Enter your keyword

Tuesday, April 14, 2020

மாட்டியா - பிரமிளா பிரதீபன்




'ச்சீய்.. போ நாயே' என்று ஒரு நாயை கடுமையாக திட்டி விரட்டிக்கொண்டிருந்தான் மாட்டியா. அவன் கையில் வைத்திருந்த ரொட்டித்துண்டை அவனறியாமலேயே அந்த நாய் கௌவியிருந்தது.
தான் பசிகொண்ட அளவிற்கு ஒரு ரொட்டி போதாதென்றெண்ணி வெகு பிரயத்தனப்பட்டு அந்த ரொட்டியை இரண்டு சரிவட்ட பகுதிகளாக பிரித்து இரு ரொட்டிகளாக்கியிருந்தான்.

அந்த ரொட்டியின் மத்தியில் ஓரிரு இடங்களில் கருகிப்போயிருந்தமையால், எத்தனை பக்குவமாக ரொட்டியை பிரித்தும் கூட ஒரு வட்டத்தில்  சில துளைகள் ஆங்காங்கே தென்பட்டன. அவன் ரொட்டியின் ஒரு பக்கம் முழுவதுமாக மாசிச்சம்பலை பரப்பிப்பூசி அதனை அப்படியே சுருளாக்கி கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பசியாறிக்கொண்டிருந்தான். நன்கு நேரமெடுத்து நேக மென்று விழுங்கினான்.

பிரித்தெடுத்த இரண்டாவது ரொட்டியின் அரைவாசிப்பங்குதான் நாயிடம் பறிபோயிருந்தது. மாட்டியா மீண்டுமொருமுறை கோபமாக திட்டினான்.

'சனியனே... எங்கிட்டயா புடுங்கி திங்கனும்...?'

ஒரு கல்லை எடுத்து நாயின் முதுகை குறிபார்த்து அடித்தான். சாமர்த்தியமாய் நாய் விலகிக்கொண்டதால்  அந்தக்கல் வாலுடன் உரசியபடி தூரமாய் சென்று விழுந்தது.

மாட்டியா தன்னை அடிப்பானென்று அந்த நாய் சிறிதும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவனை அந்த நாய் முறைக்கவும் இல்லை. பலவந்தமாக பறித்துக்கொண்ட ரொட்டியை அவசரமாய் மென்று விழுங்கியது. இன்னும் சிறிது தூரம் சென்று ஒரு காலை பக்கவாட்டில் தூக்கியபடி மூத்திரம் பெய்தபடியே மாட்டியாவை பார்த்துக் கொண்டிருந்தது.

அவன் மேலதிகமாக நாலைந்து கெட்டவார்த்தைகளை சேர்த்து  தனக்குத்தானே  முணுமுணுத்தபடி நாயை பார்த்துக்கொண்டிருந்தான்.
மாட்டியா ஒல்லியாய் கறுப்பாய் இருப்பான். அவனிடம் முழங்கால் அளவிற்கு அணியத்தக்க இரண்டு கால்சட்டைகள் இருந்தன. அவற்றையே மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு திரியும் போது அவனது கால்கள் இரண்டும் குச்சி குச்சியாக நீண்டு சற்றே வளைந்தாற் போல தோற்றமளிக்கும். நடக்கும் போதும் ஒரு பக்கம் சரிந்தவனாய் ஒருகாலை இழுத்துப் பதித்து நடப்பான்.
தனக்கு முப்பத்தியாறு வயது பூர்த்தியாகிய போதும் இன்னுமே தன்னால் ஒரு பெண்ணைத் தேடிக்கொள்ள முடியாதிருந்ததால் அவன் மனதளவில் மிகவும் சோர்ந்தவனாய் தனியே நாட்களை கடத்திக்கொண்டிருந்தான்.

அவனுக்கிருந்த ஒரேயொரு துணை நாய் மட்டுமேதான். அதுவும் அடுத்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானதாய் இருந்தது. அந்த வீட்டுக்காரனென்றால் நாய்க்கு சோறு வைப்பதுமில்லை சொந்தங்கொண்டாட வருவதுமில்லை.
சில நாட்களுக்கு முன்பு வரை  நாயின் மீதான அதீத வெறுப்பும் கொஞ்சம் பொறாமையும் கலந்த உணர்வொன்றே மாட்டியாவிடம் இருந்தது. அந்த ஒரு நாயினூடாக மொத்த நாய் வர்க்கத்தின் மீதே தன் பொறாமையை படரவிட்டபடியிருந்தான்.

பெரும்பாலும் நாய்களின் வாழ்வுமுறை மனித வாழ்வை ஒத்திருக்கக்கூடியது. ஆனால் அவை எதுவித பொறுப்புமற்று முழுச்சுதந்திரமாக திரிந்தன. நாய்கள் தாமாக குளிப்பதில்லை. நகம் வெட்டிக்கொள்வதில்லை. காலையில் எழுந்ததும் கண்ணோரத்தில் தேங்கி நிற்கும் கண்பூளை பற்றிய கவலை துளியளவும் இல்லை. எந்த நாயுமே சமைத்து உண்பதில்லை. அப்படியே சமைத்த உணவு கிடைத்தாலும் அவற்றை பங்கிட வேண்டிய கட்டாயம் அறவும் இல்லை. விரும்பினால் குரைக்கலாம். கோபம் வந்தால் கடிக்கலாம். ஒரு உள்ளாடையைத்தானும் உடுத்தி தன் மானத்தை காக்க அவைகளுக்கு தோன்றுவதேயில்லை. நினைத்த இடத்தில் சொறிந்துக்கொண்டும் உதறிக்கொண்டும் சத்தமிட அவைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் முடிகிறது.

மாட்டியா ஆரம்பத்தில் பொறாமைப்பட்டாலும் நாளடைவில் அந்த நாய் அனுபவிக்கும் சுதந்திர அனுபவத்தை தானே அடைவதாக எண்ணி அகமகிழ்ந்துக் கொண்டான். அடிக்கடி நாயை அவதானிக்கவும் பழகியிருந்தான். அந்த நாய்க்கு மஞ்சு என்றொரு பெயரையும் வைத்து கூப்பிட்டான்.

மஞ்சுவை அவன் அதிகமாக நேசிக்கத்தொடங்கியது அது பெண் நாய்களுடன் புணர்தலை கண்ட பின்புதான். மஞ்சு தனது துணை இதுவென முடிவெடுக்க எத்தகையதொரு அவகாசத்தையும் எடுத்துக் கொள்ளவில்லையென்பதுடன் தன் துணைக்கும் அத்தகையதொரு அவகாசத்தை அது தரவில்லை. கூடவேண்டும் என்றெண்ணிய மறுகணம் பெண்துணையை சம்மதிக்க வைக்கும் மன்மதக்கலை மஞ்சுவிற்கு அத்துபடியாயிருந்தது. இதுவரை மஞ்சுவுடன் புணர்ந்த எந்த நாயுமே மஞ்சுவை மறுக்கவில்லையென்பதையும் மாட்டியா அவதானித்து வைத்திருந்தான்.

மஞ்சு புணர்தலில் ஈடுபடும் போதெல்லாம் மாட்டியா மஞ்சுவாக தன்னை உருவகித்துக் கொண்டு, அது பெறும் கூடலின்பத்தை தானும் பெற முயற்சிப்பான். அப்போதெல்லாம் சட்டென தோன்றி மறையும் மின்னலென சுசீலாவின் நினைவும் உடலெங்கிலும் பரவியோடத்தொடங்கும். அவளிடம் தன்னை வெளிப்படுத்திய விதம் முறையற்றதென தெரிந்திருந்தாலும், தன் திமிர்தனத்தை ஏதோ ஒரு விதத்தில் நிறூபித்துவிட்டதாய் அவனது ஆழ்மனது குதூகலிக்கும். 

மாட்டியாவை வேண்டாமென மறுத்த ஐந்தாவது பெண்ணவள்.
ஆரம்பத்தில் சுசீலாவிற்கு மாட்டியாவை பிடித்துப் போயிருப்பதாய்தான் கூறிக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் கண்பார்வையற்றவள் என்ற ஒரேயொரு காரணத்தாலேயே தன்னை மணக்க சம்மதிருக்கக்கூடுமென்றும் திடீரென ஒருநாள் அவனை பிடிக்கவில்லையென கூறுவதற்கு வாய்ப்பிருகப்பதாகவுமே மாட்டியாவிற்கு தோன்றியது.

அவளை ஒரு தடவை சந்தித்து நெருங்கி பேசினால் கூட அவள் தன்னை மறுக்கத் தொடங்குவாளென அவனது கடந்த கால அனுபவம் மாட்டியாவை எச்சரித்தப்படியே  இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தான் முந்திக்கொள்ளுதலே புத்திசாலித்தனமென எண்ணி சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.

சுசீலா ஒரு கிண்ணத்தில் புளிசாதம் கொண்டு வந்திருந்தாள். வாசலில் நின்றபடியே 'புளிசோறு' என்றாள்.
மாட்டியா தனக்கானதாக அந்த சந்தர்ப்பத்தை எண்ணிக் கொண்டான். விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தியேனும் அவள் தன்னையே நம்பி நிற்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுவதென தீர்மானித்தான்.
அக்கம் பக்க வீகளிலும் ஆள் அரவமற்ற பொழுதது. படாரென அவளது கையை பிடித்து வீட்டினுள்ளே இழுத்தான். அவளது மௌனம் அவனுக்குள் ஒரு உத்வேகத்தை பிறப்பித்திருந்தது. தவறென்று தெரிந்திருந்த போதிலும், ஏதோ ஒரு நப்பாசையிலேயே எல்லை மீறத்துணிந்தான்.

தன் பதட்டத்தை அடக்குவதாய் எண்ணி வேகமான இதயத்துடிப்பை தணிக்க ஒருகையால் நெஞ்சை அமத்தி பிடித்தவாறே மற்றைய கையால் அவளை இழுத்தணைத்தான். அதுவரை பொறுமையாய் வெட்கித்து நின்றவள் திடீரென அவனை விலக்கித் தள்ளியவளாய் ' மொதல்ல போயிட்டு குளிடா' என்றாள்.
'நாத்தம் புடிச்ச மூதேசி... என்னய விடுடா...' என்று சத்தமாக கத்தினாள். அவனிடமிருந்து விடுபட வேகமாகத் திமிறினாள்.

இதுவே உலகின் அதிகபட்ச அவமானமாய் இருக்கவேண்டுமென அக்கணத்தில் தோன்றியதவனுக்கு. அவளை எத்தி மிதிக்க வேண்டும் போலிருந்தது.
கோபம் தலைக்கேறிய வேகத்தில் அவளை பலவந்தமாக இறுக்கிப்பிடித்து அசையவிடாமல் அமத்தி முத்தமிடுவதாய் எண்ணிக்கொண்டு மூர்க்கத்தனமாய் இயங்கினான். சுசீலாவின் அலறல் சத்தத்தை நிறுத்த ஒருகையை பயன்படுத்தியிருந்தால், அவள் திமிறி தன்னிடமிருந்து ஓடி விடக்கூடுமென்பதால் கிடைத்த அந்த நிமிடங்களுள் அவளை ஆனமட்டும் ஸ்பரிசித்துக்கொண்டு கொஞ்சமாய் தன் பிடியை தளர்த்தினான்.   அவள் காறி உமிழ்ந்துவிட்டு கெட்டவார்த்தையில் திட்டியபடியே தன்னை காப்பாற்றிக்கொண்டு பதறியோடத் தொடங்கினாள்.
 
கண்பார்வையற்ற ஒரு பெண்ணிடம் தான் நடந்துகொண்ட இவ்விதம் தப்போவென்று தோன்றினாலும், அவள் தன்னை உதாசீனப்படுத்தியதற்கான தண்டனையை கொடுத்துவிட்டதாய் தனக்குத்தானே ஆறுதல்பட்டுக்கொண்டான் மாட்டியா. அவனது கைகால்கள்களலெல்லாம் உதறலெடுத்திருந்தன. என்னதான் இருந்தாலும் ஒரு குருடிக்கு இத்தனை திமிர்த்தனம் இருக்கக்கூடாதென்றும் அவளை போக விட்டது பெருந்தவறென்றும் இடைக்கிடையே எண்ணி கோபப்பட்டுக்கொண்டான்.   

அவலட்சணமென்றும், அருவருப்பானவனென்றும், பேசும்போது எச்சில் தெறிக்கின்றதென்றெல்லாம் அவன் மறுக்கப்பட்டபோது ஏற்படாத வலி சுசீலா வெறுப்புடன் தள்ளிய போது ஏற்பட்டிருந்தது. கண்தெரியாத சுசீலாவே தன்னை அருவருக்க தன் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் வியர்வையின் விட்டகலாத மணமே காரணமென ஊகிக்க அவனுக்கு அதிகநேரமெடுக்கவில்லை.

அதன் பிறகும் மாட்டியா பெண்களை கவரவென்று சற்றே வித்தியாசமாக  முயற்சி செய்து கொண்டுதானிருந்தான். தினமும் குளித்தான். துவைத்து காயவைத்த ஆடைகளை அணிந்தான். பௌடர் போட்டுக்கொண்டான். பற்பொடி பாவித்து பல் துலக்கினான்.

கண்ணோரத்தில் அடிக்கடி தேங்கிவிடும் கண்பூளையும் தான் விரும்பப் படாமைக்கு காரணமாகி விட்டிருந்த ஞாபகத்தில் கண்களை ஒன்றுக்கு மூன்று தடவைகள் தேய்த்து கழுவினான்.

சுசீலாவை சமாதானப்படுத்த தொடர்ச்சியாக அவளை தேடிச்சென்று ஒவ்வொருமுறையும் அவமானப்பட்டுத் திரும்பினான். தன்னை நேசிக்குமொரு பெண்ணைத் தீவிரமாக தேடியலைந்தான். தான் ஒரு பெண்ணினால் நேசிக்கப்படுகிறோம் என்பதுவே ஒரு ஆணுக்கான அதியுச்ச அங்கீகாரமென்று தோன்றியதவனுக்கு. பெண்களை விலக்கியதானதொரு  வாழ்வின் வெறுமை அர்த்தமற்றதாகவே இருந்தது. தன்னை பூரண மனிதனாக்குவதற்கு ஒரு பெண்ணினது துணை அத்தியாவசியம் என்பதையுணர்ந்தான்.

தொடர்ச்சியான உதாசீனங்களும் அவமானங்களும் அவனை வேறுவிதமாக சிந்திக்கத் தூண்டின. பெண்கள் மீதான அவனது உணர்வு மெல்ல மெல்ல எதிர்பாலின விலங்கினங்கள் மீது தாவியிருந்தது. ஆடுகள், பூனைகள், பறவைகள் என்று எல்லா விலங்கினங்களது காதலையும் அவதானிப்பதில் அலாதி பிரியம் கொண்டிருந்தான்.

ஒரு தடவை பாம்புகளின் உச்சக்கட்ட உணர்வு நொடிகளைக்கூட கண்கொட்டாமல் பார்த்து மெய்சிலிர்த்து போயிருக்கிறான். இரண்டு பாம்புகளுமாய் ஒருமித்த அன்புடன் ஒன்றையொன்று ஆலிங்கனம் செய்து பின்னிப்பிணைந்தபடி ஒரு நடனத்தையொத்த அசைவுகளை  வெளிப்படுத்துவதாகவே தோன்றியது.

உலகின் எல்லா ஜீவராசிகளும் காமத்தில் திளைத்தெழுந்து அதனை அதாரமாக்கியே வாழ்ந்துக் கொண்டிருப்பாதாய் ஒரு சந்தேகம் அவனுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது.

இதையெல்லாம் தாண்டி ஒருபடி அதிகமாய்... அவனது தலையில் அவ்வப்போது வந்து தொலையும் பேன்களைத்தானும் அவன் விட்டுவைப்பதாயில்லை. இரண்டு பேன்களை ஒருசேரப்பிடித்து ஓரிடத்தில் போட்டு அவை என்ன செய்யக்கூடுமென பரிசோதித்து பார்ப்பான்.
சிலநேரம் இரண்டும் இருதிசை நோக்கி புரண்டோடும். அவன் வேண்டுமென்றே இரண்டையும் அருகருகே இழுத்து வைப்பான். அவனது எதிர்பார்ப்பிற்கிணங்க அவை ஒன்றின் மீது ஒன்றேறி கண்ணிமைக்கும் நொடிக்குள் விலகியோடும்.

தான் பிடித்த பேன்களிரண்டுமே ஒரே இனத்தினதாய்  இருப்பதால் அல்லது இரண்டிலொன்று மறுப்பு தெரிவித்ததால் விலகியிருக்க வேண்டுமென எண்ணிக்கொள்வான்.  பேன்களில் ஆண்,  பெண் எதுவென கண்டுபிடிக்கும் வழிமுறையை தெரிந்துக்கொள்ள அவனுக்கு யாதொரு வழியும் தென்படுவதாக தெரியவில்லை. பின் எங்கனம் இவை இணையக்கூடும்...? பெண்மையை அடக்கி பலவந்தப்படுத்தி அணுகும் முறைமையை இந்த பேனினத்து ஆண்கள் கற்றுக்கொள்ளவில்லையோ என்னவோ...!
நாளுக்குநாள் அவன் காணும் ஒவ்வொரு விலங்கினதும் அந்தரங்கம் குறித்ததான தேடல் அவனை முழுவதுமாய் ஆக்கிரமிக்கத்தொடங்கியிருந்தது.

என்னதான் அவனது பார்வை விசாலமாகிக்கொண்டு போயிருந்தாலும், அவன் அவதானித்த ஜீவன்களுள் அவனை மிகக் கவர்ந்த உயிரினமாக நாய்கள் மட்டுமே மாறிப்போயிருந்தன. குறிப்பாக மஞ்சுவை தன் ஆத்மாவென்றும் மஞ்சுவின் வாழ்க்கை தனக்கானதென்றுமான ஒரு மாயையில் சிக்குண்டு கிடந்தான் மாட்டியா.
மஞ்சுவின் ஒவ்வொரு கட்ட வாழ்க்கை முறையினையும் அவதானித்து ஆனந்தம் கொண்டான். கூடவே மஞ்சுவின் காதலையும் எப்படியோ கண்டுபிடித்தறிந்தான்.

அடுத்த தெருவில் உள்ள கபிலநிற பெட்டைநாயை பார்க்கும் போதெல்லாம் மஞ்சு தன்னிலை மறந்து ஓடுவதையும் உரசி உரசி குதூகலிப்பதையும் மாட்டியா அடிக்கடி கண்டிருக்கிறான். அந்த காதலுக்கு தன்னுடைய பங்களிப்பு சிறிதளவேனும் இருக்க வேண்டுமென்ற உந்தலில் மஞ்சுவை அழைத்துக்கொண்டு அந்தத்தெருப்பக்கம் போய்வருவதை மாட்டியா வழக்கமாக்கி கொண்டான்.

அவர்களை கண்ட மாத்திரத்தே அந்த பெட்டைநாய் இங்குமங்குமாய் ஓடியோடி சத்தமாய் குரைக்கத்தொடங்கும். அடுத்த நொடியிலேயே பாய்ந்து கடிக்கக்கூடுமென்ற விதத்தில் வெகுவாய் பாவனை செய்யும். பின், விடாமல் குரைத்த களைப்பில் உர்... உர்... என்று சப்தமிட்டபடியே முறைத்து பார்த்தபடி வாசலில் அமர்ந்துக்கொள்ளும்.

பெண்கள் வெளிப்படுத்தும் கோபங்களும் முறைப்புகளும் அனேக சந்தர்ப்பங்களில் வலிந்து ஏற்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ளுமொரு ஆயுதமாகவோ அல்லது உத்தியாகவோ தான் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய அதே அந்த குணம் இந்த நாய்களை தொற்றிக்கொண்ட அதிசயத்தைதான் மாட்டியாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நீண்ட நாளைக்கு பிறகான சந்திப்பொன்றை அந்நாய்களுக்கிடையில்  ஏற்படுத்தியிருந்தான் மாட்டியா.
இரண்டினதும் பார்வை பரிமாறல்கள் அவை பரஸ்பரம் ஏதோ செய்தி கடத்திக்கொள்வதாகவே பட்டது. அது நாய்களின் புணர்ச்சிக்கான காலப்பகுதியாக இருக்க வேண்டும். அந்த பெண் நாயை குறிவைத்து மேலும் ஆறேழு ஆண் நாய்கள் சூழவும் காத்துக்கிடந்தன. அவை ஏக்கத்துடனும் இயலாமையுடனும் சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருந்தன.
மஞ்சு நல்ல சாமர்த்தியசாலி. சமயம் பார்த்து மிக அருகே போய் தன் நாவினால் அந்த பெட்டை நாயின் முகத்தாடையை ஸ்பரிசம் செய்து, தன் லீலையை மெலிதாய் ஆரம்பித்து முன்னேறிச்சென்றது. அந்த நாய் சடாரென தன்னை விலக்கிக்கொண்டு தனது அதிருப்திக்கான அறிகுறிகளுடன் கழுத்தை திருப்பி தன் முதுகையே வறட்வறட்டென்று சிலமுறை கடித்து பின் முன்னங்கால்களை சற்றே நீட்டி நெளித்தபடி உடலை குவித்து படுத்துக்கொண்டது.

மஞ்சு அந்த நாயின் பின்புறமாக சென்று ஸ்பரிசிக்க எத்தனித்த நொடியில் உர்ர்ர்...... என்ற அதிகூடிய சத்தத்துடன் மஞ்சுவை அந்த நாய் கடிக்கப்பாய்ந்தது. சளைக்காமல் மஞ்சு மீண்டுமொருமுறை அருகே செல்ல அந்த நாய் வெறித்தனமாக பாய்ந்து எதிர்க்கத்தொடங்கியது.
புணர்தலுக்கான விருப்பம் என்பதை வலிந்து உருவாக்கிவிடுதல் அத்தனை சுலபமில்லையென்றே மாட்டியாவிற்கு தோன்றியது. சுசீலா தன்னை விலத்தி தள்ளி தாக்கத் தொடங்கிய விதம் கண்முன் நிழலாய் தெரியத் தொடங்கியது. 

மஞ்சு தான் ஆண் என்ற திமிர்தனத்தை அங்கே பயன்படுத்தியிருக்கவில்லை. வெறிகொண்டு செயற்படவில்லை. பலவந்தப்படுத்த முனையவில்லை. கோபம் தலைக்கேறி தடுமாறவும் இல்லை. மிக நிதானமாக தன்  துணையின் விருப்பமின்மைக்கு மஞ்சு மதிப்பளித்தாகவே மாட்டியா புரிந்துக்கொண்டான்.

மஞ்சு அவ்விடத்தினின்றும் விலகி மாட்டியாவை எதிர்பாராமல் நடக்கத் தொடங்கியிருந்தது.

மஞ்சுவை பின்தொடர்வதா வேண்டாமாவெனும் தயக்கத்துடன் மாட்டியா அசையாமல் நின்று கொண்டிருந்தான். சூழ  நின்ற மற்றைய நாய்கள் மொத்தமாய் ஒருமித்து அந்த பெண்நாயை நோக்கி சத்தமாய் குரைக்கத் தொடங்கியிருந்தன.
............................................................



No comments:

Post a Comment