மாற்றங்கள் திட்டமிடப்பட்டும், நடைமுறைப் படுத்தப்பட்டும் அறிவுறுத்தல்களும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றும்கூட எதிர்பார்த்த பிரதிபலன்களை ஏன் பெறமுடியவில்லையென்பது  சிந்திக்க வேண்டிய விடயமாயிருக்கிறது. எதிர்பார்த்த விடயமென இங்கே நான் சுட்டியது சமூகத்திற்கு பொருத்தமான நடத்தை மாற்றத்தை மாணவர்களிடத்தே ஏற்படுத்த முடியாமையையே.

பொதுவாக பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் மாணாக்கரின் மனப்பாங்கானது பின்வருமாறு அமைந்திருப்பதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

  • தெரிவு செய்யப்பட்ட தொழில் வகைகளை மாத்திரம் விரும்புதல் (white color jobs)
  • பிரச்சினை தீர்க்கும் ஆற்றலில் தளம்பல் நிலையிருத்தல்
  • மென்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் பற்றிய ஆர்வமின்மை காணப்படல்
  • போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்
  • நிலையான, உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனின்மை
  • உடனடி வளர்ச்சியையும் மாற்றங்களையும் எதிர்பார்த்து மனச்சோர்வடைதல்
  • தற்கொலை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளல்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோகம் கொண்டிருத்தல்

மேற்கூறியது போன்ற மனப்பாங்குகளுடன் சமூகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களால் தொடர்ச்சியான சமூகச்சவால்களை எதிர்கொள்ள முடியாதென்பதும் ஒரு கட்டத்திற்குமேல் சோர்விற்குள்ளாகி மனவுளைச்சலுக்கு ஆளாகிவிடுவர் என்பதுவும் தெளிவு. எனினும் இதனையொத்த மனப்பாங்குகளையுடைய மாணவர்களையே எமது கல்வி முறைமை அதிகமாக உருவாக்குகிறது எனும் பட்சத்திலேயே இதற்கான சரியான மாற்றுவழி அல்லது செய்தேயாகவேண்டிய திட்டமிடல் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாயிருக்கிறோம்.

பொதுவாக கலைத்திட்டத்தினூடான அடைவுமட்டங்கள் தொடர்பான அறிவு ஒரு படிமுறையினூடாகவே இறுதியில் ஆசிரியர்களை வந்தடைகிற போதிலும் மாணவர்களின் அடைவு மட்டத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் மாத்திரமே. எனவே கற்பித்தலினூடாக மாணவனது நடத்தை மாற்றம் வலியுறுத்தப்பட வேண்டுமெனின் ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடவேளையின் போது மனப்பாங்கு விருத்தி தொடர்பான பங்களிப்பையும் வழங்குகிறோமா என்பதுபற்றி உறுதி செய்துகொள்ளுதல் அவசியமாகும்.

மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் பரீட்சைமைய கல்விமுறையை இறுகப்பற்றியர்களாய் அதற்கான அத்தியாவசியத்தை நிரப்பிவிட வேண்டுனெவே அனேகமாக முனைகின்றனர். அறிவு, திறன் மனப்பாங்கு ஆகிய மூன்று கூறுகளது விருத்தியினூடாக முயற்சித்தாலேயன்றி ஒரு மாணவனது நடத்தை மாற்றத்தை உறுதியாக மாற்றிவிடல் சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் கருத்திற் கொள்ள மறுக்கிறார்கள். (வெறுமனே அறிவை மட்டும் குறிக்கோளாக கொள்ளுமொரு பிள்ளை பாடசாலை கல்வியை நாடவேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் சமவயது குழுவினருடன் இயங்க வேண்டிய தேவையும் இராது.) நடத்தை மாற்றமே கல்வியின் எல்லையென கருதும் போது மாத்திரமே அறிவுடன் திறன்களும் மனப்பாங்கும் விருத்தியடைய வேண்டியதன் அவசியம் பற்றி ஆசிரியர்கள் சிந்தித்து செயலாற்ற தலைப்படுவார்கள்.

கல்வியின் நான்கு தூண்கள்

21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி ஆராய்ந்த சர்வதேச ஆணைகுழுவின் அறிக்கையில் (Delors Report--1996) மனித குலம், தனியாட்கள், நாடுகள் என்பவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான கல்வியின் பங்கு பற்றி விரிவாக கூறப்பட்டது. இவ்வறிக்கையானது மனித வளர்ச்சிக்குத் தேவையானவை அனைத்தும் கல்வியில் பொதிந்து கிடப்பதாக கூறியது. அத்துடன் நான்கு தூண்கள் அடிப்படையில் கல்வி பற்றிய தொலைநோக்கொன்றையும் இவ்வறிக்கை முன்மொழிந்தது. அவையாவன.

1. அறிவை பெறும் வகையில் கற்றல்  (Learning to know)

பரந்த பொது அறிவு, சில பாடங்களில் ஆழமான அறிவு, பிற்கால வாழவில் சுயமாக கற்க உதவும் திறன்கள் பற்றிய அறிவு என்பவற்றை இது உள்ளடக்கும்.

2. செய்வதற்கு கற்றல் (Learning to do)

தொழில்த்திறன்கள், வெவ்வேறு நிலைமைகளில் பணி புரியவும் குழுக்களில் சேர்ந்து வேலை செய்யவும் தேவையான பரந்த தகைமைகள் என்பவற்றை இது கருதும். முறையான பாடநெறியினூடாகவும் சமூக வேலை அனுபவங்களினூடாகவும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

3.வாழக்கற்றல் (Learning to be)

ஒருவர் சில அடிப்படை விழுமியங்களைக்கொண்டு தனது ஆளுமையை விருத்தி செய்யும் ஆற்றல் கூடிய சுயாதீனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுதல் பற்றியது. அதாவது கல்வியானது ஒருவரின் நினைவாற்றல், காரணங்காணுதல், உடல் ஆற்றல் தொடர்பான திறன்கள் என்பவற்றை கருத்திற் கொள்ளல் வேண்டும்.

4. இணைந்துவாழக் கற்றல் (Learning to live together)

மற்றவர்களுடன் சேர்ந்து வாழக்கற்றல் எனும் நான்காவது நோக்கு அமைதியையும் மற்றவர்களையும் மதித்தல், பிறரை புரிந்துக்கொள்ளுதல், தனியாட்களும் சமூகங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு வரவேற்கும் மனப்பாங்கை குறிக்கின்றது.

சர்வதேச ரீதியாக பயன்படுததக்கூடிய ‘கல்வியின் நான்கு தூண்கள்’ பற்றிய இப்பரிந்துரையை அடியொற்றியே இலங்கையில் கல்வியின் இலக்குகள் வகுக்கப்பட்டன. தொடர்பாடல் சமூக உயிரியல், பௌதீக சுற்றாடல், அறவொழுக்கம், சமயம், ஓய்வு நேரத்தை பயன்படுத்தல், கற்பதற்கான திறன்களை கற்றல் என்னும் பல்வேறு விடயங்கள் தொடர்பான தேர்ச்சிகளை மேம்படுத்தல் இவ்விலக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பாடசாலை கல்விக்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்ட புதிய கல்வியியல் இலக்குகளில் படைப்பாற்றலுக்கான திறன்கள், துருவி ஆராயும் திறன்கள், அணியாக சேர்ந்து பணியாற்றும் திறன்கள், அறிவை புதுப்பித்துக் கொள்ளவும் அதனை பரிசீலனை செய்யவும் தேவையான திறன்கள் என்பனவும் அடங்குகின்றன. 

இத்தகைய நவீன இலக்குகள் அடையப்படவேண்டி எடுக்கப்படும் முயற்சிகள் ஒருவனது நடத்தைமாற்றத்தை உறுதியாக கணிக்கும் அளவுகளாக இருப்பதுடன் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றினதும் விருத்தி தொடர்பாகவும் தெளிவினை எற்படுத்தும். எனினும் இலங்கையில் உள்ள பாடசாலை நிருவாகங்களும் ஆசிரியர்களின் மனநிலையும் அத்தகைய இலக்குகளை அடைய போதுமானதாக இருக்கிறதா என்றால்… சந்தேகமே.

குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழ்நிலையானது, மாணவர்கள் மத்தியில் மாத்திரமின்றி ஆசிரியர்கள் மத்தியிலும் பாரிய மனஅழுத்தத்தினையும் எதிர்மறையான நடத்தை மாற்றங்களையும் தோற்றுவித்திருக்கிறது. அத்துடன் சூழ்நிலையால் தடைப்பட்ட கலைத்திட்ட சுமைகளும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைக்கோலங்களும் கூட கற்றல்கற்பித்தல் செயற்பாட்டின் போக்கினை செயற்கைத்தன்மையுடையதாக்கி பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் விதத்தில் மாற்றமடைய வைத்திருக்கிறது. இத்தகைய திடீர் மாற்றங்களானது கல்வியின் குறிக்கோள்களை திசைத்திருப்பி மீண்டும் பரீட்சைமையக் கல்வியின் நடைமுறையினை தோற்றுவிக்கும் ஆபத்தினை நோக்கி நகர்கின்றமையை அவதானிக்க முடிகிறது. 

எவ்வாறெனினும் பிள்ளையின் நடத்தையை சமூகத்திற்கு ஏற்றாற் போல மாற்றவியலாத கற்றல் நடைமுறைகளின் மீது  ஆசிரியர்களோ மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை உருவாக வேண்டும்.

எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு

(குறள் 426)

கல்வியினூடாக மனிதன் சமூக இயல்பினனாக வேண்டும் என்பதையே இக்குறள் வலியுறுத்துகிறது. எனில் அவனது நடத்தை மாற்றமே இங்கு பிரதானமாக கவனிக்கப்படுகிறது.

Sunday, April 3, 2022

குளம்பொலி – பிரமிளா பிரதீபன்

By On April 03, 2022

 பிரார்த்தனைக்கிடையில் வேறேதோவெல்லாம் தோன்றி மறைந்தது.

தான் கன்னியஸ்த்திரியாகிய கடந்த பதினொரு வருட காலப்பகுதியில் இதுவரை செய்யத் துணியாத ஒன்றை செய்யப் போகிறோம் என்பது கூட ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

‘அருள் நிறைந்த மரியே வாழ்க. கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே …… பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீயே…’

அடுத்த வரியை மறந்துவிட்டவள் போல, ஆன்யா ஒரே வரியை மீட்டிக் கொண்டிருந்தாள். திடீரென பாதியில் எழுந்து வெளியேறினாள்.

மெல்லிய சாம்பல் வண்ண பூசலுக்குள் உள்நுழைவதாய் பொழுது மாறத் தொடங்கியிருந்தது.

திரும்பும் திசையெங்கிலும் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்டிருந்த அளவிற்கு மிஞ்சிய தூய்மையும். பெருத்த நிஷப்தமும், புனிதமான அந்த மடத்தை முழுவதுமாய் நிறைத்துக்கொண்டிருந்தன. வேகமாக கடந்து சமயலறைப்பக்கத்தை அண்மித்தாள்.

நீண்ட சாப்பாட்டு மேசையை தாண்டும் போது, காயவிடப்பட்ட கன்னியாஸ்த்திரிகள் சிலரின் ஆடைகள் கொடியில் தொங்கின. அவ்வாடைகளின் இடைக்கிடையே உள்ளாடைகளும் பாதி தெரிந்த நிலையில் மறைக்கப்பட்டிருந்தன.

பதட்டத்துடன் நடையைத் தொடர்ந்த ஆன்யா, சிறுநொடி நிதானித்து திரும்பிப் பார்த்தாள். இளநீல வண்ணத்திலான மார்பக அங்கியினூடாக காற்றின் மெல்லிய அசைவை அனுமானிக்க முடிந்தது.

தன் வலது கையின் பெருவிரல் தவிர்த்த ஏனைய விரல்கள் நான்கையும் உள்ளங்கைப் பொட்டிற்கிடையே அமத்திப்பிடித்தவாறே, வேகமாக எட்டி தன்னறைக்குள் நுழைந்தாள். பட்டென கதவை தாழிட்டுக் கொண்டாள்.

இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துப் பார்த்தாள் போதாதென்று தோன்றியது. மேசையிலிருந்த ஈரடிசுவொன்றால் கண்களையும் கன்னங்களையும் மீண்டுமொருமுறை ஒற்றியெடுத்து, அவசரமான முறையில் கைகளுக்குள் சுருட்டிக் கசக்கி அந்த கடதாசியை குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தாள்.

ஏற்கனவே வீசப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த பஞ்சுக்குவியலும் ப்ளாஸ்டர்களும் நிறைந்திருக்கும் குப்பைகூடையை பார்க்கச் சகிக்காமல், தள்ளி அதனை மேசைக்கடியில் ஒளித்தாள்.

நிமிடநேரத்தையும் தாமதிக்க அவள் விரும்பவில்லை. பாதியளவு தன்னுருவம் காட்டும் கண்ணாடிக்கு முன்னே நின்றுக்கொண்டாள். முகத்தில் வழமைக்கு மாறான கருமையும் சோர்வும் மிகுந்து வழிந்திருப்பதாய் ப்பட்டது. எப்போதுமாய் சிவந்து தென்படும் அழகான அந்த இதழ்களில் ஆங்காங்கே வறட்சியான வெடிப்புகள் தோன்றியிருந்தன.

பரபரவென ஆடையை களையத்தொடங்கி இடுப்பளவில் அதனை நிறுத்திப்பிடித்தபடி வெட்டியகற்றப்பட்ட தன் ஒற்றை மார்பைத் தேடினாள். ஒட்டி மூடிய ப்ளாஸ்டரை அகற்றிப் பார்க்குமளவிற்கான தைரியம் நிச்சயமாய் அவளிடத்தில் இருக்கவில்லை.

திடீரென்றேதான் இப்படி ஒரு ஆசையும் கூடத் தோன்றியது. பார்க்க விரும்பாத பாதியளவு உடலை கண்ணாடிபிம்பத்திலிருந்து மறைத்தபடி அடுத்தபாதியின் வனப்பை தானே இரசிக்க விரும்பினாள்.

ஐவிரல்களுக்குள் மூடினாற்போல் தனதந்த மார்பை பொத்திப்பிடித்தாள். மெதுவாக மேடேறியிருக்கும் தசைப்பகுதியை வருடிக்கொடுத்தாள். உடற்தசையை மிஞ்சிய பிரிதொரு மென்மை மார்பகத் தசைக்குள் நிரம்பியிருப்பதாயிருந்தது. பிம்பத்தினின்றும் பார்வையை அகற்றி குனிந்தொருமுறை தடவிக்கொண்டாள்.

‘பிதாவே நான் என்ன செய்கிறேன். ஏன் என் மனவலிமையை குறைத்துக்கொண்டிருக்கிறாய்? எந்த உபயோகமுமேயற்ற ஒரு தசைதுண்டத்திற்காக ஏங்கித்தவிப்பது நான்தானா? எதை நோக்கி சிந்திக்கிக்கிறேன்? நானா என் பிம்பத்தை இரசிக்கத் தவிக்கிறேன். இல்லாமல் போன என் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்?’

இரு கைகளாலும் முகத்தைப் பொத்தி விசும்பியழத் தொடங்கினாள். அதே நிலையில் முழந்தாளிட்டமர்ந்து விசும்பலை நிறுத்தாமல் வேகமாக ஜெபித்தாள்.

‘யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…

யேசுவே உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவும்…’

ஒரேயொரு தடவை கதவு தட்டப்பட்ட சப்தத்தால் வேகமான அந்த ஜபம் நிறுத்தப்பபட்டது. அநேகமாக ரோஜினாவின் செய்திகொண்டுவரும் செய்கையது.

சிஸ்டர் ஆன்யா ஆடைகளை சீர்படுத்திக்கொண்டு கதவைத் திறந்தாள்.

‘சிஸ்டர் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’

அனுமதி கேட்காமலேயே அறைக்குள் நுழைந்து, அச்சிறிய பொதியை மேசை மீது வைத்தபடி ஆன்யாவை பார்த்தாள் ரோஜினா. அப்பார்வையில் தேவைக்கு மிஞ்சிய பரிதாபம் கசிந்திருந்தது. வேறெதையும் கேட்டு விடாமல் உடனடியாகவே அறையிலிருந்தும் வெளியேறினாள்.

‘என்னவாயிருக்கும்? யார் அனுப்பியிருப்பார்கள்?’

ஊகிக்கும் மனநிலையா இது. வழமை போல பாதர் பரெட்ரிக்கிடம் இருந்து புத்தகங்கள்…? சிஸ்டர் சாயனாவிடமிருந்து பழங்கள்…? அக்காவிடமிருந்து ஏதேனுமா? பிரித்து பார்க்கத் தோன்றாமல் அப்பொதியினை உற்று அவதானித்தவாறு அமர்ந்திருந்தாள்.

கண்களால் துளைத்தப்பொதியினை திறக்க முனைந்தாள். பொதியின் மேற்பகுதி அசைந்து கொடுத்தது.

மடிக்கப்பட்ட அதே நேர்த்தியுடன் பொதிக்கடதாசிகள் ஒவ்வொன்றாக தம்மை விடுவிக்கத் தொடங்கிய மறுகணமே அடைபட்ட சுவாசத்தை வெளியேற்றத்தவிக்கும் சில பட்டாம்பூச்சிகள் பெட்டியை துளைத்துக்கொண்டு வேகமாக வெளியேறின. எதிர்பாரா அந்த திடீர் வெளியேறலால் விசிறப்பட்ட துளி வர்ணங்கள் அவ்வறையின் வெண்சுவற்றில் ஆங்காங்கே படிந்து கொண்டன.

அதுவொரு அதிசயப் பொதியென்பதில் சந்தேகமில்லைதான். ஆன்யா குனிந்து ஒவ்வவொன்றாய் வெளியில் எடுத்தாள்.

மடித்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையொன்று. அதற்கு ஒத்துப்போகுமாப் போல் கற்கள் பதித்த ஒரு சோடி வளையல். சிறிய அட்டிகை. இன்னும் இரு காதணிகள். கூடவே கூர் வடிவ அடியுடைய பாதணிகள்.

கூரடியுடைய பாதணிகள் எழுப்பும் புதுவிதமான நடையோசையில் எப்போதுமாய் ஒரு மயக்கம் இருப்பதுண்டு. குதிரைக் குளம்பின் தாளம் தரும் கம்பீரத்தையொத்த நடையை தனக்குரியதாக்கும் எந்த பெண்ணுமே, மிகுந்த திமிரையும்; மிதப்பான பார்வை விசிறலையும் வலிந்துப் பெற்று தனக்குத்தானே அதனைப் பொத்தி மறைத்துக்கொள்கிறாள்.

ஆன்யா சிரித்துக் கொண்டாள். இன்னும் துழாவிப்பார்த்தாள்.

ராட்சத மௌனத்தெறிப்புடன் அழகான பெண்பொம்மையொன்று வெளிவந்தது.

நடுங்கும் விரல்களால் அதனை தொட்டுப்பார்த்தாள். விபரியக்கவியலா வைராக்கிய ரேகைகளை முகமெங்குமாய் அது படர விட்டிருந்தது. மிக இறுக்கமான உணர்வுடைய பெண்ணாக அது தன்னை வெளிப்படுத்த விரும்புவதாய் தோன்றியது.

ஆன்யா அப்பொம்மையின் வனப்பை அதிகரிக்க விரும்பினாள். அதன் உதடுகளை அசைத்திழுத்து சிரிக்கப் பண்ணினாள். கண்களுக்குள் ஊதி உயிர் கொடுக்க எத்தனித்தாள்.

‘புற்றுநோய்காரியா நீ? அநியாயத்திற்கு முறைத்துக் கொண்டிருக்கிறாயே’?’ கன்னங்களை இலேசாக கிள்ளி வைத்தாள்.

அதுவொன்றும் அத்தனை சிரமாக இருக்கவில்லை. அந்த குட்டி பெண்பொம்மையை இயல்பான அழகுடன் மாற்றி வைக்க ஆன்யாவால் முடிந்தது. பொம்மையின் மொத்த உருவத்தையும் பார்வைக்குள் ஏற்றி இரசித்தாள்.

இயல்பை மாற்றிக் கொள்ளுதலை யாரால்தான் ஏற்க முடியும்!

எதிர்பாரா சீற்றத்துடன் யன்னல்வழி நுழைந்த திடீர் காற்று, அப்பொம்மையை அவளுடைய கைகளிலிருந்து தட்டி கீழே வீழ்த்தியது. மேலும் கோரமாக அறையை ஆட்கொண்டு ஆடவும் தொடங்கியது.

ஆன்யா யன்னல் திரைச்சீலைகளை வெறித்துப் பார்த்தாள். பொம்மையை எடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அதன் பொன்நிற முடியை கோதி விட்டாள். பொம்மையின் கைகளை அழுத்திப்பிடித்து ‘பயப்படாதே…. பயப்படாதே….’ என்றாள்.

காரணமின்றி மனது அச்சப்பட்டது.

சட்டென ஏதோ தோன்றிட யன்னலை அகலத்திறந்து எட்டிப் பார்த்தாள். மொத்த கருமையும் உள்ளே வரும் ஆவேசத்துடன் மிதந்து கொண்டிருந்தது. இயலுமளவிற்காய் எக்கிப்பார்த்து யாருமில்லையென உறுதி செய்துக்கொண்டாள். கைகளை மேலே உயர்த்தி பெரும் விசையுடன் உந்தி, மதிலுக்கு அப்பால் போய் விழும்படி கட்டளையிட்டு, அப்பொம்மையை தூரமாய் வீசியெறிந்தாள்.

அத்தனை ஆசுவாசம் அவளுக்கு.

இனியெதுவும் இருக்க போவதில்லையென்று எண்ணிக்கொண்டே பெட்டியை தலைகீழாய் திருப்பித் தட்டினாள். பெட்டியின் இடுக்கில் மறைந்திருந்த மின்மினிப் பூச்சொன்று விரைந்தோடி வெளிவந்தது. அது ஒளிர்வித்த மென்பிரகாசத்தை கைகளுக்குள் ஏந்திக்கொள்ள வேண்டி, அதன் பின்னாலேயே ஆன்யா ஓடத்தொடங்கினாள்.

மீண்டும் ஒரேயொரு தடவை தட்டப்படும் கதவின் சப்தம்.

கதவு திறந்தேயிருந்ததால். ரோஜினா உள்ளே வந்திருந்தாள்.

‘இன்னுமே தெறந்து பாக்கலயா சிஸ்டர்?’

‘பாக்கலயா…? இன்னுமா…?’

ஆன்யா மேசையை பார்த்தாள். வைத்த அதே இடத்தில் அதே நிலையில் அப்பொதியிருந்தது.

சுற்றிலும் ஒருமுறை அறையையும் ரோஜினாவையும் பார்த்துக்கொண்டாள். சுவற்றில் ஒட்டிக்கொண்ட வர்ணத்துளிகளை தேடினாள். மெதுவாக தன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை உள்ளங்கைக்குள் அப்பிக்கொண்டாள்.

வெளியேற்றப்படா ஏதோ ஒரு இரகசியம் உடைந்து அறையெங்கும் வியாபித்திருப்பதாக மனது நம்பியது.

‘பாதர் ப்ரெட்ரிக் வந்திருக்கிறார். உங்களுக்கு தொந்தரவில்லன்னா சந்திக்கலாம்னு சொல்ல சொன்னார்’

‘இதோ ரெண்டு நிமிஷத்துல வாறேன்னு சொல்லு’ ஆன்யா பரபரப்புடன் ஆயத்தமானாள்.

தேவையேயில்லாமல் மனது வெறுமையடைந்திருப்பதை மாற்றிட, புன்னகையை வலிந்தேற்றிக் கொண்டவளாய் மெல்ல நடந்து வரவேற்பறையை அடைந்தாள்.

முன்வாசல் வழி பூந்தோட்ட கதிரையொன்றில் பாதர் ப்ரெட்ரிக் அமர்ந்திருந்தார். வராண்டாவின் மஞ்சள் நிற மின்குமிழின் பிரகாசத்தை ஏந்தி குரோட்டன் செடிகள் தத்தளித்துக் கொண்டிருந்தன.

‘குட் ஈவினிங் பாதர்’

பாதர் ப்ரெட்ரிக் முக மலர்ச்சியுடன் ஆன்யாவை நோக்கி ‘சுகமா இருக்கியா ஆன்யா?’ என்றார்.

அவள் தலையாட்டிக்கொண்டாள். வார்த்தைகள் வர மறுத்தன. தன்னில் ஏற்பட்டிருக்கும் ஏதோவெல்லாமான மாற்றங்களை தன் தந்தையை போன்றிருக்கும் பாதர் ப்ரெட்ரிக்கிடம் ஒப்பிக்க வேண்டுமென்பதை மட்டுமே ஆன்யா யோசித்தாள்.

‘ஆன்யா, வலிமை பெறு. துணிவு கொள். அஞ்சாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். உன்னை கைவிடவும் மாட்டார்.’

பாதர் பிரார்த்தனையை போதனையாக சொல்லத் தொடங்கியிருந்தார்.

‘பாதர்… நான் எங்கேயாவது போகணும் பாதர்’

அவரது பதில்பார்வையின் ஆச்சரியம் ஆன்யாவிற்குப் புரிந்தது.

‘நீங்கதான் உதவி செய்யணும் பாதர்?’

‘எங்கையாவதுன்னா?’

‘எந்த அடையாளமும் இல்லாம…. யாரையுமே தெரியாத…. நான் நானா இருக்குற ஒரு இடத்துக்கு’

ஆன்யா…! என்ன பேசுற?’

‘என் மனநிலைய புரிஞ்சிக்க உங்களால மட்டுமே இப்போதைக்கு முடியும்னு தோணுது பாதர்’

‘ஆண்டவர் தன் வார்த்தைகளை அனுப்பி உன்னை குணப்படுத்துவார். நீ பதட்டமாகாமல் அமைதி கொள்’

‘ஒரே ஒரு இழப்பு பல விஷயத்த அடையணுன்னு நினைக்க வைக்குது பாதர்’

‘ஆன்யா’

பாதர் அதட்டலாக சத்தமிட்டார்.

‘ட்ரை டூ அண்டஸ்டேண்ட் மீ பாதர்’

ஆன்யா சிறு குழந்தையாய் தேம்பியழுவதை கண்டதும் பாதர் கண்கள் மூடி அடுத்த பிரார்த்தனையை ஆரம்பித்திருந்தார்.

‘Help me not to fear the future but to boldly trust that you are in control when my emotions plunge me down, and when I am in despair ….….’

ஆன்யா தானும் அப்பிரார்த்தனையில் சேர்ந்துக் கொண்டவளாய் தொடர்ந்தாள்.

‘‘And times when I can’t talk and don’t know what to say, help me to “Be still, and know that you are God” Be my comforter, my healer and bring me peace. In Jesus’ name, Amen..’

பாதர் ப்ரெட்ரிக் ஆன்யாவின் நெற்றியில் சிலுவை இட்டார். இரண்டு தினங்களுக்குப்பின் வருவதாய் கூறி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

தான் எதனை யோசிக்கவிழைகிறோமென ஆன்யாவாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை மீறிய எண்ணங்களாகவும். பல நாட்கள் தேங்கி மேலெழுந்த ஏதோ ஒரு உந்தலாகவும்….

முதலாம் வாக்குத்தத்தத்தின் போதான அந்த உறுதி எங்கே போனது? அல்லது நித்திய வாக்குறுதியின் பின் இறுகப்பற்றியிருந்த ஆண்டவரின் பாதங்களை நான் தளர விட்டு விட்டேனா? வெறுமனே ஒரு நோய் தந்த மாற்றம் தான் இதுவென நம்பிட முடியவில்லை. ஏதோவொன்று… அதையும் தாண்டிய வேறேதோவொன்று… புறவுலகை நோக்கி பயணிக்க எத்தனிக்கும் அளவிற்கு அத்தனை முதிர்ச்சியற்று போய்விட்டேனா என்ன?

இல்லையெனில் ஏன் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்? எங்கே பயணிக்க திட்டமிடுகிறேன்?

ஆன்யா தலையை பிய்த்துக் கொண்டாள். அவளது மூச்சின் சீரான சப்தம் வெளியே கேட்பதாய் இருந்தது. இரவு பிரார்த்தனைக்கான மணியோசையும் ஒலிக்கத் தொடங்கியது.

2

புதிதாய் எடுக்கும் மாத்திரைகளின் வீரியம், தோற்றத்தை புரட்டிப் போட ஆரம்பித்திருந்தது. உலர்ந்த தோலின் வெடிப்பும், செதிலாய் உரியும் வெண்நிறமான கணமற்ற ஏதோ ஒன்றுமாய் அதைப்பற்றி யோசிக்க மாட்டாதவளாய் நாட்களை வேகமாக கடத்த பிரயத்தனித்தாள் ஆன்யா.

முடி உதிர்வின் பங்கு இரட்டிப்பின் அளவைத்தாண்டியிருந்தது. ஞாபக மறதியின் எல்லையும் விஸ்தாரமாகியிருந்தது. முதல்நாள் சம்பவங்களைத்தானும் துல்லியமாக மீட்ட முடியா மயக்க நிலையை அவள் வரவேற்கவே செய்தாள். எப்போதுமாய் படுத்தேயிருக்க விரும்பினாள். விழிப்பு நிலையிலும் கண்கள் மூடி வெறுமனே கிடந்தாள்.

இரத்தம், சலம், மாத்திரைகள், தைலம் என்ற பக்கத்தை மறுத்து மறுபக்கம் பார்க்கையில் உதிர்ந்த கேசம் நெளிந்து பறப்பதாய் இருக்கும்.

அவ்வப்போதான பிரார்த்தனைகள் மட்டுமே ஆறுதலைத் தந்தன.

பார்வையாளர்களை அனுமதிக்காதிருக்க வேண்டினாள். ரோஜினாவிடம் சொல்லி அறையின் முகம்பார்க்கும் கண்ணாடியை அப்புறப் படுத்தினாள்.

ஆன்யாவிற்குத் தெரியும். எல்லாமே மாறக் கூடியதென்று… நான்கோ எட்டோ எண்ணிக்கை முக்கியமில்லை. சில வாரப்பகுதிக்குள் இழந்ததெல்லாம் மீண்டும் பெறப்படுமென்பது வைத்தியரின் கணிப்பு. வெட்டியகற்றப்பட்ட ஒற்றை மார்பகத்தை தவிர… ஆமாம் மார்பகத்தை தவிரதான்.

பார்க்க பிடிக்காத அருவருப்பை கண்கள் மூடி தவிர்த்தாள். புதிய உலகொன்றை சிருஷ்டிக்கவே ஆன்யா விரும்பினாள்.

கற்பனையில் சில பிராணிகளை வளர்த்தாள். அவற்றின் பாஷைகளை கற்றுக்கொண்டாள். மீன்களை கடலுக்கடியில் மட்டுமே தேடினாள். பறவைகளை காட்டுக்குள்ளும் பாம்புகளை புற்றுக்குள்ளுமாய் அதனதன் வாழ்விடத்திலேயே அவை இயல்பு மாறாமல் தம்மை வெளிப்படுத்துவதை கண்டு இரகசியமாய் களிப்புற்றாள்.

‘பிதாவே’ என பெருங்குரலெடுதது அவ்வப்போது விளித்தாள். சமயங்களில் மரணத்தை விட கொடுமையான இழப்பு மனநிலையை தாங்கமாட்டாமல் பிதற்றுவாள். தனிமையை மட்டுமே விரும்புவதாய் காட்டிக்கொண்டாள். தொடர்ச்சியாக ஒளிந்து மறைந்து கிடந்திடும் நாட்களை வெறுத்து பிரார்த்தனைகளை மிகக்கெட்டியாக பிடித்தபடி தன்னை திடப்படுத்துவாள்.

இமைகளை திறவாமல் நீண்ட நேர இடைவெளியெடுத்து சிந்திப்பதில் நிறைந்த ஆசுவாசம் கிடைப்பதாயிருந்தது. இருளும் ஒளியும் மாறி மாறி வந்து போனதையும், இரவுகள் மட்டும் நீண்டு கிடந்து அவஸ்த்திப்பதையும் அவள் யாரிடமும் சொல்லாதிருந்தாள். திடீரென எப்போதாவது ‘ஆன்யா எங்கே?’ என்று தேடுவாள்.

பிறந்து தொலைத்தலால்  மட்டும் என்னவாகிவிடப் போகிறது ?

பெண்ணாய்த் தன்னை உணர்தலில் உள்ள திருப்திக்கு ஈடேயில்லையென்பதை நினைக்கும் போதில் மட்டுமே அவளது புலன்களணைத்தும் புத்துணர்வால் நிரம்புவதாய் இருக்கும். அடிவயிற்றில் சில்லுணர்வை படரவிட்ட இதமும் சிலிர்ப்பும் தோன்றி மறையும். கண்கள் திறவாமலேயே சிரித்துக் கொள்வாள். தன்னை புறத்தோற்றத்தில் பெண்ணென அடையாளப்படுத்தும் மிஞ்சிய மார்பகத்தை வாஞ்சையுடன் பற்றுவாள்.

3

பிரக்ஞையற்ற வெற்றுப் பொழுதுகளாய் பிணியின் மீதேறி நடந்த நாட்களை அருவருப்பான கனவென ஒதுக்கியிருந்தாள் ஆன்யா.

கொஞ்சமாக விருந்தினர்களை அனுமதிக்கவும், சிரித்து பேசவும், அவ்வப்போது உலாவித் திரியவுமாய் தொடங்கியிருந்த ஒரு மாலை பொழுதில் கபில நிற பூனையொன்று தானே தன்னுடலை ஸ்பரிசித்து நெளிப்பதை கண்டதும் பிரிக்கப்படாத தனது பரிசுப்பொதி நினைவிற்கு வந்திருந்தது.

பூனைக்கும் அப்பொதிக்குமான தொடர்பு எதுவுமே இல்லையென்று தெரிந்தாலும் ஏன் அப்படி நினைக்கத் தோன்றியதென யோசித்தவாறே அறைக்குள் சென்று அப்பொதியை தேடியெடுத்தாள்.

சிஸ்டர் சாயனாவிடமிருந்து வந்திருந்தது.

உள்ளிருக்கும் பொருள் பற்றிய எதுவித எதிர்பார்ப்புமற்று பரபரவென 

மேற்கடதாசியை கிழித்துப் பிரித்தாள். பொலித்தீனால் உறையிடப்பட்டதாய், வெண்ணிறத்தில் ஒரு மார்பக அங்கி.

‘இதெல்லாம் இனியெதற்கு …?;’

வெகு சாதாரணமாய் பொலித்தீனை அகற்றி விரித்துப் பார்த்தவள் சிலையாக 

சிறுபொழுது ஸ்தம்பித்தாள். ஒற்றை மார்பகம் செயற்கையாக வைத்து நம்ப முடியாத நேர்த்தியுடன் தைக்கப்பட்டிருந்தது. அடுத்தகணமே தனக்கதனை பொறுத்திப் பார்க்கத் தொடங்கினாள்.

கச்சிதமான அளவு.

அதற்கு மேலால் சட்டையை சரிசெய்தாள். துளியளவிலும் வித்தியாசமில்லாமல் அத்தனை பொருத்தமாயும், மாசற்ற நிஜத்தன்மையை ஒப்புவிப்பதாயும் இருந்தது. சத்தமில்லாமல் சிரித்தாள். மீண்டும் மீண்டுமாய் தன் பிம்பத்தை பார்த்து உறுதி செய்து பூரித்துப் போனாள். யன்னலை திறந்து காற்றுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தாள். அப்படியே வான்வெளி பார்த்து கையசைத்து குதூகலித்தாள்.

மிதப்பது போல் தோன்றியது.

இழப்பின் வலியை மீள்நிரப்பும் சிறு துணிக்கையை வேண்டாமென மறுக்குமா மனது ? சூழற் பூக்களெல்லாம் ஒரே சமயத்தில் பூத்தாற் போல் நறுமணக்கலவை உள்நுழைந்து வெளியேறியது.

ஒருசில நாட்களுக்கேனும் போதுமே!

உடல் ஊனமுற்ற உணர்ச்சியுடன் மறைந்து குறுகி இனி நடக்க வேண்டாம். எப்போதுமான நிமிர்ந்த நடையினை இயல்பாக்கி கொள்ளலாம். கண்கள் பார்த்து தயக்கமின்றி பேசலாம்.

ஆன்யா தன்னை சரிபார்த்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேற ஆயத்தமாகிய அதே நொடி தன்னறிவின்றி கால்கள் பின்னோக்கிச் சென்றன. மனம் தடுமாறியது. இயல்பிற்கு மாறான நடுக்கம் மேனியெங்குமாய் பரவியது. இராட்சத பறவையொன்றின் மிகக் கொடூரமான ஓலம் அறையை சூழ்ந்தொலிப்பதான பதைபதைப்பு உருவாகியது.

மீண்டும் ஒரு பிரமைக்குள்ளான உள்நுழைவா?

‘இத்தனை பதட்டத்துடன் முடிவெடுப்பவளா நான்?’

மாயத்தினூடாக எட்ட எண்ணிடும் ஒரு பொய் மகிழ்வு எப்படி சரியானதாகும்?

கேட்டுக்கொண்டிருந்த இராட்சத ஓலங்களின் எதிரொலியை வெளியேற்றுவதாய் எண்ணிக்கொண்டு யன்னல்களை முழுதுமாய் திறந்து வைத்தாள். கண்களை விரக்தியோடு மூடி சில நொடிகள் நிதானமாக யோசித்தாள்.

அற்புதமான அந்த சில நொடிகள் பல மணித்தியாலங்களை விழுங்கி, பெருத்த நீள்பாம்பாகி அவளை அப்படியே தன்வசப்படுத்த தொடங்கியது.


4

சில மணித்தியாலங்கள் தேவைக்கேற்ப நீள்வதால் என்னவாகிவிடப்போகிறது?

சமயங்களில் எதுவென்றாலும்…!

ஆன்யாவின் முகம் பிரகாசித்தது. சுற்றிலும் புதிதாய் சில நிறங்கள் உயிர்கொண்டெழுந்திருப்பதை அவள் அவதானித்தாள். பலநாட்களாக அவளை சோர்வடைய செய்திருந்த இலக்கற்ற தவிப்பு, இல்லாமல் போயிருப்பதான உணர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள்.

எந்த அவசரமுமின்றி தொடர்ச்சியாக செயற்பட அவளால் முடிந்தது.

ஆடையை அகற்றி, அந்த பொய் மார்பகம் தாங்கிய உள்ளங்கியை பிய்த்தெடுத்தாள். அதனை அலட்சியமான பார்வையுடன் உள்ளங்கைக்குள் சுருட்டி குப்பைக்குள் எறிந்தாள்.

நிரந்தரமான சிரிப்பொன்றை முகத்தில் தக்க வைத்தபடி ஆடையை சரிசெய்துக்கொண்டாள். இப்போது தன் பிம்பத்தை பார்க்க வேண்டுமென அவள் நினைக்கவில்லை. ஆனால் தன் புருவமத்தியில் கர்வம் திமிர்த்திருப்பதாய் தோன்றிக்கொண்டேயிருந்தது.

சிறு தயக்கமுமின்றி ஒற்றை மார்பகத்துடனான உடலை நிமிர்த்தி நடந்து அறையிலிருந்து வெளியேறினாள்.

குதிரையின் குளம்பொலி அவளுக்குள் மாத்திரமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.


நன்றி - வனம், இதழ் - 11

Saturday, April 2, 2022

கமீலே டொன்சியுக்சின் ஜோடித் தோடுகள் - பிரமிளா பிரதீபன்

By On April 02, 2022

அந்த ஒருஜோடித் தோடுகளால் மாத்திரம் பேசமுடிகிறதென்பதையும் அவை சதா தன் காதுகளுக்குள் முணுமுணுத்தபடி எதையோ சொல்ல விழைகிறதென்பதையும் வெளியே சொல்ல முடியாத தடுமாற்றத்துடனேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் மயிலா

இந்தத் தோடுகளைத் தவிர்த்து மேலும் இரண்டு ஜோடித்தோடுகள் அவளிடமிருந்தன. அதிலொன்று செவ்வக வடிவத்திலான பெரிய தோடு. இன்னுமொன்று நட்சத்திர வடிவத்திலான தங்கத்தோடு. அவையிரண்டையும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதையே மயிலா விரும்பினாளென்றாலும் அம்மாவின் திடீர் ஆசையை நிறைவேற்றுவதற்காய் இந்தப் புதிய தோட்டை அணிய வேண்டியதாய் ஆகிப்போயிருந்தது. 

சொல்லப் போனால் எதிர்பாரா நேரத்தில் கிடைத்த பேரதிர்ஷ்டப் பொருளாக வந்தமைந்த தோடிது. 

ஒரு ரயில் பயண அரையிருள் பொழுதில் அம்மாவின் கண்களுக்கு மாத்திரமே தென்பட்ட வெள்ளை கடிதாசி சுருளை என்னவென்று பார்க்காமலேயே தன் கைப்பைக்குள் பதுக்கி வைத்திருந்திருக்கிறாள்.  வீட்டுக்கு வந்ததும் அதனை பிரித்துப் பார்த்தவள் திறந்த வாயை ஓரிரு நொடிகள் மூடவேயில்லை. 

‘யாரோடதுன்னு கேட்டு குடுத்திருக்கலாமேம்மா’

‘முட்டாளா நீ… இது நமக்கு கெடச்ச அதிர்ஷ்டம்டி’

பூ வடிவிலான அந்தத் தோட்டின் சரிமத்தியில் ஒரு கல் விசித்திர ஒளியுடன் மினுங்கி தோடு மொத்தத்தையும் மிகக் கவர்ச்சியானதாக காட்டியது. நிஜத்தில் ஒரு பூ மலர்ந்து விரிந்தது போல பளீரென பிரகாசித்தது.  

‘வைரக்கல்லாயிருக்குமோ!’ இது அம்மாவின் பேராசை. 

‘ச்சே சும்மா கல்லுதாம்மா’

‘இல்லடி இப்புடி மினுங்குதே’

இல்லாமலில்லை. அந்த கல் ஜொலிப்பின் அசாதாரண அழகை மயிலாவும் அவதானித்தாள். 

அம்மாவே அதனை பவ்வியமாய் கையாண்டு மயிலாவின் காது துளைகளுக்குள் பொருத்தினாள். பல தடவைகள் தோட்டுடனான மயிலாவை பார்த்துப் பல்லிளித்தாள். 

‘யார்ட்டயும் சொல்லிடாத என்ன?’

ஏன் எனும் தொனியுடனான மயிலாவின் பார்வைக்கு. 

‘நான் சொல்றத மட்டும் கேளு… கொஞ்ச நாளைக்கு அப்பறமா இது பத்தி விசாரிச்சிக்கலாம்’ என்றாள். 

முதலிரு நாட்களில் அந்தத் தோடுகளால் பேச முடியுமென்பதை மயிலா உணரவில்லை. ஆழ் உறக்கத்தின் பின்னரான ஏதோ சில குழப்பமான நினைவுகளும் நடுசாம விழிப்பில் தன்னை எரிச்சல் படுத்திய அந்த முணுமுணுப்பும் தோட்டுடனானதென்பதை நம்புவதற்கும் அவள் தயாராக இருக்கவில்லை. 

மூன்றாம் நாளில் உச்சிவெயில் ஆற்றுக்குளியலின் போதே அவள் அதனை அவதானிக்கத் தொடங்கியிருந்தாள். 

‘என்னை நனைக்க மாட்டாயா?’

மயிலா சுற்றிலுமாய் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இருக்கவில்லை. பின் யார்தான் பேசியிருக்க முடியும்! காதின் மிக அருகாமையில் மிதந்து செல்லும் காற்று பேசிவிட்டுப் போகிறதா என்ன? அப்படியில்லையென்றால் இத்தனை மென்மையாக வேறு யார் பேசியிருப்பார்கள்?

மயிலா மூச்சடக்கி அந்த மெல்லிய குரலொலியை துல்லியமாய் செவிமடுத்தாள். 

‘நனைக்க மாட்டாயா?’

‘யார் பேசுறது?’ என்றாள் மயிலா. 

ஒரு கையால் ஓசை வந்த வலது காதின் தோட்டை தடவிக் கொடுத்தபடி “நீயா?’ என்றாள். 

‘நீ கெட்டிக்காரிதான்’ என்றதந்த தோடு.

‘எப்டியிது… நெஜமாவே உன்னால பேச முடியுதா?’

‘முதலில் என்னை நனைத்து விடு பிறகு பேசலாம்’

மயிலா நீரினுள் நன்கமிழ்ந்து நீராடினாள். அதிசயத்தின் உச்சத்தில் பிரமிப்படைந்தாள். அந்த தோடுகளின் வசீகரிக்கும் இனிய குரலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டாள். 

‘ஹே தோடே…. உனக்கு ஒரு பேர் வைக்கணுமே…!’

‘சொல் என்ன பெயர் வைக்க போகிறாய்?’ 

மீனு… திவி… மஞ்சு… இப்டி ஏதாவது?’

‘கமீலே என்றழைக்கிறாயா? அந்த பெயரை உச்சரிக்கும் போது தோட்டின் குரலில் சிறு நடுக்கமொன்றிருந்து. 

‘கமீலே…’ மெதுவாக அழைத்தாள் மயிலா. எந்தப் பக்கம் பார்த்து பேசுவதென்று தெரியாமலிருந்தது அவளுக்கு. 

‘ஆமாம் ஆமாம் அதே பெயர் தான்’

‘சரி… அந்த பேர்ல அப்டி என்ன சந்தோசம் ஒனக்கு?’

‘உனக்கு கமீலேவை தெரியாதா…? 

‘யார் அவங்க?’

‘அவளின் முழுப்பெயர் கமீலே டொன்சியுக்ஸ். புகழ்பெற்ற பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனேவின் முதல் மனைவி அவள்.’ 

மயிலா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

‘பச்சை ஆடை உடுத்திய பெண்’ என்ற ஓவியத்தை பற்றி நீ எதுவும் அறிந்ததில்லையா? அந்த ஓவியத்திற்கு மாடலாக நின்றவள் அவள்தான்.    

‘ம்ம்…’

‘அந்த ஓவியத்திற்காக நிற்கும் போது அணிந்து கொள்வதற்காக ஒரு கழுத்தணியையும் அதற்கு பொருந்திப்போகக் கூடிய ஒரு ஜோடி காதணியையும் விரும்பி தெரிவு செய்து வாங்கிக் கொண்டாள்’

‘ம்ம்’

‘ஆனால் பாவம் அந்தப் பெண். அவளால் அதனை அணிந்து அழகுபார்க்க முடியாமலேயே போனது.’

‘ஏன் என்னாச்சு?’ மயிலாவிற்கு இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் இது ஒரு பொய்யான கதையென்றுதான் அவள் ஊகித்தாள். 

‘நீ நம்பாவிட்டாலும் இதெல்லாம் உண்மை மயிலா’

முதலாவது அதிசயம் அந்தத் தோடு அவளை பெயர் சொல்லி அழைத்தது. இரண்டாவது அவள் இந்தக் கதையை நம்பவில்லையென்பதை கண்டு பிடித்திருந்தது. 

‘ஒனக்கு எப்டி இதெல்லாம் தெரியுது…? நான் கனவேதும் காண்றேனா என்ன?’

‘இல்லை. இதுவல்லாத இன்னும் பல அதிசயங்களையும் நீ உணரக்கூடும்.’

‘அப்போ இதெல்லாம் எப்டி நடக்குதுன்னு சொல்ல மாட்டியா?’

‘நான் கனவுகளாலும் அதீத கற்பனைகளாலும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவள் மயிலா. மோனே தன் ஓவியப்பூக்களில் பல்வேறு இரகசியங்களை ஒளித்து வைத்திருப்பதை போலவும்… பூக்களின் திறந்த இதழ் நுட்பங்களை தன் ஓவியத்தினூடாக காட்டிவிட துடித்ததை போலவும் என்னையும் ஒரு அற்புத பூவாக அவர்கள் வடிவமைக்க விரும்பினார்கள். அப்போதுதான் மலர்ந்ததென்ற தோற்றத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு வைரக்கல்லால் என்னை அலங்கரித்தார்கள்.’

‘ம்ம்’

‘யோசித்துப்பார். கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் உருவான நான் இன்னும் இவ்வளவு அழகுடன் எப்படி இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணின் உணர்வுகளை உள்வாங்கி அவளாகி வாழ்ந்தவள். ஒரு கட்டத்தில் அவளுக்காக ஏங்கியவள். ஒரு நிஜப்பூவின் பவித்திரத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதையே கமீலே டொன்சியுக்ஸ் விரும்பினாள். அவள் என்னை மிருதுவாக ஸ்பரிசித்தாள். தொட்டணைத்து முத்தமிட்டாள். என்னுடன் பேசத்தொடங்கினாள். வரையறைக்கடந்த தன் நேசிப்பினால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்தாள்.’

தோடு பேசிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் அம்மாவிடம் சொல்வதா வேண்டாமாவென மயிலா யோசிக்கத் தொடங்கினாள். திடீரென இடைமறித்து ‘அதுசரி நீ எப்டி இங்க வந்து சேர்ந்த?’ என்றுக் கேட்டாள். 

‘அது தெரியவில்லை. என் வாழ்நாளில் அதிக பொழுதுகளை நான் அடகுக்கடை அழுக்கு லாச்சுகளுக்குள் தான் கழித்திருக்கிறேன். சுத்திப் பொதி செய்யப்பட்ட நிலையுடனேயே எங்கெல்லாமோ பயணித்திருக்கிறேன். கமீலே டொன்சியுக்ஸ் கூட, அவள் மிக விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அடகிலிருந்து மீட்டெடுத்து ஒருமுறையாவது ஒன்றாகச் சேர்த்து அணிந்துவிட வேண்டுமென்று போராடினாள். ஆனால் அவளால் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் போனதால் ஏதோ ஒரு கடையில் நீண்ட காலமாக அடைந்து கிடந்திருந்தேன்.’ 

‘இங்கெல்லாம் பாதி பொம்பளைக நகை செய்றதே அடகு வைக்கத்தான் கமீலே. அது ஒனக்கு தெரியாதா?’

‘இல்லை நான் கொஞ்சம் காலமாவது ஒரு பெண்ணின் அழகு பூரிப்புடன் வாழ ஆசைப்படுகிறேன். நீயும் அப்படி செய்து விடாதே’ 

தோடுகள் இடைவிடாமல் வலது காதிலும் இடது காதிலுமாய் எதையெதையோ பேசிக்கொண்டேயிருந்தன.  அவை பேசுகையில் இரண்டு காதுகளிலும் மென்மையான அந்த நுனிப்பகுதி சில்லிட்டு கூசுவது போலவும் அக்கணத்தில் முழு உடலுமே அத்தோடுகளின் தோழமையை நாடி அவ்வுரையாடலுக்காய் ஏங்குவதை போலவுமாய் மயிலா நம்பத் தொடங்கினாள்.    

எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற அத்தோடுகளின் நட்பை மொத்தமாய் விரும்பினாள். தன்னை அடிக்கடி தனிமைப்படுத்திக் கொண்டு மனதிலுள்ளவற்றையெல்லாம் மணிக்கணக்கில் பேசித்தீர்த்தாள். அத்தோடுகளிரண்டையும் தன் உயரிய நேசிப்பிற்குரிய தோழியாய் மாற்றி யாருமறியாததொரு அரூப உறவை விஸ்தரித்துக் களித்தாள். சமயங்களில் தோடுகளின் தொடர்ச்சியான கதைகளில் மையலுற்று தானே அந்த ‘கமீலே டொன்சியுக்ஸ்’ என்பதாகவும் பாவனை செய்தாள். 

ஒரு ஓவியத்தின் மாடலைப் போல அசையாது ஓரிடத்தில் நின்றுக் காட்டி  ‘இப்டி நிக்கணும்னு தானே ஆசப்பட்ட?’ என்பாள். அவை பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வொலி கழுத்துடன் ஊர்ந்து மிதந்து தன்னை மொத்தமாய் கவர்ந்திழுப்பதாய் சொல்லிக் கொள்வாள். மலைக்காடுகள் மீதேறி சத்தமாய் தோடுகளுடன் சேர்ந்து பாடுவாள். ஆற்று நீருக்குள் தோடுகளை அமிழ்த்தியெடுத்து ஆனந்தப்படுத்துவாள்.  அவ்வப்போது கோபித்துக் கொண்டு பேசாதிருக்கவும் செய்தாள். அப்படியே அவளது மென்மையான ஸ்பரிசத்தை வருடலூடாக  வெளிக்காட்டுவதுடன் அத்தோடுகளது சப்தத்துடனான தொடுகையிலும் இன்புற்றுத் திளைத்தாள்.    

****

ஒரு புதன்கிழமை மாலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த பருமனான மனிதன் வந்துக் கொண்டிருந்தான். வழமை போலவே அம்மா, தண்ணீர் டங்கிக்கு பின்னால் இருக்கும் கூடைக்குள் அமர்ந்து தலையிலொரு துணியைப் போர்த்திக் கொண்டபடி மயிலாவை பொய் சொல்லச் சொன்னாள். 

இத்தகைய திடீர் பொய்கள் உடன் உருவாகும் திறன் மிக்கவையென்பதாலும் தொடர்ச்சியாக சொல்லிப் பழக்கப்பட்டமையாலும் கண்களிலோ உடலசைவிலோ எவ்விதக் குற்றவுணர்ச்சியையும் வெளிக்காட்ட விடாமல் வெகு லாவகமாக வந்து விழப்பார்க்கும். 

அவன் கேட்பதற்கு முன்பாகவே ‘அம்மா கடைக்குப் போயிட்டாங்க’ என்றாள். 

அவன் கோபமாக கண்களை சுழற்றித் தேடினான். 

‘எத்தன மணிக்கு வருவாங்க?’ என்று கேட்டான்.

‘தெரியல’ என்றபடி மயிலா கொடிகயிற்றில் கிடந்த உடைகளை சாவகாசமாக எடுத்து கைகளில் சேகரித்தாள். அவளது முகத்தில் ஏளனம் மிகுந்த சிரிப்பொன்று படர்ந்திருந்தது. 

‘ஒனக்கு எத்தன வயசு பாப்பா’

மயிலா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்துக் கொண்டாள். 

‘ஒரு பதினைஞ்சு பதினாறு இருக்குமா? வாங்குன காச குடுக்காட்டி வேற மாதிரி ஆகிடும்னு ஒங்கம்மாகிட்ட சொல்லிரு சரியா?’ 

அவன் பேசிய விதம் ஒருவிதமான சினத்தைக் கொப்பளிக்கும் தொனியாகவிருந்தது. 

மயிலா பயந்து தலையாட்டினாள். சரிந்திருந்த அந்தக் கூடை மெதுவாய் அசைந்தது. அவன் கண்டு விடுவானோவென்று மயிலா பதட்டமானாள்.

‘நாளைக்கும் இதே நேரத்துக்கு வருவேன். வட்டிக் காசாவது இருக்கணும் சொல்லிட்டேன்’

அவன் அதட்டாலாகச் சொல்லியபடி வாசலில் இங்குமங்குமாய் இருமுறை நடந்தான். வீட்டினுள் எட்டிப் பார்த்தான். சுவரோரம் தென்பட்ட குளியலறை யன்னலில் எக்கித்தாவி உள்ளே பார்க்க முயற்சித்தான். பின் கோபமாக வெளியேறினான். 

அம்மா கைகால்களை உதறிக்கொண்டே கூடைக்குள்ளிருந்து வெளியே வந்து ‘போயிட்டானா?’ என்றாள்.

‘என்ன வெளயாடுறியாம்மா? இனி எனக்கு பொய்யெல்லாம் சொல்ல முடியாது சொல்லிட்டேன்.’

‘வட்டிக் காசையாவது நாளைக்கு குடுத்துறணும்டி. என்ன செய்றதுன்னு ஒன்னுமே புரியல’

அம்மா சட்டென்று மயிலாவின் காதிலிருந்த தோடுகளைப் பார்த்தாள். அவளது கண்களில் மின்னலடித்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். பின் எதற்காகவோ பயந்தவளாய் அவ்வெண்ணத்தை மாற்றி தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை வெளியே இழுத்துப் பார்த்தாள். தாலியென்ற பெயரில் ஒரு துண்டு தங்கமும் அதற்கு காவலாய் இரண்டு மணிகளும் ஒன்றுடனொன்று மோதுண்டு சப்தமெழுப்பின. 

ஒரு மஞ்சள் துண்டை கழுவியெடுத்து அந்தக் கயிற்று மத்தியில் கட்டிக் கொண்டவள் மெதுவாகத் தாலியையும் மணிகளையும் அதிலிருந்து அகற்றி ஒரு கடுதாசியில் சுற்றியெடுத்துக் கொண்டாள். 

‘எவ்வளவு கொடுப்பானோ… எப்டி மீட்டெடுக்கப் போறேனோ தெரியலயே..!’

புலம்பிக்கொண்டே அம்மா வெளியே செல்ல ஆயத்தமானாள்.

***  

நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் காத்திருப்போர் வரிசையில் மயிலாவும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மாவின் படபடப்பு அவளது கைநடுக்கத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

தனக்குத் தேவையான பணத்தைப் பெற முடியாதென்ற கட்டத்தில் மிகுந்த கலவரத்துடன் ஒரு பெண் தனது தோடுகளைக் கழற்றி கொடுத்தாள். அவர்கள் சிறிது நேரத்திற்குள் அதுவும் போதாதென்றார்கள். அவள் அடுத்த நொடியிலேயே அழுதுவிடப் போவதைப்போல மனமுடைந்து ஏதோவெல்லாம் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

அம்மா தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை அடிக்கடி துடைத்தபடியே அதனைப் பார்த்தாள். அம்மாவின் காதிலும் இரண்டு கல்தோடுகளிருந்தன. 

மயிலா யோசித்தவாறே மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான அடிக்கடி வந்துபோகும், அறவும் பிடிக்காத இடமாக இது இருந்தது. 

‘உனக்கு பயமாருக்கா?’ 

மயிலா கிசுகிசுத்த குரலில் தோடுகளிடம் பேசினாள். 

‘ஆமாம்… மிகவும்’

‘பயப்புடாத நீ வைரக்கல்லுன்னு எங்கம்மாக்குத் தெரியாது’

‘இது போன்ற கடைகளில் சிறைப்பட்டிருத்தலென்பது தீரா வேதனை மயிலா’

‘நாங்க மட்டும் விரும்பியா இதையெல்லாம் பண்றோம். இந்த எடத்துல உக்காந்திருக்குறப்போ மனசு படுறபாடும் தவிப்பும் பத்தியெல்லாம் உனக்கெப்படி தெரியப்போகுது. ஆசையாசயா வாங்குன நகையெல்லாம் ஒன்னொன்னா பறிபோன இடமிது’

‘எனக்குத் தெரியும். கமீலே டொன்சியுக்ஸ் இறந்த பின்னாலும் அவள் விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அணிவித்துவிட வேண்டுமென்று மோனே எத்தனையோ முயற்சிகளெடுத்திருக்கிறார். யாரிடமோவெல்லாம் கடன் கேட்டு கடிதங்களெல்லாம் எழுதியிருக்கிறார். அப்படியும் அது சாத்தியப்படாமல் போனபோது… அவள் இத்தகைய அணிகலன்களுக்காய் எத்தனை தூரம் தவிப்புடன் இருந்திருப்பாளென்றும் அது எத்தகைய துயரத்தையும் சொல்ல முடியாத மனவலியையும் அவர்களுக்கு அளித்திருக்குமென்பதையும் நான் நன்றாகவே அறிந்திருந்தேன்’

‘எங்கம்மாவும் அப்பிடி அழுதுருக்காங்க கமீலே. சாமிய திட்டிக்கிட்டே அழுவாங;க. ஒருதடவ நீ இப்புடி கைலயும் கழுத்துலயும் மாட்டிக்கிட்டு மினுக்குறியே எங்களுக்கு மட்டும் ஒரு பொட்டுமணி இல்லாம போற அளவுக்கு வாட்டுறியேன்னு சொல்லிகிட்டே அம்மன் படத்த எடுத்து பீரோ உள்ளுக்கு பூட்டி வச்சிட்டாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு’

‘ஆமாம். ஆசையாய் வாங்கிய அணிகலன்களை அணிந்து கொள்ள முடியாத துர்பாக்கியத்தை பல பெண்கள் காலங்காலமாய் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு நானே சாட்சி. என்னை எவருக்குமே தொடர்ச்சியாக அணிய முடிந்ததேயில்லை தெரியுமா?’

அடுத்தது அம்மாவின் முறை. அம்மா பரிதவிப்புடன் தன் கையிலிருந்த சுருளையும் அடையாள அட்டையையும் நீட்டினாள். அவர்கள் அதனைச் சரிபார்த்தபடி சிறிது தாமதித்து எதையோ சொல்லும் போது அவளது முகம் சட்டென மலர்ந்தது. 

மயிலாவிற்கு எங்கிருந்து வந்ததென்று தெரியாத அந்த பயமும் நடுக்கமும் அகன்றது. மெதுவாகக் கையுயர்த்தி தோடுகளை ஒரு தடவை தடவிப்பார்த்துக் கொண்டாள். 

‘இல்லாம போயிருமோன்னு நினைக்குறதால வரும் பயம் அதிகமா ஆசப்பட வைக்குதில்ல…!’

‘என்ன சொன்னாய் புரியவில்லை’ என்றது தோடு.

‘இல்ல ஒன்னுமில்ல… உனக்கு இப்போ நல்ல காலம்னு சொன்னேன்.’ அவள் மீண்டுமொரு முறை இரண்டு தோடுகளையும் மென்மையாகத் தடவிக் கொடுத்தாள். 

‘உன் ஸ்பரிசத்தில் நான் கமீலே டொன்சியுக்சை உணர்கிறேன் மயிலா’

‘நெஜமாவா..?’

‘ம்ம.. அவளைப் விடவும் நீ என்னை நேசிக்கிறாய் என்றே தோன்றுகிறது.’

கமீலேவின் இந்த வார்த்தைகள் ஒரு இசையென மயிலாவின் நெஞ்சத்தை குழைந்தெடுத்தது.    

‘போகலாம்டி’ என்றபடி அம்மா வேகமாக நடந்தாள். மயிலா பின்னாலேயே ஓடிச்சென்றாள்.  

***

தோடு பற்றிய பல்வேறு வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டன. அத்துடன் மயிலா தனியாகப் பேசிக்கொண்டு திரிவது பற்றியும்.

எல்லா கல்லும் எல்லோருக்கும் ஒத்துப்போகாதாம். ஒருசில கற்கள் பதித்த தோடுகளால் பித்துப்பிடித்து அலைய வேண்டி வருமாம். அப்படியே ஆளையே இல்லாமல் ஆக்கிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.  

அம்மா கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள். 

‘அதக் கழட்டி வச்சுருடி’ என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள்.  ஒருசிலர் அதனை வைரக்கல்லாயிருக்குமென சொல்லியிருந்ததால்  ‘கொண்டுபோய் கேட்டு பார்த்தா பெரிய வெலைக்கு வித்துரலாம்’ என்றபடி கனவு காணவும் ஆரம்பித்தாள்.

நாளுக்குநாள் இந்தத் தோடுகள் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கத் தெடங்கின. அதனை நல்ல விலைக்கு வாங்கி தாங்களே விற்றுக் கொள்வதாயும் அம்மாவிடம் சிலர் சொல்லியிருந்தார்கள்.

‘முருகேசு மாமா இருவதாயிரம் ரூவா தாரேங்குறாரு. அவருகிட்ட குடுத்துருவமா? அது பித்தள தோடா இருந்தா கூட நாம காச திருப்பித்தர வேணான்னு சொல்றாரு.’

‘அடகு கடையில கேப்பமாடி?’ 

‘நம்ம சகுந்தலா புருசன் நகை கடையில தான் வேல செய்யுறாராம். அவருகிட்ட குடுத்து கேட்டுப்பார்க்க சொல்லுவமா?’

‘இல்லன்னா பேங்குல கொண்டு போய் வச்சாலும் தெரிஞ்சுரும் இல்லயா?’

அம்மாவின் ஆலோசனைகள் நேரத்திற்கொன்றாய் மாற்றம் அடையத் தொடங்கியது. 

மயிலா பதில்களற்று துயரமடைந்திருந்தாள். 

‘நீ என்ன விட்டுப் போறத யாராலும் தடுக்க முடியாது போல கமீலே’ என்றாள்.’ 

‘என்னைக் காப்பாற்ற எதுவுமே செய்ய மாட்டாயா? என்னை மீண்டும் சிறைப்படுத்தப் போகும் இத்திட்டங்களுக்கு நீயும் உடந்தையாய் இருக்கிறாயா என்ன?’

‘இல்ல கமீலே உன்னோட இருக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா உணர்றேன். ஆனா எங்கம்மாகிட்ட இதயெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல…’ 

‘என்றாலும் இத்தனை பெறுமதியான என்னை விற்பதை விட அணிந்து அழகு பார்த்தல் தான் சிறந்ததென்று உனக்கோ உன் அம்மாவிற்கோ தோன்றவில்லையா….?’

‘இல்லாமலா பின்ன…? உன்னோட கமீலே டொன்சியுக்ஸ் அவ்வளவு ஆழமா உன்ன நேசிச்சிட்டு அப்பறம் எதுக்காக அடகு வச்சாங்க சொல்லு…?’

‘புரிகிறது மயிலா. ஆனால் நான் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறேன். என்னை பற்றிய  எந்த சரியான விபரமும் இன்னும் உங்களுக்கு தெரியாது. அப்படியிருக்கையில்  உங்களது திட்டங்களும் செயல்களும் பேராசையாக தானே இருக்க முடியும். தவிரவும் என்னை விற்று கிடைக்கும் பணத்தில் உங்களது மொத்த வாழ்வும் மாற்றமடையக் கூடுமென்பதற்கு என்ன ஆதாரம்? என்னை பொருத்தவரை யாரிடமோ நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் என்பதுவும் கிடைத்த அதிர்ஷ்டத்தை உங்கள் முட்டாள்தனத்தால் இழக்க போகிறீர்கள் என்பதுவுமே நிஜம்’

எல்லாமே சரியென்பதாவே இருந்தது. ஆனாலும் வேறென்ன தான் செய்துவிட இயலும்? இந்தத் தோட்டை விற்பதால் கிடைக்கும் ஒரு தொகைப் பணமா இல்லையேல் அழகும் கவர்ச்சியும் கூடவே பேசும் திறனையும் கொண்டிருக்கும் மனதிற்கு மிக நெருக்கமான இந்த ஒரு ஜோடித் தோடா? 

எந்த பக்கமாய் யோசித்தாலும் தோடு என்பதே பதிலாய் அமைந்தது. எனினும் எவ்வாறு அதனை தக்கவைத்துக் கொள்வது? 

ஓரிரு நாட்கள் தோடுகளுடன் பேசாமல் தனியாக யோசித்தாள் மயிலா. அந்த கமீலே டொன்சியுக்சை போல அல்லது மோனேவை போல நானும் ஒருநாள் தவித்து அழுது ஏங்க வேண்டுமா என்ன? நானும்தான் இந்தத் தோடுகளை அளவற்று நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்றாலுமே வெறும் நேசிப்பை மாத்திரம் ஆதாரமாக்கிப் பிடித்தவொன்றை தக்கவைத்துக் கொள்ளுதலும் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. 

மயிலா தோடுகளிடம் சொன்னாள். 

‘என்ன மன்னிச்சிடு கமீலே. நானும் ஒனக்காக ரொம்ப ஏங்குவேன்.’ 

நாட்களின் நகர்வில் தோட்டின் உண்மையான பெறுமதி சிறுகச் சிறுக வெளிப்பட்டது. அம்மா அதனை மயிலாவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி மிகப்பத்திரமாய் பாதுகாக்கத் தொடங்கினாள். அவளது அலுமாரிக்குள்ளேயே வைத்து அழகு பார்த்தாள். இரகசியமான முறையில் பெருந்தொகையளவான பணத்திற்கு அதனை விற்பதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொண்டாள். 

இன்னும் ஓரிரு தினங்களில் தோடு கைமாறப் போகிறது எனும் நிலையில், மயிலா தவித்தாள். வேகமாக நடந்தாள். அவ்வப்போது தடாரென அமர்ந்து பெருமூச்சு விட்டாள். வேறொரு தோட்டினை அணிந்துக்கொள்ள மனம் ஒப்பா நிலையில் தன் வெறுமையான காதுகளை அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டாள். கமீலேவுடன் பேச வேண்டுமென ஏங்கினாள். 

இரவுகளைக் கடக்கப் பெரும் சிரமாயிருந்தது. இறுதியாக ஒருதடவை அத்தோடுகளை அணிந்து… ஆசைத்தீர அழகு பார்த்து… கொஞ்சம் அதனுடன் பேசி… மயிலாவை ஏதோ ஒன்று உந்தியது. 

இருளைப் பொருட்படுத்தாமல் பழகிய நிதானத்தில் அந்த அலுமாரியிடத்தே ஓடினாள். கசிந்தொழுகிய மெல்லிய நிலவொளி பரவி அச்சூழலை தெளிவாக்கியது. சத்தம் வராமல் அலுமாரியைத் திறந்து அவசரமாகத் தோட்டைப் பத்திரப்படுத்தியிருந்த இடத்தினைத்  துழாவினாள். கைகள் நடுக்கம் கொண்டன. ஏனென்று தெரியாமல் அழுகை முட்டியது. 

அம்மாவின் கூரைப்புடவைக்கடியில் மிகப் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த அந்த சிவப்பு நிற சிறியப்பெட்டியை ஆவலுடன் திறந்தாள். அங்கே தோடுகள் தென்படவில்லை. ஒருகணம் இதயத்துடிப்பு ஸ்தம்பித்துப் போனதாயும் கண்கள் இருட்டிக்கொண்டு வருவதாயுமான உணர்வுகளுடன் மிகுந்த படபடப்புடன் கண்களை ஒருதடவை துடைத்துவிட்டுக் கொண்டு இன்னும் தெளிவாக பார்வையை சுருக்கிப் பார்த்தாள். பெட்டி ஒன்றுமில்லாமல் வெறுமையாகவேயிருந்தது. 

பெரும் அவஸ்த்தையுடன் அம்மாவை எழுப்ப அருகே சென்றாள். 

அம்மா போர்வையை தலையுடன் போர்த்தியவாறே தனியே பேசிக்கொண்டிருந்தாள்.