Enter your keyword

Sunday, June 14, 2020

விரும்பித் தொலையுமொரு காடு


யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரமேதான். முடிந்தால் நேரமொதுக்கி என்னிடம் கேளுங்கள் தயக்கமின்றி சொல்கிறேன். இதுவொரு வரலாற்றுத் திருப்பம் என்று… ஒட்டுமொத்த கற்பனைகளதும் நம்பமுடியா சாத்தியபாடென்று… அன்றேல் வேறொரு விதத்தில் கூறமுனையின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெறும் அமையச்செலவென்று… ஆம். அப்படிச் சொல்வதில் நிச்சயமாய் தவறேதும் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். மிகச்சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்வதற்காய் சிறந்த ஒன்றை இழக்க நேரிடின் அது அமையச்செலவு தானே!

நிறைவேறத் துடிக்கும் ஆழ்மன வெளிப்பாடுகளுள் ஒன்றாய், உயரிய பாதுகாப்பாய் இன்னும்…  ஆத்ம திருப்தி தருவதாய், எல்லையில்லா பூரணத்துவத்தை உணர்த்துவதாய்…  நிஜமாகவே நான் தொலைவேனென எண்ணிக்கொண்டிருக்கும் அந்த காட்டுப்பயணம் இப்படியானதாய்; அமையப் போகிறதென்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். 

நான் மட்டுமல்ல எனையொத்த அனேக பெண்களதும் நம்பிக்கை இதுவாக மட்டுமேதான் இருக்கிறது. நம்பிக்கை என்று சொல்வதை விட எங்களது பிரார்த்தனைகளையும் இச்சம்பவமே முழுதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

அத்தகைய ஆக்கிரமிப்புகள் காட்சிப்படுத்திடும் ஆசைகளின் விரிவை தனித்திருத்தலால் மாத்திரமே  காண முடிகிறது. அவை விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாய் சொற்களுக்குள் அடங்கிக் கொள்ள மறுப்பது.  

‘அடியேய் எரும… எத்தன தடவ கூப்டுறேன். என்னன்னு கேக்குறாளான்னு பாரு’

இப்படியான அம்மாவின் திட்டுதல்கள் என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதாயில்லை. இதனையொத்த கனவுகளையே தாமும் ஒருநாள் கண்டிருந்தோம் என்பது இந்த அம்மாக்களுக்கு ஞாபகமிருப்பதில்லையோ என்னவோ… இடக்கிடை குறுக்கிட்டு நீண்டு கொண்டிருக்கும் சில அற்புதமான நினைவுகளை பிடுங்கிக் கொள்கின்றனர்.  

‘எபப்பபாரு பார்த்த இடத்தையே பார்த்து… அப்டி என்னத்த யோசிச்சு தொலைக்கிறாளோ என்ன கருமமோ..

ஏண்டி இந்த ஒலகத்துலதான் இருக்கியா என்ன?’

அம்மா நினைப்பது சரிதான். அது சற்றே வித்தியாசமான உலகம். அதே மக்கள், அதே வாழ்வு, அதே சடங்குகள், அப்படியேயான சம்பிரதாயங்கள் ஆனால்  சில தருணங்களில் அது நிஜமல்ல என்பது போலவும் இன்னும் சில பொழுதுகளில் உலகை தாண்டியதொரு வேற்றுக்கிரகம் என்பது போலவுமாய் இரண்டுமற்ற நிலையினதாய் அவ்வுலகம் தோற்றமளித்துக் கொண்டிருக்கும். 

‘நீயெல்லாம் இன்னொரு வீட்டுக்கு போய் பட்டாத்தாண்டி தெரியும்’

‘காலா காலத்துல இவளுக்கு ஒரு வழிய தேடியிருந்திருக்கனும். இப்டியே போனா பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தோட போக வருமோ என்னமோ’ 

என் பிரதிபலிப்பு வெறும் மௌனமாகவே இருந்ததால் அம்மா தொடர்ச்சியாக திட்டிக் கொண்டேயிருந்தாள். அம்மாவின் இந்த சந்தேகம் எனக்குமே பெரியதொரு நெருடலாய் இருந்துக் கொண்டுதானிருந்தது. இந்த நினைவுகளெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனங்களாய் இருந்துவிடுவதற்கான  வாய்ப்புகளும்  இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கனவிற்கும் நனவிற்கும் இடைபட்டதான ஒரு திண்மத்தை ஸ்பரிசித்தலோ அல்லது அவதானித்துணர்தலோ சாத்தியமில்லையாக இருக்கும் போது அவ்வுலகம் வெறுமனே கற்பனையினாலானது என்று விலகுதலும் சுலபமாயிருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதன்; உறுதி நம்;பும்படியாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவுமே இருக்கின்றது. மனித குரலோசைகள் பரிகாசங்களும், ஏவல்களும் நிரம்பியதாய் அவ்வப்போது ஒலித்து மறைகின்றன. ஏலவே காட்டுக்குள் தொலைந்து போனவர்களது பிரகாசமான பிம்பங்கள் தூரத்தில் காட்சிகளாக தெரிகின்றன. அவர்கள் மிக பூரிப்புடன் உலா வருவதை போலான வெளிப்படுத்தல்களையும் காணகிடைக்கின்றன.  

அந்த விசித்திர உலகை பொருத்தவரை காட்டிற்குள் காhணாமல் போதல் எனும் சம்பவத்தை மக்கள் பெரும் சம்பிரதாயமாகவே கொண்டாடினார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையுமாய் பெண்குழந்தைகளின் பிறப்பின் போதே தீர்மானித்துக் கொண்டார்கள். பருவ வயதினுள் நுழைய நுழைய தொலைந்து போதல் பற்றியதான தேடலையும் அதன் சுவாரசியங்களையும் இளம் பெண்கள் தங்களுக்குள்ளாகவே பேசி மகிழ்வது கண்டு வெகுவாக உற்சாகமடைந்தார்;கள். 

நானும், காடுகளை சார்ந்தேயல்லாமல் வாழ்தல் சாத்தியமேயில்லை என்று எண்ணி நீண்டநாட்களாக காத்திருக்கத் தொடங்கியிருந்தேன். தொலைதலினதான இதம் என் பரவசத்தை யாருக்கும் தெரியாமல் பதுக்கியே வைத்திருந்ததை இரகசியமாய் அனுபவித்து சிலிர்த்தேன். 

நான் சுயநினைவின்றி பிதற்றித் திரிவதாகவும் சிலர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். அம்மா மிகவுமாய் பயந்து போய் அவசர அவசரமாக என் திருமணம் பற்றி யோசித்தாள், விவாதித்தாள்,  என்னிடம் சம்மதமும் கேட்டாள். 

‘ஏண்டி மாப்புள கை நெறய சம்பாதிக்குறாரு…”

‘ம்ம்…’

‘பார்க்க லட்சணமா வேற இருக்காரு’

‘ம்ம்’

‘ஒன்னய அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம்’

இது எப்படி ஒரே பார்வையில் சாத்தியமானதென்று தெரியவில்லை. உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். மறுப்பதற்கான காரணங்கள் எதுவுமே இருக்கவில்லையென்பதால் சரியென்பதாய் தலையாட்டினேன்.

வழமை போலான என் மௌனத்தையும் சொற்களற்ற சம்மதத்தையும்  சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தக்கட்ட வேலைகளை அம்மா ஆரம்பித்;தாள். தன் மிகப்பெரிய கடமை முடிந்ததாய் என் திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தாள். 

‘வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் கால்கள் இருக்கும்.. நாம தான் திச மாறாம நடக்க பழகிக்கனும்மா’  என்றபடி வழமைக்கு மாறாக அம்மா கண் கலங்கிய போது, சொல்லிவிட நினைக்கும் எதையோ ஒன்றை அவள் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்றே தோன்றியது. 

அம்மா எதையெண்ணி அப்படி கூறினாளோ தெரியவில்லை. ஆனால் என் கற்பனைகளும் நனவுலக நடைமுறைகளும் ஒரு கட்டத்த்pல் சங்கமித்தன. நான் ஆனந்தமாய் இருப்பதாய் எண்ணிக்கொண்டேன். அப்படியே வெளிர்நீலம் படிந்த பின்னொருநாளில் எல்லோரையும் போலவே நானும் காட்டிற்குள் தொலைவதற்காய் விருப்பத்துடன் பிரவேசித்தேன்.  

அடர்பச்சை இலைகள், கிளைகளுக்கிடையேயான கீற்றொளிகள், ஊதா நிறப்பழங்கள், பெயர்த்தெரியா பட்சிகளின் முணுமுணுப்புகள், எங்கோ விழுந்து தெறிக்கும் நீர்வீழ்ச்சியின் மிதமான சாரல்…

அடுத்ததென்ன…? 

காடு என்;னை பத்திரமாய் அழைத்துச்சென்றது. வழிக்காட்டியது. சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. நான் தொலைய வேண்டிய இடத்தையும், திசையினையும் கச்சிதமாய் திட்டமிட்டு காட்டித்தந்தது.  தொலைதலுக்கான என் முற்படலை ஆர்வத்துடன் வரவேற்று அவதானித்துக்கொண்டிருந்தது. எல்லாமே என் விருப்பதின் பேரில் நடப்பது போன்றதான பிரமையினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. 

ஆங்காங்கேயான காட்டின் துர்மணங்களையும் அருவருக்கத்தக்கதான பிசுபசுப்புக்களையும் எதிர்பட்ட சிறு புதர்களையும் உதாசீனப்படுத்திக்கொண்டு குறைவற்ற மகிழ்ச்சியுடனேயே நான் காட்டை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

இடைக்கிடையே வந்துபோன அம்மாவின் நினைவுகளையும், கடந்த தடங்களையும் தவிர்க்க விரும்பினேன். காடு என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தது.   

விசித்திரமான சப்தங்களும் இதுவென அடையாளப்படுத்திடவியலா வாசனையும் என்னைச் சூழத்தொடங்கின. என் அடியோசையுடன் உலர்ந்த சறுகுகளும் குச்சிகளும் சேர்ந்தே நொறுங்கி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. நான் விடுபடா வண்ணம் காடு என் விரல்களை தன்னுடன் மிக இறுக்கமாய் பிணைத்திருந்தது. பரஸ்பர நேசிப்பின் மேன்மையினை தேவையேற்படும் போதிலெல்லாம் உணர்த்தியது… இல்லை போதித்தது. 

வாழ்வின் போதையில் திளைத்து சில பொழுதுகளில் மயங்கி முழுக்காடுமே என்வசப்பட்டு போனது போலொரு அதிசயத்தை பார்த்து திகைத்திருந்தேன். காலத்தோடு சேர்ந்து அதே நம்பிக்கையில் நடந்தேன் அவ்வப்போது ஓடியும் போனேன்.  

முதலில் நுகர்ந்தேனா அல்லது உணர்ந்தேனா? சரியாக சொல்லத் தெரியவில்லை. காடெங்குமான வாசனையையும் அதிகாரத் தொனிகளையும் சில காலங்களின் பிறகே உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். அதன் விசைக்கொப்ப அனிச்சையாய் பயணித்தபடி கணக்கிலற்ற இரவுகளையும் மூடியிருந்த பகற்பொழுதுகளையும் எண்ணத் தொடங்கியிருந்தேன்.  

காட்டின் மையப்பகுதி வரையிலான நகர்தலின் பின் இலேசாய் மூச்சுமுட்டும் ஒரு தன்மையினை அனுபவித்தேன்.  என் முச்சிறைப்பு வெளியே கேட்டுவிடக்கூடாதென்பதால் மிகக்கவனமாய் மறைத்தும் வைத்திருந்தேன். பகற்பொழுதுகளை விடவும் இரவுகள் மிக நீட்சியுடையதென  அதன் பிறகே கண்டுப்பிடிக்க முடிந்திருந்தது. பாதிசாமத்திற்கு பிறகான இரவுகளில் நான் தனித்து விடப்பட்டதால் எனக்கே தெரியாமல் என்னுள் இருந்து வெளிவரத்துடித்த கூக்குரல்களை அனுமதித்து செவிசாய்த்தேன்.

என் குரலுக்கு ஒப்பான பல்லாயிரம் விதமான பெண் குரலொலிகள் உச்சஸ்த்தாயில் உரத்துக் கத்தும் ஓசை சிறுகச்சிறுக பெருத்து அப்படியே ஒற்றை அலையாய் காட்டைச்சுற்றியும் அலைமோதித் திரிவதை நிதானமாக அவதானித்தேன். வலிந்து அடைப்பட்டிருந்த அக்குரலொலிகள் செவியொன்று திறந்திருப்பதை கண்டுகொண்டனவாய் திமிறித் தெறித்து எதிரொலிக்கத் தொடங்கியிருந்தன.   

‘நான் எங்கேயிருக்கிறேன்?’  

‘ஏன் என்னால் மனம் திறந்து சிரிக்க முடியவில்லை…?’

‘என்னை விட்டுவிடு… எனக்கு எதுவும் வேண்டாம். என்னை மீண்டும் அனுப்பிவிடு”

‘கர்த்தாவே என் வாழ்க்கையை ஏன் நரகமாக்கினாய்?’

‘ஆண்டவா நான் மௌனமாகவே இருந்துவிட்டு சாகும் வரம் தா. என்னால் யாரும் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்’ 

‘கதவுகள் தென்படவில்லையே எப்படி நான் தப்பிப்பேன் ?”

‘எப்போதேனும் அவ்வதிசயம் நடந்துவிடாதா? நான் இங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிடமாட்டேனா?’

எல்லா ஓலங்களுமே தங்களை சாந்தப் படுத்திக் கொள்ள முட்டாள்தனமாக எதையெதையோ உளறி தமக்குள் துன்பங்களை அமத்தி வைத்துக் கொண்டதாகவே தோன்றியது. அதிகாரமும் அடக்குமுறைகளுமாய்; உலாவிய ஒருசில குரலொலிகளும் இடைக்கிடையே வந்து மோதுண்டன.  

அம்மா பேச முனைந்த பொழுதிலெல்லாம் மௌனத்தை பதிலாய் தந்த என் முட்டாள்தனம் ஆழமான குற்றவுணர்ச்சியாய் மாறியிருந்தது. நினைக்கும் போதெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்திட யாரேனும் வானிலிருந்தேனும் குதித்து வந்துவிட மாட்டார்களாவெனவும், அம்மாவிடம் ஓடிப்போய்விட வேண்டுமென்றும்  மனது இறைஞ்சியது. 

பழைய ஞாபகங்கள் தந்த அசாத்திய தைரியத்தில் கொஞ்சம் அதிகாரமாய் பேசலாம் என்றெண்ணி முதற்தடவையாய் எனக்காக வாய் திறந்தேன். மையப்பகுதியை தாண்டிய காட்டின் திசைகள் அடர்த்தியானதாயும் அகோரமானதாயும் தென்பட்டதால் பயங்கரமான நிசப்தம் என் குரலொலியை கட்டுப்படுத்தி பயவுணர்வை அதிகமாய் பரப்பியது. என்னை முழுவதுமாய் தன்வசப்படுத்தியிருந்தது. தனக்கேற்றாற் போலவே வழிநடத்தவும் செய்தது. 

மந்திரித்து விட்டாற் போல் மறுப்பின்றி செயற்பட்ட நான், வளைந்த மரச்சந்துகளுக்கிடையே குனிந்தும் தேவையேற்படின் தவழ்ந்துமாய் என் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தேன். உடலின் சிராய்;ப்புகளையும் சிறு சிறு கீPறல்களையும் கணக்கிலெடுக்காமல் துடைத்தெறிந்துவிட்டு நடந்துக் கொண்டேயிருந்தேன். 

ஆழமாக குத்திக் கிழித்த விஷமுட்களின் ஓரிரு காயங்கள் ஊமைவலியை குடைந்தெடுத்து தந்துக்கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்க நேரமற்றவளாய் காட்டிற்குள் விடாமல் நடப்பதையே இலக்காக கொண்டு, திரும்பிப் பார்க்கத் தோன்றாமல் கால்கள் காட்டிய, காடு விரும்பிடும் பாதையில் விரைந்தேன். 

பெண்களின் இந்த பயணம் மிக பாதுகாப்பானதாய் தென்பட்டாலும் உள்ளுக்குள்ளேயான தழும்புகளையும் சீழ்வடியும் புண்களையும் பற்றி யாருமே பேசத் துணியவில்லை. அவர்களின் இலக்கு நோக்கிய நடை பற்றியதான புகழ்தலை காற்றினூடு பரப்பி பெண்களுக்கு மரியாதை செய்யவே எல்லோரும் விரும்பினார்கள். 

சுவாரசியங்களுக்கோ சுய எழுச்சிக்கோ இத்தொடர் பயணத்தின்போது இடமில்லை என்பதனை ஓய்வற்ற அந்த நடை எனக்கு உணர்த்தி களைப்பையும் சலிப்பையும் ஒருங்கே காட்டத் தொடங்;கியது. அடிக்கடி வியர்த்ததால் உள்ளாடைகளில் வழிந்த வியர்வைத்துளிகள்; நசநசத்து உடலைப் பிடித்துக்கொண்டு  குமட்டுவதாயும் இருந்தது. ஆனாலும் என்னிடம் அனுமதி கேட்காமல் காட்டின் தட்பவெப்பத்திற்கமைவாக எனக்குள் உருவாகும் வியர்வைத்துளிகளை மேனியெங்கும் சார விட மெதுவாகப் பழகிக் கொண்டேன். அதன் மணம் அழகானதென எல்லோருக்கும் சொல்லி நம்ப வைத்தேன். அதிகம் ஏன்! சமயத்தில் நானே கூட நம்பினேன். வியர்வை வழிய வழிய அதனை சகிக்க பழகியவளாய் வெளியில் சிரித்தபடி நடந்தேன். நான் என்னை காணாமல் ஆக்கிக்கொண்டது எனக்கே தெரியக்கூடாது என்பதற்காய் நானறியாமல் விரைந்தேன். 

வந்து மோதும் சிறு பூச்சிகளிடமும் எட்டத்தெரியும் காட்டுப் பூக்களிடமும் சத்தம் வராமல் என் ஆதங்கங்களை பகிர்ந்துக் கொண்டபடியே நடையைத் தொடர்ந்தேன். 

‘உன்னை பார்த்தால் பரிதாபமாக மட்டுமேயிருக்கிறது. நீயும் எனையொத்து மென்மையாய் இருக்கிறாய். அற்புத படைப்புகளுள் ஒன்றென்று விதந்துரைக்கப் படுகிறாய். என்றேனும் ஒருதினத்தில் நீயும் வலிமையான கரங்களால் பறிக்கப்படக்கூடும். சிலவேளை கசக்கி எறியப்படவும் கூடும். அல்லது உன் விருப்பத்திற்கு மாறாக யார் தலையிலோ இல்லையேல் கழுத்திலோ மாலையாகக்கூடும்’

பூக்கள் பதில் பேசுவதில்லையென்பது எனக்குத்தெரியும். நான் பதிலொன்றை எதிர்பார்க்கவுமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் குலுங்கிக் கொண்டிருந்த அம்மலர்களை பறித்து இரசிக்க நான் விரும்பவில்லை. எனக்குத்தெரியும். உரிமை கொண்டாடுவோரற்ற மலர்களாயினும் அவை தம் அனுமதியின்றி பிறர் தீண்;டுவதை விரும்புவதில்லையென்று. 

எதிர்திசையில் இதோ என்னை பறந்து கடக்கும் இச்சிறுவண்டுகளுக்கு என் பாஷை புரியுமென நான் நினைக்கவேயில்லை. ஆனால் கேட்கத் தோன்றுகிறது. 

‘உன் சிறகுகளை துண்டிக்கும் சடங்குகளேதும் உன் வம்சத்தில் இல்லையா என்ன..? ஓ…! நீ பெண்தானென்று எங்ஙனம் நானறிவேன்? திக்குத்தெரியாமல் பறந்து திரியும் நீ பெண்ணாய் இருந்திட வாய்ப்;;பில்லைதான். போ போ எங்காவது போய்த்தொலை’   

பதில்களற்ற கேள்விகள் எனக்கு பழக்கமானவைதான். கால்களில் இடறும் காய்ந்த குச்சிகளிடம் மட்டுமல்ல எப்போதாவது மென்மையாய் பறந்துவந்து மேனி தொடும் இலவம்பஞ்சிடம் கூட பேசுதல் ஆறுதலாய்தான் இருக்கிறது. என்றாலும் அம்மா கோபப்பட்டதில் தவறிருக்க முடியாது. அப்போதெல்லாம் நான் பதில் பேசியிருந்திருக்க வேண்டும்.  

ஒரு முறை… ஒரே ஒரு முறை பின்னால் திரும்பி நான் நடந்து  வந்த தடம் தெரிகிறதாவென்று பார்த்துவிட தோன்றுகிறது. மீண்டும் அர்த்தமற்ற கற்பனைகளில் மிதப்பதிலிருந்து மீண்டு, வாழ்ந்துப் பார்த்துவிடத் தோன்றுகிறது. என்றாலும் அத்தடத்தின் வழியே மீண்டும் ஆரம்ப இடத்திற்கே போய் சேர தோன்றினால்…? போய் சேருவதென்று முடிவும் செய்து விட்டால்..? இல்லையில்லை. அது என் வர்க்கத்திற்கே முரண்பாடான செயலாயிற்றே! நிச்சயமாய் அம்மாவும் அதை விரும்பியேற்கப் போவதில்லை. 

திரும்பி பார்த்தலை நான் வெறுக்கிறேன். வெறுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்;கிறேன். அதனால்தான் நடந்து போதலை விரும்புபவளாய் பாவனை செய்வதையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு வகையில் சற்றே ஆழ்ந்து யோசித்தால், இவையெல்லாமும் வெறும் பிரமை என்பது போலவும் சில போலி பிரசாரங்கள் தந்த உந்துதலால் தொலைந்து போனது போலொரு மாயைக்குள் சிக்குண்டு வெறுமனே வேறொரு கனாக் கண்டு கொண்டிருப்பதாயும் படுகிறது.

பிறகென்ன தடை..! பிடிக்காதவை வெறும் கனவென்றே ஆகிப் போகட்டுமே. 

திடீர் திருப்பமாய் காட்டிலிருந்து வெளியேறும் வழிகள் பற்றி தேடியறிய முற்படுகிறேன். 

காடு சிலிர்த்துக் கொள்கிறது. என்னை சுற்றிலும் நச்சுத் தாவரங்களும் பெரிய மரங்களின் ஆணிவேர்களுமாய் பின்னிக்கொள்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பல்லாயிரம் மனித கைகளும் அவர்தம் சூடான மூச்சுக்காற்றும் வெளித்தெரியா பெருந்தடைகளாய் என் முன்னால் விரியத்தொடங்குகிறன. போக வேண்டிய வழியெங்கிலுமாய் தம்மை நிரப்பிக் கிடக்கின்றன. 

அவை பல நூற்றாண்டுகால உடைத்தெறிய முடியா தடைசுவர்கள்  என இனங்கண்டு ஸ்தம்பித்து போகிறேன். மறுநொடி, நான் மிக ஆபத்தான காடொன்றினுள்ளேயே மாட்டிக்கொண்டிருப்பதாகவும் விரும்பினாலும் என்னால் வெளியே வர முடியாதெனவும் தவிர இது நிச்சயமாய் கனவு அல்ல என்றும் எல்லோருக்கும் கேட்குமாறு சத்தமாய் கத்தத் தொடங்குகிறேன். தொடர்ச்சியாக கத்திக்கொண்டேயிருக்கிறேன்.   

எனதந்த ஓலம் காடெங்குமாய் எதிரொலித்ததால்; பலர் அதனை செவிமடுத்திருக்கக் கூடுமென்றுதான் சொல்ல முடியும். ஏனெனில் அதன்பிறகாய் யாருடையதென்று தெரியாத பல குரல்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையொன்று ஏற்பட்டிருந்தது. 

அக்குரல்கள் எனைச் சுற்றிலுமாய் மிதந்து தன் ஸ்திரத்தன்மையை கெட்டியாக பாதுகாத்துக் கொண்டிருந்தன. 

‘காட்டின் பாதைகள் அடர்த்தியானதென தெரிந்தும் விரும்பியே ஏன் தொலைய முற்பட வேண்டும்?’

‘கிளைப்பாதைகள் பலதை கொண்ட காட்டில் முட்கள் நிறைந்த பாதையை முட்டாள்கள் மட்டுமே தெரிவு செய்திருப்பார்கள்!’

‘பிதற்றும் சில பைத்தியங்களை தாண்டி காட்டையே ஆளக்கூடியவர்கள் எத்தனையோ பேர் இல்லையா என்ன?’

தொடர்ச்சியாய் சுழன்றடித்த அக்கேள்விகளுக்கு பதிலற்றவளாய் நான் நின்றுக் கொண்டிருந்தேன்.  என் எல்லா வாதாடல்களும் பூச்சியமாகி பெறுமதியற்றுப் போயிருந்தன. எதிர்பாராமல் விசிறியடித்த பலத்த காற்றின் மோதலில் நிலைத்தடுமாறி நின்று… பின் நிதானித்து வலிய கொடியொன்றினை இறுகப்பற்றி என்னை பாதுகாத்துக் கொள்கிறேன்.

தொடர்ச்சியாகவும் நடந்தால் மாத்திரமே பயணித்தல் சாத்தியம் என்றாகிப்போன தவிர்க்க முடியா இக்கட்டத்தில் தேவைக்கு மிஞ்சிய புத்திசாலித்தனம் தேவைப் படுகிறதென்பதை நிஜமாகவே என்னால் உணர முடிகிறது. அதனால்தான் காடு சிறந்ததொரு மேடையாகவும் இருக்கிறது எனும் மிகப்பெரிய உண்மையை நான் மெதுவாய்தானும் சொல்லிக்கொள்ளாமலேயே சிரித்த முகத்துடன் நகர்ந்து விடுகிறேன். 

வேறென்ன செய்துவிட முடியும்?

யாருக்கேனும் இதுவொரு சிறு சம்பவமாகவோ அல்லது அடுத்து வரப்போகும் நிகழ்வின் ஒரு பகுதியாகவோ இருந்துவிட்டு போகுமெனில் அதற்காக என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரம் தானே!

நன்றி "நடு" சஞ்சிகை

No comments:

Post a Comment