Enter your keyword

Monday, April 13, 2020

கட்டுபொல் கத்தி - பிரமிளா பிரதீபன்


கட்டுபொல் கத்திக்கும் அத்தோட்ட ஆண்களுக்குமான உறவு விசித்திரமானது.

 புலர்தலுடன் ஆரம்பிக்கும் கட்டுபொல் கத்தியின் ஸ்பரிசம் அவர்களை விட்டகல்வதேயில்லை. விரும்பியோ விரும்பாமலோ மதிய உணவிற்கு வரும் போதும் கூட, கட்டுபொல் கத்தியின் சரி மத்தியை தோளில் வைத்துக்கொண்டபடி வேகமாக நடந்து வருவார்கள். ஓவ்வொருவரதும் நடைத்தாளத்திற்கேற்ப நாற்பது அடிவரை நீளமான குழாயில் பொருத்தப்பட்ட அந்தக்கத்தி முன்னும் பின்னுமாய் அசைந்தாடுவதை தூரத்தேயிருந்து பார்க்க, சித்திரமொன்றில் வரையப்பட்ட உருவங்கள் அசைவதையொத்து மிக வேடிக்கையாகவிருக்கும்.

சாதாரணமாக கட்டுபொல் கத்தியொன்றை தூக்கி, நிமிர்த்தி வைத்தலுக்கே ஏராளமான சக்தி விரயமாகிப் போவதுண்டு. அதனை சதா தோளில் சுமந்தபடி நடத்தல் ஒரு பாடென்றால் அந்தக்கத்தியைக்கொண்டு கட்டுபொல் கொப்புக்களை வெட்டி வீழ்த்துவது அவர்களுககு மட்டுமேயான வீரசாகசம்தான். 

தம்புரானை மிஞ்சி கட்டுபொல் வெட்டிவிட தோட்டத்தில் எவருக்குமே இயல்வதில்லை. உயரமாய் வளர்ந்த கட்டுபொல் மர உச்சியில் காய்த்து, சரியான பருவத்துடன் இருக்கும் கட்டுபொல் கொப்பை முதலில் இனங்காண வேண்டும். பின் வாதுகளுக்கிடையே கத்தியை மிகச்சரியாக நுழைத்து..... அடிப்பகுதியில் சொருகி..... தன் முழு பலத்தையும் கொடுத்து சரியான வேகத்துடன் இழுத்து அறுக்க வேண்டும்.

 அறுபடும் வேகம் கூடினால் படாரென தெறித்து துள்ளி விழும் அந்தக்கொப்பு சரியாக தலையிலேயே விழுந்துவிடும் அபாயமுண்டு. குறைந்த வேகத்துடன் வெட்டுப்பட்டால் ஒரு கொப்பை வெட்டிக்கொள்ள அதிகநேரம் விரயமாகிப் போய்விடும். 

மூன்றே வெட்டில் சரக்கென்று திசைபார்த்து வெட்டி சரியான இடத்தில் கொப்பை விழவைக்கும் கெட்டித்தனம் தம்புரானிடம் சற்று அதிகமாகவே இருந்தது.

 தொடர்ச்சியாக அண்ணாந்து பார்த்து கட்டுபொல் கொப்புகளை வெட்டி வீழ்த்துகையில் கழுத்து வலியெடுத்து வீங்கிப்போயிருந்தாலும் நாளொன்றுக்கு குறிப்பிட்ட நாற்பது கொப்புகளை தாண்டி, அதிக கொப்புகள் வெட்டக்கூடிய ஒரே ஒருவனென தம்புரான் தோட்டத்திற்குள் பேசப்பட்டான். இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக 'கட்டுபொல் வெட்டுதலில் மிகச்சிறந்த தொழிலாளி' எனும் சான்றிதழும் மூவாயிரம் ரூபாய் பணப்பரிசும் தம்புரானுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. அந்த சான்றிதழ்களை தனக்கு கிடைத்த பெரிய வெகுமதியாய் எண்ணி வீட்டிற்குள் நுழையும் போதே தெரியுமாப்போல் ப்ரேம் போட்டு மாட்டிவைத்திருந்தான்.

 சான்றிதழ்களின் நடுவே சிங்களத்தில்; கொட்டை எழுத்தில் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. தம்புரானின் மனைவியும் அடிக்கடி அவற்றை துடைத்து நேர்த்தியாக சுவற்றில் மாட்டி பெருமைப்பட்டுக் கொள்வாள்.

வழமை போலவே அன்றும் அண்ணாந்து கூர்ந்து அவதானித்து வாதுகளுக்கிடையே தன்னை ஒளித்துக்கொண்டிருக்கும் கட்டுபொல் கொப்பின் அடிப்பகுதியை துல்லியமாய் கண்டு... கத்தியை ஒரேசாத்தாய் சொருகி... தன் முழுப் பலம் கொண்டு வெட்டி இழுத்தான். மூன்று முறை அறுபட்டு நான்காவது வெட்டில் சலாரென வாதுகளுடன் உராய்ந்து மரத்தை எட்டி சற்றே தள்ளினாற் போல கொப்பு விழுந்தது. அதிலிருந்து தெறித்த கட்டுபொல் கொட்டையொன்று வீசுப்பட்டு தலைக்கு மேலாக பறந்தது. அடுத்த மரத்திற்கு போக முன் தம்புரான் சற்றே நிதானித்தான். முதல் நாள் இரவின் போதை இன்னுமே தொற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்து மெதுவாக செயற்பட்டான்.

'என்ன தம்பு இன்னமும் தெளியலயோ......!' அருகில் கட்டுபொல் வெட்டிக்கொண்டிருந்த முருகேசு கிண்டலடித்தான்.

 'பின்ன.... இந்த பாரத்த தூக்கி ஓஞ்சா நிம்மதியா தூங்கவா முடியுது...? ஓடம்பு பொரட்டியெடுத்து வலிச்சா என்னதாண்டா செய்யுறது மசுறு'

 'சரி சரி பாத்து வெட்டு மாப்புள...'

 இருவருமாய் ஆளுக்கொரு மரத்தடியில் நின்றபடி அடுத்த கொப்பிற்கு குறிவைத்தனர். தம்புரான் கத்தியை மெதுவாக நிமிர்த்தி உருண்டு பெருத்திருந்த கொப்பொன்றின் அடிப்பகுதிக்குள் திணித்தான். கொப்பின் அடிப்பகுதிக்குள்; சிக்கிக்கொண்ட கத்தி உறுதியிழந்து அசைவதாய் தோன்றியது பிரமையோவென மேலும் ஒருதடவை இழுத்து அசைத்துப்பார்த்தான். கத்தி பொருத்தப்பட்ட குழாயில் இருந்து தளர்ந்து லேசாக ஆடிக்கொண்டிருந்தது. கொப்பின் அடிப்பகுpயை இறுக்கமாய் பிடித்திருந்தது. முதல் நாள் போதையுடன் கத்தியை தீட்டி பொருத்தியது பெருந் தவறென்றே அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது கத்தியை மரத்திலிருந்து எடுத்தாக வேண்டுமே...! முழுவதுமாய் கத்தி கழன்று அகப்பட்டுக்கொண்டால் பின் எடுக்க மிகவும் சிரமமாகிப் போய்விடுமென்று அவனுக்குத் தெரியும். 

மெதுவாக அசைத்தசைத்து கத்தியை இழுக்க முனைந்தான். இயலவில்லை. கடைசியாக ஒரு முயற்சியென்று எண்ணிக்கொண்டு ஒரே தடவையில் கத்தியை முழுவதுமாய் எதிர்புறமாய் இழுத்தான். சற்றும் எதிர்பாராமல் அந்த நீளமான குழாய் சரிந்து கையுடன் வர, கத்தி வீசுப்பட்டு உயரத்தேயிருந்து தோள்பட்டையுடன் உராய்ந்து சதக்கென்று விழுந்தது.

 என்ன நடக்கிறதென்று தம்புரானால் சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை. எல்லாமே ஒருகணம் ஸ்தம்பித்தவனாய் அரண்டு போய் ஓரிரு நொடிகளுக்கு பின்னேயே உணர்வுநிலைக்கு வந்தான். தோள் பட்டையுடன் உராய்ந்து விழுந்த கத்தி சதைத்துண்டு சிறிதளவையும் சேர்த்தே சிறாய்த்து விசிறியிருந்தது. இரத்தம் பரவி உடலின் கீழு;புறமாக வழிந்தோடத் தொடங்க, அதனை கண்ட மாத்திரத்தே மயங்கி விழுந்தான் தம்புரான். 'ஐயய்யோ... ஐயய்யோ....' என்று பதறி தவித்தபடி அக்கம் பக்கம் கட்டுபொல் வெட்டிய ஆண்கள் சிலர் ஓடி வந்தனர். சத்தம் கேட்டு அருகில் கொப்பு தூக்கிக் கொண்டிருந்த பெண்களும் வந்து குவிந்துக்கொண்டனர். பீறிட்டு பரவும் இரத்தம் கண்டு நிதானமிழந்து தவித்தனர். ஆண்கள் தமக்குள் பிரிந்து வேகமாக செயற்பட்டு, இருவர் தம்புரானை தூக்கிக் கொண்டு பாதைக்கு ஓட, இருவர் தோட்ட லொறியை கொண்டுவர விரையவென்று....

நினைத்த வேகத்தில் தம்புரான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனை தூக்கிச் சென்ற பாதை நெடுகிலும் இரத்தம் வழிந்து ஒரு கோடாய் அடையாளம் காட்டியது. 

கூர்மையான அந்த கட்டுபொல் கத்தி இரத்த கறையுடன் ஒரு புறமாயும், நீளமான குழாய் வேறொரு புறமாயும் கிடந்தன. நெஞ்சு பதற... பதற.... அந்த கத்தியை எடுத்து படிந்திருந்த இரத்தக்கறையை சில இலைகள் கொண்டு அழுந்த துடைத்து கட்டுபொல் காட்டிற்க்குள்ளேயே வீசியெறிந்தான் ஒருவன்.

 'இந்தா.... நல்லா குடி.... இன்னும் எத்தன பேர் ரெத்தத்ததான் குடிக்கிறன்னு பாத்துருவோம்;...' 

அவன் நெஞ்சு தேம்பியது. வெளியேறிய இரத்தத்தின் அளவு தம்புரானுக்கு என்ன ஆகப்போகிறதோவெனும் அச்சத்தை சிலருக்குள் உண்டு பண்ணியிருந்தது.

கூட்டம் கூட்டமாக நின்று ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் இந்த வருடம் தம்புரானுக்கு சான்றிதழும் மூவாயிரம் ரூபாய் பணமும் கிடைக்க வாய்ப்பேயில்லையென பேசிக்கொண்டிருந்தனர்.

2 comments:

  1. சின்னதாக அமைந்த நல்ல கதை, விபத்தினால் ஒரு தொழிலாளி அடையும் துயரைப்பேசிநிற்கிறது. கட்டுப்பொல் கிளை என்பதைவிடவும் கட்டுப்பொல் குலை என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். செம்பனை ஒரு ஒருவித்திலை மரம். கிளைகள் இல்லாதது. பாராட்டுக்கள்.

    ReplyDelete