Enter your keyword

Showing posts with label தினகரன். Show all posts
Showing posts with label தினகரன். Show all posts

Tuesday, April 14, 2020

தொலைக்காட்சித் தொடர்களும் பெண்களும் - பிரமிளா பிரதீபன்

By On April 14, 2020

அனேக ஆண்களால் விமர்சிக்கப்படும் அல்லது வெறுத்து ஒதுக்கப்படும் தொலைக்காட்சி தொடர்களை பெண்கள் மட்டும் ஏன் விரும்பி பார்க்க வேண்டும்?  குறிப்பாக இல்லத்தரசிகள் என்ற வரையறையறைக்குட்பட்டவர்கள் மட்டும் ஏன் அதற்கு அடிமைகளாக மாறவேண்டும்…? இது சிந்திக்க வேண்டியதொரு கட்டாயமான கேள்வியொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

தொலைக்காட்சித் தொடர்களை இரசிக்கும் இவ்வுணர்வானது ஆகவும் அடிமட்ட இரசணையென்பதை போலான நகைச்சுவைகளையும் எள்ளல்களையும் உலாவ விடும் ஆண்களாலோ அல்லது அத்தகைய இரசணை உணர்வை வியாபாரமாக கொண்டிருப்பவர்களாலோ புரிந்துக்கொள்ள முடியாத பல்வேறு காரணங்கள் அந்த தொடர் நாடக அடிமைத்தனத்திற்குப் பின் தொக்கு நிற்கின்றதென்பதையே என்னால் ஊகிக்க முடிகிறது. 

பெண்களின் பகல்நேர தனிமையும் வெறுமையும் எத்தகைய கொடூரமிக்கதென்பதை வெறுமனே தூரநின்று பார்ப்பவர்களால் ஒருபோதும் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அந்த அவஸ்த்தையை அனுபவித்தவர்களால் கூட அதனை நினைத்துப் பார்த்துக்கொள்ள முடியுமேயன்றி வார்த்தைகளால் வெளிப்படுத்தி விடுதலென்பது சாத்தியமற்றதே. 

காலங்காலமாக பகல்நேர தனிமையை சாபமாகப் பெற்று வாழும் இல்லத்தரசிகள் தங்களது வெறுமை நிரம்பிய பொழுதுகளை கழிக்கும் உத்தியாக பழக்கப்படுத்திக்கொண்ட திண்ணை விளையாட்டுகள், கும்மி பாடல்கள், தையல் அலங்காரங்கள், வீட்டை மீண்டும் மீண்டுமாய் ஒழுங்குப்படுத்தும் வேலைகள், பழைய பொருட்களை சுத்தம் செய்தல் என்ற இவற்றையெல்லாம் தாண்டி அயல் பெண்களுடன் புறம்பேசும் பழக்கத்தையும் பழகியிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் புறம்பேசுதல் பெண்களுக்குரிய குணமென்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கும் காரணமாய் அமைந்திருக்கக்கூடும். 

எவ்வாறெனினும் இதன் தொடர்ச்சியாகவே தொலைக்காட்சி தொடர்கள் எனும் கலைவடிவத்துடனான ஒரு பொழுதுபோக்கு அம்சம் தங்கள் வீட்டுக்கதவை தட்டும் போது முதலில் தயங்கி… பிறகு அவ்வப்போது என்றாகி… பின் அதுவே வாழ்வென்றாகும் அளவிற்கு பெண்கள் அடிமையாகிப் போயுள்ளார்கள் எனலாம். 

சொல்லப்போனால் வெளித்தெரியா பூதமாய் உருவெடுத்து நின்ற பெண்களின் வெறுமை உணர்வை இந்த வியாபார உலகம் அவர்களுக்குத் தெரியாமலேயே மிகத்தந்திரமாய் தமக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. என்னதான் கற்றிருந்தாலும், தங்களது நேரம் பயனற்று கழிகிறது என்று தெரிந்திருந்தாலும் நாடகங்கள் மீதான ஈர்ப்பை பெண்களால் கைவிட முடியாததற்கு பின்வருவரும் காரணங்களும் ஏதுவாகியிருக்குமென்றே எண்ணிக்கொள்ள முடிகிறது. 

1. வாழ்வின் அடுத்த நொடியை சுவாரசியமாக்;கும் குறைந்தபட்ச எல்லையாக தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை திருமணம், குழந்தை, வீடு, சமையல், கணவனுக்கான கடமைகள்;, குழந்தைகளின் கல்வி என்ற சுழற்சியில் ஏதோ ஒரு நொடியில் தாங்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதாய் ஒவ்வொரு பெண்ணுமே உணரும் ஒரு தருணம் நிச்சயமாய் வந்திருக்க வேண்டும். அப்போதைய மனவெழுச்சிகளை அதாவது கோபத்தை… வெறுப்பை… அவநம்பிக்கையை… அல்லது வெற்றியென கருதிக்கொண்டிருக்கும் அப்பட்டமான சுய தோல்;வியினை மறக்கவோ அத்தகைய சிந்தனையை இல்லாதொழிக்கவோ பெண்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆயுதமாகவே இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன.  

தன்னிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும், வாழ்வின் செயற்பாடுகளுக்கான சுமுகமான மனநிலையை தக்கவைத்துக்கொள்ளவும், சுயத்தை மழுங்கடித்து மறைத்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான போதையை இந்த தொலைக்காட்சித்தொடர்கள் நிரம்பவே பெற்றக்கொடுக்க வசதி செய்கின்றன என்றே கூறலாம்.  

2. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சகித்துக்கொள்ளும் மனநிலையை தக்;கவைக்;க தொலைக்காட்சித் தொடர்கள் பங்களிப்பு செய்கின்றமை அதிகளவான பெண்களது வாழ்க்கையானது தங்கள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறானதாகவே அமைந்து விடுகிறது. எனினும் தமது எதிர்பார்ப்பு இதுவல்ல என்பதனை மிகத்தாமதமாகியே உணரும் அவர்களது அடுத்தக்கட்ட நகர்வு கட்டாயமாய் புரட்சிகரமானதாக மட்டுமே இருக்கமுடியுமென்பதை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக அத்தகைய சகிப்புத்தன்மைகளுக்கான பக்குவத்துடனனேயே எமது கலாசாரமும் சம்பிரதாய பழக்கவழக்கங்களும் எம்மை கட்டியெழுப்பியுள்ளன. எனவே அத்தகையதான வாழ்வின் எதிர்பாரா வேதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்;ளவும் அத்தகைய எண்ணங்களை நிராகரித்து வாழ்வின் தொடர்ச்சியை கொண்டு செல்லவும் தமக்கிருக்கும் ஒரே ஆதாரமாக இந்த தொலைக்காட்சி நாடகங்கள் மீதான மோகத்தையே பெண்கள் இறுகப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் எனலாம். 

3. வியாபபார நோக்குடனான கதைக்கருவும் கதாபாத்திரங்களும் நிஜத்தில் நடைபெறாமல் போனதான, என்றாலும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானதாய் தோன்றும் பெண்களின் நனவிலி மன ஆசைகளைத் தூண்டும் வகையிலான பாத்திரப்படைப்புகளும், பழிவாங்கல்களும், கணவன் மனைவியின் காதலும்… கூடல் ஊடல்களுக்கிடையேயான தவிப்பையும் வெளிக்காட்டும் விதமான நாடகத் தொடர்களே அதிகளவில் விரும்பப்படுகின்றன. அதாவது கற்பனையிலான வாhழ்வொன்;றினை அனுபவிக்க வைக்கும் முயற்சியொன்றே வெகு சாதூரியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கொப்ப நாடக ஈடுபாடுடைய ஒவ்வொரு பெண்ணுமே அதன் நாயகியாக தன்னை உருவகித்துக்கொண்டே தொடர்ச்சியாக அதனை பார்க்க விரும்புகிறாள் என்பதுவும் அவதானங்களினூடாக தெளிவாகின்றது.    

மொத்தத்தில் பெண்கள் தங்களிடமிருந்து தாமே தப்பித்துக் கொள்வதற்காக தெரிந்தே இத்தகையதொரு பழக்கத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள் எனும் வகையில் தப்பித்தல் எனும் எண்ணக்கருவில் இருந்து வெளியேறி அதனை எவ்வாறு நேர்மறையாக்குவது என்பதை சிந்தித்து இவ்வடிமைத்தனத்தின் விளைவாக ஏற்படக்கூடிய எதிர்கால பாதகமான விளைவுகளை தெளிவாக புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் தன்னம்பிக்கையை சிறந்த துணையாகக்கொண்டு வீண்விரயமாக்கப்படும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிட தங்களுக்கேயுரியதான சாதகமான விடயங்களை செய்யத் தொடங்குவதுடன், தொலைக்காட்சித் தொடர்களை வெறுமனே பொழுது போக்காக மட்டுமே பழக்கப்படுத்திக் கொள்ளல் அவரவரின் சுயவெற்றிக்கு வழிவகுக்கும் என்றே கூறலாம்.

இன்றிலிருந்தே ஆரம்பிக்கவும் செய்யலாம். 

நன்றி - தினகரன் - 12.04.2020