Enter your keyword

Monday, April 13, 2020

2020' பெண்கள் தினத்தையொட்டி கனலியில் - பிரமிளா பிரதீபன்


பெண் என எழுதும் போது கூட அந்த எழுத்துக்களில் ஊடுருவியிருக்கும் போதைத் துளிகள் தெறித்து விசிறப்பட்டுவிடுமோ எனத் தோன்றுமளவிற்குப் பெண்ணுடலும் பெண்களின் உணர்வுகளும் விமர்சிக்கப்படுகின்றன. அல்லது அத்தகையதொரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

கால மாற்றங்களுக்கு அமைவாக ஒரு பெண் ஒப்பீடட்டளவில் தன்னை சகல உரிமைகளும் சுதந்திரமும் உடையவளாக எண்ணிக் கொண்டிருந்தாலும் எவருக்கும் தெரியாததொரு நொடியில் தலைதூக்கத் தயாரான நிலையில் அடக்குமுறைகள் தொக்கு நிற்கின்றன என்பதை நிச்சயமாய் மறுப்பதற்கில்லை. அது ஒரு ஆணினால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதைத் தாண்டி பெண்களாலும் சமயங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.

நிஜமாகவே என்னளவில் ஒரு பெண்ணிற்குச் சமுதாயத்தினரால் (தமிழ் சமுதாயத்தினரால்)  வழங்கப்படும் சுதந்திரமானது கயிற்றால் கட்டி மேய விடப்பட்ட ஒரு பசு மாட்டிற்கு ஒப்பானதென்றே கருத முடிகிறது. என்ன…! கால மாற்றம் அந்த கயிற்றைச் சூழலுக்கு ஏற்றாற் போலச் சற்றே நீளமாக்கியிருக்கிறது அவ்வளவேதான்.

இலக்கிய உலகைப் பொறுத்தவரைப் பெண்ணினது உணர்வுகளை அப்படியே உணர்ந்து எழுதிவிடத் துணியும் எந்த ஒரு ஆணினாலும் முழுமையான அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ வெளிப்படுத்திவிடவோ முடியுமென்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. ஒரு பெண்ணினால் மட்டுமே அவளை அல்லது அவளினத்தை முழுமையாய் வெளிப்படுத்துதல் சாத்தியமாகிறது. இந்த புள்ளியில்தான் பெண் படைப்பாளிகளின் இன்றியமையா தன்மையும் அவள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களும் பேசப்பட வேண்டிய ஒரு எண்ணக்கருவாக உருமாறுகிறது.

குறிப்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தம்மை வெளிப்படுத்தும் பெண்களுக்கான சவால்கள் ஏராளமானவை என்பதுவும் பேசப்படவேண்டிய ஒரு விடயமாகவே கருதப்படுகிறது. தான் எதனை எழுத வேண்டுமென்பதைத் தீர்மானிக்க அல்லது அவளைத் தட்டி வீழ்த்திவிடச் சந்தர்ப்பம் பார்த்து ஒரு ஆண்வர்க்கம் எப்பொழுதுமே அருவமாய் உலா வந்தபடியேதான் இருக்கிறது. இதனை வெளிப்படையாக எவரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையெனினும் அவளை… அவள் நடத்தையை… அவள் எழுதும் கருப்பொருளை… அவளது அந்தரங்க வாழ்க்கையை என்று அலசி ஆராய்ந்து விமர்சிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு அந்த ஆதிக்க இனம் காத்துக்கொண்டேயிருக்கிறது.

இது வெறுமனே ஒரு ஊகமென்றோ என் தனிப்பட்ட அனுபவமென்றோ கருதுவதற்கு நிச்சயமாய் இடமில்லை. ஒரு பெண் தன்னை மீறிச் செயற்படும்போதோ தன்னிலும் அதிகமான திறமையைக் கொண்டிருக்கிறாள் என உணரும் போதுதான் அந்த ஆதிக்க இனம் தமக்கே தெரியாமல் தமது செயற்பாடுகளினூடாக தம் சுயத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த அனுபவத்தை ஒவ்வொரு பெண்ணுமே வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் உணரப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமென்பதை அறிய முடிகிறது.

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டயறி’ எனும் சிறுகதையைப் படிக்கக் கிடைத்தது அந்த கதையின் சம்பவங்கள், கதையை வாசித்து சில நாட்களுக்கு பிறகுமாய் கூட என்னைச் சூழ்ந்து சுழன்றபடியே இருந்ததை என்னால் தவிர்த்துக்கொள்ளவே இயலவில்லை. தனது எண்ணத்தை ஒரு டயறியில் யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துக்கொள்ள முடியாத அந்த தேவகி சித்தியின் நிலை வெறும் கற்பனையாய் மட்டுமே இருந்துவிடுமென்று எனக்குத் தோன்றவில்லை.. எத்தனையோ தேவகிகளின் கைப்பேசி உரையாடல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் ஆராயப்படுகின்றன. அச்செய்திகளின் நன்மை தீமைகள் ஆங்காங்கே விவாதிக்கப்பட்டபடியேதான் இருக்கின்றன.

தன் கணவனால் உளவு கண்காணிப்பில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறிந்த பின் எழுத்தாளர் நரன் அவர்களால் படைக்கப்பட்ட கவிதையொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் தகுமென எண்ணுகிறேன்.

“வாழ்வெங்கிலும் துணையும் பாதுகாப்பாகவுமிருப்பேன்

என்றவன்தானே நீ

வெறுமனே யோனியினருகிலேயே அமர்ந்திருக்கிறாயே”

…………………….
“யோனிக்கொரு பூட்டு
அதன் சாவி
வளைந்த உன் ஆண்குறியில் முடிச்சிட்டு
தொங்குவது தெரியும்
சக ஹிருதயனே…”
……………………………………

“உன்னை நடுநடுங்க வைக்கும் ஒரேயொரு
பொய்யுரையுரைக்கவா…?
தற்போது மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக
இருக்கிறான்.”

இதனை எழுதிவிட உந்தும் இதே இந்த உணர்வினை எழுத்தாளுமையுள்ள எத்தனையோ பெண்கள் கடந்திருக்கக்கூடும். அல்லது கண்டோ கேட்டோ ஆவது இருக்கக்கூடும். எனினும் அப்பெண்ணினால் இலகுவில் அவ்வுணர்விற்கு வடிவம் கொடுத்துவிட முடிவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ பால் ரீதியான வேறுபாடுகள் மட்டுமல்ல அதற்குள் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் ஒரு பெண் தமது படைப்பைத் தீர்மானிக்க முயல்கிறாள். ஏனென்றால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மயமாக்கப்பட்ட சமூகமானது பெண்களின் துணிச்சலான இலக்கிய வெளிப்பாடுகளைப் பண்பாட்டு மீறலாகத்தான் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறது. (எனது படைப்புகளினூடாகவும் இத்தகைய போலி கலாச்சார காவலர்களை எதிர் கொண்டிருக்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.)

இதன்படி பெண் எழுத்தாளர்கள் அனைவருமே பெண்ணிய வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்ற போதிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கு இலக்கியமும் ஒரு பேராயுதமாகவே அமைகிறதென்பதையும்  பெண்ணியத்தைப் பெண்கள் தெரிவு செய்தலென்பது ஒரு பெண்ணினது தனிப்பட்ட தெரிவாக மாத்திரம் அமையாமல் அது ஆணாதிக்கத்தின் விளைவாகவோ அல்லது அத்தகைய சமூகத்தின் ஒரு உந்தலாகவேதான் இருக்கின்றதென்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

‘நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பதில்லை. என் எதிரியே தீர்மானிக்கிறான்’ என சே.குவாரா கூறியதை போலப்  பெண்ணியம் என்பது ஆணாதிக்க சமூகம் எமக்குத் தந்த தெரிவு. இதற்கமைவாக எமது சமூக அமைப்பானது எப்போது சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றைச் சகல மட்டத்திலும் நிறுவத் தயாராகிறதோ அப்போதே சமூக மேம்பாட்டை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச்செல்லத் தயாராக முடியுமென்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

3 comments:

  1. வாழ்வெங்கிலும்......
    முதல்

    “உன்னை நடுநடுங்க வைக்கும் ஒரேயொரு
    பொய்யுரையுரைக்கவா…?
    தற்போது மாற்றுச்சாவி தயாரிப்பவனொருவன் என் நண்பனாக
    இருக்கிறான்.”

    Indha kavidhai palavatrai unarthukiradhu...Yedho onnu irukku..

    ReplyDelete
  2. நீங்கள் சொன்ன கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மை... ஆணாதிக்க சமூகம் மட்டுமல்ல பெண்களின் வீழ்ச்சிக்கு பெண்களும் கூட காரணம் ஆவது மறுக்க முடியாது.. ஆயுதம் செய்ய முடியாததை பேனா செய்யும்....

    ReplyDelete