Enter your keyword

Saturday, April 2, 2022

கமீலே டொன்சியுக்சின் ஜோடித் தோடுகள் - பிரமிளா பிரதீபன்

அந்த ஒருஜோடித் தோடுகளால் மாத்திரம் பேசமுடிகிறதென்பதையும் அவை சதா தன் காதுகளுக்குள் முணுமுணுத்தபடி எதையோ சொல்ல விழைகிறதென்பதையும் வெளியே சொல்ல முடியாத தடுமாற்றத்துடனேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் மயிலா

இந்தத் தோடுகளைத் தவிர்த்து மேலும் இரண்டு ஜோடித்தோடுகள் அவளிடமிருந்தன. அதிலொன்று செவ்வக வடிவத்திலான பெரிய தோடு. இன்னுமொன்று நட்சத்திர வடிவத்திலான தங்கத்தோடு. அவையிரண்டையும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்வதையே மயிலா விரும்பினாளென்றாலும் அம்மாவின் திடீர் ஆசையை நிறைவேற்றுவதற்காய் இந்தப் புதிய தோட்டை அணிய வேண்டியதாய் ஆகிப்போயிருந்தது. 

சொல்லப் போனால் எதிர்பாரா நேரத்தில் கிடைத்த பேரதிர்ஷ்டப் பொருளாக வந்தமைந்த தோடிது. 

ஒரு ரயில் பயண அரையிருள் பொழுதில் அம்மாவின் கண்களுக்கு மாத்திரமே தென்பட்ட வெள்ளை கடிதாசி சுருளை என்னவென்று பார்க்காமலேயே தன் கைப்பைக்குள் பதுக்கி வைத்திருந்திருக்கிறாள்.  வீட்டுக்கு வந்ததும் அதனை பிரித்துப் பார்த்தவள் திறந்த வாயை ஓரிரு நொடிகள் மூடவேயில்லை. 

‘யாரோடதுன்னு கேட்டு குடுத்திருக்கலாமேம்மா’

‘முட்டாளா நீ… இது நமக்கு கெடச்ச அதிர்ஷ்டம்டி’

பூ வடிவிலான அந்தத் தோட்டின் சரிமத்தியில் ஒரு கல் விசித்திர ஒளியுடன் மினுங்கி தோடு மொத்தத்தையும் மிகக் கவர்ச்சியானதாக காட்டியது. நிஜத்தில் ஒரு பூ மலர்ந்து விரிந்தது போல பளீரென பிரகாசித்தது.  

‘வைரக்கல்லாயிருக்குமோ!’ இது அம்மாவின் பேராசை. 

‘ச்சே சும்மா கல்லுதாம்மா’

‘இல்லடி இப்புடி மினுங்குதே’

இல்லாமலில்லை. அந்த கல் ஜொலிப்பின் அசாதாரண அழகை மயிலாவும் அவதானித்தாள். 

அம்மாவே அதனை பவ்வியமாய் கையாண்டு மயிலாவின் காது துளைகளுக்குள் பொருத்தினாள். பல தடவைகள் தோட்டுடனான மயிலாவை பார்த்துப் பல்லிளித்தாள். 

‘யார்ட்டயும் சொல்லிடாத என்ன?’

ஏன் எனும் தொனியுடனான மயிலாவின் பார்வைக்கு. 

‘நான் சொல்றத மட்டும் கேளு… கொஞ்ச நாளைக்கு அப்பறமா இது பத்தி விசாரிச்சிக்கலாம்’ என்றாள். 

முதலிரு நாட்களில் அந்தத் தோடுகளால் பேச முடியுமென்பதை மயிலா உணரவில்லை. ஆழ் உறக்கத்தின் பின்னரான ஏதோ சில குழப்பமான நினைவுகளும் நடுசாம விழிப்பில் தன்னை எரிச்சல் படுத்திய அந்த முணுமுணுப்பும் தோட்டுடனானதென்பதை நம்புவதற்கும் அவள் தயாராக இருக்கவில்லை. 

மூன்றாம் நாளில் உச்சிவெயில் ஆற்றுக்குளியலின் போதே அவள் அதனை அவதானிக்கத் தொடங்கியிருந்தாள். 

‘என்னை நனைக்க மாட்டாயா?’

மயிலா சுற்றிலுமாய் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இருக்கவில்லை. பின் யார்தான் பேசியிருக்க முடியும்! காதின் மிக அருகாமையில் மிதந்து செல்லும் காற்று பேசிவிட்டுப் போகிறதா என்ன? அப்படியில்லையென்றால் இத்தனை மென்மையாக வேறு யார் பேசியிருப்பார்கள்?

மயிலா மூச்சடக்கி அந்த மெல்லிய குரலொலியை துல்லியமாய் செவிமடுத்தாள். 

‘நனைக்க மாட்டாயா?’

‘யார் பேசுறது?’ என்றாள் மயிலா. 

ஒரு கையால் ஓசை வந்த வலது காதின் தோட்டை தடவிக் கொடுத்தபடி “நீயா?’ என்றாள். 

‘நீ கெட்டிக்காரிதான்’ என்றதந்த தோடு.

‘எப்டியிது… நெஜமாவே உன்னால பேச முடியுதா?’

‘முதலில் என்னை நனைத்து விடு பிறகு பேசலாம்’

மயிலா நீரினுள் நன்கமிழ்ந்து நீராடினாள். அதிசயத்தின் உச்சத்தில் பிரமிப்படைந்தாள். அந்த தோடுகளின் வசீகரிக்கும் இனிய குரலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டாள். 

‘ஹே தோடே…. உனக்கு ஒரு பேர் வைக்கணுமே…!’

‘சொல் என்ன பெயர் வைக்க போகிறாய்?’ 

மீனு… திவி… மஞ்சு… இப்டி ஏதாவது?’

‘கமீலே என்றழைக்கிறாயா? அந்த பெயரை உச்சரிக்கும் போது தோட்டின் குரலில் சிறு நடுக்கமொன்றிருந்து. 

‘கமீலே…’ மெதுவாக அழைத்தாள் மயிலா. எந்தப் பக்கம் பார்த்து பேசுவதென்று தெரியாமலிருந்தது அவளுக்கு. 

‘ஆமாம் ஆமாம் அதே பெயர் தான்’

‘சரி… அந்த பேர்ல அப்டி என்ன சந்தோசம் ஒனக்கு?’

‘உனக்கு கமீலேவை தெரியாதா…? 

‘யார் அவங்க?’

‘அவளின் முழுப்பெயர் கமீலே டொன்சியுக்ஸ். புகழ்பெற்ற பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனேவின் முதல் மனைவி அவள்.’ 

மயிலா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

‘பச்சை ஆடை உடுத்திய பெண்’ என்ற ஓவியத்தை பற்றி நீ எதுவும் அறிந்ததில்லையா? அந்த ஓவியத்திற்கு மாடலாக நின்றவள் அவள்தான்.    

‘ம்ம்…’

‘அந்த ஓவியத்திற்காக நிற்கும் போது அணிந்து கொள்வதற்காக ஒரு கழுத்தணியையும் அதற்கு பொருந்திப்போகக் கூடிய ஒரு ஜோடி காதணியையும் விரும்பி தெரிவு செய்து வாங்கிக் கொண்டாள்’

‘ம்ம்’

‘ஆனால் பாவம் அந்தப் பெண். அவளால் அதனை அணிந்து அழகுபார்க்க முடியாமலேயே போனது.’

‘ஏன் என்னாச்சு?’ மயிலாவிற்கு இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் இது ஒரு பொய்யான கதையென்றுதான் அவள் ஊகித்தாள். 

‘நீ நம்பாவிட்டாலும் இதெல்லாம் உண்மை மயிலா’

முதலாவது அதிசயம் அந்தத் தோடு அவளை பெயர் சொல்லி அழைத்தது. இரண்டாவது அவள் இந்தக் கதையை நம்பவில்லையென்பதை கண்டு பிடித்திருந்தது. 

‘ஒனக்கு எப்டி இதெல்லாம் தெரியுது…? நான் கனவேதும் காண்றேனா என்ன?’

‘இல்லை. இதுவல்லாத இன்னும் பல அதிசயங்களையும் நீ உணரக்கூடும்.’

‘அப்போ இதெல்லாம் எப்டி நடக்குதுன்னு சொல்ல மாட்டியா?’

‘நான் கனவுகளாலும் அதீத கற்பனைகளாலும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவள் மயிலா. மோனே தன் ஓவியப்பூக்களில் பல்வேறு இரகசியங்களை ஒளித்து வைத்திருப்பதை போலவும்… பூக்களின் திறந்த இதழ் நுட்பங்களை தன் ஓவியத்தினூடாக காட்டிவிட துடித்ததை போலவும் என்னையும் ஒரு அற்புத பூவாக அவர்கள் வடிவமைக்க விரும்பினார்கள். அப்போதுதான் மலர்ந்ததென்ற தோற்றத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு வைரக்கல்லால் என்னை அலங்கரித்தார்கள்.’

‘ம்ம்’

‘யோசித்துப்பார். கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் உருவான நான் இன்னும் இவ்வளவு அழகுடன் எப்படி இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணின் உணர்வுகளை உள்வாங்கி அவளாகி வாழ்ந்தவள். ஒரு கட்டத்தில் அவளுக்காக ஏங்கியவள். ஒரு நிஜப்பூவின் பவித்திரத்தை நான் கொண்டிருக்க வேண்டுமென்பதையே கமீலே டொன்சியுக்ஸ் விரும்பினாள். அவள் என்னை மிருதுவாக ஸ்பரிசித்தாள். தொட்டணைத்து முத்தமிட்டாள். என்னுடன் பேசத்தொடங்கினாள். வரையறைக்கடந்த தன் நேசிப்பினால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்தாள்.’

தோடு பேசிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் அம்மாவிடம் சொல்வதா வேண்டாமாவென மயிலா யோசிக்கத் தொடங்கினாள். திடீரென இடைமறித்து ‘அதுசரி நீ எப்டி இங்க வந்து சேர்ந்த?’ என்றுக் கேட்டாள். 

‘அது தெரியவில்லை. என் வாழ்நாளில் அதிக பொழுதுகளை நான் அடகுக்கடை அழுக்கு லாச்சுகளுக்குள் தான் கழித்திருக்கிறேன். சுத்திப் பொதி செய்யப்பட்ட நிலையுடனேயே எங்கெல்லாமோ பயணித்திருக்கிறேன். கமீலே டொன்சியுக்ஸ் கூட, அவள் மிக விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அடகிலிருந்து மீட்டெடுத்து ஒருமுறையாவது ஒன்றாகச் சேர்த்து அணிந்துவிட வேண்டுமென்று போராடினாள். ஆனால் அவளால் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் போனதால் ஏதோ ஒரு கடையில் நீண்ட காலமாக அடைந்து கிடந்திருந்தேன்.’ 

‘இங்கெல்லாம் பாதி பொம்பளைக நகை செய்றதே அடகு வைக்கத்தான் கமீலே. அது ஒனக்கு தெரியாதா?’

‘இல்லை நான் கொஞ்சம் காலமாவது ஒரு பெண்ணின் அழகு பூரிப்புடன் வாழ ஆசைப்படுகிறேன். நீயும் அப்படி செய்து விடாதே’ 

தோடுகள் இடைவிடாமல் வலது காதிலும் இடது காதிலுமாய் எதையெதையோ பேசிக்கொண்டேயிருந்தன.  அவை பேசுகையில் இரண்டு காதுகளிலும் மென்மையான அந்த நுனிப்பகுதி சில்லிட்டு கூசுவது போலவும் அக்கணத்தில் முழு உடலுமே அத்தோடுகளின் தோழமையை நாடி அவ்வுரையாடலுக்காய் ஏங்குவதை போலவுமாய் மயிலா நம்பத் தொடங்கினாள்.    

எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற அத்தோடுகளின் நட்பை மொத்தமாய் விரும்பினாள். தன்னை அடிக்கடி தனிமைப்படுத்திக் கொண்டு மனதிலுள்ளவற்றையெல்லாம் மணிக்கணக்கில் பேசித்தீர்த்தாள். அத்தோடுகளிரண்டையும் தன் உயரிய நேசிப்பிற்குரிய தோழியாய் மாற்றி யாருமறியாததொரு அரூப உறவை விஸ்தரித்துக் களித்தாள். சமயங்களில் தோடுகளின் தொடர்ச்சியான கதைகளில் மையலுற்று தானே அந்த ‘கமீலே டொன்சியுக்ஸ்’ என்பதாகவும் பாவனை செய்தாள். 

ஒரு ஓவியத்தின் மாடலைப் போல அசையாது ஓரிடத்தில் நின்றுக் காட்டி  ‘இப்டி நிக்கணும்னு தானே ஆசப்பட்ட?’ என்பாள். அவை பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வொலி கழுத்துடன் ஊர்ந்து மிதந்து தன்னை மொத்தமாய் கவர்ந்திழுப்பதாய் சொல்லிக் கொள்வாள். மலைக்காடுகள் மீதேறி சத்தமாய் தோடுகளுடன் சேர்ந்து பாடுவாள். ஆற்று நீருக்குள் தோடுகளை அமிழ்த்தியெடுத்து ஆனந்தப்படுத்துவாள்.  அவ்வப்போது கோபித்துக் கொண்டு பேசாதிருக்கவும் செய்தாள். அப்படியே அவளது மென்மையான ஸ்பரிசத்தை வருடலூடாக  வெளிக்காட்டுவதுடன் அத்தோடுகளது சப்தத்துடனான தொடுகையிலும் இன்புற்றுத் திளைத்தாள்.    

****

ஒரு புதன்கிழமை மாலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த பருமனான மனிதன் வந்துக் கொண்டிருந்தான். வழமை போலவே அம்மா, தண்ணீர் டங்கிக்கு பின்னால் இருக்கும் கூடைக்குள் அமர்ந்து தலையிலொரு துணியைப் போர்த்திக் கொண்டபடி மயிலாவை பொய் சொல்லச் சொன்னாள். 

இத்தகைய திடீர் பொய்கள் உடன் உருவாகும் திறன் மிக்கவையென்பதாலும் தொடர்ச்சியாக சொல்லிப் பழக்கப்பட்டமையாலும் கண்களிலோ உடலசைவிலோ எவ்விதக் குற்றவுணர்ச்சியையும் வெளிக்காட்ட விடாமல் வெகு லாவகமாக வந்து விழப்பார்க்கும். 

அவன் கேட்பதற்கு முன்பாகவே ‘அம்மா கடைக்குப் போயிட்டாங்க’ என்றாள். 

அவன் கோபமாக கண்களை சுழற்றித் தேடினான். 

‘எத்தன மணிக்கு வருவாங்க?’ என்று கேட்டான்.

‘தெரியல’ என்றபடி மயிலா கொடிகயிற்றில் கிடந்த உடைகளை சாவகாசமாக எடுத்து கைகளில் சேகரித்தாள். அவளது முகத்தில் ஏளனம் மிகுந்த சிரிப்பொன்று படர்ந்திருந்தது. 

‘ஒனக்கு எத்தன வயசு பாப்பா’

மயிலா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்துக் கொண்டாள். 

‘ஒரு பதினைஞ்சு பதினாறு இருக்குமா? வாங்குன காச குடுக்காட்டி வேற மாதிரி ஆகிடும்னு ஒங்கம்மாகிட்ட சொல்லிரு சரியா?’ 

அவன் பேசிய விதம் ஒருவிதமான சினத்தைக் கொப்பளிக்கும் தொனியாகவிருந்தது. 

மயிலா பயந்து தலையாட்டினாள். சரிந்திருந்த அந்தக் கூடை மெதுவாய் அசைந்தது. அவன் கண்டு விடுவானோவென்று மயிலா பதட்டமானாள்.

‘நாளைக்கும் இதே நேரத்துக்கு வருவேன். வட்டிக் காசாவது இருக்கணும் சொல்லிட்டேன்’

அவன் அதட்டாலாகச் சொல்லியபடி வாசலில் இங்குமங்குமாய் இருமுறை நடந்தான். வீட்டினுள் எட்டிப் பார்த்தான். சுவரோரம் தென்பட்ட குளியலறை யன்னலில் எக்கித்தாவி உள்ளே பார்க்க முயற்சித்தான். பின் கோபமாக வெளியேறினான். 

அம்மா கைகால்களை உதறிக்கொண்டே கூடைக்குள்ளிருந்து வெளியே வந்து ‘போயிட்டானா?’ என்றாள்.

‘என்ன வெளயாடுறியாம்மா? இனி எனக்கு பொய்யெல்லாம் சொல்ல முடியாது சொல்லிட்டேன்.’

‘வட்டிக் காசையாவது நாளைக்கு குடுத்துறணும்டி. என்ன செய்றதுன்னு ஒன்னுமே புரியல’

அம்மா சட்டென்று மயிலாவின் காதிலிருந்த தோடுகளைப் பார்த்தாள். அவளது கண்களில் மின்னலடித்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். பின் எதற்காகவோ பயந்தவளாய் அவ்வெண்ணத்தை மாற்றி தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை வெளியே இழுத்துப் பார்த்தாள். தாலியென்ற பெயரில் ஒரு துண்டு தங்கமும் அதற்கு காவலாய் இரண்டு மணிகளும் ஒன்றுடனொன்று மோதுண்டு சப்தமெழுப்பின. 

ஒரு மஞ்சள் துண்டை கழுவியெடுத்து அந்தக் கயிற்று மத்தியில் கட்டிக் கொண்டவள் மெதுவாகத் தாலியையும் மணிகளையும் அதிலிருந்து அகற்றி ஒரு கடுதாசியில் சுற்றியெடுத்துக் கொண்டாள். 

‘எவ்வளவு கொடுப்பானோ… எப்டி மீட்டெடுக்கப் போறேனோ தெரியலயே..!’

புலம்பிக்கொண்டே அம்மா வெளியே செல்ல ஆயத்தமானாள்.

***  

நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் காத்திருப்போர் வரிசையில் மயிலாவும் அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அம்மாவின் படபடப்பு அவளது கைநடுக்கத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 

தனக்குத் தேவையான பணத்தைப் பெற முடியாதென்ற கட்டத்தில் மிகுந்த கலவரத்துடன் ஒரு பெண் தனது தோடுகளைக் கழற்றி கொடுத்தாள். அவர்கள் சிறிது நேரத்திற்குள் அதுவும் போதாதென்றார்கள். அவள் அடுத்த நொடியிலேயே அழுதுவிடப் போவதைப்போல மனமுடைந்து ஏதோவெல்லாம் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

அம்மா தன் நெற்றியில் அரும்பிய வியர்வையை அடிக்கடி துடைத்தபடியே அதனைப் பார்த்தாள். அம்மாவின் காதிலும் இரண்டு கல்தோடுகளிருந்தன. 

மயிலா யோசித்தவாறே மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான அடிக்கடி வந்துபோகும், அறவும் பிடிக்காத இடமாக இது இருந்தது. 

‘உனக்கு பயமாருக்கா?’ 

மயிலா கிசுகிசுத்த குரலில் தோடுகளிடம் பேசினாள். 

‘ஆமாம்… மிகவும்’

‘பயப்புடாத நீ வைரக்கல்லுன்னு எங்கம்மாக்குத் தெரியாது’

‘இது போன்ற கடைகளில் சிறைப்பட்டிருத்தலென்பது தீரா வேதனை மயிலா’

‘நாங்க மட்டும் விரும்பியா இதையெல்லாம் பண்றோம். இந்த எடத்துல உக்காந்திருக்குறப்போ மனசு படுறபாடும் தவிப்பும் பத்தியெல்லாம் உனக்கெப்படி தெரியப்போகுது. ஆசையாசயா வாங்குன நகையெல்லாம் ஒன்னொன்னா பறிபோன இடமிது’

‘எனக்குத் தெரியும். கமீலே டொன்சியுக்ஸ் இறந்த பின்னாலும் அவள் விரும்பிய கழுத்தணியையும் என்னையும் அணிவித்துவிட வேண்டுமென்று மோனே எத்தனையோ முயற்சிகளெடுத்திருக்கிறார். யாரிடமோவெல்லாம் கடன் கேட்டு கடிதங்களெல்லாம் எழுதியிருக்கிறார். அப்படியும் அது சாத்தியப்படாமல் போனபோது… அவள் இத்தகைய அணிகலன்களுக்காய் எத்தனை தூரம் தவிப்புடன் இருந்திருப்பாளென்றும் அது எத்தகைய துயரத்தையும் சொல்ல முடியாத மனவலியையும் அவர்களுக்கு அளித்திருக்குமென்பதையும் நான் நன்றாகவே அறிந்திருந்தேன்’

‘எங்கம்மாவும் அப்பிடி அழுதுருக்காங்க கமீலே. சாமிய திட்டிக்கிட்டே அழுவாங;க. ஒருதடவ நீ இப்புடி கைலயும் கழுத்துலயும் மாட்டிக்கிட்டு மினுக்குறியே எங்களுக்கு மட்டும் ஒரு பொட்டுமணி இல்லாம போற அளவுக்கு வாட்டுறியேன்னு சொல்லிகிட்டே அம்மன் படத்த எடுத்து பீரோ உள்ளுக்கு பூட்டி வச்சிட்டாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு’

‘ஆமாம். ஆசையாய் வாங்கிய அணிகலன்களை அணிந்து கொள்ள முடியாத துர்பாக்கியத்தை பல பெண்கள் காலங்காலமாய் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு நானே சாட்சி. என்னை எவருக்குமே தொடர்ச்சியாக அணிய முடிந்ததேயில்லை தெரியுமா?’

அடுத்தது அம்மாவின் முறை. அம்மா பரிதவிப்புடன் தன் கையிலிருந்த சுருளையும் அடையாள அட்டையையும் நீட்டினாள். அவர்கள் அதனைச் சரிபார்த்தபடி சிறிது தாமதித்து எதையோ சொல்லும் போது அவளது முகம் சட்டென மலர்ந்தது. 

மயிலாவிற்கு எங்கிருந்து வந்ததென்று தெரியாத அந்த பயமும் நடுக்கமும் அகன்றது. மெதுவாகக் கையுயர்த்தி தோடுகளை ஒரு தடவை தடவிப்பார்த்துக் கொண்டாள். 

‘இல்லாம போயிருமோன்னு நினைக்குறதால வரும் பயம் அதிகமா ஆசப்பட வைக்குதில்ல…!’

‘என்ன சொன்னாய் புரியவில்லை’ என்றது தோடு.

‘இல்ல ஒன்னுமில்ல… உனக்கு இப்போ நல்ல காலம்னு சொன்னேன்.’ அவள் மீண்டுமொரு முறை இரண்டு தோடுகளையும் மென்மையாகத் தடவிக் கொடுத்தாள். 

‘உன் ஸ்பரிசத்தில் நான் கமீலே டொன்சியுக்சை உணர்கிறேன் மயிலா’

‘நெஜமாவா..?’

‘ம்ம.. அவளைப் விடவும் நீ என்னை நேசிக்கிறாய் என்றே தோன்றுகிறது.’

கமீலேவின் இந்த வார்த்தைகள் ஒரு இசையென மயிலாவின் நெஞ்சத்தை குழைந்தெடுத்தது.    

‘போகலாம்டி’ என்றபடி அம்மா வேகமாக நடந்தாள். மயிலா பின்னாலேயே ஓடிச்சென்றாள்.  

***

தோடு பற்றிய பல்வேறு வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டன. அத்துடன் மயிலா தனியாகப் பேசிக்கொண்டு திரிவது பற்றியும்.

எல்லா கல்லும் எல்லோருக்கும் ஒத்துப்போகாதாம். ஒருசில கற்கள் பதித்த தோடுகளால் பித்துப்பிடித்து அலைய வேண்டி வருமாம். அப்படியே ஆளையே இல்லாமல் ஆக்கிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.  

அம்மா கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள். 

‘அதக் கழட்டி வச்சுருடி’ என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள்.  ஒருசிலர் அதனை வைரக்கல்லாயிருக்குமென சொல்லியிருந்ததால்  ‘கொண்டுபோய் கேட்டு பார்த்தா பெரிய வெலைக்கு வித்துரலாம்’ என்றபடி கனவு காணவும் ஆரம்பித்தாள்.

நாளுக்குநாள் இந்தத் தோடுகள் பற்றிய விவாதங்கள் அதிகரிக்கத் தெடங்கின. அதனை நல்ல விலைக்கு வாங்கி தாங்களே விற்றுக் கொள்வதாயும் அம்மாவிடம் சிலர் சொல்லியிருந்தார்கள்.

‘முருகேசு மாமா இருவதாயிரம் ரூவா தாரேங்குறாரு. அவருகிட்ட குடுத்துருவமா? அது பித்தள தோடா இருந்தா கூட நாம காச திருப்பித்தர வேணான்னு சொல்றாரு.’

‘அடகு கடையில கேப்பமாடி?’ 

‘நம்ம சகுந்தலா புருசன் நகை கடையில தான் வேல செய்யுறாராம். அவருகிட்ட குடுத்து கேட்டுப்பார்க்க சொல்லுவமா?’

‘இல்லன்னா பேங்குல கொண்டு போய் வச்சாலும் தெரிஞ்சுரும் இல்லயா?’

அம்மாவின் ஆலோசனைகள் நேரத்திற்கொன்றாய் மாற்றம் அடையத் தொடங்கியது. 

மயிலா பதில்களற்று துயரமடைந்திருந்தாள். 

‘நீ என்ன விட்டுப் போறத யாராலும் தடுக்க முடியாது போல கமீலே’ என்றாள்.’ 

‘என்னைக் காப்பாற்ற எதுவுமே செய்ய மாட்டாயா? என்னை மீண்டும் சிறைப்படுத்தப் போகும் இத்திட்டங்களுக்கு நீயும் உடந்தையாய் இருக்கிறாயா என்ன?’

‘இல்ல கமீலே உன்னோட இருக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா உணர்றேன். ஆனா எங்கம்மாகிட்ட இதயெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல…’ 

‘என்றாலும் இத்தனை பெறுமதியான என்னை விற்பதை விட அணிந்து அழகு பார்த்தல் தான் சிறந்ததென்று உனக்கோ உன் அம்மாவிற்கோ தோன்றவில்லையா….?’

‘இல்லாமலா பின்ன…? உன்னோட கமீலே டொன்சியுக்ஸ் அவ்வளவு ஆழமா உன்ன நேசிச்சிட்டு அப்பறம் எதுக்காக அடகு வச்சாங்க சொல்லு…?’

‘புரிகிறது மயிலா. ஆனால் நான் உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறேன். என்னை பற்றிய  எந்த சரியான விபரமும் இன்னும் உங்களுக்கு தெரியாது. அப்படியிருக்கையில்  உங்களது திட்டங்களும் செயல்களும் பேராசையாக தானே இருக்க முடியும். தவிரவும் என்னை விற்று கிடைக்கும் பணத்தில் உங்களது மொத்த வாழ்வும் மாற்றமடையக் கூடுமென்பதற்கு என்ன ஆதாரம்? என்னை பொருத்தவரை யாரிடமோ நீங்கள் ஏமாறப் போகிறீர்கள் என்பதுவும் கிடைத்த அதிர்ஷ்டத்தை உங்கள் முட்டாள்தனத்தால் இழக்க போகிறீர்கள் என்பதுவுமே நிஜம்’

எல்லாமே சரியென்பதாவே இருந்தது. ஆனாலும் வேறென்ன தான் செய்துவிட இயலும்? இந்தத் தோட்டை விற்பதால் கிடைக்கும் ஒரு தொகைப் பணமா இல்லையேல் அழகும் கவர்ச்சியும் கூடவே பேசும் திறனையும் கொண்டிருக்கும் மனதிற்கு மிக நெருக்கமான இந்த ஒரு ஜோடித் தோடா? 

எந்த பக்கமாய் யோசித்தாலும் தோடு என்பதே பதிலாய் அமைந்தது. எனினும் எவ்வாறு அதனை தக்கவைத்துக் கொள்வது? 

ஓரிரு நாட்கள் தோடுகளுடன் பேசாமல் தனியாக யோசித்தாள் மயிலா. அந்த கமீலே டொன்சியுக்சை போல அல்லது மோனேவை போல நானும் ஒருநாள் தவித்து அழுது ஏங்க வேண்டுமா என்ன? நானும்தான் இந்தத் தோடுகளை அளவற்று நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்றாலுமே வெறும் நேசிப்பை மாத்திரம் ஆதாரமாக்கிப் பிடித்தவொன்றை தக்கவைத்துக் கொள்ளுதலும் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. 

மயிலா தோடுகளிடம் சொன்னாள். 

‘என்ன மன்னிச்சிடு கமீலே. நானும் ஒனக்காக ரொம்ப ஏங்குவேன்.’ 

நாட்களின் நகர்வில் தோட்டின் உண்மையான பெறுமதி சிறுகச் சிறுக வெளிப்பட்டது. அம்மா அதனை மயிலாவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி மிகப்பத்திரமாய் பாதுகாக்கத் தொடங்கினாள். அவளது அலுமாரிக்குள்ளேயே வைத்து அழகு பார்த்தாள். இரகசியமான முறையில் பெருந்தொகையளவான பணத்திற்கு அதனை விற்பதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொண்டாள். 

இன்னும் ஓரிரு தினங்களில் தோடு கைமாறப் போகிறது எனும் நிலையில், மயிலா தவித்தாள். வேகமாக நடந்தாள். அவ்வப்போது தடாரென அமர்ந்து பெருமூச்சு விட்டாள். வேறொரு தோட்டினை அணிந்துக்கொள்ள மனம் ஒப்பா நிலையில் தன் வெறுமையான காதுகளை அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டாள். கமீலேவுடன் பேச வேண்டுமென ஏங்கினாள். 

இரவுகளைக் கடக்கப் பெரும் சிரமாயிருந்தது. இறுதியாக ஒருதடவை அத்தோடுகளை அணிந்து… ஆசைத்தீர அழகு பார்த்து… கொஞ்சம் அதனுடன் பேசி… மயிலாவை ஏதோ ஒன்று உந்தியது. 

இருளைப் பொருட்படுத்தாமல் பழகிய நிதானத்தில் அந்த அலுமாரியிடத்தே ஓடினாள். கசிந்தொழுகிய மெல்லிய நிலவொளி பரவி அச்சூழலை தெளிவாக்கியது. சத்தம் வராமல் அலுமாரியைத் திறந்து அவசரமாகத் தோட்டைப் பத்திரப்படுத்தியிருந்த இடத்தினைத்  துழாவினாள். கைகள் நடுக்கம் கொண்டன. ஏனென்று தெரியாமல் அழுகை முட்டியது. 

அம்மாவின் கூரைப்புடவைக்கடியில் மிகப் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த அந்த சிவப்பு நிற சிறியப்பெட்டியை ஆவலுடன் திறந்தாள். அங்கே தோடுகள் தென்படவில்லை. ஒருகணம் இதயத்துடிப்பு ஸ்தம்பித்துப் போனதாயும் கண்கள் இருட்டிக்கொண்டு வருவதாயுமான உணர்வுகளுடன் மிகுந்த படபடப்புடன் கண்களை ஒருதடவை துடைத்துவிட்டுக் கொண்டு இன்னும் தெளிவாக பார்வையை சுருக்கிப் பார்த்தாள். பெட்டி ஒன்றுமில்லாமல் வெறுமையாகவேயிருந்தது. 

பெரும் அவஸ்த்தையுடன் அம்மாவை எழுப்ப அருகே சென்றாள். 

அம்மா போர்வையை தலையுடன் போர்த்தியவாறே தனியே பேசிக்கொண்டிருந்தாள்.      

No comments:

Post a Comment